Wednesday, June 16, 2010

டெட்லைன்

Tuesday, December 08, 2009

ஒவ்வாமை



உன்னிடமிருந்து
களவாடப்பட்டுவிடுகின்ற
ப்ரியங்கள்
பறவைகளாகி...
என்னை கேலி செய்கின்றது!
ப்ரியங்களை வெடுக்கென்று
புடுங்கி விடுகின்ற..
பக்குவமில்லை எனக்கு!

நான் நண்பனாகவே ...
இருந்திருக்கலாம்தான்!

- ரசிகவ்

Saturday, August 22, 2009

மறக்க முடியாத ஆகஸ்ட் மாதங்கள்




2005 - ஆகஸ்ட் மாதம்

துபாயில் இருந்து இந்தியா வந்திருந்த நாட்களில் என் கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாமென சென்னைக்குச் சென்றேன்.

நான் கல்லூரி முடித்தவுடன் அப்பொழுதுள்ள ஐடி துறையின் வீழ்ச்சியால் எனது
உறவினர் அனுப்பிய விசாவில் துபாயில் ஏதாவது வேலைக்குப் போகலாமென்று சென்றுவிட்டேன். ஆனால் இங்கு என்னுடைய் சமகாலத் தோழர்களுக்கு பல போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

எப்பொழுதுமே கேலியான பேச்சுக்கள், ஜாலியான நாட்களாகவே கடந்து
வந்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழையும்பொழுது ஒவ்வொருவரும் நிகழ்த்திய ஆரம்பகாலப் போராட்டங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சில சமயம் வலியைக் கொடுக்கும்.

கல்லூரியின் ஒவ்வொரு பீரியடின் இடைவெளியும் கேண்டீன், கிண்டல், வெட்டிப்பேச்சு என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்குள்.
அப்படி உள்ள நண்பர்கள் இப்பொழுது எப்படியிருக்கின்றார்கள் என்று அறியவும்
அவர்களையெல்லாம் சந்தித்து மனம் விட்டுப் பேசலாம் என்று ஆவலுடன் சென்றுகொண்டிருந்தேன்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் முகவரி கிடைத்தது. என்னுடைய எம்சிஏ நண்பன் அவன். அவன் அயனாவரம் பக்கம் ஒருஅறையில் தங்கியிருந்தான். ஏற்கனவே சென்னை பரிச்சயம் என்பதால் தேடிப் பிடிப்பதில் சிரமமில்லை.

நான் சென்றபொழுதே கவனித்துவிட்டேன் அவன் இருந்த சூழல் அவனுக்கு
இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்த்தியது. அவன் அறை நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கின்ற அந்த சூழல் வேறு அவனை மிகவும் பரிதாபமாக காட்டியது எனக்கு.

எனக்கு அவனுடைய நிலைமை மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மிகவும்
வலுக்கட்டாயமாக தனக்குள் சந்தோஷத்தை வரவைழைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். "வேலை இன்னும் கிடைக்கலைடா பரவாயில்லை சீக்கிரம் கிடைச்சிறும்" என்று அவன் அலட்சியமாக சொன்னாலும் அவனுடைய நிலைமையை என்னால் யூகிக்க முடிந்தது.

நிறைய பேசினோம். கல்லூரி நாட்களில் பேசிய பேச்சுக்களை விடவும்
இப்பொழுது அவனுடை பேச்சில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தது.

பழைய நண்பர்கள் யார் யார் எங்கு எங்கு வேலை பார்க்கின்றார்கள் எத்தனை பேர்
செட்டில் ஆகியிருக்கின்றார்கள் என்று எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

நமக்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் கல்லூயில் படித்த பழைய நண்பர்களை
எவரேனும் சந்தித்து பேசினால் அந்த சோகம் கொஞ்சம் குறைந்தாற்போன்று தோன்றும்.

அவனுக்கும் அப்படித்தான் அவனுடைய சூழலில் இருந்து அவனை மீட்டுக்
கொண்டு போய் கல்லூரி நாட்களில் சென்று விட்டேன்.

பின் நான் விடைபெறுகின்ற நேரம் வந்தது.
"சாப்பிட்டுவிட்டு போடா" என்று அவன் அழைத்த விதத்தில் புரிந்துகொண்டேன் அவனின் காசில்லாதநிலையை.

பின்
பக்கத்தில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு என்னுடன் பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்தான். எனக்குண்டான பேருந்து வந்து கொண்டிருக்கின்றது.

பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.

பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது நான் கையில் திணித்த பணத்தை பார்த்துக்கொண்டே விழுந்த அவனது கண்ணீர்த்துளி.



2009 - ஆகஸ்ட் மாதம்


இப்பொழுது இங்கு பெங்களுரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்
கொண்டிருக்கின்றேன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

இங்குள்ள இந்த றிறுவனத்தில் உள்ள வெப் டிசைனராக பணிபுரியும் ராஜ் என்ற
எனது நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். 3 வருடங்களாக இந்த கம்பெனியில் இருக்கின்றார். அவர் மட்டுமே தமிழ்நாட்டுக்காரர்.

வழக்கமாக மதிய உணவுக்கு பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு
செல்வோம். தினமும் நான் ஒருநாள், அவர் ஒருநாள் என்று சாப்பிட்டதிற்கு பணம் கொடுத்துகொண்டிருப்போம்.

அந்த உணவு இடைவேளையில் அவருடைய காதல் குடும்ப பிரச்சனைகள்
எல்லாவற்றையும் உரிமையாக பகிர்ந்து கொள்வார். நானும் அவரிடம் எனது விசயங்களை பகிர்ந்து கொள்வேன்.

கடந்த இரண்டு மாதங்களாக கம்பெனியில் salary கொடுக்காமல் இழுத்தடித்துக்
கொண்டிருக்கின்றார்கள். வாடகை , இன்டர்நெட் பில், போக்குவரத்துச் செலவு, உணவு, என்று இரண்டு மாதங்களாக சமாளித்துக்கொண்டிருந்தேன். நிறுவனம் மிகவும் அலட்சியமாக இப்பொழுது எங்களால் தரமுடியாது என்று தன்னுடைய இயலாமையை சொல்லி கைவிரிக்கின்றது

கம்பெனியின் நிலை சரியில்லாததால் நானும் வேறு இடத்தில் வேலை தேட
ஆரம்பித்தேன். சென்ற வாரம் புதிய வேலையை உறுதி செய்தபின் இங்கு ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் நேற்றுதான் அந்த ராஜ் என்ற நண்பரையும் அழைத்து அவரை
வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக சொன்னார்கள்

3 வருடம் வேலை பார்த்த அவரை 5 நிமிடத்தில் வேலையை விட்டு தூக்கி
விட்டதாக சொன்னதால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து விட்டார். தனது நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து வேறு வேலை தேடலில் ஆரம்பித்துவிட்டார்.

நேற்றும் பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு சென்றோம். புலம்பிக்
கொண்டே இருந்தார்.

"இப்படி பண்ணி விட்டார்களே இந்த கம்பெனிக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்பேன்..இப்படி 5 நிமிடத்தில் போகச்சொல்லிவிட்டார்களே...1 மாதம் அவகாசமாவது கொடுத்திருக்கலாம் " என்று

நானும் அவரிடம்,
" சம்பளம் தராமல் இன்னமும் இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றார்களே - செலவுக்கு கையில் காசில்லை ஏன் நிலைமையை புரிந்து கொள்ளமாட்டேன்கிறார்கள் ? " என்று புலம்பிக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டபிறகு எப்பொழுதும் பணம் கொடுக்கும் பொழுது ஒருவருக்கொருவர்
கொடுப்பதில் முந்திக்கொள்வோம். இன்று இருவருமே பணம் கொடுப்பதில் கொஞ்சம் தயங்கி தயங்கி இருந்தோம். நிலைமையை நானும் அவரும் புரிந்து கொண்டு செலவினை பகிர்ந்து கொண்டோம்.

நேற்றுதான் எனக்கும் கம்பெனியின் கடைசி நாள். எல்லாரிடமும் விடைபெற்று
விட்டு வெளியே வந்தேன். பேருந்து நிறுத்தம் வரை ராஜ் வந்து விட வந்தார்.

பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.

பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது என் கையில் அவர் திணித்த பணத்தின் மீது தெரிந்த எனது சென்னை நண்பணின் முகம்.

- ரசிகவ் ஞானியார்



Sunday, June 07, 2009

அன்று மேலாளர் இப்பொழுது ஆபிஸ் பாய்



இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க...

நீங்களும்தான் இன்னொரு கப் எடுத்துக்கோங்க
என்று அவர் அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருக்க என் முறையும் வந்தது.

இரண்டு தேநீர் கொடுக்கப்படுகின்ற முறையே அலுவலகத்தில் என்னிலிருந்துதான் ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இரண்டு கோப்பை தேநீர் கேட்கின்ற முறையை ஆரம்பித்ததே நான்தான். சில நேரங்களில் அவர் கொண்டு வரும்பொழுதே இரண்டு கோப்பை எடுத்து வைத்துக்கொள்வேன்.. அந்த அளவுக்கு தேநீர பைத்தியம்..

சென்ற மாதம்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார் . அவரை ஆபிஸ் பாய் என்று அழைப்பதை விடவும் ஆபிஸ் மேன் என்று சொல்லலாம். வயது சுமார் 40 இருக்கும். . எப்பொழுதும் முகத்தில் ஒருவிதமான கவலை தோய்ந்த முகத்துடனையே உலா வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சனிக்கிழமை அலுவலகத்தில் அவரை பக்கத்தில் அமர வைத்து விசாரித்தேன். அவர் கதையை கேட்க கேட்க எனக்குள்ளே ஒரு விதமான சோகம். அவர் எடுத்து காட்டிய விசிட்டிங் கார்டை பார்த்தும் அதிர்ந்தே போய்விட்டேன்.

xxxxxxxxxx
General Manager
Group of Companies


கிரானைட் மற்றும் லெதர் மற்றும் கார்மெண்ட் சம்பந்தமான துறைகளில் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனத்தின் சொந்தக்காரராக இருந்திருக்கின்றார் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்.

இப்பொழுது எனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய். ஏன் இப்படி?

"நீங்க எல்லாம் என்ன சம்பாதிக்கிறீங்க தம்பி...நான் வாரத்தில் 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவன். நல்ல வசதியாய் வாழ்ந்திருக்கின்றேன்..

திடீரென்று
தொழிலில் நஷ்டம் ஏற்பட சுற்றியுள்ளவர்கள் எல்லாம்விலகிவிட்டார்கள்.

அப்பொழுதுதான்
விளங்க ஆரம்பித்தது என்னை சுற்றியிருந்திருப்பது பணம் மட்டுமே .. வேற எதுவுமில்லை என்று.


அண்ணனும்
தம்பியும் மிகப்பெரிய சாபட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கின்றார்கள். தந்தையும் நல்லா வசதியாகஇருக்கின்றார். ஆனால் எனக்கு உதவி செய்ய அவர்களுக்கு தயக்கம்.

நல்லா
வாழ்ந்திட்டு இப்போ இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமாகயிருக்குதுப்பா.. .. இன்னமும் நான் இறைவனிடம்வேண்டிக்கொண்டுதானிருக்கின்றேன்.. ஓரளவுக்கு கேவலப்படுத்து இறைவா என்னை ரொம்பவும் அவமானப்படுத்திவிடாதே என்று


நான்
நல்லா வாழும்பொழுது பார்த்தவர்கள் என்னை இந்த நிலையில் இருப்பதை பார்த்துவிடக்கூடாது என்றுதான் இப்போ இந்த ஆர் டி நகரில் வீடு மாறி வந்திருக்கேன். அவுங்க கண்களில் இருந்து மறைஞ்சு மறைஞ்சு வரேன்"

சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கண்களில் முழுவதுமாக நீர் திரள அதனை அடக்க முயற்சித்து முடியாமல் அழுதேவிட்டார்;

"
நான் கம்பெனியின் நிறுவனராக இருந்தபொழுது என்னுடையகம்பெனியில் டீ போடும் பெண்ணிற்கு இப்பொழுது நான் வாங்குகின்றசம்பளத்தை விடவும் அதிகமாக கொடுத்தேன். இப்போ நானே அந்தவேலை செய்கின்றேன் என்று நினைக்கும்பொழுது ரொம்பவேதனையாயிருக்கு."


அவரை ஆறுதல் படுத்த முடியாமல் அவரின் அந்த நிலைமையின் சோகத்தை ஜீரணிக்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இந்த வாழ்க்கைதான் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகின்றது பாருங்களேன் எப்பொழுதும் ஏழையாகவே இருந்துவிடலாம் இல்லை எப்பொழுதும் பணக்காரனாகவே இருந்துவிடலாம்.

ஆனால் நன்றாக வசதியாக வாழ்ந்துவிட்டு பின்னர் கஷ்டப்படுகிற வாழ்க்கை யாருக்குமே வரக்கூடாது. அது மிகவும் கொடுமையானது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.

சுகர் கம்மியா இருக்கு... என்று எனக்கு பின்னால் உள்ள கேபினில் உள்ளவன் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க , சரி அடுத்த தடைவ நல்லா போடுறேன் என்று அமைதியாக அவனிடம் தலையாட்டிவிட்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றார்.


"டீ ஆறிப்போயிடுச்சி
கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாங்க"
அதோ புகார் செய்துகொண்டிருக்கும்
அவனுக்கு தெரியுமா?
ஆறிப்போனது
அவரது வாழ்க்கையும்தான் என்று?


இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க... என்னை கடந்து சென்று கொண்டேயிருக்கின்றது அந்தக் குரல்

நான் இப்பொழுதெல்லாம் இன்னொரு தேநீர் கேட்பதேயில்லை...

- ரசிகவ் ஞானியார்

Sunday, February 01, 2009

இனி வரும் நாட்கள்...




அகரமுதல எழுத்துக்கெல்லாம்
அகதிகளென்று பெயராம்!

சிறை வைக்கப்பட்ட எங்கள்
சீதைகளை மீட்க...
இராமன்களே மறுத்துவிட,
அனுமர்கள் மட்டும்
அவ்வப்போது தீக்குளிக்கின்றார்கள்!


நாகரீக மாற்றத்தில்
குகை மனிதன்
புகை மனிதனாகுகின்றான்

எல்லைத் தாண்டுதல்
எவருக்குமே அனுமதியில்லாதபொழுது,
எப்படி நுழைந்தாய்
மிருக எல்கைக்குள்?

வீசுபவனும் வலிகள் உணர்ந்தால்
ஹைட்ரஜன்கள் என்றோ
ஆக்சிஜன்களாக்கப்பட்டிருக்கும்


உன்
கழுகுப் பார்வைக்கு
காதுகள் இருந்திருந்தால்
ஓலச்சப்தங்கள் கேட்டிருக்கலாம்
உன்னைப்போலவே அங்கே
மனிதர்கள்தான் வாழ்கிறார்கள்

பதுங்கு குழிகளை
பிய்த்து எறியும் உன்
தேர்களின் நகர்வுகளில்
சிதைந்து போவது
மனித உடல்களா?
விதைகளா?


புரிந்து கொள்
உன்
செல்லில் செத்துப்போனது
புத்தன் மட்டும்தான்


உனக்கு
சொர்க்கம் காத்திருப்பதாய்
தோன்றுகின்ற கனவுகள்
கண்ணிவெடியில் பதிந்துள்ள
கால்கள் போலத்தான்!

உனக்கு வருங்காலமா?
வெறுங்காலமா?
இனிவரும் நாட்கள்
பிரதிபலிக்கும்

நம்புகிறோம்
நீயும் எழுப்பப்படுவாய்...
முத்துக்குமரனும் எழுப்பப்படுவான்

- ரசிகவ் ஞானியார்

Sunday, January 18, 2009

நலம் விரும்பிகள்





தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

- ரசிகவ் ஞானியார்

Saturday, January 03, 2009

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது


நான் பாவப்பட்டவனா?
புனிதப்பட்டவனா?

புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே

உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்

பாவத்தின் சம்பளம்
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஒவ்வொரு குளியலும்
என்னை புனிதமாக்கிவிடும்

மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது

என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே

என் பாவம் கடவுளுக்குப்
பிடித்திருக்கிறது

- ரசிகவ் ஞானியார்