Thursday, June 30, 2005

ஒரு காதல் ஞாபகம்பா

நேற்று திருநெல்வேலி டவுணில் இருக்கும் அருணகிரி தியேட்டரில் உள்ளம் கேட்குதே படம் பார்ப்பதற்காக நண்பர்களுடன் சென்றேன்.

கல்லூரியில் படித்த பழைய நண்பர்களுக்குள் ஏற்பட்டு மறைகின்ற காதல் - தோல்வி – காலத்தின் சுழற்சியில் அவர்களின் பயணம் என்று படம் ஒரு கவித்துவமாக என் பழைய கல்லூரியை ஞாபகப்படுத்துவதாக இருந்தது.


இடைவேளையில் ஒரு கனத்த மனதுடன் வெளியே வந்தபோது

அட நம்ம ஆன்டனி - ( பி ஏ ஆங்கிலம் லிட்)

"டேய் ஆன்டனி எப்படிடா இருக்க "– நான்

ஒரு மாதிரியாய் உற்று பார்த்தான்..

"என்னடா மறந்துட்டியா "– நான்

"டேய் ஞானி மாப்ள எப்படிடா இருக்க" - சுதாரித்து விட்டு கத்தினான்

"சாரி சாரி சாரிடா ஆறு வருஷத்துக்கு முந்தி பார்த்தது டா அதான் குழம்பிட்டேன்..இப்ப க்ளாஸ் போட்டு தாடியெல்லாம் வச்சு என்னடா ஆளே மாறிட்ட.. "– ஆன்டனி

"நீ கூடத்தான் ரொம்ப மாறிட்ட அப்புறம் சொல்லுடா எப்படி போது வாழ்க்கை? "– நான்

"ஏதோ போகுதுடா..இப்ப உழவர்சந்தை பக்கம் ஒரு இண்டர்நெட் சென்டர வச்சிருக்கேன்டா
நீ என்னடா பண்ற"

"நான் துபாய்ல இருக்கன்டா இப்ப லீவுல வந்துறுக்கேன்"

"படத்த பார்க்கும்போது நம்ம காலேஜ் ஞாபகம்தாண்டா "– நான்

"ம் ம் ஒரு மாதிpரி சோகமா இருக்கு..அதுல வர்ற மாதிரி ஒரு காதல் ஜோடி சக்ஸஸ் ஆயிருக்குடா..யார் தெரியுமா? ஜெயச்சந்திரன் - சிவகாமி"

சந்தோஷ மிகுதியில்

"டேய் உண்மையா அவங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்களா..ரொம்ப சந்தோஷம்டா "– நான்

"ஆமாண்டா பெற்றோர் ஒப்புதலுடன் ஒண்ணு சேர்ந்துட்டாங்கடா.. இப்ப அவன் கோயம்புத்தூர்ல செட்டில்டா "- ஆன்டனி

மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது

"டேய் அவன் செல் நம்பர் இருக்கா "

"ம் தரண்டா "– செல்போனை நோண்டி ஒரு வழியாய் எடுத்துதந்தான்

"ஓகே டா பார்ப்போம் டா பை.."

மறுபடியும் படம் ஆரம்பித்தது. எனக்கோ என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி போனேன்.

__________________________________________________

யார் இந்த ஜெயச்சந்திரன் - சிவகாமி ? மனசு தியேட்டரிலிருந்து வெளியே குதித்து காலங்களில் பயணித்து 1996 ம் வருடம் நோக்கி ஓடியது.

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம்தான் ஆயிருக்கும்

1996 ம் வருடம் அந்த ஒற்றை பேருந்து சதக்கல்லூரியிலிருந்து மார்க்கட் வழியாக ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு

காலிப்பயல்களையும்
காதல்களையும்
சுமந்துகொண்டு
பயணித்துக்கொண்டிருக்கிறது.


