Feeds RSS

Sunday, June 07, 2009

அன்று மேலாளர் இப்பொழுது ஆபிஸ் பாய்



இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க...

நீங்களும்தான் இன்னொரு கப் எடுத்துக்கோங்க
என்று அவர் அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருக்க என் முறையும் வந்தது.

இரண்டு தேநீர் கொடுக்கப்படுகின்ற முறையே அலுவலகத்தில் என்னிலிருந்துதான் ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இரண்டு கோப்பை தேநீர் கேட்கின்ற முறையை ஆரம்பித்ததே நான்தான். சில நேரங்களில் அவர் கொண்டு வரும்பொழுதே இரண்டு கோப்பை எடுத்து வைத்துக்கொள்வேன்.. அந்த அளவுக்கு தேநீர பைத்தியம்..

சென்ற மாதம்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார் . அவரை ஆபிஸ் பாய் என்று அழைப்பதை விடவும் ஆபிஸ் மேன் என்று சொல்லலாம். வயது சுமார் 40 இருக்கும். . எப்பொழுதும் முகத்தில் ஒருவிதமான கவலை தோய்ந்த முகத்துடனையே உலா வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சனிக்கிழமை அலுவலகத்தில் அவரை பக்கத்தில் அமர வைத்து விசாரித்தேன். அவர் கதையை கேட்க கேட்க எனக்குள்ளே ஒரு விதமான சோகம். அவர் எடுத்து காட்டிய விசிட்டிங் கார்டை பார்த்தும் அதிர்ந்தே போய்விட்டேன்.

xxxxxxxxxx
General Manager
Group of Companies


கிரானைட் மற்றும் லெதர் மற்றும் கார்மெண்ட் சம்பந்தமான துறைகளில் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனத்தின் சொந்தக்காரராக இருந்திருக்கின்றார் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்.

இப்பொழுது எனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய். ஏன் இப்படி?

"நீங்க எல்லாம் என்ன சம்பாதிக்கிறீங்க தம்பி...நான் வாரத்தில் 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவன். நல்ல வசதியாய் வாழ்ந்திருக்கின்றேன்..

திடீரென்று
தொழிலில் நஷ்டம் ஏற்பட சுற்றியுள்ளவர்கள் எல்லாம்விலகிவிட்டார்கள்.

அப்பொழுதுதான்
விளங்க ஆரம்பித்தது என்னை சுற்றியிருந்திருப்பது பணம் மட்டுமே .. வேற எதுவுமில்லை என்று.


அண்ணனும்
தம்பியும் மிகப்பெரிய சாபட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கின்றார்கள். தந்தையும் நல்லா வசதியாகஇருக்கின்றார். ஆனால் எனக்கு உதவி செய்ய அவர்களுக்கு தயக்கம்.

நல்லா
வாழ்ந்திட்டு இப்போ இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமாகயிருக்குதுப்பா.. .. இன்னமும் நான் இறைவனிடம்வேண்டிக்கொண்டுதானிருக்கின்றேன்.. ஓரளவுக்கு கேவலப்படுத்து இறைவா என்னை ரொம்பவும் அவமானப்படுத்திவிடாதே என்று


நான்
நல்லா வாழும்பொழுது பார்த்தவர்கள் என்னை இந்த நிலையில் இருப்பதை பார்த்துவிடக்கூடாது என்றுதான் இப்போ இந்த ஆர் டி நகரில் வீடு மாறி வந்திருக்கேன். அவுங்க கண்களில் இருந்து மறைஞ்சு மறைஞ்சு வரேன்"

சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கண்களில் முழுவதுமாக நீர் திரள அதனை அடக்க முயற்சித்து முடியாமல் அழுதேவிட்டார்;

"
நான் கம்பெனியின் நிறுவனராக இருந்தபொழுது என்னுடையகம்பெனியில் டீ போடும் பெண்ணிற்கு இப்பொழுது நான் வாங்குகின்றசம்பளத்தை விடவும் அதிகமாக கொடுத்தேன். இப்போ நானே அந்தவேலை செய்கின்றேன் என்று நினைக்கும்பொழுது ரொம்பவேதனையாயிருக்கு."


அவரை ஆறுதல் படுத்த முடியாமல் அவரின் அந்த நிலைமையின் சோகத்தை ஜீரணிக்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இந்த வாழ்க்கைதான் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகின்றது பாருங்களேன் எப்பொழுதும் ஏழையாகவே இருந்துவிடலாம் இல்லை எப்பொழுதும் பணக்காரனாகவே இருந்துவிடலாம்.

ஆனால் நன்றாக வசதியாக வாழ்ந்துவிட்டு பின்னர் கஷ்டப்படுகிற வாழ்க்கை யாருக்குமே வரக்கூடாது. அது மிகவும் கொடுமையானது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.

சுகர் கம்மியா இருக்கு... என்று எனக்கு பின்னால் உள்ள கேபினில் உள்ளவன் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க , சரி அடுத்த தடைவ நல்லா போடுறேன் என்று அமைதியாக அவனிடம் தலையாட்டிவிட்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றார்.


"டீ ஆறிப்போயிடுச்சி
கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாங்க"
அதோ புகார் செய்துகொண்டிருக்கும்
அவனுக்கு தெரியுமா?
ஆறிப்போனது
அவரது வாழ்க்கையும்தான் என்று?


இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க... என்னை கடந்து சென்று கொண்டேயிருக்கின்றது அந்தக் குரல்

நான் இப்பொழுதெல்லாம் இன்னொரு தேநீர் கேட்பதேயில்லை...

- ரசிகவ் ஞானியார்

Sunday, February 01, 2009

இனி வரும் நாட்கள்...




அகரமுதல எழுத்துக்கெல்லாம்
அகதிகளென்று பெயராம்!

சிறை வைக்கப்பட்ட எங்கள்
சீதைகளை மீட்க...
இராமன்களே மறுத்துவிட,
அனுமர்கள் மட்டும்
அவ்வப்போது தீக்குளிக்கின்றார்கள்!


நாகரீக மாற்றத்தில்
குகை மனிதன்
புகை மனிதனாகுகின்றான்

எல்லைத் தாண்டுதல்
எவருக்குமே அனுமதியில்லாதபொழுது,
எப்படி நுழைந்தாய்
மிருக எல்கைக்குள்?

வீசுபவனும் வலிகள் உணர்ந்தால்
ஹைட்ரஜன்கள் என்றோ
ஆக்சிஜன்களாக்கப்பட்டிருக்கும்


உன்
கழுகுப் பார்வைக்கு
காதுகள் இருந்திருந்தால்
ஓலச்சப்தங்கள் கேட்டிருக்கலாம்
உன்னைப்போலவே அங்கே
மனிதர்கள்தான் வாழ்கிறார்கள்

பதுங்கு குழிகளை
பிய்த்து எறியும் உன்
தேர்களின் நகர்வுகளில்
சிதைந்து போவது
மனித உடல்களா?
விதைகளா?


புரிந்து கொள்
உன்
செல்லில் செத்துப்போனது
புத்தன் மட்டும்தான்


உனக்கு
சொர்க்கம் காத்திருப்பதாய்
தோன்றுகின்ற கனவுகள்
கண்ணிவெடியில் பதிந்துள்ள
கால்கள் போலத்தான்!

உனக்கு வருங்காலமா?
வெறுங்காலமா?
இனிவரும் நாட்கள்
பிரதிபலிக்கும்

நம்புகிறோம்
நீயும் எழுப்பப்படுவாய்...
முத்துக்குமரனும் எழுப்பப்படுவான்

- ரசிகவ் ஞானியார்

Sunday, January 18, 2009

நலம் விரும்பிகள்





தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

- ரசிகவ் ஞானியார்

Saturday, January 03, 2009

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது


நான் பாவப்பட்டவனா?
புனிதப்பட்டவனா?

புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே

உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்

பாவத்தின் சம்பளம்
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஒவ்வொரு குளியலும்
என்னை புனிதமாக்கிவிடும்

மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது

என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே

என் பாவம் கடவுளுக்குப்
பிடித்திருக்கிறது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, October 08, 2008

அழகான பிரிவு





நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற...
பிரிவின் துயரினை,
நடிக்கத் தெரியாத
கண்ணீரையெல்லாம்...
ஏன் உடன் சுமந்து வருகின்றாய்?

அன்பின் திரவவடிவமான
அந்த
நீர்த் திவலைக்களுக்காகவாவது,

கிளம்புவதற்கான விநாடிகள்
கணக்கிடப்படும் தருவாயில்
பாம்பின் பின்னலையொத்த
விரல்களின் ஸ்பரிசத்திற்காகவாவது...

பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Sunday, September 28, 2008

பெங்களுரு புகைப்படக் கண்காட்சி

பெங்களுரில் பாரதீய வித்யாபவனில் கடந்த 3 நாட்களாக 26-27-28 குழும நண்பர் இலட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்களான பிவி - அருள் ஜெகதீஷ் - சுரேந்தர் ஆகியோர்களின் புகைப்படக் கண்காட்சி திலீப் என்ற நண்பரின் உறுதுணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சாப்ட்வேர் துறைகளில் இருந்தாலும் இந்த இளைஞர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு புகைப்பட ஆர்வம் இருக்கின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. கைதேர்ந்த புகைப்படக் கலைஞரை ஒத்த புகைப்படங்களை இவர்களகது கேமிராக்கள் படம்பிடித்துள்ளன்.

புகைப்படங்களுக்காக ஒவ்வொரு இடமாய் தேடிச் சென்று இவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றது. நம் கண்களுக்கு வெறும் காட்சியாய் தெரிபவைகள் இவர்களுக்கு கலைகளாகத் தெரிகின்றது.

இந்த இளைஞர்களின் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுக்கள். அவர்களது புகைப்படங்களுள் சில:

படம் 1



விழித்திரையின் அடியில்
குழுமியிருக்கும் நீர்த்துளிகள்
இந்தப் புன்னகையை
போலியாக்குகின்றது


படம் 2




இந்தப் புன்னகைக்கு
குடிசையும் தெரியாது
கோபுரமும் தெரியாது


படம் 3



பட்டாம்பூச்சிகளின்
பாதுகாவலில்
பாம்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றது


படம் 4



மாட மாளிகைகளில்
வசித்தாலும்
இறுதிப் பயணத்தில்
ஒரு செங்கலைக் கூட
கொண்டு செல்ல முடியாது


படம் 5



எதிர்கொள்ளாதவரை
பிரச்சனைகள்
பிரச்சனைகளாகவே இருக்கின்றன


-ரசிகவ் ஞானியார்

Sunday, September 21, 2008

மென்தமிழ் - புரட்டாசி - 2008

வணக்கம் நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதோ இந்த மாதத்திற்கான இதழ்.உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக

(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா,எழிலன்பு)
4creativeweb Solutions Promote Your Business

Powered by Find IP Address