Wednesday, April 26, 2006

நீ எனக்கு வேண்டாமடி





[என்னுடைய பெயர் குறிப்பிடாமல் என்னுடைய கவிதை ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே பதியப்பட்டிருந்தாலும் மறுபடியும் பதியவேண்டிய சூழ்நிலை. என்னுடைய "பானிபட் இதயங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து அந்தக் கவிதையை மறுபடியும் பதிகின்றேன்...ரிபீட்டு.. ]



சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

43 comments:

பொன்ஸ்~~Poorna said...

இந்தக் கவிதையை நானும் படித்தேன்.. உங்கள் கவிதை என்று தெரியாமலே..
அது சரி, இன்னொருத்தர் கவிதைக்காக எடுத்த புகைப்படத்தை எதுக்கு போட்டிங்க? வேறா ஏதும் போட்டிருக்கக் கூடாதா?

Unknown said...

இதை எழுதியவரைப் பாராட்ட வேண்டும் என நினைத்ததுண்டு... இந்தாங்கப் பிடியுங்க என் பாராட்டுக்களை... உங்க பொஸ்தகங்களைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ...எங்கே கிடைக்கும்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
இந்தக் கவிதையை நானும் படித்தேன்.. உங்கள் கவிதை என்று தெரியாமலே..
அது சரி, இன்னொருத்தர் கவிதைக்காக எடுத்த புகைப்படத்தை எதுக்கு போட்டிங்க? வேறா ஏதும் போட்டிருக்கக் கூடாதா? //

ம் நன்றி பொன்ஸ்.. ம் அந்தப்புகைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் இங்கே பிரசுரித்துவிட்டேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dev said...
இதை எழுதியவரைப் பாராட்ட வேண்டும் என நினைத்ததுண்டு... இந்தாங்கப் பிடியுங்க என் பாராட்டுக்களை... உங்க பொஸ்தகங்களைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க ...எங்கே கிடைக்கும்? //



நன்றி தேவ்..

"பானிபட் இதயங்கள்" என்ற இந்தப்புத்தகம் நானும் எனது நண்பர் ராஜாவும் இணைந்து கல்லூரி நாட்களில் வெளியிட்டது ( 2002 ).

திருநெல்வேலியின் "சதக்கத்துல்லா அப்பா கல்லூரி" நூலகத்தில் மட்டும்தான் தற்பொழுது கிடைக்கின்றது.

அங்கு படிக்கின்ற தங்களது தோழர் எவரிடமாவது கேட்டால் கூட கிடைக்கும்.

தற்பொழுது விற்பனையில் இல்லை. நான் இந்தியாவுக்கு ஜுன் மாதத்தில் வருகிறேன்.

எனது கவிதைகள் பலவற்றையும் இணைத்து அதனை மறுபதிப்பு இடலாமென இருக்கின்றேன்.

Prasanna said...

ஹாஹா!! சதக் காலேஜா நீங்க!! இந்த கவிதைய நானும் ரொம்ப ரசிச்சிருக்கென். நான் ஜான்ஸ் காலேஜ். திருனெல்வேலில எந்த பக்கம்??? ஜுன்ல வந்தா சந்திக்கலாம்னு தான்!!!
பிரசன்னா

Sivabalan said...

Good Work!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Prasanna said...
ஹாஹா!! சதக் காலேஜா நீங்க!! இந்த கவிதைய நானும் ரொம்ப ரசிச்சிருக்கென். நான் ஜான்ஸ் காலேஜ். திருனெல்வேலில எந்த பக்கம்??? ஜுன்ல வந்தா சந்திக்கலாம்னு தான்!!!
பிரசன்னா //


அட நம்ம ஊரு மக்காவா நீங்க..

என்ன ஜான்ஸ் காலேஜா.. ? இங்கேயும் நான் படிச்சேனே..

திருநெல்வேலியில மேலப்பாளையம்..கண்டிப்பா சந்திப்போம்..

முத்துகுமரன் said...

//இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு
வேண்டாமடி//

நல்ல கவிதை நிலவு நண்பன்.
*

ஒரு மாறுபாடான விமர்சனம் இது. வருத்தம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.

கவிதையின் நாயகனுக்கு காதலும் புரியவில்லை. காதலியையும் புரியவில்லை. ஓடி வருதல் என்பது பெண்ணுக்கு அத்தனை எளிதான காரியம் அல்ல. எத்தகையதொரு நிர்பந்தம் காரணமாக பெண் அந்த முடிவுக்கு வருகிறாளோ அதை ஏற்படுத்திய காதலன் கோழைத் தனமாக அவளை நிராகரிக்க மிகத்திறமையாக பாச அரிதாரம் கட்டி ஆடும் நாயகத் தன்மை மட்டும்தான் தெரிகிறது. பெற்றோர் சகோதரர் நாயகனுக்கு மட்டுமல்ல நாயகிக்கும் உண்டு....


அன்புடன்
முத்துகுமரன்

Radha N said...

இந்த கவிதையினை எங்கோ படித்திருக்கின்றேன். எங்கு என்று நினைவில் இல்லை.

கல்லூரியில் கால்வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் படிக்கவேண்டிய கவிதை.

பாராட்டுக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//முத்துகுமரன் said...
*

ஒரு மாறுபாடான விமர்சனம் இது. வருத்தம் ஏற்பட்டால் மன்னிக்கவும்.

காதலன் கோழைத் தனமாக அவளை நிராகரிக்க மிகத்திறமையாக பாச அரிதாரம் கட்டி ஆடும் நாயகத் தன்மை மட்டும்தான் தெரிகிறது. பெற்றோர் சகோதரர் நாயகனுக்கு மட்டுமல்ல நாயகிக்கும் உண்டு....


அன்புடன்
முத்துகுமரன் //



நன்றி முத்துக்குமரன்..இது மாறுபாடான விமர்சனமாக எனக்குத் தெரியவில்லை..ஏனென்றால் இதே கேள்விகள் என்னிடம் பலமுறை கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் என்னிடம் இதுவரை எந்த ஆணும் கேட்கவில்லை. அதற்காக தங்களின் நடுநிலைத்தன்மையை பாராட்டுகின்றேன்..

இந்தக்கவிதையில் கண்டிப்பாக அந்தப்பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்கும்பொழுது காதலன் கோழைத்தனமாகத்தான் தெரிகின்றான். ஆனால் காதலனின் மனநிலை எந்த அளவிற்கு இருந்தால் அவன் காதலித்த பெண்ணை மறுத்திருப்பான். அது மட்டுமல்ல சமுதாயத்தின் மனநிலையில் இருந்தும் பாருங்களேன்..

ஓடிப்போகுமாறு அழைத்தவுடனையே நீ வேண்டாமடி என உடனே சொல்லும் கோழையல்ல அவன். அவன் சமாதானப்படுத்தியிருக்கக் கூடும். அவளும் அவளுடைய வீட்டில் சம்மதிக்கவில்லை என்று அவனை ஓடிப்போவதற்காக கட்டாயப்படுத்தியிருக்க கூடும்.

இப்படி ஓடிப்போக அழைத்த காதலிக்கு அந்தக்காதலன் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலைகள் - பாசப்பிணைப்புகள் பற்றி விளக்குகின்றான். இவ்வாறு அவன் கூறுவது அவளுக்கு அவளுடைய குடும்பத்தை பற்றியும் - குடும்பத்தின் பாசப்பிணைப்புகள் பற்றி ஞாபகப்படுத்தவே..

ஆகவே நான் உன்னோடு ஓடிவரப்போவதில்லை. மீறி நீ கட்டாயப்படுத்தினால் எனக்கு நீ தேவையில்லை என்று கூறுகின்றான்.

அதுமட்டுமல்ல ஓடிப்போகுதல் என்பது அந்த காதலர்களுக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம் ஆனால் அவர்கள் ஓடிச்சென்ற பிறகு அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படுகின்ற அவமானங்களை நினைத்துப்பாருங்கள்.

அதுவும் பெண் என்றால் கேட்க வேண்டாம். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு பெண் தனது காதலனுடன் ஓடிப்போய்விட அந்தப்பெண்ணின் தங்கைக்கு நீண்ட நாட்களாக வரன் அமையாமலையே இருந்தது. அது எவ்வளவு கொடுமை..

திரைப்படங்களிலும் பத்திரிக்கைகளிலும் ஓடிப்போய் கல்யாணம் செய்த கொண்ட காதலன் காதலிகளை காட்டுகிறார்களே..ஓடிப்போய் பாதிக்கப்பட்ட அந்தக்குடும்பம் சந்திக்கின்ற அவமானங்களை காட்டினால் யாருமெ ஓடிப்போக மாட்டார்கள்..

தலைமுறை தலைமுறையாய் சமுதாயத்தின் நல்ல பெயர் வாங்கிக் கொண்டு நம்மை வளர்த்த குடும்பங்களுக்கு நம் காதலால் அவமானம் தேடித்தருவதை விட விட்டுக்கொடுத்தலே மேல்.

முத்துகுமரன் said...

//இப்படி ஓடிப்போக அழைத்த காதலிக்கு அந்தக்காதலன் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலைகள் - பாசப்பிணைப்புகள் பற்றி விளக்குகின்றான். இவ்வாறு அவன் கூறுவது அவளுக்கு அவளுடைய குடும்பத்தை பற்றியும் - குடும்பத்தின் பாசப்பிணைப்புகள் பற்றி ஞாபகப்படுத்தவே..//

இதைத்தான் எதிர்பார்த்தேன் ரசிகவ்...

கவிதை வெறும் வார்த்தை கட்டுகள் அல்ல என்பதை மறுமுறை உறுதி செய்திருக்கிறீர்கள்...

வாழ்த்துகள்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
இந்த கவிதையினை எங்கோ படித்திருக்கின்றேன். எங்கு என்று நினைவில் இல்லை.

கல்லூரியில் கால்வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் படிக்கவேண்டிய கவிதை.

பாராட்டுக்கள். //



சுமார் 3 வருடங்களுக்கு முன்பு வாரமலரில் கடைசி பக்கத்தில் படித்திருக்கலாம்

அல்லது எனது புத்தகம் தவறிப்போய் தங்கள் கைகளில் கிடைத்திருக்கலாம்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// முத்துகுமரன் said...
//இப்படி ஓடிப்போக அழைத்த காதலிக்கு அந்தக்காதலன் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலைகள் - பாசப்பிணைப்புகள் பற்றி விளக்குகின்றான். இவ்வாறு அவன் கூறுவது அவளுக்கு அவளுடைய குடும்பத்தை பற்றியும் - குடும்பத்தின் பாசப்பிணைப்புகள் பற்றி ஞாபகப்படுத்தவே..//

இதைத்தான் எதிர்பார்த்தேன் ரசிகவ்...

கவிதை வெறும் வார்த்தை கட்டுகள் அல்ல என்பதை மறுமுறை உறுதி செய்திருக்கிறீர்கள்...

வாழ்த்துகள்.. //




நன்றி முத்துக்குமரன்..

இதுபோன்ற விமர்சனங்களிலும் சுட்டிக்காட்டுதலிலும்தான் கவிஞன் பக்குவப்படுகின்றான்.

ஆனால் நான் இன்னும் பக்குவப்படவில்லை..( உண்மைதான்..தன்னடக்கமெல்லாம் இல்லைங்க.. :) )


அன்புடன்


ரசிகவ் ஞானியார்

Anonymous said...

indha kavidhayai idhu dhaan mudhan murai padikkiren.. Romba pidithirukkiradhu.. Aanaal "Nee enakku Vaendaamdi"kku badhila.. "Vaa unnai en kudumbathidam azhaithu pogiren"nu solli irukkalaamonnu thonudhu..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
indha kavidhayai idhu dhaan mudhan murai padikkiren.. Romba pidithirukkiradhu.. Aanaal "Nee enakku Vaendaamdi"kku badhila.. "Vaa unnai en kudumbathidam azhaithu pogiren"nu solli irukkalaamonnu thonudhu.. //


நன்றி நண்பரே..அப்படின்னா தலைப்பே ஒரு கவிதையா வந்துறும் போல இருக்குது..

Anonymous said...

Naan mikavum rasithu paditha kavidai, padikkindra kavidai.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Jayalavutheen said...
Naan mikavum rasithu paditha kavidai, padikkindra kavidai. //

நன்றி நண்பா...

இது எனக்கும் மிகவும் பிடித்த கவிதைகளுள் இதுவும் ஒன்று

Unknown said...

நண்பன்,
நான் இப்பொழுதுதான் முதன் முறை படிக்கிறேன்....
அருமையா இருக்குங்க...
வாழ்த்துக்கள்...
காதலை சொல்லுவதை விட காதலை மறுப்பதுக் கடினமான விஷயம்!!!

கார்த்திக் பிரபு said...

வணக்கம் நிலவு நண்பன்..

முதலில் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு..!

இணையத்தில் நம்ம ஊரு காரர் ஒருத்தர் புகுந்து விளையாடுவதை பார்த்த உடனே வாழ்த்த வேண்டும் என தோன்றியது

ஆனால் இப்ப தான் நேரம் கிடைத்தது.நான் கடையம் ஊரை சேர்ந்தவன்..கடையம் தெரியுமா..?

"நீ எனக்கு வேண்டாமடி" என்ற கவிதையை எழுதியவர் நீங்கள் தான் என்று அறிந்ததில் மிக்க சந்தோசம்..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....உங்கள் மெயில் முகவரியை ஏன் நீங்கள் எங்குமே குறிப்பிடவில்லை...
அப்படியே என் பக்கத்திற்கு ஒரு எட்டு வந்து பார்க்கிறது முகவரி http://bharathi-kannamma.blogspot.com/

.நன்றி மீண்டும் சந்திப்போம்

கார்த்திக் பிரபு said...

வணக்கம் நிலவு நண்பன்..

முதலில் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு..!

இணையத்தில் நம்ம ஊரு காரர் ஒருத்தர் புகுந்து விளையாடுவதை பார்த்த உடனே வாழ்த்த வேண்டும் என தோன்றியது

ஆனால் இப்ப தான் நேரம் கிடைத்தது.நான் கடையம் ஊரை சேர்ந்தவன்..கடையம் தெரியுமா..?

"நீ எனக்கு வேண்டாமடி" என்ற கவிதையை எழுதியவர் நீங்கள் தான் என்று அறிந்ததில் மிக்க சந்தோசம்..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....உங்கள் மெயில் முகவரியை ஏன் நீங்கள் எங்குமே குறிப்பிடவில்லை...
அப்படியே என் பக்கத்திற்கு ஒரு எட்டு வந்து பார்க்கிறது முகவரி http://bharathi-kannamma.blogspot.com/

.நன்றி மீண்டும் சந்திப்போம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//karthick said...
வணக்கம் நிலவு நண்பன்..

முதலில் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு..!

இணையத்தில் நம்ம ஊரு காரர் ஒருத்தர் புகுந்து விளையாடுவதை பார்த்த உடனே வாழ்த்த வேண்டும் என தோன்றியது//



நன்றி நம்ம ஊருக்காரரே..

அட அதான் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை இடது பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றேனே..

நன்றி வீடு தேடி வந்து வாழ்த்தியதற்கு

Anonymous said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள் நிலவு நண்பா!

மறைக்கலாம் காதல்!
திறக்கலாம் பாசம்.
கண்கள் மறைப்பதும் திறப்பதும்
இமைப்பது போல இயல்பாகிப் போவது ‌
‌வாழ்க்கையின் விசித்திரம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//demigod said...
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் நிலவு நண்பா! //


நன்றி நண்பா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// tya said...
அழகாக எழுதியிருகேங்க ரகசிவ் பாராட்டுக்கள் //

நன்றி தயா..

சீனு said...

//அதுமட்டுமல்ல ஓடிப்போகுதல் என்பது அந்த காதலர்களுக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம் ஆனால் அவர்கள் ஓடிச்சென்ற பிறகு அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படுகின்ற அவமானங்களை நினைத்துப்பாருங்கள்.//

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, காதலிக்க ஆரம்பித்த பொழுது நினைத்துப் பார்க்கும் பக்கும் இருக்கும் அல்லவா? எங்கோ contradict ஆகிறதே...

Anonymous said...

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!


wow wow பாராட்டுக்கள்.

Unknown said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல கவிதை படிச்சேன்.

நிலவு நண்பா வாழ்த்துக்கள்

Unknown said...

நிலவு நண்பா சூப்பர்

SurveySan said...

நல்லா இருக்குது கவிதை.

முதல் பத்தி சூப்பர்.

வெற்றி said...

அருமையான கவிதை.

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!!
தொடரட்டும் உங்களது கவிப் பணி!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நாடோடி இலக்கியன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!!!
தொடரட்டும் உங்களது கவிப் பணி!!! //

வாழ்த்துக்கு நன்றி இலக்கியன்

//வெற்றி said...
அருமையான கவிதை. //

நன்றி வெற்றி...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// SurveySan said...
நல்லா இருக்குது கவிதை.

முதல் பத்தி சூப்பர். //

நன்றி நண்பா.... ஏன் உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்கோ..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நன்றி நண்பா.... ஏன் உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்கோ..?//

பழைய கவிதைக்கு புதிய வாழ்த்துக்கள்..நன்றி ரம்யா

Anonymous said...

மொக்கை கவிதை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சீனு said...
இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, காதலிக்க ஆரம்பித்த பொழுது நினைத்துப் பார்க்கும் பக்கும் இருக்கும் அல்லவா? எங்கோ contradict ஆகிறதே...//

குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்துவிடலாம் என்று நம்பிதான் எல்லாக் காதல்களும் வாழ்கின்றன..ஆனால் எதிர்ப்புகள் வரும்பொழுது என்ன செய்வார்கள்..? சில நேரம் எதிர்மறையான முடிவுகளாகிவிடுகின்றன...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//யாழ்_அகத்தியன் said...

wow wow பாராட்டுக்கள். //

நன்றி நண்பா

மஞ்சூர் ராசா said...

இரண்டு வருடம் கழித்து மீண்டும் படிக்கும் வாய்ப்பு

முத்துக்குமரனை சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

கவிதையில் உண்மை சுடுகிறது.

பின்குறிப்பு: சமீப காலத்தில் உங்களிடமிருந்து இது போன்ற கவிதைகள் காணவில்லை ஏன்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மஞ்சூர் ராசா said...
இரண்டு வருடம் கழித்து மீண்டும் படிக்கும் வாய்ப்பு

முத்துக்குமரனை சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.//



நன்றி மஞ்சூர் ராசா... முத்துக்குமரனின் பதிலுக்கும் விளக்கம் தந்துள்ளேனே..?

//பின்குறிப்பு: சமீப காலத்தில் உங்களிடமிருந்து இது போன்ற கவிதைகள் காணவில்லை ஏன்? //


இப்போதைய மனநிலையில் வேறு வகையான கவிதைகள் வரும்.. அனுபவங்களுக்கு தகுந்த மாதிரி கவிதைகள் பிறக்கின்றது...

Anonymous said...

kavithai miga arumai. first time i have read it. migavum porul pothintha ontu... arivuraiyudan....
but when i read it, oru pennin manathil irunthu varuvathai pol irunthathu..
perumaiyaga irukirathu en mannil irunthu oru kavithai successfull aaka... sensible aaka irukirathu entu.... good luck

மங்களூர் சிவா said...

பொன்ஸ் அக்கா சொன்னமாதிரியே

இந்தக் கவிதையை நானும் படித்தேன்.. உங்கள் கவிதை என்று தெரியாமலே..

எனக்கு மெயிலில் தான் முதலில் கிடைத்தது.

பலருக்கும் பார்வர்ட்டும் செய்ததாக ஞாபகம்.

//இதை எழுதியவரைப் பாராட்ட வேண்டும் என நினைத்ததுண்டு...
இந்தாங்கப் பிடியுங்க என் பாராட்டுக்களை//
இதை ரிப்பீட் செய்கிறேன்.

இப்ப கூட சர்வேசன் குடுத்த லிங் புடிச்சுதான் வந்தேன்.

ரொம்ப டச்சிங்கான கவிதை.

மங்களூர் சிவா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//mglrssr said...
பொன்ஸ் அக்கா சொன்னமாதிரியே

இந்தக் கவிதையை நானும் படித்தேன்.. உங்கள் கவிதை என்று தெரியாமலே..

எனக்கு மெயிலில் தான் முதலில் கிடைத்தது.//




முன்பு பெயர் தெரியாமல் சுற்றியது
இப்பொழுது பெயர் தெரிந்து சுற்றுகிறது...

நன்றி சிவா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
kavithai miga arumai. first time i have read it. migavum porul pothintha ontu... //



நன்றி நண்பா...

தேன் கூடு