Monday, October 08, 2007

வேட்டியை மடிச்சிக்கட்டு

Photo Sharing and Video Hosting at Photobucket

வேஷ்டி கட்டுதலைப் பற்றி முழம் முழமாக எழுதலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேஷ்டி கட்டுவார்கள். ஒவ்வொருவரின் கட்டுதலும் வித்தியாசமாக இருக்கும்.

வேஷ்டிக்கும் சாரத்திற்கும் வித்தியாசம் இருக்கின்றது. வேஷ்டியை மூடியது போல தைத்தால் அது சாரமாகிவிடும்.

எங்கள் ஊரில் பெரும்பாலும் சாரம்தான் உடுத்துவார்கள். ஆனால் வேஷ்டி என்ற சொல்லையே பெருன்பான்மையோனோர் பயன்படுத்துவார்கள். நான் கூட எனக்கு நினைவு தெரிகின்ற நாள் வரையிலும் வேஷ்டியும் சாரமும் ஒன்றுதான் என நினைத்திருந்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket
மிக அழகாக வேஷ்டி கட்டுபவர்கள் மலையாளிகள்தான் . அவர்களின் வேஷ்டி கட்டும் அழகுக்கும், கம்பீரத்திற்காகவும் எனக்கும் வேஷ்டியின் மீது ஆர்வம் வந்தது.

எங்கள் ஊரில் புதுமாப்பிள்ளைகள்தான் வேஷ்டி கட்டுவார்கள். பெருன்பான்மையானோர் சாரம்தான். ஆனால் சாரம் வீட்டில் இருக்கும்பொழுது மட்டுமல்ல வெளியிலும் எங்கு சென்றாலும் சாரத்திலையே உலா வருவார்கள்.

விளையாடுவதற்கு கஷ்டமாக இருந்தாலும் கிரிக்கெட்டும் சாரத்திலையே விளையாடுவார்கள். சிலர் பந்தை துரத்திக்கொண்டு ஒரு கையால் சாரத்தைப் பிடித்துக்கொண்டு ஓடும் நிலையைப் பார்க்க சிரிப்பாக இருக்கும்.

பெண்கள் சாரம் உடுத்துவதை நான் கேரளாவில்தான் பார்த்திருக்கின்றேன். ஆனால் எங்கள் ஊர் பெண்களும் சாரம் உடுத்துவார்கள். ஆனால் அதில் பழைய பாட்டிகள்தான் அதிகம். அவர்களுக்கு அதுதான் வசதி.

நான் எம்சிஏ படிக்கின்றபொழுது கல்லூரி இறுதிநாள் விழாவில் அனைவரும் வேஷ்டி கட்டி வருவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைவரும் பேண்ட் அணிந்து கொண்டு வந்து பக்கத்தில் உள்ள நண்பனின் வீட்டிற்குச் சென்று வேஷ்டியை மாற்றிவிட்டு கல்லூரிக்குச் சென்றோம். எனக்கு கட்டத் தெரியவில்லை அவிழ்ந்து அவிழ்ந்து விழுந்தது. கோபியைத்தான் கட்டிவிடச் சொன்னேன். கோபியும் அவிழ அவிழ முகம் சுணுங்காமல் கட்டிவிட்டான்.

எங்கே அவன் சென்றுவிட்டால் வேறு யாரும் உதவிட மாட்டார்களோ என்று பயந்து அன்று முழுவதும் கோபியின் பக்கத்திலையே நின்றேன். எங்களுடைய துரதிருஷ்டமோ என்னவோ அன்று சரியான காற்று வீசியது. என்னைப்போல சிலர் வேஷ்டியை அந்தக் காற்றினில் காப்பாற்ற முடியாமல் தடுமாறிப் போயினர்.

நான் மேடையில் எரிச்சல் என்ற தலைப்பில் கவிதை பாடும்பொழுது கூட சொன்னேன்

எரிச்சல்

கடலை போடும் வேளை
கூப்பிடுகிறான் உயிர்நண்பன்

செல்லும் வழியில் பெண்கள் கல்லூரி

பாதையை மாற்றம் அப்பா

புதிதாய் வேஷ்டி கட்டியுள்ளேன்
புயல் காற்று அடிக்கின்றது



என்னுடைய தர்மசங்கடத்தை மேடையில் அப்படியே சொன்னதால் நிறைய பேருக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது.

Photo Sharing and Video Hosting at Photobucket

என்னுடைய சிறு வயதில் நண்பர் நிஸார் என்பவன் வேஷ்டியை வித்தியாசமாக கட்டியிருப்பான். வேஷ்டியை இடுப்பில் இறுக்கிகட்டி விட்டாலும் ஒரு சிறு பகுதி மட்டும் வால் போல தொங்கிக்கொண்டிருக்கும். நாங்கள் அதனைப் பிடித்துக் கொண்டு "ஏய் குதிரை வால் , குதிரை வால் " என்று கிண்டலடிப்போம்.

நான் பெரும்பாலும் பேண்ட்தான் போடுவேன். சிலநேரம் நண்பர்கள் அனைவரும் ஜங்ஷனுக்கு படம் பார்க்க சென்றால் கூட சாரம் அணிந்துதான் வருவார்கள். நான் மட்டும் பேண்ட் அணிந்திருப்பேன்.
" இவனப்பாருடா இவன் பேண்ட்டோட பிறந்திருப்பான் போல…சாரம் உடுத்திட்டு வரவேண்டியதுதானடா" என்று கிண்டலடிப்பார்கள்.

எனக்கு சாரம் உடுத்திக்கு கொண்டு வந்து செல்லும்பொழுது வெளியில் கல்லூரித்தோழிகள் யாரும் பார்த்துவிட்டால் கிராமத்தான் என்று நினைத்து விடுவார்களோ என்று பயந்தேன். ம் வேஷ்டி சாரம் உடுத்தினால் கிராமத்துக்காரர்கள் என்ற நினைப்புதான் இருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் பெருன்பான்மையானோர் வேஷ்டிதான் உடுத்துகின்றார்கள்.

அரசியல் கறை வேஷ்டியை உடுத்திக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும். அரசியல் கட்சிகள் மீது அபிமானம் இருக்க வேண்டியதுதான் அதறாக அவர்களின் கட்சிக்கொடியை வேஷ்டியில் காட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. இந்தப் பழக்கத்தை யார் கொண்டு வந்தார்களோ தெரியாது?. சரி அடிக்கடி கட்சி மாறுகின்ற அரசியல்வாதிகள் அந்தக் கட்சிக் கறை உள்ள வேஷ்டியினை என்ன செய்வார்கள்..? இட்லி அவிக்கவும் வாகனம்; துடைக்கவும் பயன்படுத்துவார்களோ..?

தமிழர்கள் வேஷ்டியின் மீது உள்ள அபிமானம் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்திருக்கிறது. வேஷ்டியை வைத்து படப்பெயர்களெல்லாம் வந்திருக்கின்றது.

வேட்டியை மடிச்சிக்கட்டு ,

அப்படியென்றால் இந்த வார்த்தை என்ன சொல்ல வருகின்றது. வேட்டியை மடித்துக் கட்டினால் அவன் வன்முறைக்கு தயாராகின்றான் என்று அர்த்தமா..? சரி இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் எப்படி எடுப்பார்கள் ஜீன்ஸை கிழித்துப் போடு , கோட் சூட்டை குப்புற போடு என்றா..?

சென்னையில் சில இடங்களில் வேஷ்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே..? அப்படியென்றால் அதுபோன்ற இடங்களுக்கு அரசியல்வாதிகளும் நுழையக்கூடாதோ..? வேஷ்டி கட்டினால் அப்படியென்ன அவமானமாக கருதுகின்றார்களோ தெரியாது?

உங்களோட வேஷ்டி அனுபவங்களையும் எடுத்து விடுங்களேன்.?

- ரசிகவ் ஞானியார்

10 comments:

ILA (a) இளா said...

வேஷ்டிக்கு ஞாபகம் வரெ ஒரே பதிவு ராசாவுடையதுதான் இதோ இருக்கு அந்த லின்க்

http://raasaa.blogspot.com/2005/08/pda.html

குசும்பன் said...

அருமையா சொல்லி இருக்கீங்க, ஆனா மளையாளிய பத்தி சொல்லி இருக்கீங்க பாருங்க அங்கதான் எனக்கு கோவம் வருது!!!:((((

தனசேகர் said...

அனைவரின் அனுபவமும் அதுவே ரசிகவ் ..!!


வேட்டி கட்டுவது சிரமமானாலும் .. அது ஒரு தனி சுகம்தான் ... எப்போது உட்த்தினாலும் .. ஒரு பயத்தோடு தான் இருக்க வேண்டும் .. :)

எனக்கும் சாரம் (நாங்கள் லுங்கி எனச்சொல்வோம் ) மிகவும் பிடித்த உடை .. ஆனால் வீட்டை விட்டு வெளியே போனால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் .. சென்னைக் காவலர்கள் கூட லுங்கி கட்டியவர்களை .. சந்தேகத்தோடு பார்ப்பதாகவே எனது எண்ணம் .. அதுவே முழங்காலுக்கு மேல் சாட்ஸ் போட்டால் .. அது பேசன் .. என்ன கொடுமை ..

அதைவிடக் கொடுமை .. இங்கு .. கோவில்களுக்கு சாட்ஸோடு வருகிறார்கள் .. விட்டால் .. அமெரிக்காவிலுள்ள சாமிதானே என சாமிக்கும் உடையை மாற்றீ விடுவார்கள் போலிருக்கிறது :(

அன்புடன்
தனசேகர்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
வேஷ்டிக்கு ஞாபகம் வரெ ஒரே பதிவு ராசாவுடையதுதான் இதோ இருக்கு அந்த லின்க்

http://raasaa.blogspot.com/2005/08/pda.html//


ம் எனக்கும் அந்த மம்முட்டி ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//குசும்பன் said...
அருமையா சொல்லி இருக்கீங்க, ஆனா மளையாளிய பத்தி சொல்லி இருக்கீங்க பாருங்க அங்கதான் எனக்கு கோவம் வருது!!!:((((//

அதுக்கு ஏங்க நீங்க கோவப்படுறீங்க..நான் தப்பா ஏதும் சொல்லையே..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தனசேகர் said...
அனைவரின் அனுபவமும் அதுவே ரசிகவ் ..!!


வேட்டி கட்டுவது சிரமமானாலும் .. அது ஒரு தனி சுகம்தான் ... எப்போது உட்த்தினாலும் .. ஒரு பயத்தோடு தான் இருக்க வேண்டும் .. :) //


ம் சரியா சொன்னீங்க தனசேகர்..அது மரணபயத்தை விட கொடுமையா இருக்கும் :)

குசும்பன் said...

இல்லீங்க நிலவு நண்பன் எனக்கு அதிகமாக ஆப்பு வைக்கிறானுங்களா, அதான் கோவம் கோவமா வருது... ஆனா பாருங்க அந்த பொண்ணுங்களை பார்த்தா கோவம் எல்லாம் மறைந்துவிடுகிறது!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//குசும்பன் said...
ஆனா பாருங்க அந்த பொண்ணுங்களை பார்த்தா கோவம் எல்லாம் மறைந்துவிடுகிறது!!!//


ம் அதுதான் கடவுளின் சொந்த தேசம்னு சொல்றாங்க... :)

Anonymous said...

இன்றுவரை இளக வைக்கிறது
அந்த ஆதி கால பெருநாள் நினைவுகள்!
நன்றிகள் பல - நம் இராமையாவை
நினைந்ததற்கு.

With Love,

retailsaleem.blogspot.com

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
இன்றுவரை இளக வைக்கிறது
அந்த ஆதி கால பெருநாள் நினைவுகள்!
நன்றிகள் பல - நம் இராமையாவை
நினைந்ததற்கு.//

நன்றி சலீம் மறக்க முடியுமா நம்ம இராமையாவை...நீங்க எந்த வருஷம்..?

தேன் கூடு