Wednesday, August 27, 2008

சாப்ட்வேர் பொறியாளனின் மரணக்குறிப்பு



என்னுடைய மரணத்திற்கு யாருமே காரணமில்லை. என்னால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை.. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்கு தரப்பட்ட வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுக்கலாமென நினைத்தேன். ஆனால் இயலவில்லை.

என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

- சந்தீப்

வேலைப்பளு தாங்காமல் உயிர் மாய்த்துக்கொண்டான் இந்த சாப்ட்வேர் சகோதரன். வேலைப்பளு என்றால் வேலையை விட்டு நின்று விடவேண்டியதுதானே..? வேறு வழியா இல்லை ..? என்ன முட்டாள்தனமான முடிவு பாருங்கள்?

கை நிறைய சம்பளம் கலாச்சாரச் சீர்கேடு என்று சப்தமிடுபவர்களே, இது ஐடி துறையின் இன்னொரு வேதனையான பக்கம். அந்த வேலையின் அழுத்தத்தினால் இந்தச் சகோதரன் எடுத்த முடிவைப் பாருங்கள். ஆனால் இது சரியான முடிவு என்று சொல்லவில்லை. எந்த அளவிற்கு மன அழுத்தம் இருந்திருந்தால் இவன் இப்படி வாழவேண்டிய வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்.

யாரைக் குறைச் சொல்வது? இவனுக்கு மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவினைக் கொடுத்தவர்களையா? அல்லது கோழைத்தனமான முடிவெடித்த இவனையா?

நன்றாக படித்திருக்கின்றார்கள். கை நிறைய சம்பளம். இருந்தும் இப்படி முடிவெடுக்கும் தைரியம் எப்படி வருகின்றது இந்த இளைஞர்களுக்கு?

மனம் வேதனைப் படுகின்றது


- ரசிகவ் ஞானியார்

Monday, August 25, 2008

ஒலிபரப்பு - " தூக்கம் விற்ற காசுகள்

என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் என்கிற கவிதை www.worldtamilnews.com
என்கிற இணைய தளத்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது

நிறுத்த வேண்டிய இடங்களில் அழகாய் நிறுத்தி தெளிவான உச்சரிப்பில் ஜப்பார் அய்யா அவர்கள் வாசிக்கும்பொழுது ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்படுகின்றது. நன்றி ஜப்பார் அய்யா

கவிதை ஒலியாக்கப்படும்பொழுது எத்துணை ஆழமாய் இருக்கின்றது. எனக்கு மறுபடியும் துபாய் நினைவுகள். கவிதை எழுதிய கணத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Friday, August 22, 2008

மழை தேவதை

கோபம் நீங்குகின்ற
நொடியினில்...
பொழிகின்ற அந்த மழைக்காகவேனும்
கோபப்பட்டுக்கொண்டேயிரு
மழை தேவதையே!

- ரசிகவ் ஞானியார்

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு


ரசிகவ் ஞானியார்

Thursday, August 14, 2008

மென் தமிழ் இணைய இதழ் - ஆவணி 2008

நண்பர்களே,

புதிதாய் துவங்கிய இதழுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கின்றோம்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

மென் தமிழ் ஆசிரியர் குழுவிற்காக,
ரசிகவ் ஞானியார்

Wednesday, August 13, 2008

ஆனந்தவிகடனும் அவர் ஞாபகங்களும்




டீவியின் மீது, டீப்பாயின் மீது, சோபாவுக்கு கீழே, என்று ஒவ்வொரு முறை அவள் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவளை விடவும் ஆனந்தவிகடனைத்தான் தேடுவேன்

"அப்பா படிச்சிட்டிருக்கிறார்"

நான் ஆனந்தவிகடன் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு என் மனைவி தருகின்ற பதில் இதுதான். எப்பொழுது அவள் வீட்டுக்குச் சென்றாலும் இது வழக்கமான பதிலாகவே இருந்தது.

எனக்கு முன் அந்தத் தகவலையெல்லாம் யாரோ தெரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்ற எண்ணமே எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது ஆனந்தவிகடன் மீதும் அவள் அப்பா மீதும்.

எங்கள் வீட்டில் புத்தகம் வாங்கினாலும் அப்படித்தான். யாரும் எனக்கு முன்பு அப்புத்தகத்தின் தகவல்களை தெரிந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு.

எனக்கு எப்பொழுதுமே இந்த பழக்கம் இருக்கின்றது. சில சமயம் 2 அல்லது 3 புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தாலும் அவற்றையெல்லாம் நான் படித்து முடித்தபிறகே வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பேன்.

ஒரு பத்தகம் படிக்கும்பொழுது மற்ற புத்தகத்தையேனும் கொடுக்கலாம். ஆனால் தலையணைக்கு கீழே ஒளித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் முடித்தபிறகு தான் கொடுப்பேன். சில சமயம் தங்கை வந்து தேடிப்பார்த்து எடுத்துக்கொள்ளுவாள்.

