Wednesday, December 24, 2014

பிசாசு


உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..? தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு போகின்றார்கள்...
மரணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு அது உணர்த்திவிடும்........ அதுவும் கண்முன்னால் நிகழ்கின்ற ப்ரியமானவர்களின் மரணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு வலியாகவே பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.....
கைகளை பற்றியபடி தன்னுடைய மரணத்தை கண்களின் வழியாக கடத்திவிட்டு உயிர்விட்டு விடுகின்ற, ஒரு பெண்ணின் ஞாபகத்துடன் அலைகின்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் இசை வழியாக ஆரம்பிக்கின்றது கதை........ பிசாசு....


காதல் வந்து மரணத்தில் முடிகின்ற கதைகளுக்கு மத்தியில், மரணம் வந்து காதலில் முடிகின்ற கதை இது....ஒரு கலங்காத நீரோடையைப் போல, இயக்குநரின் வழக்கமான கால்களின் பதட்டத்துடன் பயணிக்கின்றது .......
வீட்டை விட்டு பிரிந்து சென்ற மகளின் ஞாபகத்தில் அழுகின்ற தந்தைகளுக்கு மத்தியில், செத்து போன மகளை பிசாசாய் கண்டு, "வந்துறுமா வீட்டுக்கே வந்திருமா...ஏம்மா இங்க இருக்கே?" என்று புலம்பும் ராதாரவியின் நடிப்பும் அந்த காட்சியும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது....
ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று "இது என்ன நிறம் சொல்லுங்க?" என்று கதாநாயகன் கேட்கும் காட்சி, மூளைக்காரர்களுக்கு மட்டுமே முதல் முறை பார்த்தவுடன் புரியும்.... எனக்கு புரிந்தது...
பச்சை குடத்தின் ஓட்டை வழியாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கின்ற காட்சி சாதாரணமாக தெரிந்தாலும், கதையின் முடிச்சுகளும் அங்கேதான் கசிந்து கொண்டிருப்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது....
"நதி போகும் கூழாற்கற்கள் பயணம்" பாடலில் உள்ள வயலின் தந்திக் கம்பிகளின் நுனி, இமைகளின் இழைகளைத் தொட்டு கண்ணீர் வரவழைக்கின்றது...
வாழ்க்கையின் பிடிப்புகளற்று ஒரு விதமான ஏக்கத்தில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கும் கண் தெரியாத ஒரு தம்பதி...அவர்களின் பாதம் தொட்டு கிடக்கின்ற குச்சிகள்...
பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் அந்த சிறுமி......
கடவுள்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு வியாபாரி....
நாற்றமடிக்கும் பாதையில் பூக்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி...
பாதைகளைக் கடக்கும் பாதங்கள்........
பாத்திரத்தில் காசு போடுகின்ற கைகள்...

வயிறு காற்றடைத்த பையாக மாறிவிடக்கூடாதென்று, மூச்சினை பலூனுக்குள் பரிமாற்றம் செய்து விற்கின்ற ஒரு மாற்று திறனாளி.......

பீடா கறை படிந்த சுவற்றில் படுத்துக்கொண்டிருக்கும், உறவுகளால் கைவிடப்பட்ட ஒரு பிசாசைப் பெற்ற முதியவர்...........
இப்படி அந்தப் பாடலின் காட்சிகள் நம்மை சுரங்கப்பாதைகளின் எல்லா திசைகளிலும் ஓட வைக்கின்றது.... அன்றாடம் நம் கண்கள் அலட்சியமாய் கடக்கின்ற மனிதர்கள் அவர்கள்.... இனி சுரங்கம் கடக்க நேரிட்டால் நின்று கவனிக்க தோன்றும்....
கால் வலிக்க நின்று, பாடி பிச்சையெடுத்த துட்டுகளை பறிக்க முயற்சிக்கும் ரவுடிகள் மட்டுமல்ல, சமுதாயத்தில் எதிர்த்து போராட முடியாத எளியவர்களிடமிருந்து, அவர்களின் உரிமையை பறிக்க முயல்பவர்கள் எல்லாரும் பிசாசுகளே என்பதை அந்த சுரங்கப்பாதையின் நிகழ்வுகள் மூலம் மிஷ்கின் அருமையாய் உணர்த்தியிருப்பார்...
பிசாசினைப் பார்த்து வருகின்ற பயத்தினை விடவும்... முழு முகத்தையும் காட்டாமல் பாதி மறைத்த தலைமுடியுடன் வருகின்ற கதாநாயகனை பார்த்துதான் கொஞ்சம் பயம் வருகின்றது... 
வழியில் கிடக்கும் மனிதர்களை
வலியில்லாமல் கடப்பவர்கள் பிசாசுகள்...

Thursday, August 28, 2014

ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்கள்

தொடர்ந்து முகநூலில் வந்து விழுகின்ற சில மரணச் செய்திகள் வாழ்க்கையைப் பற்றிய பிடிமானத்தையும் அதிகரிக்கின்றது "அட! வாழ்ந்து என்ன ஆகப் போகின்றது" என்கிற கவலையையும் தோன்றச் செய்கின்றது. .

சென்ற வாரம் பேருந்து மோதி நடந்த மேலப்பாளைய நண்பரின் மரணம். அவரோடு எனக்கு பழக்கமில்லை எனினும் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்கும்பொழுது சந்தித்திருக்கின்றோம்.....எங்கேனும் நின்று கடக்கின்ற தெருவில் சலாம் சொல்லியிருக்கின்றோம்.....

இனி அடுத்த முறை ஊருக்கு செல்லும்பொழுது அந்த முகம் எந்த தெருக்களிலும் சாலைகளிலும் எனக்கு தென்படவே போவதில்லை என்பதை நினைத்து பார்க்கும்பொழுது முகங்களை மறைத்து நியாயதீர்ப்பு நாளில் எழுப்பும் கடவுளின் மந்திரத்தில் இனி எவர் வேண்டுமானாலும் மாட்டக்கூடும் அடுத்த ரேண்டம் நம்பரில் யார் மாட்டக்கூடும்..?......

யாருடைய முகங்கள் எப்பொழுதிலிருந்து மறையப்போகின்றது என்கிற பயம் இன்னமும் அதிகரிக்கின்றது.

அதுபோல நேற்றும் ஒரு நண்பனின் மரணச்செய்தி...எனது பால்ய காலத்தில் நாங்கள் இருந்த ஹாமீம்புரம் இரண்டாம் தெருவில் நெருங்கிப் பழகிய நண்பன்... என்னுடைய வயதுதான்.....திடீரென்று ஹார்ட் அட்டாக்... நம்பவே முடியவில்லை....

துபாயில் சில வருடம் வேலை பார்த்தான்.... அவனை துபாயில் சந்தித்திருக்கின்றேன். குடும்பத்தை விட்டு பிரிந்து பொருளீட்ட சென்று விட்டு,

பெற்ற குழந்தையின் வளர்ச்சியை கண் முன்னே காணாமல்......,
குழந்தை முதன் முதலாய் பள்ளிக்கு அடி எடுத்து வைக்கும் பொழுது அழுதுகொண்டே செல்லும் பிரிவை காணாமல்..... ,etc....

சின்ன சின்ன நிகழ்வுகளையெல்லாம் வாழத் தவறிய வாழ்க்கையை , காலத்தின் நிர்ப்பந்தத்தால் அயல்தேசத்தில் வாழ்ந்துவிட்டு,.ஊரில் வந்து இப்பொழுதுதான் செட்டில் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கின்றான்....... ஆனால் முந்திக்கொண்டது மரணம்.....ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்களைப் போல...

"அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று நினைத்து வந்தவனை மரணம் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது......... இனி எந்த விசாவையும் நீட்டிக்க முடியாது..... .... அவனுக்காக இனி எந்த அரபாபும் காத்திருக்கப் போவதில்லை........

அவனுடன் ஒரே அறையில் தங்கியவர்கள் ,
அவனுடன் துபாய் சாலையில் சுற்றியவர்கள்.... ,
ஜெபல் அலியில் அவனோடு சேர்ந்து வேலை தேடியவர்கள், எல்லாம் துபாயில் தங்களது அறையில் கட்டிலில் அமர்ந்து அவனுடைய மரணத்திற்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டு, அவனைப் பற்றிய பேச்சுக்களின் இறுக்கத்தில் இரண்டு நாட்களை கழிக்க சிரமப்படலாம்..... அவ்வளவுதான்

மீண்டும் அதே பாலைவன வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடலாம்.. வேறு என்ன செய்ய முடியும்..? "அவர்களும் அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டவர்கள்தான்.....ஆனால் முகம் மறைவது நிற்கப்போவதில்லை.....

நாம் வாழ்க்கையைப் பற்றிய எத்தனை எத்தனை கனவுகளோடு சுற்றிக்கொண்டிருக்கின்றோம்....இனிமேல் தான் வாழவே ஆரம்பிக்க வேண்டும் என்பது போல் இருக்கின்றது......

நமக்குண்டான எல்லா பிரச்சனைகளையும்
ஒரு புள்ளியாக்கி விடுகின்றது, எல்லாவற்றையும் உடைத்துவிடுகின்றது இதுபோன்ற மரணச் செய்திகள்.

எதற்கு இப்படி ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்..?இருக்கின்ற நாட்களில் குடும்பத்துடன் செலவழித்து விடலாமா..? திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்ற முகங்களின் பட்டியலில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் ஒரு நாள் வந்து விடக்கூடும் ....

இன்னமும் எவ்வளவோ தூரம் கடந்து எத்தனையோ மலைகளை கடந்து ஆயிரம் கடல்களைத் தாண்டி நமக்கான மரணம் இருப்பதாக ஒரு கற்பனையில் இருக்கும்பொழுது இதோ அது பக்கத்தில்தான் இருக்கின்றது என்று ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது...........

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளாமலையே இந்த உலகம் விட்டு பிரிந்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்துவிடுமா..? மரணத்திற்காக நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது..? கேள்வி கணக்குகள் கேட்கப்படுகின்ற நாளில் நமக்கு மறந்து போய்விட்டால் என்ன செய்வது? என்கிற மறுமையின் கவலைதான் மேலோங்கி நிற்கிறது இந்த மாத சம்பளம் வரும் வரையிலும்....

மறுபடியும் வாழ்க்கை எப்பொழுதும் போலவே பயணிக்கின்றது அடுத்த ஒரு மரணம் வரைக்கும்;... :(

- ரசிகவ்

Tuesday, February 18, 2014

உயிர்த்தெழுதல்



முகம் மறைத்தபடி கைதாகும்
அழகிகளின்
விடுதிகளில் எல்லாம்
புறவாசல் திறந்தே இருக்கின்றது

முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள்
இயேசு வருவதற்குள்

கல்லெறிகின்றார்கள்

Sunday, January 26, 2014

மற்றும் நான்


கைப்பேசி,
கடவுச்சீட்டு,
சஞ்சி,
நான் கூட
சேர்ந்துகொண்டேன்
தொலைத்து விடக்கூடாதென்கிற
பட்டியலில்


- ரசிகவ் ஞானியார்

Saturday, January 25, 2014

கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்






புன்னகையோடு வரவேற்கின்ற
விமான பணிப்பெண்கள் ...
முன் இருக்கையிலிருந்து
சிரிக்கின்ற குழந்தை...
பக்கத்து இருக்கை பயணிகள் ...
சோகத்தை
யாரிடமுமே கடத்திவிடாமல்
இயல்பு மறைக்கும் அந்தப் பயணத்தில்,
நான்
கண்ணாடி பெட்டியை உடைக்கும்
கண்ணீர்கள் சுமப்பவன் என....
தெரிந்திருந்தால்
நிச்சயமாய்  அறிவித்திருக்க மாட்டார்கள்
Have a pleasant journey
என்று...

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு