Tuesday, September 25, 2007

ஊனமுற்றவன்

Photo Sharing and Video Hosting at Photobucket

பேருந்தில் ஏறினால் ...
ஊனமுற்றோர் இருக்கையில்
அமரச்சொல்லி
அடம்பிடிக்கின்றது ...
உன் மீதான காதல் !

இதயமிழந்தாலும்
ஊனமுற்றவனோ..?

- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 19, 2007

Ex. ரவுடி

Photo Sharing and Video Hosting at Photobucket

தோ இந்தப் படத்தில் இருக்கின்ற நபர் ஒரு முன்னால் ரவுடி. கட்டப்பஞ்சாயத்து என்றாலே இவர் பெயர்தான் அடிபடும். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு பலரை மிரட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

டன் பிரச்சனை - நிலத்தகறாறு - என்று எல்லாப் பிரச்சனைகள் நடக்குமிடத்திலும் இவர் பிரவேசிப்பார். காசுக்காக அப்பாவிகளை அடித்து , உதைத்து, துன்புறுத்துவது என்று பாதிக்கபட்டவர்களின் சாபத்தை வாங்கியிருக்கின்றார்.

வர் கையில் எப்பொழுதும் பணம் அதிகமாக புரளும். நண்பர்கள் கூட்டத்திற்கோ கேட்கவே வேண்டாம். தன்னுடன் இருக்கின்ற நண்பர்களுக்காக எதையும் செய்ய வல்லவர். தினமும் நண்பர்களுக்கு பிரியாணி – தண்ணி என்று விருந்து வைத்து அமர்களப்படுத்திவிடுவார்.

ருமுறை நண்பர்களுடன் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு தனது வாகனத்தில் திரும்பிகொண்டிருக்கும் பொழுது பெரிய கல்லில் மோதி தடுக்கி விழுந்து பலமாக அடிபட்டது. இவருடன் கட்டப்பஞ்சாயத்திற்கு சென்ற நண்பர்களோ பயந்து போய் ஓடிவிட்டனர். அப்பொழுதே அவருக்குத் தெரிந்திருக்கும் தன் சுற்றி இருக்கின்ற நண்பர்களின் உண்மையான முகம்.

பின்னர் எங்கள் பகுதியைச் சார்ந்த அவருடைய நண்பர்கள் சிலர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ந்த விபத்தில் அவரது ஒரு கால் ஊனமாகி விட்டது. அவரால் சரியாக நடக்கமுடியாது. சில வருடங்கள் தடியின் துணையோடு நடமாடி வந்தார். தடியாக இருக்கவேண்டிய அவரது தடி நண்பர்கள் எல்லாம் எங்கு போனார்களோ தெரியாது? அவரிடம் பணப்புழக்கம் குறைவதைக் கண்டதும் விலகி ஓட ஆரம்பித்தனர்.

வரது கால்கள் ஊனமாகி விட்டதால் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்ய அவரை அழைக்கவும் இல்லை. அதனைத் தவிர வேறு தொழிலும் அவருக்குத் தெரியாததால் அவருடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்றுவிட்டது.

ஜானுபாகுவான மார்புடன் கம்பீரமாக அதட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தவர் எங்களிடம், "தம்பி ஒரு 10 ரூ இருந்தா கொடுங்களேன்" என்று கெஞ்சும் பொழுது அவரது நிலையை நினைத்து வேதனையடையாமல் இருக்க முடியவில்லை.

ப்படி 5 க்கும் 10 க்குமாய் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வப்போது நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றோம்.

பாருங்களேன் காலம் மனிதர்களை எப்படியெல்லாம் சுருட்டிப் போடுகின்றது என்று?.

"ஆடாதடா! ஆடாதடா! மனிதா!
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா!.. "

என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

னக்கு என்ன வருத்தமெனில் அவருடன் அன்று தோள்மீது கை போட்டபடி சுற்றிய நண்பர்கள் இப்பொழுது நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர் வந்தவுடனையே ஒதுங்கவும், சிலநேரம் அவமதித்தும் அனுப்பி விடுகின்றனர்.

ன்னிடமே இவர் சிலமுறை புலம்பியிருக்கின்றார்

"நான் நல்லா இருந்தப்ப என்கூட எப்படி இருந்தாங்க தெரியுமா இவங்க..? ச்சே பணம் இல்லைன்னு தெரிஞ்சவுடனே ஒதுங்க ஆரம்பிச்சுட்டாங்க.. "

ப்பொழுதெல்லாம் கண்ணுக்கு முன்னாடியே அநியாயத்திற்கான தண்டனைகள் கிடைத்துவிடுகின்றன. அவர் எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பார் அதற்கான கடவுள் கொடுத்த தண்டனையாக கூட இது இருக்கலாம்.

ணம் மட்டும் இல்லைனா ஒரு ஜல்லி பைசாவுக்கு நம்மை மதிக்க மாட்டாங்க. சொந்தங்கள் கூட பணம் இருந்தால்தான் நம்மை சொந்தமென்றே பறைசாற்றிக்கொள்ளும்

ப்பொழுது இவர் மனம் திருந்தி, உழைத்து வாழ ஆசைப்பட்டாலும் அவரது உடல்வாகு அவருக்கு ஒத்துழைப்பதில்லை.

தையும் மீறி எங்கேனும் வேலை கேட்டாலும் அவரது முந்தைய நடவடிக்கைகளை சொல்லியே அவரை ஒதுக்கிவிடுகின்றனர். அவருடன் முன்பு ஒட்டி இருந்த நண்பர்கள் கூட அவரது முந்தைய நடவடிக்கைகளை காரணம் காட்டி ஒதுக்குவதுதான் வேதனைக்குரியது.

நீ மேலே உயரும்பொழுது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.?
நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்களை நீ அறிவாய்

யாரோ எழுதிய இந்த வரிகள் எத்துணை நிதர்சனமானது என்பது இவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன்.

ந்த புகைப்படத்தில் மட்டுமல்ல இவரது நிஜ வாழ்க்கையுமே இருட்டில் மாட்டிக்கொண்டது


- ரசிகவ் ஞானியார்

Friday, September 14, 2007

முன்னேறியது இந்தியாவா...இந்தியனா..?

ங்கிலாந்தில் மிகப்பெரிய கோடீசுவரர் லட்சுமி மிட்டல். அவரது சொத்து மதிப்பு 13 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். ( இப்பவே கண்ணைக் கட்டுதே)

Photo Sharing and Video Hosting at Photobucket

லக பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவைச் சார்ந்தவர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

லகக் கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் ஜப்பானை, இந்தியா மிஞ்சிவிட்டதாம்.

லக லட்சாதிபதிகள் வரிசையில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றதாம்

சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வருடச் சம்பளம் இத்தனை லட்சம், அத்தனை லட்சம் என்று உயர்ந்து கொண்டிருக்கின்றது.

ந்தியாவில் தனி மனித சம்பளம் லட்சங்களைத் தாண்டி கோடிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

லக கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது .

ந்தியர்களின் வளர்ச்சி அதீத வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தியாவில்தான் இன்னமும் அடிப்படை வசதிகளையே நிறைவேற்றிக்கொள்ளாத மக்களும் இருக்கின்றார்கள்.

30 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் 3 வேளை உணவு கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழேதான் இருக்கின்றார்கள் என்பது வருத்தமான உண்மை.

Photo Sharing and Video Hosting at Photobucket

கடுமையான வெயிலில் இதோ இந்தத் தாத்தா ஆடு மேய்த்துக் கொண்டிருக்கின்றார். அந்த வெயிலின் சூட்டினை என்னாலையே தாங்க முடியவில்லை ஆனால் வயதான அந்தத் தாத்தா எப்படி சமாளித்துக் கொண்டிருக்கின்றார்? என்ற அனுதாபத்தில் அருகே சென்று விசாரித்தேன் .

"தாத்தா..தாத்தா "

காதினில் கை வைத்துக் கொண்டு மெல்ல என் பக்கம் வந்து கேட்டார்..

"என்னப்பா... என்ன..? "

நான் மறுபடியும் சப்தமிட்டு கேட்டேன். "இந்த வெயிலில் நிற்கிறீங்களே..தலையில் துண்டு போட்டுட்டு நிற்க வேண்டியதுதானே..வெயில் ஜாஸ்தியா அடிக்குதுல்ல.. "

லேசாய் புன்னகை உதிர்த்துவிட்டு "பழகிப்போச்சுப்பா" என்று கூறினார்

"உங்க ஆடுகள் எங்கே..? இந்த வயசுல இந்த வெயிலில ஏன் மேய்க்க வர்றீங்க..? "

"அதோ 10 ஆடுகள் நிற்குது பாருங்க .." என்று சுட்டிக்காட்டிவிட்டு சிரித்தபடி கூறினார் "வேற என்னப்பா செய்ய..? பொழைக்க வேண்டாமா..? "

"சரி எவ்வளவு சம்பளம் கிடைக்குது தாத்தா..? "

"மாசம் 300 ரூ கிடைக்கும் பா…" என்று கூறினார்

அட தினமும் 300 ரூ சம்பளம் வாங்குபவர்களுக்கு மத்தியில் மாசம் 300 ரூபாயா..? இதனால் அவரது அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதே..?

"இது எப்படி தாத்தா கட்டுபடியாகும்..?" என்று கேட்டேன்.

"ஏதோ வாழ்க்கை ஓடுதுப்பா" என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.

இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க வந்த அந்த தாத்தாவிடம் பணம் ஏதும் கொடுக்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்க தலையில் உள்ள தொப்பியை கழற்றி கொடுத்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

"அட நீ போட்டுக்கப்பா எனக்கெதுக்கு..? " என்று என்னிடம் திருப்பித்தர

"இல்லை தாத்தா நீங்க போட்டுக்கோங்க எங்கிட்ட இன்னொன்ணு இருக்குது.. வெயில்ல அலையுறீங்க.. நீங்க போட்டுக்போங்க" என்று வலுக்கட்டாயமாய் அவரது தலையில் தொப்பியை மாட்டினேன்.

வாயெல்லாம் பல் தெரிய மகிழ்ச்சியில் முதன் முதலாய் தொப்பி போட்ட வெட்கத்தில் புன்னகைத்தார். "எதுக்குப்பா போட்டோல்லாம் எடுக்குற?" என்று இன்னமும் மகிழ்ச்சியில் அதிகமாகவே புன்னகைத்தார்

Photo Sharing and Video Hosting at Photobucket

"நல்லதுப்பா..நல்லதுப்பா .. " என்று திருப்பி திருப்பி கூறிவிட்டு தொப்பியையும் கழற்றி கழற்றி மாற்றினார். அவரது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

அவரிடம் தொப்பியை மட்டுமல்ல மனசையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 12, 2007

ஹையா..எங்க ஊர்ல அமெரிக்க மருத்துவமனை


திருநெல்வேலி பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்கின்றது தண்டித்தான் குளம் என்கிற குக்கிராமம். அதன் அருகே தருவை என்கிற கிராமத்தில் உள்ளது ஒரு அமெரிக்கன் மருத்துவமனை.


Photo Sharing and Video Hosting at Photobucket

"ன்ன கிராமத்தில் அமெரிக்கன் மருத்துவமனையா?" என்ற ஆச்சர்யம்தான் என்னை இந்தப் பதிவு எழுத வைத்தது.


ண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வீடுகளை தேடித் தேடி ஒவ்வொன்றாக தட்டுப்படுகின்ற கிராமம். சுமார் 1 மணி நேரம் காத்திருந்தால் ஏதாவது ஒரு மனிதர்கள் தட்டுப்படுவார்கள் என்ற அளவுக்குத்தான் மக்கள் தொகை.

ப்படிப்பட்ட கிராமத்தில் அமெரிக்க மருத்துவமனை கட்டிய புண்ணியவான் யார்..? என்கிற ஆச்சர்யத்தோடு கண்ணில் யாரேனும் தட்டுப்படுவார்களா என தேட ஆரம்பித்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

றுதியில் பக்கத்தில் ஒரு குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியைப் பிடித்து கேட்டேன். "அய்யா இங்க என்ன அமெரிக்கன் மருத்துவமனை? "

ந்தக் கிராமத்தில் படித்த ஒருவர் இப்போது அமெரிக்காவில் வேலை கிடைத்து நன்றாக வாழ்கின்றார் எனவும் அந்த மனிதர் தனது கிராமத்து மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று இந்த மருத்துவமனையைக் கட்டினார் எனவும் அவர் கூறியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையே அளித்தது.

ந்த மருத்துவமனையில் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிப்பதாகவும் சில நேரம் மிகவும் வறியவர்கள் என்றால் கட்டணமே வாங்கமாட்டார்கள் என்றும் கூறினார்

ங்குள்ளவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் சுமார் 15 கி.மீ தாண்டித்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதிருக்கின்றது. இந்த மருத்துவமனை இங்குள்ள சொற்ப மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது என்றும் கூறினார்.

ந்த நாட்டில் இருந்தாலும் தன்னுடைய கிராமத்தையும் மறக்காமல் அங்குள்ளவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அந்த முகம் தெரியாத மனிதருக்கு இந்தியக் குடிமகன் சார்பில் வாழ்த்துக்கள்.

துபோன்று ஒவ்வொருவரும் தன்னிச்சையாகவோ அல்லது குழுமமாகவோ இணைந்து தான் வளர்ந்த பகுதிகளை தத்தெடுத்து ஏழ்மையைக் கண்டறிந்து அதனைத் துடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தால் இனி வரும் இந்தியா ஏழ்மையற்ற இந்தியாவாக மாறிவிடாதா..?



- ரசிகவ் ஞானியார்

Monday, September 10, 2007

யாருடையது இந்தப் பங்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

நேற்று நண்பர்களோடு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு முறை நான் செல்லும்பொழுதும், அம்பாசமுத்திரம் எல்கையைத் தாண்டி விக்கிரமசிங்கபுரம் தொடங்கும் இடத்தில் இதோ இந்தப் பராமரிக்கப்படாத பங்களாவை கவனிக்கத் தவற மாட்டேன்.

சாலையிலிருந்து சிறிது உயரத்தில் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது. பேய்ப் படங்களில் காட்டப்படுகின்ற பங்களா போல பயமாகவும் இருக்கும். முன்பு யாரோ நன்றாக வாழ்ந்த இடம் என்று மட்டும் தெரிகின்றது

வீட்டின் முன்னால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் கேட்டபொழுது, இது மன்னர் வாழ்ந்த வீடு எனவும். இதனைச் சுற்றி இதுபோன்ற சிறு சிறு வீடுகள் சேதமடைந்து நிறைய இருப்பதாகவும் கூறினார்கள். நாங்களும் அந்த வீட்டினுள் சென்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இதே போன்ற வீடுகள் ஆங்காங்கே சேதமடைந்து பராமரிக்கப்படாத நிலையில் இருந்தது.


Photo Sharing and Video Hosting at Photobucket

இப்பொழுது இந்த இடம் மடத்தின் பொறுப்பில் இருக்கின்றதாம். இந்த பங்களாவில் வாழ்ந்த மன்னன் யார்? எங்குள்ளவன்..? ஒரு வேளை ஆங்கிலேயர்கள் தாங்கள் இளைப்பாறிச் செல்வதற்காக கட்டினார்களா..? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, September 08, 2007

குடிமகன் - ஒரு நேரடி ரிப்போர்ட்

சென்ற பதிவில்தான் ஒரு குடிமகனைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு குடிமகன் . இந்த வாரம் என்ன குடிமகன் ஸ்பெஷலா..?

ன்று (08-09-07) மதியம் சுமார் 2 மணி இருக்கும். திருநெல்வேலி , பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற மிகவும் பரபரப்பான சாலை அது. குறுகலான ரோடு என்பதால் சிலநேரம் சாலையை விட்டு வாகனங்கள் இறங்கி செல்ல நேரிடும். அந்தச் சாலையில் "விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதி" என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும்

ப்படிப்பட்ட சாலையில் இப்படி கால்நீட்டி படுத்திருந்தால் யாருக்குத்தாங்க பதறாம இருக்கும். அந்த நபர் அப்படியே படுத்திருந்தால் சிறிது நேரத்தில் காலே இல்லாமல் போய்விடக்கூடும். பாருங்க எப்படி ஹாயா கால்நீட்டி படுத்திருக்கின்றார் .

ண்ணியடிச்சா தைரியம் தானா வரும் சொல்வாங்க அது உண்மைதான் என்பதை நிருபித்துவிட்டார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

டுக்கி விழுந்தவரா? இல்லை உண்மையிலையே தண்ணியா? என்று சந்தேகமாகவே இருக்க பக்கத்தில் சென்று பார்த்தேன். லேசாக பூனையைப் போன்று கண்ணைத் திறந்து திறந்து மூடினார். அதே சாராய நெடி. புரிந்துவிட்டது தலைவர் குடிமகன்தான் என்று.

வரைக் கடந்து செல்லும் வாகனங்கள் எல்லாம் அந்த இடத்தில் தடுமாறி சென்று கொண்டிருக்கின்றன...சரி என்ன செய்ய..? ஏதாவது வாகனம் சாலை ஓரத்தில் நகர்ந்தால் கூட அவர் கால் மீதுதான் ஏறும். ஆகவே சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் கால்களை பிடித்து அப்படியே ஓரத்தில் வைக்கலாமென்று நினைத்தேன். மெல்ல கால்களைப் பிடித்தேன். சட்டென்று கண் திறந்து விட்டார்.

"என்னடா ஏதாவது திட்டப்போகின்றாரா" என்று சந்தேகத்துடன் அப்படியே கால்களை வைத்துவிட்டேன். மறுபடியும் மயக்க நிலைக்கு சென்று விட்டார். அப்படியே கால்கள் இரண்டையும் பிடித்து சாலை ஓரத்தில் வைத்து விட்டேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

வருடைய சட்டைப்பையில் அவரது குடும்ப முகவரியோ அல்லது ஏதாவது தகவல்கள் இருந்தால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாமே என்று உற்று நோக்கினேன்.
கீழே விழுந்து அடிபட்டது போல காயந்து போன இரத்தக்கறைகள். பாக்கெட்டில் கொஞ்சம் பணமும், சில்லறைகளுமாக இருந்தது.

"ரி நமக்கெதுக்கு வம்பு? அப்புறம் ஏதும் பிரச்சனையாயிட்டா சிக்கல்" என்று அவரை சாலையோரத்தில் படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டேன்.

றுபடியும் திரும்பி பார்த்தேன் . கண்ணியத்தை இழந்துவிட்டாலும் , கால்களாவது காப்பாற்றப்படும் என்ற நிம்மதியில் சென்றுகொண்டிருக்க, அவரது கால்கள் மறுபடியும் சாலையை நோக்கி அசைந்து கொண்டிருந்தது.

டனே 100 க்கு தெலைபேசி செய்து தகவல் தெரிவித்துவிட்டேன். பரவாயில்லை நமது காவல்துறை, படு வேகமாகத்தான் இருக்கின்றார்கள்
15 நிமிடத்தில் போலிஸ் வேன் வந்து நின்றது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ரே ஒரு போலிஸ்காரர் மட்டும் இறங்கி அந்த நபரை அங்கையும் இங்கேயுமாக புரட்டினார். அவர் அசைவதாக தெரியவில்லை. பின் அந்த போலிஸ்காரர் முதுகில் வசமாக சாத்தினார். அந்த பலமான அறையில் திடுக்கிட்டு விழித்த, குடிமகனை பிடித்து சாலையின் மறுபக்கம் கொண்டு போய் விட்டனர்.


Photo Sharing and Video Hosting at Photobucket

"யப்பாடா இனி நிம்மதியா இருக்கலாம்ல… "

ரண்டு நிமிடத்தில் அந்தச் சாலையில் சுமார் 50 வாகனங்களாவது கடந்திருக்கும். ஆனால் எல்லாருமே அந்த குடிமகன் படுத்திருந்த இடத்தை வேடிக்கை பார்ப்பதற்காக நிறுத்தி, தலையை வெளியே நீட்டி பரிதாபப்பட்டு செல்கிறார்களே தவிர யாரும் இறங்கி உதவ முன்வருவதாய் தெரியவில்லை.

உறவினர்கள் , நண்பர்கள் என்றால் எப்படி பதறிப்போவோம்..? மனிதர்கள் அனைவரையுமே உறவினர்களாய் நினைக்க கூடாதா..?

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 06, 2007

ஒரு காலாட்படையே கவிழ்ந்துகிடக்கின்றதே?

ன்று காலையில் நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது எதிரே அந்த மனிதர் தடுமாறி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றார்

ன்னடா... நேராக வருகிறாரா? இல்லை எனக்கு இடது புறம் போகப்போகின்றாரா? வலது புறம் போகப்போகின்றாரா? என்று கணிக்க முடியாத அளவுக்கு வந்துகொண்டிருக்கிறார். அவரின் தடுமாற்றம் என்னை ரொம்பவே தடுமாற்றியது.

ண்டியின் வேகத்தைக் குறைத்துவிட்டு என்னதான் நடக்குதென்று பாரக்கலாமென்று அவருடைய போக்கில் விட்டுவிட்டேன். அவர் வேகமாய் வந்து இடது பக்கமாய் திரும்பி ஒரு மரத்தின் வேரில் முட்டி மோதி தொங்கிக்கொண்டிருந்தார்.

கிளையில் தொங்கியவர்களைக் கண்டிருக்கின்றேன். இவர் என்னடா வேரில் தொங்குகின்றார்?

நான் தப்பித்ததேன் என்று நிம்மதியாக இருந்தாலும், அவர் விழுந்துவிட்டாரே? பாவம் பெரிய மனிதர்.. ஏதாவது உதவி செய்யலாம் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு மெல்ல பக்கத்தில் சென்றேன்.

வருடைய வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்தது Ex-Army என்று. மிடுக்காக இராணுவத்தில் பணியாற்றியவரா இப்படி கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டுகிறார் என்று பக்கத்தில் சென்றால் ஏதேதோ உளறுகின்றார்.

மிகவும் பக்கத்தில் சென்றதும்தான் அந்த வாசனையும் அவருடைய போதையும் காட்டிக்கொடுத்தது. அந்த மதிப்புமிக்க இந்தியக் குடிடிடிடிடிடிமகன் போதையில் விழுந்திருக்கின்றார் என்று.

க்கத்தில் துணிகளை தேய்த்துக் கொடுக்கும் கடைக்காரர், நிகழ்ந்த சம்பவத்தை கண்டும் காணாமல் அலட்சியமாக தனது பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ல்லையில் குளிரில் நின்று நம்மை காத்தவரை, இப்படி அநாதையாக விட மனமின்றி அந்த கடைக்காரரை அழைத்தேன்.

"ஹலோ வாங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க..யாருன்னு தெரியல "

"அட போப்பா இவருக்கு வேற வேலை இல்லை தினமும் குடிச்சிட்டு வந்து விழுந்து கிடப்பார்..பக்கத்துலதான் அவருடைய ஆபிஸ்.."
என்று சொல்லிவிட்டு யாருடைய கலைந்த சட்டையின் மடிப்பினையோ தேய்த்துக்கொண்டிருக்கின்றார் தன்னுடைய மனம் கலைந்துபோனது தெரியாமல்.

ரி பாவம் என்று வேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மனிதரை உசுப்பி இன்னொரு ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் மெல்ல அந்த மரத்தின் பக்கத்தில் உள்ள சிமெண்ட் தரையில் படுக்க வைத்தோம்.

தன் பின்னர் தகவல் தெரிந்து அவரது அலுவலகத்தில் இருந்து யாரோ வந்து முகத்தில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தார்கள்.

ந்தக் குடியில் அப்படி என்னதான் இருக்கோ தெரியலைங்க..? பக்கத்துல கொண்டு வந்தாலே ஒரு மோசமான வாசைனை வீசுது. இதை எப்படி குடிக்கிறாங்கன்னு ஆச்சர்யமாக இருக்கு?

பாருங்க இந்தியாவையும், இந்தியக் குடிமகன்களை காக்கும் மிகப்பெரும் பொறுப்பில் இருந்தவர் இப்படி அனாதையாக சாலையில் ..........பார்க்கவே வேதனையாக இருக்குங்க…

Photo Sharing and Video Hosting at Photobucket

வருடைய மனைவி - குழந்தைகள் - உறவினர்கள் எல்லாம் இந்த நிலையில் இவரைக் கண்டுவிட்டால் அதன் பின்னர் எப்படி இவருக்கு மரியாதை கொடுப்பார்கள்.? அது சரி அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்பவோ குடிமகன்கள் திருந்தியிருப்பார்களே?


ரு
காலாட்படையே
கவிழ்ந்து கிடக்கின்றதே?

தடுமாறி விழுந்தது
நீ மட்டுமல்ல ...
உன்னுடைய சுயமரியாதையும்தான் !

இந்தியாவின் பாதுகாப்புக்காக ...
தீவிரவாதிகளோடு போரிட்டிருப்பாய்!

ஆனால்
குடும்ப மரியாதையை
பாதுகாக்க இயலாமல் ...
போதை என்னும் தீவிரவாதியிடம்
சரணடைந்துவிட்டாயே?

உன்னால்
கொடிநாள் குடிநாளாகிப் போனது!

உண்மையைச் சொல்
நீ
முன்னால் கொடிமகனா? குடிமகனா?


- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 05, 2007

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்


[முன்பே எழுதிய எனது கவிதையினை மீள் பதிவாக ஆசிரியர் தினத்திற்காக வெளியிடுகின்றேன்... அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..]




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

*****
ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

*****
எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதிகா மிஸ்!


*****

கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

*****
"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

*****
கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

*****
நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

*****
தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கிநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

*****
"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்,
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!
*****
இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...

*****
-ரசிகவ் ஞானியார்-

Saturday, September 01, 2007

வாழ்க்கைப் பயணம்

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ யாராகிலும் இருக்கலாம்

உன் எண்ணங்கள் ...
உன் பழக்கங்கள் ...
உன் கலாச்சாரம் ...
வேறாயிருக்க கூடும் !

என் பயணம் முழுவதும் ...
நீ வேண்டும் !

உன் ஜாதி , மதம் , மொழி பற்றி
எனக்குக் கவலையில்லை

என் பயணம் ...
உன்னால் இனிமையாக வேண்டும்
அவ்வளவுதான்!

எனக்காக நீயும் ...
உனக்காக நானும் ...
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !

காத்திருந்து உணவுண்ணும்
கண்ணியம் !

நீ எனக்குமாய் ...
நான் உனக்குமாய் ...
தவணை முறை பாதுகாப்புகள் !

தங்குகின்ற இடம் ...
யாருக்கும் நிரந்தரமில்லை!
நட்பு நிரந்தரமாகட்டும் !

பேச்சு, சிரிப்பு, அன்பு
எல்லாம் ...
பொய்யின்றி கடைசிவரை !

என் பயணத்தின்
இறுதிவரையிலும் இப்படியே ...
இனிய துணையாக
அமைந்துவிட்டால் ...

அழகாகவே இருக்ககூடும்
இரயில்பயணமும், வாழ்க்கையும் !

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு