Monday, September 03, 2012

சென்னை


சின்னவயதில் எல்லாம் சென்னைக்குச் செல்வது பாரீன் செல்வதைப் போல இருக்கும். சென்னையில் இருந்து வருபவர்களை வித்தியாசமாய் பார்ப்போம்.

அவர்கள் நாகரீக உலகில் வாழ்ந்து வருகிறார்கள் நாம் இன்னமும் கிராமத்தில் தான் கிடக்கின்றோம் என்ற எண்ணம் ஏற்படும்.


அது மட்டுமல்ல சென்னையில் இருந்து வந்தவர்கள் நான் ரஜினியைப் பார்த்தேன் பா..சாதாரணமா ரொட்டுல நடந்து போவாரு நாங்க கண்டுக்க மாட்டோம்.. ஒரு நாள் விஜயகாந்தைப் பார்த்தேன்..நடு ரோட்டுவ ஷுட்டிங் நடக்குது.. அப்புறம் இந்த நடிகரை இங்க வச்சுப் பார்த்தேன்..என்று கதையளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள் பொய் சொல்லுகிறார்கயோ இல்லையோ தெரியாமல் அதனை ரசித்து வாய் பிளந்து கேட்க ஆரம்பிப்போம்.

நான் முதன் முதலில் 8 வயது இருக்கும் பொழுது உறவினரின் திருமணத்திற்காக சென்னை சென்றேன். வெளியில் செல்லும்பொழுதெல்லாம் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டே வருவேன் எங்கேனும் ஷுட்டிங் நடக்கிறதா ஏதாவது நடிகர்கள் தென்படுகிறார்களா என்று..ம்ஹும்.. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கதையளந்திருக்கிறார்கள் என்று..

கலங்கரை விளக்கம் சென்று விட்டு திரும்பும்பொழுது நான் காணாமல் போய்விட்டேன்.. அங்குமிங்கும் தேடினேன்..யாரையும் காணவில்லை..5 நிமிடமாவது அழுதிருப்பேன்.. அப்புறம் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்..இதில் என்ன கூத்து என்றால் நான் காணாமல் போனதோ அழுததோ யாருக்குமே தெரியாது என்னைத் தவிர..
-----------------------------------------------------
சென்னைக்கு ஒரு தடவை பிஎஸ்ஸி முடிந்த பிறகு துபாய் வேலைக்கான இன்டர்வியு எங்கள் கல்லூரியிலிருந்து எங்கள் வகுப்பில் இருந்து 5 பேர் அனுப்பப்பட்டோம்.
இன்டர்வியுக்கு ஒருநாள் முந்திதான் எங்களுக்கு தகவல் வந்ததால் 5 பேர் கொண்ட குழவாக அன்று மாலையே கிளம்பினோம அவசர அவசரமாய் கிளம்பினோம். கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டோம்.


நானும் காஜாவும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது ஒருவர் வந்து ஹலோ வழியில யாராவது செக்கிங் கேட்டாங்கன்னா நாங்க எல்லாம் உறவினர்கள் ஒரு கல்யாணத்திற்கு போகிறோம் என்று சொல்லுங்கள் என்று பயமுறுத்தினான்..

அவன் அவ்வாறு சொன்ன பிறகுதான் தெரிந்தது அந்தப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி பெறாத பேருந்து என்று..

நாங்களும் அந்த நபரைப் பார்த்து மாமா மச்சான் என்று அழைக்க ஆரம்பித்தோம். ஆமா நீங்க தானே உறவவினர்கள்னு சொன்னீங்க..அதுக்குத்hhன் இப்படி அழைக்கின்றோம்..என்று கூற பேருந்தே கலகலப்பானது.

சரி நம்ம நேரம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிர் இருக்கையில் உள்ள ஒரு நபர் தனது காலடியில் சூட்கேஸை வைத்துக் கொண்டு அதனை பாதுகாக்க படாத பாடு பட்டார்.

நானும் காஜாவும் கவனித்து விட்டோம். சும்மா சீண்டிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்து நான் காஜாவிடம்

காஜா அங்கே பார் ..நாம ரெண்டு பேரும் அந்த சூட்கேஸையே  உற்றுப்பார்ப்போம்.. என்ன?

உடனே விளையாட்டை ஆரம்பித்தோம். நானும் காஜாவும் அவரது சூட்கேஸை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். விழிகளை எங்கேயும் அசைக்கவில்லை.. அவர் ஒரு சமயத்தில் எங்களை கவனித்து விட்டார்

என்னடா நம்ம சூட்கேஸையே பார்க்குறானுங்க ..திருடங்களா இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அந்த சூட்கேஸை காலடியில் மேலும் திணிக்க ஆரம்பித்தார்..

நாங்கள் விடவில்லை..அவர் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து ஒரு செயினை எடுத்து ( நாய் கழுத்தில் கட்டுவது போல உள்ள செயின்) சூட்கேஸை இருக்க கட்டி காலடியில் வைத்துக்கொண்டார்.

எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..அந்த நேரத்தில் அவருடைய முகத்தில் தெரிந்த பயத்தை இன்னமும் மறக்க முடியாது.

இப்படி கேலியும் கிண்டலுமாக காலை 12 மணிக்குத்தான் சென்னை வந்தடைந்தது அந்தப் பேருந்து.. ஆனால் இன்டர்வியு 10 மணிக்கு இனிமேல் குளித்து உடைமாற்றி போவது புத்திசாலித்தனமல்ல என்று நினைத்து நண்பர் வீட்டில் தங்கிக்கொண்டு மறுநாள் செல்ல முடிவெடுத்தோம்.

மறுநாள் அந்த அலுவலகத்திற்கு சென்றால் வாட்ச்மேன் உள்ளையே விடமாட்டேன்கிறான்..
என்னைக்கு இன்டர்வியு

நேற்று 10 மணிக்கு

எங்களை எரிச்சல் கலந்த புன்னகையில் பார்த்து கூறினான்..அட நேத்து இன்டர்வியுக்கு இன்னைக்கு வந்திருக்கீங்களா..?

எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி இன்டர்வியுவில் கலந்து கொண்டு வந்துவிட்டோம்..  இன்னமும் அந்த சென்னை நிகழ்வுகளை மறக்க முடியாது.
அப்புறம்  ப்ராஜக்ட் வேலை இன்டர்வியு என்று சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுதும் தொடர்கின்றது. நடிகர்களைப் பார்த்ததாக கதையளந்தவர்களை இன்று கைகளில் கிடைத்தால் நான் அவர்களிடம் கதையளப்பேன் அந்த அளவிற்கு சென்னை அனுபவங்கள் அதிகம். 

-  ரசிகவ் ஞானியார்

தேன் கூடு