Thursday, August 28, 2014

ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்கள்

தொடர்ந்து முகநூலில் வந்து விழுகின்ற சில மரணச் செய்திகள் வாழ்க்கையைப் பற்றிய பிடிமானத்தையும் அதிகரிக்கின்றது "அட! வாழ்ந்து என்ன ஆகப் போகின்றது" என்கிற கவலையையும் தோன்றச் செய்கின்றது. .

சென்ற வாரம் பேருந்து மோதி நடந்த மேலப்பாளைய நண்பரின் மரணம். அவரோடு எனக்கு பழக்கமில்லை எனினும் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்கும்பொழுது சந்தித்திருக்கின்றோம்.....எங்கேனும் நின்று கடக்கின்ற தெருவில் சலாம் சொல்லியிருக்கின்றோம்.....

இனி அடுத்த முறை ஊருக்கு செல்லும்பொழுது அந்த முகம் எந்த தெருக்களிலும் சாலைகளிலும் எனக்கு தென்படவே போவதில்லை என்பதை நினைத்து பார்க்கும்பொழுது முகங்களை மறைத்து நியாயதீர்ப்பு நாளில் எழுப்பும் கடவுளின் மந்திரத்தில் இனி எவர் வேண்டுமானாலும் மாட்டக்கூடும் அடுத்த ரேண்டம் நம்பரில் யார் மாட்டக்கூடும்..?......

யாருடைய முகங்கள் எப்பொழுதிலிருந்து மறையப்போகின்றது என்கிற பயம் இன்னமும் அதிகரிக்கின்றது.

அதுபோல நேற்றும் ஒரு நண்பனின் மரணச்செய்தி...எனது பால்ய காலத்தில் நாங்கள் இருந்த ஹாமீம்புரம் இரண்டாம் தெருவில் நெருங்கிப் பழகிய நண்பன்... என்னுடைய வயதுதான்.....திடீரென்று ஹார்ட் அட்டாக்... நம்பவே முடியவில்லை....

துபாயில் சில வருடம் வேலை பார்த்தான்.... அவனை துபாயில் சந்தித்திருக்கின்றேன். குடும்பத்தை விட்டு பிரிந்து பொருளீட்ட சென்று விட்டு,

பெற்ற குழந்தையின் வளர்ச்சியை கண் முன்னே காணாமல்......,
குழந்தை முதன் முதலாய் பள்ளிக்கு அடி எடுத்து வைக்கும் பொழுது அழுதுகொண்டே செல்லும் பிரிவை காணாமல்..... ,etc....

சின்ன சின்ன நிகழ்வுகளையெல்லாம் வாழத் தவறிய வாழ்க்கையை , காலத்தின் நிர்ப்பந்தத்தால் அயல்தேசத்தில் வாழ்ந்துவிட்டு,.ஊரில் வந்து இப்பொழுதுதான் செட்டில் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கின்றான்....... ஆனால் முந்திக்கொண்டது மரணம்.....ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்களைப் போல...

"அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று நினைத்து வந்தவனை மரணம் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது......... இனி எந்த விசாவையும் நீட்டிக்க முடியாது..... .... அவனுக்காக இனி எந்த அரபாபும் காத்திருக்கப் போவதில்லை........

அவனுடன் ஒரே அறையில் தங்கியவர்கள் ,
அவனுடன் துபாய் சாலையில் சுற்றியவர்கள்.... ,
ஜெபல் அலியில் அவனோடு சேர்ந்து வேலை தேடியவர்கள், எல்லாம் துபாயில் தங்களது அறையில் கட்டிலில் அமர்ந்து அவனுடைய மரணத்திற்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டு, அவனைப் பற்றிய பேச்சுக்களின் இறுக்கத்தில் இரண்டு நாட்களை கழிக்க சிரமப்படலாம்..... அவ்வளவுதான்

மீண்டும் அதே பாலைவன வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடலாம்.. வேறு என்ன செய்ய முடியும்..? "அவர்களும் அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டவர்கள்தான்.....ஆனால் முகம் மறைவது நிற்கப்போவதில்லை.....

நாம் வாழ்க்கையைப் பற்றிய எத்தனை எத்தனை கனவுகளோடு சுற்றிக்கொண்டிருக்கின்றோம்....இனிமேல் தான் வாழவே ஆரம்பிக்க வேண்டும் என்பது போல் இருக்கின்றது......

நமக்குண்டான எல்லா பிரச்சனைகளையும்
ஒரு புள்ளியாக்கி விடுகின்றது, எல்லாவற்றையும் உடைத்துவிடுகின்றது இதுபோன்ற மரணச் செய்திகள்.

எதற்கு இப்படி ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்..?இருக்கின்ற நாட்களில் குடும்பத்துடன் செலவழித்து விடலாமா..? திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்ற முகங்களின் பட்டியலில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் ஒரு நாள் வந்து விடக்கூடும் ....

இன்னமும் எவ்வளவோ தூரம் கடந்து எத்தனையோ மலைகளை கடந்து ஆயிரம் கடல்களைத் தாண்டி நமக்கான மரணம் இருப்பதாக ஒரு கற்பனையில் இருக்கும்பொழுது இதோ அது பக்கத்தில்தான் இருக்கின்றது என்று ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது...........

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளாமலையே இந்த உலகம் விட்டு பிரிந்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்துவிடுமா..? மரணத்திற்காக நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது..? கேள்வி கணக்குகள் கேட்கப்படுகின்ற நாளில் நமக்கு மறந்து போய்விட்டால் என்ன செய்வது? என்கிற மறுமையின் கவலைதான் மேலோங்கி நிற்கிறது இந்த மாத சம்பளம் வரும் வரையிலும்....

மறுபடியும் வாழ்க்கை எப்பொழுதும் போலவே பயணிக்கின்றது அடுத்த ஒரு மரணம் வரைக்கும்;... :(

- ரசிகவ்

தேன் கூடு