"வீட்டுல உக்காந்து பீடி சுத்த வேண்டியதுதானே..ஆளையும் மூஞ்சியையும் பாரேன்..வந்துட்டா ஸ்கூலுக்கு"சுப்பிரமணி வாத்தியாரின் வகுப்பு தினமும் இப்படித்தான் ஆரம்பிக்கும்
"அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார். சில சமயம் டவுசரில் இருந்து தூசிகள் பறக்க அடிப்பார்.
அடிவாங்குபவனைத் தவிர, மற்ற மாணவர்களுக்கு அவர் அடிக்கின்ற ஸ்டைலை பார்க்க ஆனந்தமாக இருக்கும். அப்பொழுது எங்களுக்கு வேடிக்கை பார்க்கின்ற வயதுதான்.
அவரிடம் திட்டுவாங்காத மாணவிகளும், அடி வாங்காத மாணவர்களும் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. மாணவர்களை விடவும் மாணவிகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்.
அவரிடம் அடி வாங்காமல் தப்பிபதற்காகவே அவரைச் சுற்றி ஜால்ரா போடும் மாணவர்களின் வட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
அவர் வரலாற்று பாடம் எடுக்கும் காட்சியினை இப்பொழுது அசைபோட்டுப் பார்த்தாலும் சிரிப்பாக வரும்
"அசோகர் இருக்காரே அவருக்கு வேற வேலை இல்லைப்பா.. சும்மா இருக்க வேண்டியதுதானே சாலையோரத்தில மரம் நட்டுக்கிட்டே இருப்பார்""சமாதானமா போயிருந்தாஇப்படி நடந்திருக்குமா..? தெனாவட்டுல திரிஞ்சானுவ..இப்ப பாருங்க பானிபட் போர்ல வந்து நிற்குது..""ஒளரங்கசீப் இருக்கானே ஒளரங்கசீப்....அவன் அவங்க அப்பனை ஜெயில்ல போட்டு தண்ணி கொடுக்காம கொடுமை படுத்தினாப்பா.."இடையில் எவனாவது சந்தேகம் கேட்டால் தொலைஞ்சான் அவன்.
"முதல்ல பாடத்தை கவனில்ல..அங்க எங்கல அண்ணாந்து பாத்துகிட்டு இருக்கே..அப்படி பார்த்தா மண்ணயா புரியும்...எழுந்திருல முட்டிக்கால் போடுல" என்று அதட்டிவிடுவார்
அதனால நாங்க யாருமே சந்தேகம் கேட்க மாட்டோம்.
தனக்கு புரியாத பாடங்களையோ அல்லது தயார்படுத்தாமல் வருகின்ற நாட்களிலோ சக மாணவர்கள் யாரையாவது எழுந்திருக்கச் சொல்லி வாசிக்கச் சொல்லி விடுவார்.

கொடி நாள் - பள்ளி நிதி – நோட்டுப்புத்தகம் பணம் என்று மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பணத்திற்கு இவரையே நிர்வாகம் பொறுப்பாளராக நியமிக்கும்
அப்பத்தான் பயத்தில பசங்க கொடுத்திடுவாங்கன்னு
கொடுக்காத மாணவர்களை பக்கத்தில் அழைத்து,
"உங்கப்பா யாருகிட்டயாவது பேசிகிட்டுருக்கும்போது அவரை தொந்தரவு பண்ணு..
அவர் அர்ணகயிறை பிடிச்சு தொங்குல அப்பத்தான் தருவாரு..."என்று எரிச்சலில் கூறுவார். சுக மாணவனை தப்பிக்க வைப்பதற்கும் அவரை குஷிப்படுத்த வைப்பதற்கும் நாங்கள் பக்கத்தில் போய்
"அய்யா அவங்க அய்யா தண்ணி வண்டி...தினமும் தண்ணிய போட்டுட்டு வந்து அவங்க அம்மாவை அடி அடின்னு அடிப்பாரு..."ன்னு சொல்லுவோம்
அதைக்கேட்டு உற்சாகமடைந்து விழியை ஒருக்களித்து நக்கலாக,
" அப்படியா! தண்ணி வண்டியா..அடிப்பாரோ ?"என்று திரும்ப திரும்ப கேட்பார்.
கணவன் மனைவியைப் போட்டு அடிக்கும் நிகழ்வுகள் பற்றி யார் பேசினாலும் அவருக்கு உற்சாகத்தையே கொடுத்தது.மாணவர்களை விடவும் மாணவிகள் பணம் தர தாமதமானால் அவ்வளவுதான்...
"உன்னலாம் எவன் கூப்பிட்டான் ஸ்கூலுக்கு.. வீட்டுல இருந்துக்கிட்டு சட்டி நிறைய சாயா போட்டு, ஊத்தி ஊத்தி குடும்பத்தோட குடிக்க வேண்டியதுதானேன்னு" உபசரிப்புகளை ஆரம்பித்து விடுவார்...
அவருக்கு ஏன் பெண்கள் மீது வெறுப்பு என்று எங்களால் புரிந்து கொள்ள முடியாமலையே இருந்தது.அவர் மதிப்பெண்கள் போடுகின்ற விதம் இன்னமும் சிரிப்பாக இருக்கும். வரலாற்று தேர்வு என்றாலே மாணவர்கள் உற்சாகமடைந்து நிறைய நிறைய எழுத ஆரம்பித்துவிடுவாகள்.
15 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு எல்லாம் மாணவர்கள் எழுதிய அளவினை,
அளவுகோலால் அளந்துதான் மதிப்பெண் வழங்குவார்கூர்ந்து வாசித்துப் பார்த்தால் அதில் வரலாறுகளின் இடை இடையே பக்கங்களை நிரப்புவதற்காக அந்த நேரத்தில் ஓடிய படத்தின் கதைகளை அளந்துவிட்டிருப்பர்கள்.
ஒரு தடவை அப்படித்தான் ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் மீது உள்ள வெறுப்பில் மாட்டிவிட்டுவிட, அய்யா வாசித்துப் பார்த்தார்;
"விஜயகாந்த ஓடிடிடி வந்து அவனை கும் கும் கும்னு சாத்தி இந்தால படுக்க போட்டு அடிச்சி தூக்கி வீசி விடுவார். அப்பொழுது அசோகருக்கு மன வேதனை ஏற்பட்டது. போரில் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி பெரிதும் வருந்தினர்.""கொள்ளக்கூட்டுக்காரங்களோட திட்டம் தெரிஞ்சி நம்ம தலைவர் குதிரைல பறப்பாரு. அப்ப ஒருத்தன் இடையில கயித்தக் கட்டி தலைவரை கவுத்திடுவான்.காலாட்படைகளும் குதிரைப்படைகளும் யானைப் படைகளும் அந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன."என்று சினிமா படக்கதையும் வரலாறும் கலந்து புதிய கதைகளை எழுதிய அந்த மாணவனை பின்னு பின்னுன்னு பின்னிட்டாரு...அத இப்பொழுது நினைச்சாலும் சிரிப்பாக இருக்கும்
ஒரு முறை என் எஸ் எஸ் கேம்ப்பிற்காக
பக்கத்து கிராமமான தருவை என்கிற ஊருக்கு
சுப்ரமணி வாத்தியார் தலைமையில் சென்றோம்.
சாலைகளோரம் முட்செடிகளையெல்லாம் வெட்டிவிட்டு, களைப்போடு இருந்த முதல் நாள் இரவு மறுநாள் திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்க, எங்களுக்கோ தூக்கம்.
நான்
கொம்பையா என்கிற மாணவனைப் பார்த்து, கண்ணசைத்து, ட்யுப்லைட்டை அணைத்து விடுமாறு பந்தயம் கட்ட, அவனோ மெதுவாக எழுந்து அவர் பார்க்காத வண்ணம் விளக்கை அணைத்துவிட்டான்.
எல்லாரும்
ஓஓஓஓஓ ன்று கத்திக்கொண்டே சிதறினோம் அவர் பதட்டமாய் சென்று விளக்கை போட்டார். முகம் வியர்த்து வழிந்திருந்து.
ஏனென்றால் முந்தைய என் எஸ் எஸ் கேம்பில் சீனியர் மாணவன் ஒருவன் இரவில் அவர் தூங்கும்பொழுது தலையணையில் அடித்துவிட்டு ஓடியிருக்கின்றான்.அந்த சம்பவம் ஞாபகம் வந்துவிட்டதால் அவர் பயந்து போய்,
" எவும்ல அது எவும்ல லைட்டை அணைச்சான்.." என்று அனைவருக்கும் ஒவ்வொரு அடி வைத்தார்
பின் கோபம் தணியாமல் மறுநாள் காலையில் 4 மணிக்கே அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டு கொட்டும் பனியில் உடற்பயிற்சி செய்யச் சொன்னார்.
ஓவ்வொருத்தனின் பின்னாலும் வந்து முதுகை வளைத்து, கையைத் திருகி தன்னுடைய கோபத்தை தீர்த்துக்கொண்டார்.
பிடிக்காத அல்லது தவறு செய்கின்ற அல்லது தாமதமாய் வருகின்ற மாணவர்கள் கையில்
ஒரு வாளியை கொடுத்து பக்கத்தில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் மோந்து வந்து அங்குள்ள செடிகளுக்கெல்லாம் வரிசையாக விடச் சொல்வார்.சுப்பிரமணி வாத்தியாரின் குடும்பத்தை பற்றி பள்ளி முடியும் தருவாயில்தான் தெரிய ஆரம்பித்தது. அவருக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தைகளே இல்லை. அதனால் தனது மனைவியுடன் தினமும் சண்டை போடுவாராம்.
தனக்கு குழந்தை பெற்றுத்தர முடியாத மனைவியின் மீது உள்ள கோபத்தால், எந்த கணவன் மனைவியை அடித்த கதையை அவர் கேட்டாலும் உற்சாகமடைந்துவிடுவார். ஆனால் அந்த உற்சாகத்தினுள் இப்படி ஒரு சோகம் இருந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.
அந்தக்கோபத்தில்தான் மனம் தளர்ந்துபோய் இருக்கிறார். அந்த தளர்ச்சியே மாணவர்கள் மீது இந்த அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டதற்கும் மாணவிகளைத் திட்டி தீர்த்ததற்கும் காரணம் என்று உணர்ந்த பொழுது அவர் மீது பரிதாபம் தான் தோன்றியது.
இப்பொழுது அந்தப் பள்ளிக்கு மறுபடியும் செல்லும்பாழுது வரிசையாக நிற்கின்ற மரங்களிலிருந்து, உதிரும் இலைகள் எங்கள் மீது விழும்பொழுது நாங்கள் ஊற்றிய தண்ணீருக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலவே தோன்றும்
சுப்பிரமணி வாத்தியார் முன்புபோல் இல்லை அவர் மாணவர்களை அடிப்பதில்லை என்று நாங்கள் தற்பொழுது கேள்விப்பட்டோம். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.
- ரசிகவ் ஞானியார்ரசிகவ் ஞானியார்