Sunday, June 18, 2006

அப்பாவுக்காய் ஒரு கடிதம்

அப்பாக்களின் தினத்தை முன்னிட்டு ஏற்கனவே வெளியிட்ட அப்பாவுக்காய் ஒரு கடிதம் என்ற கவிதையை மீள்பதிவாக வெளியிடுகின்றேன்.

அப்பாக்களை ஞாபகப்படுத்த ஒரே ஒரு தினம் மட்டுமாவது கண்டிப்பாய் தேவைப்படுகின்றது. இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ..


அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...
இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -
என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ
தியேட்டர் சுவரை மீறி
செலவழித்தேன் அப்பா!

நான்
கேட்கத் தயங்குவேனெனத் தெரிந்து
எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால்
நான்
அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!

நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...

உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது...

நீ மிதித்த சுவடுகள்
சைக்கிள் பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான்
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து
பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ...
வேலைதேடிய எனக்கு
நீ பணம் அனுப்பினாயே ?

இப்படி
இதய தேசத்தில்
உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!

உன் பாக்கெட்டில்
பணம் திருடியது
நான்தான் என தெரிந்தும் ...
இதுவரை
எனைக் காட்டிக்கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய்
நீ செய்த பாசாங்கு!

இதுபோல
கடிதம் சுமக்காத
பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........
என்னுள்ளும் .........

நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!



-ரசிகவ் ஞானியார்

21 comments:

நாகை சிவா said...

//நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...//
அருமையான வார்த்தைகள். சத்தியமாக கூறுகின்றேன், இப்பொழுது நான் இருக்கும் நிலைமைக்கு என் தந்தையின் வியர்வையும், உழைப்பும் மிக பெரிய காரணம். அன்றில் இருந்து இன்று வரை கை ஒங்கும் தந்தையாக இல்லாமல் அரவணைக்கும் தந்தையாக தான் இருந்து உள்ளார்.

உங்கள் வேண்டுகோள் நிறைவேறும் நண்பரே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//உங்கள் வேண்டுகோள் நிறைவேறும் நண்பரே! //

நன்றி சிவா..

தங்களை உருவாக்கிய தங்களது தந்தைக்கும் - தந்தையை மதிக்கும் சிறந்த பிள்ளையாகிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். இந்நிலை தொடர ஆசிர்வதிக்கின்றேன்.

நாகை சிவா said...

//தங்களை உருவாக்கிய தங்களது தந்தைக்கும் - தந்தையை மதிக்கும் சிறந்த பிள்ளையாகிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே!

Pot"tea" kadai said...

அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அப்பாவிற்கு என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்//

நன்றி பொட்டிக்கடை

Anonymous said...

Offtrack not related to this post
************

யோவ் நீரு ஃபீலிங்காய் கவிதை எழுதும் போதே நினைச்சேன்யா...மாட்டிக்கிட்டீர்ன்னு...:))))
இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரசிகவ்..

கார்த்திக் பிரபு said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..ரகசிவ்

கதிர் said...

''உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்''


சத்தியமான வார்தைகள். அன்னையர் தினம்,தந்தையர் தினம் என்றில்லாமல்
தினமும் நெஞ்சில் நிறுத்தும்படி இருக்கு
உங்க கடிதம்.

சேதுக்கரசி said...

இந்த வார நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
கண்ணாலம் ஒரு பக்கம்..
நட்சத்திரம் ஒரு பக்கம்..
எனக்கே மகிழ்ச்சியா இருக்கு..
உங்களுக்கு?!
கலக்குங்க ரசிகவ்!

ப்ரியன் said...

அட!இந்தவார நட்சத்திரம் நம்ம ரசிகவ் அண்ணாச்சி!

தமிழ்மணத்தின் திருமணப் பரிசு! :)

வாழ்த்துக்கள் நண்பா!

ILA (a) இளா said...

//எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!//
மனதை உருக்கிய கவிதை, பெற்ற தகப்பனுக்கு பதிவு வாயிலாக நன்றி செலுத்திய விதம் அருமை. மீண்டும் ஒரு நிலவு நண்பனின் டச்

ramachandranusha(உஷா) said...

எந்த நேரத்தில்... உம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாதிரி இல்லே :-)))))))))

பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திரமா ஞானியார்? கல்யாண கலாட்டவில் இதுவேறேயா :) கலக்குங்க..

மணியன் said...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றனர். அன்னையின் அரவணைப்பும் அப்பாவின் ஆதரவும் இல்லையேல் நாம் இன்று காணும் வாழ்க்கை எங்கே ?

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

தம்பி, ஏற்கனவே படித்த கடிதம் தான்.
இருந்தாலும் மீண்டும் படிக்கும்போது நெகிழ்ந்தேன்.

முத்தமிழ் said...

அன்பு நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் இந்த வார நட்சத்திரமாக வெற்றி நடை போடவேண்டும் என வாழ்த்துகிறது முத்தமிழ் குழுமம்.

தாணு said...

ஞானியார், நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள். என்னதிது! கல்யாணத்தன்னைக்கும் வரைக்கும் நட்சத்திரமா? மணவறையிலும் லாப் டாப்புடந்தான் இருக்கப் போறீங்களா?

சீனு said...

arumai...anaithum unmai...

Sanjai Gandhi said...

நெஞ்சை தொட்ட வரிகள் நண்பரே. தந்தயர் தின வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger SanJai said...

நெஞ்சை தொட்ட வரிகள் நண்பரே. தந்தயர் தின வாழ்த்துக்கள்.//

நன்றி சஞ்சய்..எனது அப்பா ஞாபகத்தையும் அதிகமாக்கி விட்டீர்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger Seenu said...

arumai...anaithum unmai...//

nanri seenu....

தேன் கூடு