Thursday, February 15, 2007

இன்று செய்திகளே இல்லை







பத்திரிக்கை துறை என்பது மிகவும் இன்னியமையாத ஒரு துறையாகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஊடகத்திற்கு உண்டு.

விடியற்காலை எழுந்தவுடன் பத்திரிக்கை படிக்காவிட்டால் சிலருக்கு அந்த நாள் முழுவதும் ஓடாது.


ஒருநாள் எந்தச் செய்தியுமே இல்லாவிட்டால் என்ன செய்தி போடுவார்கள் ?

இன்று செய்திகளே இல்லை என்று அதையும் செய்தியாகப் போடுவார்கள் என்று யாரோ சொன்னதாய் ஞாபகம்.


தமிழகத்தில் வருகின்ற பத்திரிக்கைகளில் தினத்தந்தி மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் இடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கு காரணம் அதனுடைய எழுத்து வடிவம் மற்றும் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள செய்திகள்தான்.

அதனை நிறுவிய தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் பற்றி கொஞ்சம் அலசுவோமோ..?

இவர் 1905 ம் ஆண்டு செப்படம்பர் 17 ம் நாள் திருநெல்வேலியில் காயாமொழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது குடும்பம் செல்வச் செழிப்பானது

அப்பா பெயர் சிவந்தி ஆதித்தன். அம்மா பெயர் கனகம் அம்மையார். அப்பா ஒரு வழக்கறிஞர்.

அவருடைய முழுப்பெயர் சிவந்தி பாலசுப்ரமண்ய ஆதித்தன். சுருக்கமாக சி.பா ஆதித்தன் என அழைக்கப்பட்டார்.

அவங்க அப்பா ஸ்ரீவைகுண்டத்தில் வக்கீலா பணிபுரிந்ததால ஆதித்தனார் படிச்சதெல்லாம் அங்கதான்ங்க. நாலாப்பு வரை அங்கதான் படிச்சாரு.

11ம் வகுப்பு வரும்போது அவருக்கு போதிய வயது வரம்பு இல்லைன்னு சொல்லி தேர்வு எழுத அனுமதிக்கலைங்க. 11 வது வகுப்பு வரைக்கும் அவர் வளரவேயில்லiயாக்கும். திடீர்னா அவருக்கு வயது வரம்பு குறைஞ்சிருச்சி.. என்னங்க நியாயம் இது? ஆரம்பத்துலையே வயது வரம்பு சோதனையிட்டு சேர்க்கவேண்டாமா?.

ஆதித்தனாரை நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்காததால ஒரு வருடம் சும்மா இருந்துட்டு அடுத்த ஆண்டு பரிட்சை எழுதினார். கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் வாங்கினார்

ஸ்ரீவைகுண்டத்திலேயே பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்து பாஸாக்கிவிட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி ஏ வில் சேர்ந்தார்

அங்கு படிப்பை முடிச்சுட்டு 1927 ல் லண்டனுக்கு சென்றார்.அங்கே பாரிஸ்டர் படிப்பைத் தொடங்கினார். அவர் லண்டன்ல படிக்கும்போதே வீட்டிலயிருந்து பணத்தை எதிர்பார்க்காம கதை - கட்டுரைன்னு எழுதி சம்பாதிக்க ஆரம்பித்து தன் செலவுகளைக் கவனித்துக் கொண்டார்.

லண்டன்ல படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர்ல பெரும் தனவந்தரா ராமசாமி நாட்டாரின் மூத்த மகள் கோவிந்தம்மாளை 01.09.1933ல் திருமணம் செய்து கொண்டார்.

சிங்கப்பூர்ல பாரிஸ்டர் பணி நன்றாகச் சென்றது. பணமும் புகழும் சேர்க்க ஆரம்பித்தார். எட்டு ஆண்டுகள் சிங்கப்பூர்ல வக்கீல் வேலை பார்த்திருக்கார. ஆனா ஒரு வழக்கில்கூட தோற்றது கிடையாது.

இந்த நேரத்துலதாங்க உலகப்போர் ஆரம்பிச்சுடுச்சு. ஜப்பான்காரன் சிங்கப்பூர்ல குண்டு வீச ஆரம்பிச்சுட்டான். ஆதித்தனார் மனைவி குழந்தைகளை தமிழகத்திற்கு அனப்பிவிட்டார். தான் இந்தியா திரும்புவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

பின் சீட்டு போட்டு முடிவு செய்வது என்று தீர்மானிதத்து. "போ", "போகாதே" என்று எழுதிப்போட்டார். எடுத்துப் பார்த்தால் "போ" என்று வந்தது. உடனே விமானம் பிடித்து இந்தியா வரத் தொடங்கினார். ஆனால் ஜப்பான்காரன் விமானத்தை வழிமறித்ததால் எங்கெங்குமோ சுற்றி இறுதியில் இந்தியா வந்தடைந்தார்.

தமிழகம் வந்து என்ன செய்வது என முடிவெடுத்து பத்திரிக்கைத் தொழிலில் கால் பதிக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு கோரும் நாம் தமிழர் இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார்

இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்
சென்னை வந்த இராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார். இதனால் 1960 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திரபிரசாத் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் இவரை சிறையிலையே அடைத்திருந்தார்கள்.

அரசு பனை மரங்களுக்கு வரி விதித்திருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான பனை மரத் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள் என உணர்ந்து அதனை எதிர்த்து போராடியதோடு மட்டுமன்றி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்துவிட்டார்.

செங்கல் பட்டில் உள்ள உழவர்கள் அங்குள்ள மிராசுதாரர்களால் குறைவான கூலி கொடுக்கப்பட்டு நசுக்கப்படுவதை உணர்ந்து அவர்களுக்குப் போராடி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சிறை சென்று மிராசுதாhர்களிடம் கூலி ஒப்பந்தம் போட்டார்.

பின் 1942 ல் தமிழன் என்ற வாரப் பத்திரிக்கையைத் தொடங்கினார்.

05-10-1942 ல் தினத்தந்தி நாளிதழ் மதுரையில் பதிவு செய்து ஆரம்பித்தார். அவர் பத்திரிக்கை ஆரம்பித்த சூழ்நிலையில் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது.

பத்திரிக்கைக்கு உண்டான காகிதம் கிடைக்காமல் திண்டாடினார். உடனே தானே காகிதம் தயாரிக்க முடிவு செய்து வைக்கோலை ஊறவைத்து கூழாக்கி பின்பு அதனைப் பக்குவப்படுத்தி காகிதமாக்கினார். காலையில் பத்திரிக்கைகளை சுமந்து கொண்டு லாரிகள் வெளிக்கிளம்புகின்ற நேரத்தில் தினத்தந்தி அலுவலகத்திற்கு தினமும் காலையில் வைக்கோல் வண்டி வந்து கொண்டிருந்தது.

இப்படியாக காகிதம் தயாரிக்கும் முறைக்கு தமிழன் கைக் காகிதம் என்று பெயரிட்டார்.

மழை நேரம் என்றால் காகிதத்திற்கு திண்டாட்டமாகிவிடும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்தக் காகிதப் பண்ணை இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தருவதில் தினத்தந்தியை முதன்மையாக்கினார். எளிய தமிழில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதியதால் இவரது பத்திரிக்கை 1000 பிரதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. 1948 ல் சென்னையில் லாஸ் என்னுமிடத்தில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம் 1960 ல் தான் சென்னையில் எழும்பூரில் நான்கு மாடிக் கட்டிடம் கட்டும் அளவிற்கு உயர்ந்தது.

பின் எல்லா முக்கிய ஊர்களிலும் பதிப்புகள் வருவதற்கு கடுமையாக உழைத்தார். இதன் பிறகு மாலை முரசு நாளிதழைத் தொடங்கினார். அதிலும் இமாலய வளர்ச்சிப் பெற்றார்.

1947 முதல் 1953 வரை தமிழக மேலவை உறுப்பினராகவும்
1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும்
1964 ல் மீண்டும் மேலவை உறுப்பினராகவும் பணி ஆற்றினார்.
1967ல் பேரவைத் தலைவரானார். அப்பொழுது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்ஃ

ஒவ்வொரு பட்ஜெட் கூட்டம் தொடங்கும் முன் "அகர முதல எழுத்தெல்லாம்" என்ற திருக்குறயை பாடி கூட்டத்தை ஆரம்பித்த பழக்கம் ஆதித்தனாரையே சாரும்

"தமிழ்நாடு" என்று மாநிலத்திற்கு பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றத் தலைமை தாங்கியவர் சி.பா ஆதித்தனார்.

சட்டசபையின் பெருன்பான்மையான ஆங்கில நடவடிக்கைகளை தமிழுக்கு மாற்றிய பெருமை இவரைச் சாரும்.

அப்பொழுது எல்லாம் மந்திரிகளை எப்படி அழைப்பது எனத் தெரியாமல் கனம் மந்திரிகள் என்று அழைத்துக்கொண்டிருந்தனர். ஆதித்தனார்தான் "மாண்புமிகு அமைச்சர்" என்று அழைக்கப் படுவதற்கு ஆதித்தனார் பெரும் பாடுபட்டார்.

இவரது மகன் சிவந்தி ஆதித்தனை இவரது தொழிலில் கொண்டு வர விரும்பியபொழுது கூட ஆரம்பத்திலையே தலைமைப் பொறுப்பை அவருக்கு கொடுத்துவிடவில்லை. கம்போஸிங்கில் இருந்து புருப் ரீடிங் வரை படிப்படியாக கற்றுக் கொடுத்துதான் இந்தத் பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபடுத்தினார்.

உனது தொழிலை நீ முழுமையாக கற்றுக்கொண்டால்தான் அதில் சிறப்பாகத் திகழ முடியும். என்பார்.

சிறந்த பாரிஸ்டர் பத்திரிக்கையாளர் தமிழ் மீது தணியா தாகம் உடையவர் எளிமையாக வாழ்ந்தவர் திருக்குறளை வாழ்வின் வழிகாட்டியாக நினைத்தவர் சி.கா ஆதித்தனார் 24.05.1981 அன்று மரணமடைந்தார்.

இன்றும் ஒவ்வொரு நாள் காலையிலும் பேப்பர் காரன் மூலம் நம்முடைய வீட்டை வந்தடைகின்றார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி தினமும் வருகின்ற அவருடைய பத்திரிக்கை செய்திகள் மூலம் மறைந்து விட்டது. இன்னமும் எழுத்துக்களாக வலம் வருகின்றார்.

- ரசிகவ் ஞானியார்

2 comments:

சுந்தர் / Sundar said...

நல்ல தகவல் !
நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சுந்தர் / Sundar said...
நல்ல தகவல் !
நன்றி //

நன்றி சுந்தர்

தேன் கூடு