நானும் மஸ்தானும் அந்த பேருந்தின் பெண்கள் இருக்கையின் எதிர்ப்புறம் கடலை சாகுபடி செய்துகொண்டே இருக்க…

"டேய் மஸ்தான் அங்க பாரு அந்த பொண்ணு சிவகாமி தானே அவ பி எஸ் ஸி கெமிஸ்ட்ரி படிக்கிறாடா..அவளுக்கு மார்க்கட்தான் வீடு போல" – நான்

"ஆமா அவளா அவ வீடு மார்கட்ல இந்த இடத்துலதான இருக்கு" - என்று ஒரு குறிப்பிட்ட இடம் சொன்னான்

"அடப்பாவி இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும் சொல்லவேயில்ல.. "– நான்

"நீ கேட்கவேயில்லயே.".- நக்கலடித்தான்

அதோ அதோ நம்ப ஜெயச்சந்திரன் அவளுக்கு பின் சீட்டில் வியர்க்க வியர்க்க சுற்றுமுற்றும் திருட்டு முழியோடு அமர்ந்திருந்தான்

ஜெயச்சந்திரன்

கொஞ்சம் உயரமாக மாநிறத்துடன் செங்கோட்டையில் பள்ளி படிப்பை முடித்து இங்கு சதக் கல்லூpயில் விடுதியில் தங்கி பிஏ ஆங்கிலம் லிட் படிப்பதற்காக வந்திருப்பவன்

செங்கோட்டையிலிருந்து அவனை
காலம் அழைத்து வந்ததா
இல்லை
காதல் அழைத்து வந்ததா என தெரியவில்லை?


அவன் திருட்டு முழியோடு அமர்ந்திருந்ததால் ஒரு சந்தேகம்..

"டேய் மஸ்தான் அங்க பாருடா அந்த பையன..அவன் நம்ம காலேஜ்தானே.."

"ஆமாடா அவன் ஆங்கிலம் லிட் மாணவன்டா.."

"ஹலோ நீங்க சதக் காலேஜ்தானே.. "– நான்

அவன் திரும்பி பார்த்து "ஆமா " என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டான். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் மேலும் பேச முடியவில்லை..

பேருந்து மார்கட்டை நெருங்கி கொண்டிருக்கிறது.. அவன் மெல்ல ஒரு கடிதத்தை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து தயாராக வைத்திருக்கிறான்..

நான் கவனித்து விட்டேன்.."டேய் மஸ்தான் அங்க பாரேன் அவன "– கிசுகிசுத்தேன்

முன்சீட்டிலிருக்கும் சிவகாமியின் மடியில் வைத்துவிட்டு அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் முன்னே இறங்கி விடுகிறான்.

"அட காலேஜ் தொடங்கியே ஒரு வாரம்தான் ஆகுது…அதுக்குள்ள பாருடா லவ் லட்டர "– நான் வயிற்றெரிச்சலில் சொன்னேன்.

கவனிக்க ஆரம்பித்தோம் …

கடிதம் அவன் வைத்ததை அவள் உணர்ந்து கொண்டாலும் பயந்து கொண்டே அதனை மடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் தட்டிவிட்டுவிட்டு அவள் நிறுத்தம் வந்ததால் இறங்க தயாராகி விட்டாள். ஒரு லிட்டருக்கும் மேல் அவளுக்கு வியர்வை வழிந்துகொண்டிருந்தது
அவள் முகம் அழுகின்ற நிலையில் இருந்தது

( முதல்ல இப்படித்தான் பொண்ணுக அழுகிற மாதிரி இருக்கும் ஆனால் கடைசியில் அழப்போறது பையன்க தான்பா )

பக்கத்தில் ஒரு பாட்டி

"யம்மா யம்மா ஒரு பேப்பர் கீழே விழுந்துடுச்சும்மா " என கத்திக்கொண்டிருக்க அலட்சியப்படுத்திவிட்டு இறங்கி விட்டாள்

"பாட்டி அந்த பேப்பர கொடுங்க ..அந்தபொண்ணு எங்க க்ளாஸ்தான் நாங்க நாளைக்கு கொடுக்கிறோம்;.."- நான்

அந்தபாட்டிக்கு கொஞ்சம் கொழுப்பு

"இல்ல இல்ல வேண்டாம்..நானே கொடுத்திடறேன் " மடித்து கை இடுக்கில் வைத்துக்கொண்டாள்

மாட்டிக்கொண்டது
ஒரு காதலும் கடிதமும்
அந்த பாட்டியின் கை இடுக்கில்


ஜெயச்சந்திரனிடம் நேரடியாக கேட்பது நாகரீகமில்லையாததால் விட்டுவிட்டோம்…

------------------------------------------------------------------------------------------

அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து தமிழ் வகுப்பு; நடந்து முடிந்து எல்லா வகுப்பு மாணவர்களும் எங்கள் வகுப்பிலிருந்து சென்றுகொண்டிருக்க

அந்த சிவகாமியும் அவளது தோழியும் கடைசியாக செல்கிறார்கள்

நான் அவர்களது பின்னால் பெண்கள் போல நடந்து செல்ல அவர்கள் திரும்பி பார்க்கும் போது திரும்பிகொள்வேன்.

"ஏடி பின்னால பாரேன் ஞானியார் நம்மள கிண்டல்பண்ணி நடந்து காட்டுறான்டி "- சிவகாமி

"விடுடி திரும்பிபார்த்தோம்னா அவ்வளவுதான் ஓ ன்னு கத்திருவாங்க .."

"இல்லடி நாம பிரின்ஸிபால்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணணும்.. "- சிவகாமி

"ச்சே விடுடி சும்மா ஜாலிக்குதானே பண்றாங்க…"

பேச்சுக்களின் சலசலப்புக்கிடையே சிவகாமி உட்பட அவ தோழிகள் சிலர் முறைத்தபடியும் சிரித்தபடியும் சென்றார்கள்.

------------------------------------------------------------------------------------------

மறுநாள் கல்லூரியிலிருந்து பேருந்து ஜங்ஷன் நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்க..அந்த சிவகாமியும் அவளது தோழிகளும் முன்னால்…

நான் நண்பன் ராஜாவுடன் கடைசி சீட்டில் …

யதேச்சையாகஎடுத்துவிட்டேன் பாட்டை. என் சோக கதையை கேளு என்ற மெட்டில்பஸ்ஸின் ஓரத்தில் தாளம் போட தயாராகிவிட்டனர் நண்பர்கள்

என் சோக கதையை கேளு
தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே ( மாணவர்கள் ஒத்து ஊதினார்கள் )

கேட்டாக்க கண்ணீர் வரும்
எங்க நிலைமை

இந்த காலேஜ் பொண்ண நம்பி
மேலப்பாளையம் தாண்டி வந்தோம்…

என் சோக…
என் சோக கதையை கேளு
தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

( திருப்பி பார்த்து முறைத்தார்கள் அந்த சிவகாமியும் அவள் தோழிகளும் )

ஆனால் நான் யாரையும் குறிப்பிட்டு பாடவில்லை..ஆனால் அவள் தன்னை நோக்கி பாடுவதாக நினைத்துக்கொண்டாள் போல..

-------------------------------------------------------------------------------

மறுநாள் ஒரு மதிய இடைவேளை ..சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவிக்கொண்டிருக்க

"டேய் ஞானி எப்படிடா இருக்க" – ஜெயச்சந்திரன்

"என்னடா அதிசயமா இருக்கு இந்தப்பக்கம் .."

"இல்ல மாப்ள உன்கிட்ட கொஞ்சம் பேசணும் - "
-ஜெயச்சந்திரன்
அவனுடன் வெளியே வந்தேன் . கல்லூரி வராண்டாவின் படிக்கட்டு அருகே அழைத்து வந்து

"டேய் உன் மேல ஒரு கம்ப்ளைன்ட் டா"

"என்ன?"

"இல்லடா நீ அந்த பிஎஸ்ஸி கெமிஸட்ரி பொண்ணு சிவகாமிய கிண்டல் பண்ணிணதா சொன்னாங்க..வேண்டான்டா விட்ருடா.."

"நான் யாரயும் குறிப்பிட்டு பண்ணலடா..ஆமா அவ மேல மட்டும் என்ன உனக்கு கரிசனம்."

"டேய் புரிஞ்சுக்கடா மாப்ள நான் அவள லவ் பண்றேன்டா"

"அப்படிபோடு ..டேய் எனக்கும் தெரியும்.. பிரின்ஸ்பாலுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணப்போறேன்னு சொன்னாள நீதான் அவ பிரின்ஸ்பால்னு தெரியும்டா எனக்கு…"

( காதல் ஒருவனை
பிரின்ஸ்பாலாகாவும் ஆக்கும்
பிச்சைக்காரனாகவும் ஆக்கும் )


"சரி சரி நடத்துடா…அவ்வளவுதான சரி விட்டுறு..நான் இனிம கிண்டல் பண்ணல"

"தேங்ஸ்டா… "

------------------------------------------------------------------------------------------

அதன்பிறகு அவர்களை பற்றி அரசல் புரசலா கேள்விகள் - செய்திகள் - காதல் தோல்வி – வெற்றி – பிரச்சனை – வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு என புரளிகள் கிளம்பிகொண்டிருந்தன.
இடையில் ஜெயச்சந்தின் வந்து காதல் கவிதை எல்லாம் வாங்கிச் சென்றான்

( சொந்தமாய்
கவிதை எழுதத்தெரியாதவன்
காதலிக்க லாயக்கில்லை!
உண்மையாய்
காதல் கொண்டவனுக்கு
கவிதை ஒரு கைப்பிள்ளை

காதல் கவிதை
கடன்வாங்கியவர்களின்
காதல் வெற்றிதான் - எனது
கவிதை வெற்றியும்!
)


---------------------------------------------------------------------------------

மீண்டும் மனசு கல்லூரி காலத்திலிருந்து திரும்பி வந்து அருணகிரி தியேட்டர் திரும்பி வந்து
உள்ளம் கேட்குதே படத்தில் லயித்துப்போனது.

அந்த படத்தில் ஷாம் பேசிய வசனம்

கல்லூரி பருவத்தில கேலி கிண்டல் பண்றது - ஒருவர் தன்மீது ஆசை வைத்திருப்பாரா என்று தெரியாமல் ஆசையை அவர்களிடம் சொல்லி விடுதல் - இப்படி விளையாட்டு தனமான காதல் - கேலி- கிண்டல் எல்லாம் கல்லூரி முடிந்து பிரியும் தருவாயில்தான் தெரிகிறது. வாழ்க்கை எவ்வளவு பயங்கரமானதுன்னு..அதனால் கடைசி வரைக்கும் கல்லூரி பருவத்திலேயே இருந்துவிடக்கூடாதான்னு கல்லூரி வாழ்க்கைய அனுபவிச்ச ஒவ்வொரு
மனசும்; ஏங்கிட்டுதான் இருக்குது….உலகம் ரொம்ப சின்னதுதான் ..நாம மறுபடியும் எங்கேயாவது சந்தித்துக்கொண்டால் அப்ப வாய் ஊமையாகிவிடும் ..கண்ணீர்தான் பேசும்..
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது என் காதுகளில் அது எவ்வளவு நிஜம்..


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

7 comments:

Muthu said...

ரசிகவ்,
அந்தக் கதையைப் போலவே
உங்கள் கவிதையும்
நிஜத்தைச் சொல்கிறது.

Unknown said...

கெமிஸ்டிரியும்., லிட்டுமா? அட அவங்க இப்ப எப்பிடி இருக்காங்கன்னு போன்ல கேட்டிங்களா? இல்லயா?

Anonymous said...

Hi Rasigav

Excellent.. this essay itself gives the satisfaction of a good love moovi. Then how are they..? i mean that Jayachandran and sivagami.

Oru nalla thiraippadam paarthathu poola irunthathu. Good .. write more,
M. Padmapriya

expertdabbler said...

பிரமாதம் ரசிகவ்

இனி இங்கு அடிக்கடி வருவேன் :)

எம்.கே.குமார் said...

பழைய நினைவுகளா?

ஜெயிச்ச கதையை கேக்குறது நல்லாத்தான் இருக்கு, இண்டெர்வல்லுக்கு அப்புறம் என்ன சொல்லுங்க!

அண்மையில் சிங்கப்பூர் பக்கம் வந்திருந்தீங்களா ரசிகவ் ஞானியார்?

எம்.கே.

Ganesh Gopalasubramanian said...

ஞானியாரே.......இருந்தாலும் உமக்கு கற்பனை திறன் அதிகம் தான்யா......

உள்ளம் கேட்குமே பார்த்த ஞாபகமும்........ உள்ளக் கடத்தல் செய்தவர் ஞாபகமும் வந்ததா.........?

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

உங்களுக்கு கற்பனை எனக்கு நிஜம்.... உங்களுக்கு நிஜமான சில நிகழ்வுகள் எனக்கு கற்பனையாகத் தோன்றலாம்....

நிகழ்வுகள் நடந்தேறிபொழுது இருந்தவர்களுக்கு தெரியும் இது கதையா நிஜமா என்று. இது நிஜம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்க முடியாது ப்ரதர்... நன்றி தங்களது விமர்சனத்திற்கு

தேன் கூடு