அதுபோலவே எனது மனைவி வீட்டிலும் எதிர்பார்ப்பது அதிகம்தான் எனினும் ஏனோ என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது இந்தப் பழக்கம்

என் மாமனார் படித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் பெரும்பாலும் கேட்பதில்லை. சிலசமயம் அவர் படித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை, நான் அறியாதவனாய் நடித்துக்கொண்டு, மனைவியிடம் கேட்பேன் அவர் காதுகளில் விழும்வண்ணம். ஒருவேளை எனக்காக தரக்கூடும் என நினைத்து. ஆனால் பெரும்பாலும் ஏமாற்றம்தான்.

நான் படித்துக்கொண்டிருக்கும்பொழுது அவர் கேட்டாலும் நான் முடிக்கும்வரை கொடுப்பதில்லை அல்லது அவசர அவசரமாய் எல்லாப் பக்கங்களையும் கண்களால் உறிஞ்சுக்கொண்டு கொடுத்துவிடுவேன்.

சென்றவாரத்தின் ஒரு மாலைநேரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும்பொழுதே சலனமில்லாமல் அவர் கண்மூடிப்போனார்.


வெளிநாட்டில் அகதிகளாய் மாட்டிக்கொண்டு, பெற்றோர்களின் மரணத்திற்கு கூட வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில், தந்தையின் மரணச்செய்தி கேட்டு, இன்னொரு கண்டத்திலிருந்து கூட மறுநாளே வரும் அளவிற்கு தனது பெண்களை வளர்த்திருக்கின்றார்.

தனது நான்கு மகள்களையும் சமுதாயத்தில் பிறர் மதிக்கும்படியாக உயர்ந்த கல்வி கொடுத்திருக்கின்றார்.


ஆஸ்திரேலியாவில் ஒரு மகள்
கனடாவில் ஒரு மகள்
இந்தியாவில் ஒரு மகள் மிக உயர்ந்த கல்லூரியின் லெக்சரர்
இன்னொரு பெண் மத்திய அரசு ஊழியர்
என்று அவர்களுக்கு பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்.


நான்கு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிற குருட்டுத்தனமான பழமொழியை உடைத்த பெருமை அவரைச் சாரும்.

வயதுக்கு வந்துவிட்டால் பெண்களின் படிப்பை பாதியிலையே நிறுத்திவிடும் அன்றைய இஸ்லாமிய சமூக சூழலிருந்து விடுபட்டு, தனது பெண்களை இந்த அளவிற்கு படிக்கவைத்து , சமூகத்தில் பிறர் மதிக்கும்படியாக வாழவிட்டுச் சென்ற அவருடைய மரணத்தை

கடும் பனியிலும் மழையிலும் எல்லையில் நமக்காக காத்திருந்து தாய்நாட்டை காக்கின்ற ஒரு இராணுவவீரனின் மரணத்தோடு சமப்படுத்துகின்றேன்
.


இப்பொழுது டீப்பாயின் மீது ஆனந்தவிகடன் அப்படியே கிடக்கின்றது. அவர் விரும்பிப் படிக்கின்ற சத்குரு ஜக்கி வாசுதேவின் கட்டுரை இன்னமும் ஆனந்தவிகடனில் வந்துகொண்டிதானிருக்கின்றது.

நான் கேட்காமலையே அல்லது போட்டியில்லாமல் எனக்கு கிடைக்கின்ற இந்த ஆனந்தவிகடனைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு இனம்புரியாத வலி தோன்றுகின்றது. அதனைப் படித்துவிடவேண்டுமென்கிற ஆர்வமும் முன்பைபோல் இல்லை.

எப்பொழுதுமே போட்டியில்லாமல் கிடைக்கின்ற எதுவுமே வாழ்க்கையில் சுவாரசியத்தை தருவதில்லை.

-ரசிகவ் ஞானியார்

Friday, August 08, 2008

திருநெல்வேலி - 50 ஆண்டுகளுக்கு முன்பு

திரு இசக்கி அண்ணாச்சியின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலியின் பழைய ஞாபகங்களை அப்படியே பதி செய்து வைத்திருந்தார்.


தினத்தந்தி பத்திரிக்கையின் விலை 25 காசு என்று தொங்கவிடப்பட்டுள்ள பெட்டிக்கடை மற்றும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றால மலையருவி - வீட்டுக்கு வீடு கார்களை பார்த்த நமக்கு அப்பொழுது வீட்டுக்கு வீடு மாட்டுவண்டிகளை பார்க் செய்து வைத்திருக்கும் காட்சி - மாட்டு வண்டி பயணத்தின் போது இடையில் தங்கி இளைப்பாறுதல் - கார்களால் நிரம்பும் திருநெல்வேலி சாலையில் மனிதர்களே இல்லாமல் ஆடுகள் உலா வருகின்ற காட்சி - சகோதரனை சைக்கிளின் பின் அமர்த்தி செல்லும் சகோதரி இப்படி பழைய ஞாபகங்களை கிளறுகின்ற புகைப்படங்கள். இதோ நீங்களும் பாருங்களேன்.


50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருநெல்வேலியை இப்பொழுது பார்ப்பது மிகவும் பரவசமான காட்சிதான்






























- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு