Wednesday, December 24, 2014

பிசாசு


உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..? தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு போகின்றார்கள்...
மரணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு அது உணர்த்திவிடும்........ அதுவும் கண்முன்னால் நிகழ்கின்ற ப்ரியமானவர்களின் மரணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு வலியாகவே பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.....
கைகளை பற்றியபடி தன்னுடைய மரணத்தை கண்களின் வழியாக கடத்திவிட்டு உயிர்விட்டு விடுகின்ற, ஒரு பெண்ணின் ஞாபகத்துடன் அலைகின்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் இசை வழியாக ஆரம்பிக்கின்றது கதை........ பிசாசு....


காதல் வந்து மரணத்தில் முடிகின்ற கதைகளுக்கு மத்தியில், மரணம் வந்து காதலில் முடிகின்ற கதை இது....ஒரு கலங்காத நீரோடையைப் போல, இயக்குநரின் வழக்கமான கால்களின் பதட்டத்துடன் பயணிக்கின்றது .......
வீட்டை விட்டு பிரிந்து சென்ற மகளின் ஞாபகத்தில் அழுகின்ற தந்தைகளுக்கு மத்தியில், செத்து போன மகளை பிசாசாய் கண்டு, "வந்துறுமா வீட்டுக்கே வந்திருமா...ஏம்மா இங்க இருக்கே?" என்று புலம்பும் ராதாரவியின் நடிப்பும் அந்த காட்சியும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது....
ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று "இது என்ன நிறம் சொல்லுங்க?" என்று கதாநாயகன் கேட்கும் காட்சி, மூளைக்காரர்களுக்கு மட்டுமே முதல் முறை பார்த்தவுடன் புரியும்.... எனக்கு புரிந்தது...
பச்சை குடத்தின் ஓட்டை வழியாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கின்ற காட்சி சாதாரணமாக தெரிந்தாலும், கதையின் முடிச்சுகளும் அங்கேதான் கசிந்து கொண்டிருப்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது....
"நதி போகும் கூழாற்கற்கள் பயணம்" பாடலில் உள்ள வயலின் தந்திக் கம்பிகளின் நுனி, இமைகளின் இழைகளைத் தொட்டு கண்ணீர் வரவழைக்கின்றது...
வாழ்க்கையின் பிடிப்புகளற்று ஒரு விதமான ஏக்கத்தில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கும் கண் தெரியாத ஒரு தம்பதி...அவர்களின் பாதம் தொட்டு கிடக்கின்ற குச்சிகள்...
பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் அந்த சிறுமி......
கடவுள்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு வியாபாரி....
நாற்றமடிக்கும் பாதையில் பூக்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி...
பாதைகளைக் கடக்கும் பாதங்கள்........
பாத்திரத்தில் காசு போடுகின்ற கைகள்...

வயிறு காற்றடைத்த பையாக மாறிவிடக்கூடாதென்று, மூச்சினை பலூனுக்குள் பரிமாற்றம் செய்து விற்கின்ற ஒரு மாற்று திறனாளி.......

பீடா கறை படிந்த சுவற்றில் படுத்துக்கொண்டிருக்கும், உறவுகளால் கைவிடப்பட்ட ஒரு பிசாசைப் பெற்ற முதியவர்...........
இப்படி அந்தப் பாடலின் காட்சிகள் நம்மை சுரங்கப்பாதைகளின் எல்லா திசைகளிலும் ஓட வைக்கின்றது.... அன்றாடம் நம் கண்கள் அலட்சியமாய் கடக்கின்ற மனிதர்கள் அவர்கள்.... இனி சுரங்கம் கடக்க நேரிட்டால் நின்று கவனிக்க தோன்றும்....
கால் வலிக்க நின்று, பாடி பிச்சையெடுத்த துட்டுகளை பறிக்க முயற்சிக்கும் ரவுடிகள் மட்டுமல்ல, சமுதாயத்தில் எதிர்த்து போராட முடியாத எளியவர்களிடமிருந்து, அவர்களின் உரிமையை பறிக்க முயல்பவர்கள் எல்லாரும் பிசாசுகளே என்பதை அந்த சுரங்கப்பாதையின் நிகழ்வுகள் மூலம் மிஷ்கின் அருமையாய் உணர்த்தியிருப்பார்...
பிசாசினைப் பார்த்து வருகின்ற பயத்தினை விடவும்... முழு முகத்தையும் காட்டாமல் பாதி மறைத்த தலைமுடியுடன் வருகின்ற கதாநாயகனை பார்த்துதான் கொஞ்சம் பயம் வருகின்றது... 
வழியில் கிடக்கும் மனிதர்களை
வலியில்லாமல் கடப்பவர்கள் பிசாசுகள்...

தேன் கூடு