Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு(தொடர் 10 )

ஒவ்வொருவரும் பொழுதை ஒவ்வொருவிதமாக கழித்தார்கள்.

தேவவிரதன் காலையில் எழுந்ததும் காலுக்கு மேல் கால் போட்டு அசையாமல் உட்கார்ந்துவிடுவான். பத்து மணிவரை அவனை அசைக்க முடியாது. பகல் சாப்பாட்டுக்குப் பிறகு மறுபடியும் அமர்ந்து விடுவான்.

பாரீன் ஒரு போர்வை கொண்டு பகல் முழுவதும் தன்னை மூடிக்கொள்வான். அவன் இன்னமும் பிடிபட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

அரவிந்த் பாபுவுக்காக ஒரு மூலை. அங்கேயே பஜனை உபதேசம் என்று காலம் கடத்துவார்


கானாயிலால் போன்ற நாலைந்து பேர் சாய்ந்ததுமே தூங்கிவிடுவார்கள். இரவு பத்து பதினொரு மணிக்குப் பிறகு மற்றவர்கள் உறங்கிய பின் , விழித்து ஒவ்வொருவருடைய தலையணை அடியிலும் உள்ள பிஸ்கெட், பழம் என்று திருட ஆரம்பிப்பார்கள். யாருடைய தலையணையிலும் எதுவும் இல்லையென்றால் அவர்களுடைய காலையும் பக்கத்தில் உள்ளவர்கள் காலையும் கட்டி வைத்து விட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் திருடுவதை யாரேனும் பார்த்துவிட்டால் அவர்கள் வாயில் ஒரு பிஸ்கெட்டை திணித்துவிட்டு வந்துவிடுவார்கள்.

ஒவ்வொருவரையும் பார்க்க தந்தை, தாய், உறவினர்கள், நண்பர்கள் என வந்து கொண்டிருப்பார்கள். ஒருநாள் என் பிள்ளையை அழைத்துக்கொண்டு என் உறவினர்கள் வந்திருந்தார்கள். அப்போது அவனுக்கு வயது ஒன்றரைதான். பேசத்தெரியாது. ஒருகால் அவனை மீண்டும் இந்தப்பூமியில் பார்க்க முடியாதோ என்ற நினைப்பில் அவனைத்தூக்கி என் மடியில் வைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் இரும்புக்கம்பிகள் அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள விடவில்லை.


சிறை வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்துகொண்டேன்

இப்படி துன்பமும் இன்பமுமாய் எங்கள் வாழ்க்கை கழிந்து போனது. கோர்ட்டுக்கும் சிறைச்சாலைக்கும் அலைகழிக்கப்பட்டோம். பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியாக கோர்ட்டிலிருந்து சிறைச்சாலை திரும்பொழுது உணர்வோம்.

கோர்ட்டில் குறுக்குவிசாரணை

நார்ட்டன் துரையின் பேண்ட் எங்கே கிழிந்திருந்தது?

எங்கே ஒட்டுப்போட்டிருந்தது?

இன்ஸ்பெக்டரின் மீசை நுனியை எலி கடித்ததா? அல்லது கரப்பான் தின்றதா? என்றெல்லாம் உல்லாஸ்கர் ஆராய்ச்சி செய்து சொல்ல நாங்கள் சிரிப்போம்.

நரேன் அரசுதரப்பு சாட்சியாக மாறியதால் கெடுபிடிகள் இன்னமும் அதிகமாகிற்று. ஒருநாள் கானாயி வயிற்றுவலி என்று சொல்லி மருத்துவமனை சென்றான்.

ஒருநாள் சேதி வந்தது கனாயி, சத்யனுடன் இணைந்து நரேனை சுட்டுக்கொன்றுவிட்டான் என்று. பின் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு கனாயி 44 டிகிரி என்றழைக்கப்படும் சிறைக்கு சென்றுவிட்டான்.


கனாயிடம் பிஸ்டல் எப்படி வந்தது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. எங்களுக்கு வந்த நெய் டப்பாவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன இல்லை வேறு வகையில் வந்தன என் கைதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்


கனாயி சொன்னான் தூக்கு தண்டனை பெற்று உயிர்நீத்த குதிராமின் ஆவியிடம் இருந்து பிஸ்டல் கிடைத்தது என்று.
ஆவி பிஸ்டல் கூட கொடுக்குமா? நம்பமுடியவில்லை சிறைக்குள் வருகின்ற மற்ற பொருட்களைப்போலவே பிஸ்டலும் வந்திருக்கலாம்.


சிறை அதிகாரிகள் சிறைகளை சோதனையிட ஆரம்பித்தார்கள். பத்து இருபது என்று கிடைத்ததை சுருட்டிக் கொண்டார்கள்.


பின் சிறைக்குள் கெடுபிடி அதிகமாகியது. என்னையும் மற்றவர்களையும் 44 டிகிரி சிறையில் அடைத்தார்கள். கனாயியையும், சத்யனையும் தனிச் சிறையில் அடைத்தார்கள். அவர்களோடு பேச அனுமதி இல்லை. நாங்கள் கிசுகிசுத்துக்கொள்வோம்.

நாங்கள் வெளியில் வரும்பொழுது கனாயின் சிறை அடைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் வித்தியாசமாக கனாயின் சிறை திறந்திருக்க நாங்கள் என்னவென்று விசாரித்தோம். கனாயிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.


நாங்கள் கனாயியை பார்க்கும் பொழுது அவன் முகத்தில் கவலை கோடுகள் இல்லை.சோகத்தின் நிழல் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தான்.


அதன்பிறகு ஒருநாள் காலையில் கனாயி தூக்கிலிடப்பட்டான். பிரிட்டிஷார் ஆண்ட இந்தியாவில் அவனுக்கு இடமில்லாமல் போயிற்று. தூக்கிலேற்றும்பொழுது அவனுடைய தைரியத்தை பார்த்து சிறையதிகாரிகள் திகைத்துப்போய்விட்டனர்.

ஒரு சிறைக்காவலாளி பாரீனிடம் வந்து கேட்டான். "இந்த மாதிரி பசங்க உங்ககிட்ட எத்தனை பேர் இருக்காங்க?" என்று.


(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு