Monday, February 13, 2006

இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள்



வந்துகொண்டிருக்கிறது காதலர் தினம். என்ன எழுதலாம் ..?

இதுவரை என் வாழ்க்கையில் என்னைக் கடந்துசென்ற உண்மைக் காதல்கள் - காதல் தோல்விகள் - இனக்கவர்ச்சியில் காதலாகி ஓடிப்போன காதலர்கள் - காதல் தற்கொலைகள் என்று விதவிதமான காதல்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். நீங்களும் ரசியுங்களேன் இந்தக் குளத்தில் காதல் எறிந்துவிட்டு சென்றவர்களை..


அ..ஆ

என்னைச் சுற்றி நிகழ்ந்த முதல் காதல் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவன் யூனுஸ். அவன் ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுக்கப்போய் தலைமையாசிரியரிடம் பிடிபட்டு பின்னர் அவனை தலைகீழாக கட்டிவைத்து அடித்தார்கள். அந்த யூனுஸ் அப்போது 8ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான்.

பின்னே என்னங்க ஆசிரியரின் மகளுக்கே காதல் கடிதம் கொடுத்தால் விடுவார்களா என்ன? பின்னு பின்னுன்னு பின்னிட்டாங்க.. பிறகு அவனை பள்ளியை விட்டே அனுப்பிவிட்டார்கள். அந்த யூனுஸின் நண்பனைக் கூட இங்கே சில இடங்களில் பார்த்தால் அதைப்பற்றி கேட்பேன்.

ஆசியரின் மகளை காதலித்தான்
ஆசி கிடைக்கவில்லை

தலைகீழாக அடித்ததில்
தரையில் சிதறியது காதல்



பந்தல் குழிக்குள் காதல்

எனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி

வீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் வீரபத்ரன் - பாலகுமார் ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும் விழிகளையும் தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.

வீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில்; இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.

ராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்
பாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்


தினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்..

அடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..

ஆனால் பாலகுமாரனும் வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு

ராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். "ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல.."

ராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். "டேய் ஞானி! வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா.."

எனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்..? எப்படியிருக்கும்..? அது வந்தால் என்ன ஆகும்..? எப்படி வருகிறது? என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.

நெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.

எனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.

மறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்

காதலித்துப்பார்
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்
அவளே கதாநாயகி
அவள் தந்தையே வில்லன்

பத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.

ம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..

எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.

நல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.

வீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.

எங்கே போனார்கள்? எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.

பின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

கொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரில் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..

அந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.

எனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.


இவன்
பந்தலையெல்லாம்
பக்குவமாய்தான் போட்டான்
ஆனால் தன்
காதலைத்தான்
கந்தலாக்கிவிட்டான்



இனக்கவர்ச்சியா? - இதயக்கவர்ச்சியா?


ஆப்டெக் படிக்கும்பொழுது மருதகுளம் என்ற ஊரில் இருந்து படிக்க வந்த அகிலன் என்பவன் எனது ஊரில் இருந்து படிக்க வந்த வந்த ரீனா என்ற இந்திக்காரப் பொண்ணின் மீது லேசாக காதல் வiலையை வீசினாhன். அவளைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். அந்த இந்திக்காரப் பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பதால் நாங்கள் அந்தப்பெண் பக்கத்தில் வரும்பொழுது ஏதாவது பேசி கிண்டலடிப்போம்.


ஒரு நாள் நானும் அகிலனும் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ரீனாப்பொண்ணும் தண்ணீர் குடிக்க வந்தாள்.
"டேய் என்னடா பையா ..ஆள் சூப்பரா இருக்கே..? உங்கப்பன் என்ன பண்றான்டா..?" என்று அந்தப்பெண்ணை பார்த்து கேட்க..
அவளோ.."வாட்..வாட்.."என்று திணறி உளறி பின் சென்றுவிட்டாள்.

அரைமணிநேரம் கழித்து ஆப்டெக்கின் மேலாளர் எங்களை அழைத்து கண்டித்தார்.
"இந்தப் பாருங்க அந்தப்பொண்ணு பெரிய இடம். கிண்டல் பண்ணாதீங்க..அப்புறம் பிரச்சனையாயிடுச்சுன்னா எனக்குத் தெரியாதுப்பா சொல்லிட்டேன்..."
என்று நாசூக்காக கண்டித்தார்.

அதன்பிறகு அந்த ரீனாவை நாங்கள் கிண்டலடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். அகிலனும் ரீனாவும் எதிரெதிரே கடக்கும்போது முறைப்பதோடு சரி. மோதலில்தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வர்கள். ஆனால் அகிலனுக்கும் ரீனாவுக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. அவளும் கோர்ஸை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அந்த அகிலன் தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு ஒருமுறை சென்று பார்த்தேன். அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை.

ஆனால் அவன் அவள் மீது வைத்தது காதல் அல்ல. அவளின் உடை நடை அழகு கண்டு உணர்ச்சிவசப்பட்டுப்போன ஒரு இனக்கவர்ச்சிக் காதல்தான்.

மருதகுளப் பையனின்
இதயக்குளத்தில்
கல்லெறிந்தது காதல்!

ரீனா மீது வைத்த காதல்
வீணாகிப் போனதப்பா


உயிர்க்காதல் இது பெயர்க்காதல்

என்னுடைய கல்லூரிகாலம் முதல் இப்பொழுது வரை நல்ல நண்பனாக இருந்து வரும் அந்த ஜகூபா.இவனுடைய காதல் என்னைக் காயப்படுத்திய காதலும் கூட. இந்தக்காதல்தான் என்னை கவிஞனாக்கியது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படித்துக்கொண்டிருந்தபொழுது இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.

முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.


- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!

அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.


"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.

நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..

காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்..



அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்

கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.

தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்


பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.

என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :

"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."

'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'

அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.

காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது


எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.

செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?

பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.


இதயக்கோட்டையில் சிக்கிய செங்கோட்டைக்காரன்


அடுத்து ஜெயச்சந்திரன் - சிவகாமி . இவர்களும் என்னுடைய கல்லூரியில் படித்தவர்கள்தான். ஜெயச்சந்திரன் பிஏ ஆங்கில இலக்கியம். செங்கோட்டையைச் சார்ந்தவன். சிவகாமி பிஎஸ்ஸி வேதியியல். திருநெல்வேலியைச் சார்ந்தவள்.இவர்களின் உண்மையான பெயரையே இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன். ஏனென்றால் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

கல்லூரியின் ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஜெயச்சந்திரன் ஒரு பேருந்தில் வைத்து சிவகாமிக்கு காதல் கடிதம் கொடுக்கும்பொழுதே நான் கவனித்துவிட்டேன். அவளிடம் காதல் கடிதம் கொடுக்க முற்பட்டு அவள் அதை வாங்க மறுக்க பின் அந்தக்கடிதம் ஒரு பாட்டியின் கைகளில் மாட்ட இப்படி சுவாரசியமாக ஆரம்பித்தது அந்தக்காதல்

நான் எனது நண்பர்களோடு கல்லூரியின் வராண்டாவிலும் பேருந்திலும் அவனுடைய காதலியை கிண்டலடித்ததாக அவன் என்னை வந்து கண்டித்த பொழுதுதான் அவனுடைய காதல் எனக்கு தெரிய வந்தது.

இதோ இந்தச் சுட்டியில் பாருங்களேன் அவனுடைய காதல் கதையை :

http://nilavunanban.blogspot.com/2005/06/blog-post_30.html

சமீபத்தில் அந்த ஜெயச்சந்திரனை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சிக்னலில் வைத்து பார்த்தேன். அவசரத்தில் கைகாட்டிவிட்டு சென்று விட்டான். அவனுடைய தொலைபேசி எண்ணை நண்பனின் மூலமாகப் பெற்று அவனைத் தொடர்பு கொண்டு பேசினேன். கல்லூரியில் படித்த பழைய நண்பர்களை இப்படி எதிர்பாராத விதமாக எங்கேயாவது காணும்போது மனம் குழந்தையைப் போல ஓடிச்சென்று கல்லூரி வாழ்க்கைக்குள் சென்று வெளியே வர மறுக்கிறது.


செங்கோட்டையிலிருந்து இவனை
காலம் அழைத்து வந்ததா
காதல் அழைத்து வந்ததா?


வழிமறித்து வலி பெற்றான்

அடுத்த காதல் சுலோச்சனா - முத்துக்குமார். சுலோச்சனா பிஎஸ்ஸி கணிதம் பிரிவைச்சார்ந்தவள். முத்தக்குமாரோ பிகாம் படித்து வந்தான்.

எப்பொழுதும் நான் - எனது நண்பன் மஸ்தான் - சுலோச்சனா எல்லோரும் மாலையில் கல்லூரியை விட்டு பேருந்து நிலையம் வரை ஒன்றாக பேசிக்கொண்டுதான் வருவோம். ஒருநாள் அப்படித்தான் வந்துகொண்டிருக்கும்பொழுது எனது ஊரைச் சார்ந்த பிரபாகர் என்னையும் மஸ்தானையும் வழிமறித்து ஏதோ பேச வேண்டுமென கூற நாங்கள் சுலோச்சனாவை பார்த்து "நீ போ நாங்கள் வருகிறோம் '" என்று விழியசைத்துச் சொல்லிவிட்டு அவனிடம் என்ன என்று கேட்க அவனோ எங்களிடம் சம்பந்த சம்பந்தமில்லாமல் உளறினான்.

நான் புரிந்து கொண்டேன். எங்களது வகுப்புத்தோழி சுலோச்சனா வை அவர்களது நண்பன் முத்துக்குமார் விரும்புகின்றான். இன்று அவன் அவளிடம் காதல் கடிதம் கொடுப்பதாக ஏற்பாடு .

ஆகவேதான் எங்களை தாமதமாகப் போகச்செய்வதற்காக இந்த பிரபாகர் எங்களை வழிமறித்து ஏதேதோ உளருகின்றான். அந்த சந்தர்ப்பத்தில் சுலோச்சனாவிடம் சென்று ,முத்துக்குமார் காதல் கடிதத்தை நீட்டியிருக்கின்றான்.

பின்னர் சுலோச்சனா பயந்து போய் எங்களிடம் வந்து அந்த முத்துக்குமாரை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்ள நாங்கள் அதனை அவனிடம் சொல்ல பின்னர் முத்துக்குமார் எங்களிடம் வந்து அந்தப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக கூற ஒருவழியாய் முடிந்துவிட்டது அந்தக்காதல்.

கல்லூரி முடியும் வரையிலும் அவள் தன்னிடம் வந்து காதலைச் சொல்வாளா என்று கடைசிவரை காத்துக்கொண்டிருந்தான் அந்த முத்துக்குமார்.
இப்பொழுது அந்த சுலோச்சனாவுக்கும் கல்யாணம் முடிந்து வடநாட்டில் செட்டில். இவன் இன்னமும் இந்த வடை நாட்டில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.

http://nilavunanban.blogspot.com/2005/12/blog-post_113402856530374224.html

வழி மறித்து
காதல் சொன்னான்
வலி பொறுத்து
காத்து நின்றான்

இதயம் கல்லானது
பாதம் முள்ளானது


பஞ்சரானது காதல்

அடுத்து ஞாபகம் வர்ற காதல் ..யாரு..? ம்..ம்..நம்ம குமார். இவன் கல்லூரி விடுதியில் தங்கி பிஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தான். பிஎஸ்ஸி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்த ஒரு பொண்ணை ஒரு தலையாக காதலித்து தறுதலையாகிப்போனான்.

ஒருநாள் நான் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபொழுது சைக்கிளில் வேகமாக என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று கத்துகிற ஒரு சிறிய கருவியை கொடுத்து சோதனையிடச் சொன்னாhன். எதற்காக அந்தச் சோதனை என்று அப்புறம் தான் தெரிந்தது. அந்தப்பெண்ணை பின்தொடர்ந்து அந்தக் கருவியின் மூலமாக தன் காதலை தெரிவிக்கத்தான் அந்த முயற்சி.

அடப்பாவிகளா அழகான மொழி இருக்கிறது. பேசக்கூடிய திறன் இருக்கிறது. வாயைத்திறந்து காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியதுதானேடா..

தினமும் அவள் பின்னால் சைக்கிளில் துரத்திக்கொண்டே சென்று அவளை குறிப்பிட்ட எல்லை வரை வழியனுப்பிவிட்டுத்தான் வருவான்.

ஒருநாள் அவன் காதலிக்கின்ற பெண்ணின் வகுப்பறைத்தோழன் என்னிடம் வந்து அந்தக் குமார் அந்தப்பெண்ணின் கைப்பையில் காதல் கடிதம் ஒன்றை வைத்துவிட்டான் என்றும் அந்தப்பெண் பிரின்ஸிபாலிடம் புகார் கொடுக்கப்போவதாகவும் சொல்லி என்னிடம் வந்து அந்தக் காதல் கடிதத்தைக் கொடுத்தான்.

இதோ அந்தக் காதல் கடிதம்


ஹலோ பெனா.....


உங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பட் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது நம்ம காலேஜ் கேட் பக்கத்துல நான் ஏ கொஞ்சம் நில்லு என்று சொன்னேன்.
மறுநாள் உங்களோட பீலிங்ஸ் எல்லாம் என்னை திட்டினதாவே இருந்தது. நான் அப்படி சொன்னதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் வெரி சாரி..

நியு இயர்க்காக கிரீட்டிங்ஸ் உங்களோட ப்ரண்ட்ஸ் பேக்ல வைச்சிருந்தேன். அதுல கெஸ் மி ன்னு எழுதியிருந்தேன். நீங்க கெஸ் பண்ணுணீங்களா? பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா? நீங்க என்னிக்கு டிசைட் பண்றீங்களோ அன்னிக்கே பேசிக்கலாம். உங்ககிட்ட பேசறதுக்காக பலதடவை டிரை பண்ணிப்பார்த்தேன்.

பட் உங்களோட பீலிங்ஸ் என்னைப் பேசவிடாமல் பண்ணிவிட்டது. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்களோட கண்கள் மற்றும் அந்த கிரீன் கலர் சுடிதார்தான். அந்த டிரஸ்ல நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க.

என் நேம் என்னன்னு உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்ப என்னோட நேம் எழுதியிருக்கிறேன். ப்ளீஸ் நான் அன்னிக்கு சொன்னதுக்கு மறுபடியும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன்.

எனக்காக ஒரு சான்ஸ் உங்ககிட்ட பேசறதுக்கு தருவீங்கன்னு நினைக்கிறேன். எங்கிட்ட சொல்ல உங்களுக்கு ஏதாவது ப்ராபளம் இருந்தா உங்களோட போன் நம்பர் தாங்க இல்ல என்னோட போன் நம்பர் 540405 நாளைக்கு 6 மணிக்கு மேல் உங்களோட போனுக்காக காத்துக்கொண்டிருப்பேன்.

நீங்க பேசினால் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைத்து கொள்ளுவேன். ப்ளீஸ் எனக்காக என்கிட்ட ஒருமுறை பேசுங்க இல்ல பேசுறததுக்கு ஒரு சான்ஸ் தாங்க.

கே. குமார்




அந்தப்பெண் குமாரைப்பற்றி பிரின்ஸ்பாலிடம் புகார் கொடுக்கப்போகிறேன் என்று கூறியதால் அவளிடம் சென்று நான் இனிமேல் குமார் அப்படி செய்யமாட்டான் என்று சமாதானப்படுத்திவிட்டு அந்தக்குமாரையும் அழைத்து ஆறுதலும் சமாதானமும் சொன்னேன்.

இந்தக்கடிதம் அந்தப்பெண்ணால் படிக்கப்பட்டுவிட்டது என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அந்தக்கடிதத்தை நான்தான் இதுநாள் வரையிலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்

இதோ அது பற்றியான சுட்டி:

http://nilavunanban.blogspot.com/2005/08/blog-post_112377262506374689.html

அவள் சைக்கிளில்
முள் குத்தினால்..
இவன் இதயம்தான்
பஞ்சராகும்!

நண்பா!
நீ துரத்தி சென்ற
அவள் சைக்கிள் தடத்தில்
எத்தனை பாதங்கள் பதிந்தாலும்
இன்னமும்
உன் இதயத்தில்
ஒட்டிக்கொண்டிருக்குமடா..
ஈரமண்ணில் பதிந்து போன
லாரியின் தடம்போல.

இலக்கியம் படிக்க வந்து
இதயம் இழந்தவன் இவன்.


இதய டைரக்டர்

ராஜா-சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கிம் படித்தான். கல்லூரியில்; கவிதை மேடைகளில் உலா வந்த இவன் என்னுடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டான். அந்தப் புத்தகம் வெளியிடும்பொழுதுதான் அவனுடைய காதல் பற்றி எனக்கு தெரியவந்ததது.

ராஜா எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பான். பயங்கர சேட்டைக்காரன். அவனுக்கு நாங்கள் பேய்ராஜா என்று பட்டப்பெயர் வைத்திருக்கின்றோம். செங்கோட்டை தான் இவனது சொந்த ஊர். இங்கு விடுதியில் தங்கிப் படிக்கின்றான்.

அவன் ஜான்ஸ் கல்லூரியில் எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபொழுது திருநெல்வேலி மார்கெட்டில் ஒரு அறை எடுத்து நண்பர்களோடு தங்கியிருந்தான். அந்த அறையில் வைத்துதான் எங்களின் புத்தகம் வெளியிடுவதற்கான திட்டங்களும் முயற்சிகளும் ஆரம்பித்தன.

அவனுடைய காதலியின் பெயர் ஞாபகத்திலில்லை. நாங்கள் அந்தப்பெண்ணை பல்குனி பதக் என்றுதான் அழைப்போம். தலைமுடியை ஆண்கள் போல அலங்கரித்திருப்பாள். பார்ப்பதற்கு ஆல்பம் பாடகி பல்குனி போல இருப்பதால் அந்தப் பெயர் வைத்தோம்.

அவர்களுடைய காதல் எனக்கு குழப்பமாகவே இருக்கும். எப்பொழுது எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாத. ஆனால் ஏதோ ஒரு கலைவிழாவுக்காக குஜராத் சென்றபோது ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். கலைவிழாவில் ஆரம்பித்த காதல் கடைசியில் கலைந்தே போய்விட்டது.

எங்களுடைய பானிபட் புத்தக முயற்சிகளிலும் சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கின்றாள். திடீரென்று அவனைத் தேடி அந்த அறைக்கே வந்து விடுவாள். நாங்கள் பலமுறை கண்டித்திருக்கின்றோம்.
"டேய் அறைக்கு எல்லாம் அழைத்து வராதே.. பக்கத்துல எல்லாம் பேமிலியா இருக்கு..தப்பா நினைச்சுக்குடுவாங்கடா.." ஆனால் அவனோ அதனை அலட்சியப்படுத்தினார்கள்.

அந்த அறையில் மூர்த்தி - ராஜா -நான் - ரூபன் மற்றும் சில நண்பர்களும் தங்கியிருந்தோம்.

மூர்த்தி அந்த பல்குனி பதக்கை அக்கா அக்கா என்றுதான் அழைப்பான். அவன்மீது அவள் அதிகமான பாசம் வைத்திருந்தாள்.

எங்களுடைய பானிபட் இதயங்கள் புத்தக வெளியிட்டு விழாவில் எங்கள் புத்தகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்த மூர்த்தி , கவிதை வெளியிட்டு விழா அன்று காலையில் கலெக்டருக்கு மாலை வாங்கி வருவதற்காக சென்றவன் பாளையங்கோட்டை சாலையில்
விபத்துக்குள்ளாகி விட்டான்.

எங்களுக்கு விழா முடிந்தவுடன்தான் அந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. பதறிப்போய் நாங்கள் மருத்துவமனை சென்றபொழுது எங்களுக்கு முன்னரே பல்குனி பதக் வந்து அமர்ந்து அந்த மூர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

நாங்கள் அந்த மருத்துவமனையே கதியென்று கிடந்தோம். வெளியிட்டு விழாவில் விற்ற புத்தகத்தின் பணத்தை எல்லாம் அவனுடைய மருத்துவச் செலவுக்காக செலவழித்தோம்.

மூர்த்தி செங்கோட்டையைச் சார்ந்தவன் ஆகவே அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரும்வரையிலும் அந்த பல்குனி பதக்தான் ஒரு தாயுள்ளத்தில் உதவி செய்துகொண்டிருந்தாள்.

பல்குனி பதக்கின் நகை ஒன்றை ராஜா வாங்கி அடகு வைத்துவிட்டான். என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை. ஒருநாள் பல்குனி பதக் அவளது தந்தையுடன் வந்து நின்று அவள் நகைகளை திருப்பிக் கேட்க ராஜாவும் நானும் சென்று அடமானம் வைத்த நகைகளை மீட்டு அவளிடம் கொடுத்தோம்.

அந்தச் சம்பவத்தின் பிறகு அந்தப்பெண்ணும் அங்கு வருவதே இல்லை. ராஜாவும் சினிமாவில் இயக்குநராகும் கனவோடு சென்னையில் இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.

ஏனென்று தெரியவில்லை ராஜா அவளிடம் ஒரு ஒட்டுதல் இல்லாமலே இருந்தான். அவள்தான் இவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.


இதயம் இயக்கும்
பெண்ணை சுற்றுகின்ற
காதலர்களுக்கு மத்தியில்

சினிமா இயக்குவதற்காய்
சென்னையைச் சுற்றுகின்றான்

ஒரு
கலை விழாக் காதல்
கலைந்து விட்டது




காதல் ஓர் அழையாத விருந்தாளி

இந்தக்காதல் நெல்லை டவுணின் ஆரம்பித்தது. அந்த பையன் இந்து மதத்தைச் சார்ந்தவன். அந்தப்பெண்ணோ இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள்.

இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொள்ள அந்தப்பையன் இஸ்லாம் மதத்திற்கு மாறி அந்தப்பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டான். அதற்கு இருவர் வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு.

எனக்கு பழக்கப்பட்ட ஒரு கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த ஒருவர் அந்தக் காதலனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி இருதரப்பினருக்கு பொதுவாக இருப்பவர்களை அழைத்து அவர்களின் திருமணத்தை நெல்லை பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நடத்தி வைத்தார்

என்னுடைய தங்கையின் திருமணம் நடைபெற்ற அந்த நாளில்தான் அந்த காதல் ஜோடியின் திருமணமும் நடந்தது.

நான் என்னுடைய தங்கையின் திருமணத்திற்காக அந்த பிரமுகரையும் விருந்துக்கு அழைத்திருந்தேன். அவரும் என்னுடைய தங்கையின் திருமண விருந்திற்கு வந்திருந்தார்

. எப்படி தெரியுமா...? அந்த காதல் ஜோடிகளின் திருமணவிழாவில் பங்கு கொண்ட நண்பர்களையும் அந்த காதல் ஜோடிகளையும் அழைத்துக்கொண்டு வேனில் வந்திருந்தார்.

வேனில் வந்து வீட்டு வாசலில் இறங்கும் போதே எனக்கு பகீரென்றது. "என்னடா இப்படி வந்து நிற்கிறாரே" என்று.

எங்கள் வீட்டில் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாகிவிடும் ஏனென்றால் எனது தாயாருக்கு இந்தக் காதல், கீதல் ,மண்ணாங்கட்டி எல்லாம் பிடிக்காத விசயம்.

ஆகவே நிலைமையைச் சமாளிக்க என் பெற்றோரிடம் இவர்கள் சமீபத்தில் திருமணமாணவர்கள்தான் எனது நண்பர்கள் என்று கதை சொல்லி அனைவருக்கும் விருந்து வைத்தேன்.

அவர்கள் சென்ற பிறகு எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விசயம் தெரிந்து தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.


அழையாத விருந்தாளிக்கு
விருந்து
மனசுக்கு காதல்தான்
மருந்து


ஒரு தலைக் காதல்

எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.

அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.

சுபைர் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபொழுது சமானா முதல் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்

முதலாண்டும் மூன்றாம் ஆண்டும்
காதலுக்குத் தெரியாதே!
ஆகவே
தன் இதயத்தில்
அவனை வைத்து ஆண்டாள்

இவள்
காதலனுக்காய் காத்திருந்த
கம்ப்யூட்டர் "ஆண்டாள் "

அந்தப்பெண் அவனுடைய குறும்புத்தனத்தையும் அவனது மேடைப்பேச்சின் நக்கல்களையும் அவளது வகுப்புத் தோழர்கள் மூலமாய் கேள்விப்பட்டு அவன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள்.

அவளது வகுப்புத்தோழர்கள் அந்த சுபைரைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டு பேச மெல்ல மெல்ல சமானாவின் மனதுக்குள் காதல் வந்து ஓலைக்குடிசைப் போட்டு உட்கார்ந்து கொண்டது தேங்கிய தண்ணீரில் படர்ந்த பாசிகளைப்போல.

அவன் மற்ற வகுப்பு மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களின் பின்னால் நின்று ஒருமுறை பாட்டு படிக்க அந்த அதனைக்கண்ட இந்தப்பெண்ணின் தோழிகள் இவளிடம் "சுபைர் அந்தப் பொண்ணுங்களை கேலி பண்றான் பாரு.."என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போதெல்லாம்

"அவள் காலேஜ்ல கேலி கிண்டல் எல்லாம் சகஜம்தான் .அதெல்லாம் தப்பா.."என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியே பேசத் தொடங்க அவளது வகுப்பில் உள்ள மற்ற தோழிகளுக்கும் அவள் சுபைரைக் காதலிப்பது அந்தச் சம்பவங்கள் மூலமாக தெரிய ஆரம்பித்தது.

அவளது தோழிகள் சுபைரிடம் அவளது காதலைச் சொல்ல கட்டாயப்படுத்திய போதெல்லாம் அவள் தயக்கம் காட்டியிருக்கின்றாள். அவனிடம் காதலைச் சொல்ல அவளுக்கு தைரியமில்லை.

ஏனென்றால் அவன் கல்லூரியின் மாணவர்ப்பேரவையில் ஒரு பொறுப்பாளனாக இருக்கின்றான். சமானாவிடம்; பழகுவது போலத்தான் அவன் மற்ற பெண்களிடமும் பழகுகின்றான். அவனிடம் தன் காதலைச் சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று பயம் கலந்த தயக்கத்துடன் இருந்திருக்கிறாள்

ஆனால் அதற்குள் அந்த சுபைரின் கல்லூரி வாழ்க்கையும் முடிந்துவிட்டது. அவனிடம் இதயம் வாங்க முடியாதவள் ஆட்டோகிராப் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டாள்.

அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.

பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.


அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.

ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்

காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.

அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !

சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.

பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.

சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.

இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.

இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.

வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .

ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..

அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.


விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்


காதல் ரவுடி


இவனும் என்னுடைய கல்லூரிக்காலத் தோழன்தான். தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிரச்சனை செய்ததால் அங்கிருந்து விலக்கப்பட்டு எங்கள் கல்லூரியில் வந்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தான்.

பார்ப்பதற்கு நடிகர் சூர்யா போல இருப்பான். சில பெண்கள் கூட அவன் காதுபடவே அவனை சூர்யா என்று அழைப்பது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.

நான் கல்லூரி மாணவர்ப்பேரவை செயலாளராக வருவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொண்டான். எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்பான். சரியான கோபக்காரன். ஆகவே அவனை நாங்கள் ரவுடி பசூல் என்று அழைப்போம்.

கல்லூரிக்கு திடீரென்று ஒரு பெண்ணை அழைத்து வருவான். "யாருடா இது "என்று கேட்டால்
"இது என்னுடைய மாமாப்பொண்ணுடா" என்று சொல்லுவான்.

அவன் யாரைக் காதலித்தான் என்று கடைசிவரைக்கும் எனக்கு தெரியாது. சமீபத்தில் நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்றபொழுதுதான் கேள்விப்பட்டேன். அவனைக் காதலித்த முதலாண்டுப் பெண்ணை அந்தப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டான் என்று.

அந்தப்பெண்ணின் வீட்டில் அவளுக்கு திருமணம் நிச்சயித்து விட்டார்கள் என்று இவனுக்கு தொலைபேசி செய்து அவள் கூற இவன் சினிமாப்போல ஆட்களோடு அவளின் சொந்த ஊரான செங்கோட்டையில் சென்று அவளை அழைத்துக் கொண்டு வந்து இவனுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தஞ்சம் வைத்தான்.

பிறகு பெண்வீட்டார்கள் ஒரு படையோடு திருநெல்வேலிக்கு வந்து ,
"அந்தப்பெண்ணை எங்கள் கண்ணில் காட்டுங்கள் அவள் போகச்சொன்னால் நாங்கள் போய்விடுகிறோம் "
என்று கூற பசூலும் தனக்குண்டான படைகள் மற்றும் போலிஸ் துணையோடு அந்தப்பெண்ணை அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்த

அந்தப்பெண்ணின் தந்தை கொதித்து போய் "ஏண்டி இப்படி குடும்ப மானத்தை வாங்குற" என்று புலம்பி அந்தப்பெண்ணை அடிக்க வர இவர்கள் தடுத்து பின்னர் தகறாறு - போலிஸ் - சமாதானம் என்று பெரிய போராட்டத்திற்குப்பிறகு பெண் வீட்டார்கள் சென்று விட்டார்கள்

இரண்டு வாரம் கழித்து நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் வந்து ஆசிர்வதித்து விட்டு சென்றதுதான் சுவாரசியமான விசயம்.

அவனுடைய காதல் கதை சினிமா சம்பவத்தையும் மிஞ்சுவதாக இருந்தது. நாங்கள் படித்த கல்லூரியின் அருகேதான் தற்பொழுது ஒரு வீட்டை வாங்கியிருக்கின்றான்.

கையில் காய்கறி கூடைகளோடு வியர்க்க வியர்க்க நாங்கள் படித்த அதே கல்லூரி அருகே அவன் நடந்து சென்ற பொழுது அவனைப்பார்த்த எனது நண்பனிடம் அவன் கூறியிருக்கின்றான்
டேய் மாப்ள கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்கடா என்று..
( அப்படி என்னப்பா கஷ்டமிருக்கு கல்யாணத்தில )

ரவுடியின் மனசில்
காதல் வந்தது.
காதலில்
ரவுடியாகிப்போனான்.



தெருக்காதல்


தெருவில் ஆரம்பித்து தெருவிலையே போராடி தெருவிலேயே திருமணம் முடித்த ஒரு காதல் கதை இது.


அவன் பெயர் செ.சா. ப்ளே மேட் ( Playmate)- க்ளாஸ் மேட் ன்னு ( classmate) சொல்வாங்களே அதுபோல இவன் என்னுடைய ஸ்ட்ரீட் மேட் ( street mate) என்னுடைய சிறு வயதிலிருந்து இப்பொழுது வரை பிரியாத மாறாத நண்பனாக இருந்து வருபவன். ( ஆனா கல்யாணம் முடிஞ்சவுடன வீட்ட விட்டு வெளிய வரமாட்டேன்கிறான் )

அந்தப்பெண் வசதியான வீட்டைச் சார்ந்தவள் . ஆனால் செ.சாவோ மிடில்க்ளாஸ்தான்.
அந்தப்பெண் சைக்கிள் ஓட்ட பழகிய நாட்கள் முதலாய் இவன் அவளிடம் காதல் பழகியிருக்கின்றான்.

அவர்களின் காதல் நாளடைவில் எங்கள் தெருவுக்கே தெரிய ஆரம்பித்தது. ஆனால் என்னிடம் காதல் விசயமாக எதுவுமே சொல்ல மாட்டான். மறைத்து மறைத்து இரகசியமாய் வைத்திருப்பான்.

ஒருநாள் நானும் செ.சாவும் எங்கள் தெரு அருகே உள்ள கம்ப்ய+ட்டர் சென்டர் ஒன்றில்
இருந்தபொழுது அந்தப்பெண்ணின் மாமா வந்து அவனை மிரட்டிவிட்டுச் சென்றார். அப்பொழுதுதான் எனக்கு காதலின் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு.

வசதியான வீடாக இருந்தபொழுதும் அந்தப் பெண்ணோ செ.சாவை கட்டிக்கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்ததால் அவர்களின் காதல் ஜெயித்தது. சென்ற வருடம்; நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்தது.

காதலில் பெண்கள் உறுதியாக இருந்தால் கண்டிப்பாய் அந்தக்காதல் ஜெயித்துவிடும் என்று அவர்களின் காதல் மூலம் உணர்ந்தேன்

காதல்
தெருவில் முளைத்ததா?
இல்லை
கருவிலேயே முளைத்ததா?



மரணம் - அவளின் திருமண பரிசு

என்னுடைய தெருவுக்கு எதிர் தெருக்காரன். இவன் பெயர் பகீரதன். இவன் காதல்; செத்துப்போய்விட்டது ! காதல் மட்டுமல்ல இவன் கூடத்தான்.

திருநெல்வேலி ஜான்ஸ் கல்லூரியில் பிஎஸ்ஸி பாட்டனி படித்துக்கொண்டிருந்தான். என்னுடைய ஒண்ணாம் வகுப்பு க்ளாஸ் மேட் வேறு.

பக்கத்து தெருதான் என்றாலும் கல்லூரி கலை விழாக்களின் மூலம்தான் இவனிடம் அதிகமான பரிச்சயம் ஏற்பட்டது. விழாக்களில் அவனுடைய கல்லூரி சார்பாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் நாடகம் என்று கலக்குவான்.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி கலைவிழாக்களில் கலந்து கொள்ளும் அந்தப் பெண்ணை விரும்பினான். அவனுடைய காதல் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அவனுடைய காதலைப்பற்றி அலசி கேட்கும் அளவிற்கான உரிமைகள் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடைய நண்பர்கள் மூலமாகத்தான் அறிந்தேன்.

சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் பராஜக்ட் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிவரும்பொழுது ஒருநாள் என் அண்ணனைத் தேடி வீட்டிற்கு வந்தான். என்னுடைய அண்ணனும் அவனுக்குப் பழக்கம் என்பதால் ஏதோ ஒரு விசயத்திற்காக வந்திருக்கின்றான். அப்பொழுதே அவனைக் கவனித்தேன்..காதல் தோல்விக்குண்டான அறிகுறியான தாடியோடு திரிந்தான்.

என் அண்ணன் கூட என்னிடம் கேட்டான்

"டேய் பகீரதன் ஏண்டா ஒரு மாதிரியா இருக்கான்.. என்ன பிரச்சனை?"

"எனக்குத் தெரியல..நான் கேட்டுச் சொல்கிறேன் "என்று சொல்லிவிட்டு அவனது நண்பனிடம் விசாரித்தேன்.

அவன் காதலிக்கும் பெண்ணிற்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருமணமாம். அதனால்தான் அவன் அத்துணை சோகத்தோடு திரிகின்றான் என்று கேள்விப்பட்டேன்.

அவனைப்பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவன் வீட்டிற்கு இரண்டுமுறை சென்றேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் அவனே வீடு தேடி வந்தான். மிகவும் ஜாலியாக இருந்தான்

"என்ன ஞானி வீட்டிற்கு தேடி வந்தியா..? என்ன விசயம்.. "

என்னடா இவ்வளவு ஜாலியா பேசுறானே என்று தயங்கி தயங்கி கேட்டேன்.

  • "அந்த லவ் மேட்டரா..அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம்டா..நானும் எவ்வளவே ட்ரை பண்ணினேன்..ஆனால் முடியல..சரி விடுடா "

    நானும் அவன் போக்கில் பேசினேன்..

    "அதுக்குத்தான்டா தேடி வந்தேன்...சரி விடுடா அந்தப்பெண்ணுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ ..அவ்வளவுதான்.. "

    "அட இதுக்குத்தான் தேடி வந்தியா..நான் அதை எப்பவோ மறந்திட்டேன்..சரிடா..பார்ப்போம்.. "

    அவன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை அதுதான். அந்தப்பெண்ணின் திருமண நாளான அந்த ஞாயிற்றுக்கிழமையில் அவன் விஷம் சாப்பிட்டு இறந்து விட்டதாக கேள்விப்பட்டு நொறுங்கிப் போய்விட்டேன்.

    ச்சே தனக்கு கிடைத்த இந்த வாழ்க்கையையே நாசமாக்கும் அளவிற்கா இந்த காதல் அத்துணை தீவிரமானது.

    சமீபத்தில் தேவைதையைக் கண்டேன் படத்தில் தனுஷ் நீதிபதியை நோக்கி பேசுவதுபோல ஒரு காட்சி "

    5 ரூபா கொடுத்து சோப்பு வாங்கினாலும் அந்த சோப்பு தரமானதா இல்லைனா அதற்கு போராடுற சட்டமும் இருக்கு நீதியும் கிடைக்குது. ஆனா 50 வருசம் என்கூட வாழுறேன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணிட்டு என்னை ஏமாத்திட்டா..அவள தண்டிக்க சட்டம் இல்லையான்னு சொல்ற காட்சி யும்

    இவளத்தான் கல்யாணம் பண்ணப் போறோம்..இவ கூடத்தான் இப்படி இருக்கப்போறோம்..அப்படி இருக்கப்போறோம்னு மனசுல கற்பனை வளர்த்துட்டு அவ நமக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சா ஏதோ எல்லோரும் என்னைய விட்டுட்டு போன மாதிரி நான் அனாதையாயிட்ட மாதிரியும் ஒரு பீலிங்.. என்று கதறும் காட்சியும்

    வசனங்கள் முட்டாள்தனமா தெரிஞ்சாலும் அந்தக் காட்சியில யாரோ ஒரு பாதிக்கப்பட்டவனோட நெஞ்சுக் குமுறல் தெரியுது.

    அது போன்ற பாதிப்பில்தான் பகீரதனும் தன்னோடு பழகிவிட்டு அவள் யாருடனோ வாழப்போவதை தாங்க முடியாமல் அவளின் திருமண நாளன்று விஷம் குடித்து இறந்து போய்விட்டான். அவள் பிறந்தாளுக்கெல்லாம் எவ்வளவோ பரிசு கொடுத்திருக்கின்றான். ஆனால் அவளின் திருமண நாளுக்கு இவன் கொடுத்த பரிசு இவனுடைய மரணம்..

    எனது பக்கத்து தெருவாக இருந்தாலும் கூட அவனுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் மன வலிமை எனக்கு இல்லாமல் போனது.


    இரண்டு பேர் வீட்டிலும்
    கட்டப்பட்டது

    அவளுக்கு தாலி
    இவனுக்கு பாடை
    ---
    இரண்டு பேர் வீட்டிலும்
    தீ மூண்டது

    அங்கே விருந்துக்காய்
    இங்கே விறகுக்காய்
    ---
    இருவருக்குமே முதல் அனுபவம்..

    அவளுக்கு முதல் இரவு
    இவனுக்கு முதல் மரணம்..
    ---
    என்
    மனமென்ற பாடையிலே - உன்
    காதல் வந்து..
    கால்நீட்டிப் படுத்திருக்கிறது!
    உன் கூந்தல் வாசனைகள்தான்
    ஊதுபத்தியாய்..
    ---



    நில் ! கவனி ! காதலி ! ஓடு!


    என்னுடைய எம்சிஏ தோழியின் பெயர் ரஞ்சனி. திருநெல்வேலி என்ஜிஓ காலனியைச் சார்ந்தவள். பெயரை மட்டும் மாற்றியிருக்கின்றேன். ஆனால் அந்த காதல் நிகழ்வுகளை மாற்றாமல் தருகின்றேன்.

    அவளுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே சிவா என்ற ஒரு பையனை காதலித்திருக்கின்றாள். எப்படி காதல் ஆரம்பித்தது என்று சுற்றி வளைக்கவே வேண்டாம் ரஞ்சனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவன் சிவா. பின்னே காதல் ஆரம்பிக்காம இருக்குமா..?


    எம்சிஏ இரண்டாம் ஆண்டில்தான் அவளின் காதல் எனக்கு தெரிய ஆரம்பித்தது . ஒருநாள் மதிய இடைவேளையில் கடலை வியாபாரம் செழிப்பாய் நடந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் அந்த சிவா வந்து நின்றான்.

    கொஞ்சம் கருப்பாக சராசரி உயரத்தில் சண்டைக்கோழி படத்தின் ஹீரோ விஷால் மாதிரி இருந்தான்.

    கொஞ்சம் தள்ளி தனது பைக்கை நிறுத்திவிட்டு இவளைப்பார்த்து புன்னகைத்தான் . ரஞ்சனியும் எங்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவனை நோக்கி நகர்ந்தாள்.

    "டேய் யாருடா அது "- நான் பக்கத்தில் நின்ற ரபீக்கிடம் கேட்க

    "அவன் பேரு சிவாடா..அவள லவ் பண்றான்..ரஞ்சனி எங்கிட்ட சொல்லியிருக்கா.. "
    - ரபீக் கிசுகிசுத்தான்

    "அட இத முதல்ல சொல்லவேண்டாமா..நான் அவளோட அண்ணன்னு நினைச்சு பயந்துட்டேன்டா..அவன் வழியும்போதே நினைச்சேன் ..சம்திங் ராங்ன்னு.. "

    "ஹலோ சிவா..மிஸ்டர் சிவா..சௌக்கியமா.."- சிவாவைப்பார்த்து கத்தினேன்

    சிவா எங்களைப்பார்த்து சிரித்துக்கொண்டே கை காட்டினான்..உடனே ரஞ்சனி சிவாவை அழைத்துக்கொண்டு எங்கள் பக்கம் வந்து அறிமுகப்படுத்தினாள்..

    "எல்லோரையும் அறிமுகம் செய்திட்ட..அந்த சிவா யாருன்னு நீ
    சொல்லவேயில்ல.." - நான் கிண்டலடிக்க

    "இது என்னோட ப்ரண்ட் "- ரஞ்சனி

    "டேய் பாருங்கடா..ப்ரண்ட்டாண்டா..ஹலோ ப்..ர..ண்..ட் "என்று கத்தினோம்.. அதன் பிறகு அந்த சிவா அடிக்கடி வர ஆரம்பித்தான். அவளைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் யாரும் சந்தேகப்பட்டுவிடுவார்களோ என்று பயந்து எங்களைப் பார்க்க வருவது போல வந்து அவளையும் பார்த்து விட்டுச் ஜொள்ளுவான் சாரி செல்லுவான்

    ஒருமுறை நாங்கள் ரஞ்சனியின் வீட்டிற்கு விருந்துக் செல்லும்பொழுது அவர்கள் வீட்டில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அப்படியே அந்த சிவாவின் வீட்டையும் காட்டினாள். தொட்டபடி இருக்கின்றது அந்த சிவாவின் வீடும் இருவரின் இதயமும்.

    "சிவா வீட்டுக்கும் நாங்கள் போகலாமா.. "- நான் கேட்டேன்

    "இல்ல ஞானி...சிவா என்னய லவ் பண்றது வீட்டுல இப்பத்தான் பிரச்சனை கசிய ஆரம்பிச்சிருக்கு..எங்க அண்ணனுக்கு வேற விசயம் தெரிஞ்சி அந்த சிவாவோட ப்ர்ண்டையெல்லாம் முறைச்சிக்கிட்டு இருக்கான்..இப்ப நீங்க அவன் வீட்டுக்கு போனீங்கன்னா சந்தேகம் வந்திடும்..ப்ளீஸ்.. போக வேண்டாம்.. "
    - கெஞ்சினாள்

    காதல்
    கெஞ்சவும் வைக்கிறது!
    கொஞ்சவும் வைக்கிறது!
    வாழ்க்கையில்
    நஞ்சு வைக்காமல் இருந்தால்..
    நல்லதுதான்!


    அந்த நேரம் ரஞ்சனியின் அண்ணன் உள்ளே வர எல்லோரிடமும் அவள் அண்ணனை அறிமுகப்படுத்தினாள். அந்த ரஞ்சனியின் அண்ணனை திருநெல்வேலி ஜங்ஷனில் வைத்து பைக்கில் முந்திச் செல்லுகின்ற ஒரு தருணத்தில் நான் அவனிடம் வாய்த்தகறாறு செய்திருக்கின்றேன்.

    அவள் அண்ணன் என்னைப்பார்த்து முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். பின் ரஞ்சனியிடம் விசயத்தை சொன்னேன்.."உங்க அண்ணனோட போனவாரம் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டுல வைத்த வாய்தகறாறு வந்தது அதான் முறைக்கிறான்னு நினைக்கிறேன் "என்று கூற எல்லோருக்கும் சிரிப்பு..

    கல்லூரி முடியும் தருவாயில் அவளுடைய காதல் விசயம் அவள் வீட்டுக்கு தெரிய வந்ததால் வீட்டில் அவளை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    பின்னர் நான் 2003 ம் ஆண்டு துபாயில் இருக்கும்பொழுது எனக்கு ஒரு நண்பியிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் ரஞ்சனி சிவாவுடன் எங்கேயோ ஓடிவிட்டாள் என்றும் - ரஞ்சனியின் பெற்றோர்கள்; எனது வீட்டின் தொலைபேசி எண் கேட்டதாகவும் அதற்கு ஞானி துபாய் போய் 6 மாதம் ஆகிறது என்றும் தான் சொன்னதாக எழுதியிருந்தாள்.
    (அடப்பாவிகளா..விருந்துக்குதானடா வந்தேன்..இப்படி ஆப்பு வச்சிட்டீங்களடா )

    பின்னர் நான் ரஞ்சனியின் நெருங்கிய தோழிகளிடம் மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் சென்ற இடத்தை கண்டுபிடித்தேன். வேற எங்கே போவாங்க..நம்ம தலைநகர் சென்னைக்குத்தான்..

    இப்பொழுது இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

    காதலித்து
    ஓடிப்போனாலும் ,
    காதல்
    ஓடிப்போகவில்லை.!



    ஊரு விட்டு ஊரு வந்து

    கோவில்பட்டியில் இருந்து வந்து திருநெல்வேலியில் ம.சு பல்கலைக்கழகத்தில் என்னுடன் எம்சிஏ படித்தான் மோகன். பாளையங்கோட்டையில் இருந்து வந்து எம்சிஏ வகுப்புக்கு வந்த அந்தப்பெண்ணின் பெயர் சலினா . நாங்கள் எல்லாரும் நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந்தோம். ஆனால் எப்படி பத்திகிச்சின்னு தெரியாதுங்க..

    முதல் வருடத்தில் ஒருவருக்கொருவர் நக்கல்; அடித்துக்கொண்டும் - கூட்டமாய் கடலை வியாபாரம் செய்து கொண்டும் - எழுதவதற்குச் சோம்பல் பட்டு சலினா போன்ற நன்றாக படிக்கும் மாணவிகளின் நோட்ஸ்களை எல்லாம் எடுத்து ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வது- என்று விளையாட்டுத்தனமாய் திரிந்து கொண்டிருந்தோம்.

    நாங்கள் எப்படி அந்த சலினாவிடம் நட்பாக பழகினோமோ அதே நட்பில்தான் மோகனும் பழகி வந்தான் என்று தவறாக நினைத்துக்கொண்டோம். எல்லோர் மனதிலும் நட்பு இருந்தது. அவன் மனதில் மட்டும் காதல் வந்து தொட்டு பிடித்து விளையாடியது.

    நான் இருவருக்கும் நேர்ந்த காதல் மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்தேன். ஒருநாள் மோகன் எல்லோருக்கும் அவனுடைய அண்ணனின் திருமண அழைப்பிதழை வந்து கொடுத்தான். கண்டிப்பாய் எல்லோரும் வரவேண்டும் என்று உத்தரவிட்டான்.


    திருமணம் கோவில் பட்டியில் வைத்து நடைபெறுவதால் பெண்தோழிகளால் அவ்வளவு தூரம் வரமுடியாது நாங்கள் மட்டும்தான் போகவேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் சலினாவோ நானும் எனது தோழியோடு திருமணத்திற்கு வருகிறேன் என்று கூறியபொழுதே எனக்கு சந்தேகம் வந்தது.

    சரி அந்த அளவிற்கு நட்புக்கு மதிப்பு கொடுக்கின்றாள் என்று நான் அந்த விசயத்தை அலட்சியப்படுத்தினேன்.

    அலைபாயுதே படத்தில் ஷாலினி புடவை கட்டிக்கொண்டு மாதவன் வீட்டிற்கு வருவாளே . அத மாதிரி சலினாவும் மோகன் வீட்டிற்கு வந்தாள்.

    திருமண விழா நடந்து கொண்டிருக்கும்பொழுது மோகனின் கோவில்பட்டி நண்பர்கள் சிலர் தூரத்தில் இருந்து சலினாவைக் கைகாட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் மோகனும் நின்று கொண்டிருந்தான் மறைந்தபடி.

    எனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது. சரி இதுதான் என்னோட கேர்ள்ப்ரண்ட் என்று அவனது கிராமத்து நண்பர்களிடம் பெருமையாய் சொல்லியிருப்பான் என்று நினைத்தேன்.

    பிறகு ஒருநாள் வகுப்பறையில் மோகன் சலினாவிடம் அவள் நோட்டைக் கேட்டான்

    "சலினா அந்த கிராப் தியரி (Graph theory) நோட்டைக் கொடு..நான் எழுதிட்டு நாளைக்கு தர்றேன்.. "

    "ஏன் நீங்க க்ளாஸ்ல நடத்தும்போதே எழுதவேண்டியதுதானே.."என்று செல்லமாய் கோபப்பட்டுகொண்டே தனது நோட்டைக் கொடுத்தாள்

    அடுத்த நொடியே கல்லூரியில் பள்ளியில் பார்க்கில் பீச்சில் உலவிக்கொண்டிருந்த காதல் தேவதை என்னிம் ஓடோடி வந்து டேய் ஞானி இந்த ரெண்டு பேரும் வல் பண்றாங்கடா என்று காதில் காதல் ஓதிவிட்டு சென்றுவிட்டாள்.

    ஏனென்றால் எங்களையும் மோகனையும் எப்பொழுதும் வாடா..போடா என்று ஒருமையில்தான் அழைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று பன்மையில் அவனை மட்டும் வாங்க ..போங்க என்று அழைக்க ஆரம்பித்தாள்.

    அவளுடைய காதல் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்திருந்தால் அவள் புத்திசாலித்தனமாக எங்கள் எல்லோரையும் வாங்க , போங்க என்று அழைக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவனை மட்டும் அழைக்க ஆரம்பித்ததால்தான் எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

    மறுநாள் சலினா லேப்பில் இருந்தபொழுது ஒரு கவிதை ஒன்றை எழுதிக் கொடுத்தேன்
    அந்தகவிதையில் அவளுடைய காதல் எனக்கு எப்படி தெரிய ஆரம்பித்தது என்பதை
    ஒவ்வொரு சம்பவமாக எழுதியிருப்பேன். கவிதை வரிகள் எனக்கு ஞாபகத்திலில்லை. நில வரிகள் மட்டும் ஞாபகத்திலிருக்கின்றன

    "வாடா போடா "
    ஒருமைகள் எல்லாம்
    "வாங்க போங்க "
    மாறிப்போனதில்
    காதல் உணர்ந்தேன்.

    கைமாறியது
    நோட்டுக்கள் மட்டுமல்ல
    இதயங்களும்தான்

    என்று சில பஞ்ச் வரிகளை வைத்து 4 பக்கத்திற்கு மிகாமல் ஒரு கவிதை எழுதினேன். பின்னர் உண்மையை சொல்லிவிட்டாள்.

    "ப்ரண்ட்சுன்னு சொல்லிகிட்டு திடீரென்று காதலிக்குறோம்னு சொன்னா நீங்க எல்லாம் தப்பா நினைச்சுக்குவீங்கன்னுதான் மோகன் யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டார் "என்று கூறினாள்.

    அது எப்படியம்மா தப்பா நினைப்போம்.. நட்புக்கும் காதலுக்கும் இடைவெளிகள் மிக மிக குறைவு.

    நட்பு காதலானால் சந்தோசம் மிஞ்சும். ஆனால்
    காதல் நட்பானால் சோகமே தஞ்சம்.

    அதன்பிறகு நாங்கள் சென்ற சுற்றுலாவில்தான் அவர்களின் காதல் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. பின்னர் வகுப்பறையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மோகனின் முன்னால் கிண்டலடித்து பாடுவோம்

    ஊரு விட்டு ஊரு வந்து..
    பெப்பப்பே...
    காதல் கீதல் பண்ணாதீங்க

    விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி - நாங்க
    இத்தணை பேரு அட உங்களை நம்பி

    மற்றவர்களெல்லாம் நாங்கள் சும்மா கிண்டலடித்துப் பாடுகிறோம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் மோகனும் செலினாவும் மட்டும் புரிந்து கொண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

    இப்பொழுது மோகன் சென்னையில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கின்றான். சலினாவோ திருநெல்வேலியில் ஆசிரியையாகி இருக்கின்றாள்.

    மோகனுடைய வீட்டில் அவன் சம்மதம் வாங்கிவிட்டான். ஆனால் சலினா வீட்டில்தான் அவளுடைய அக்கா மற்றும் தம்பிகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று பயந்தகொண்டிருக்கிறார்கள்.

    என்னப் பிரச்சனை..? எல்லாம் மதப்பிரச்சனைதான். மோகன் இந்து மதம் சலினாவோ கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள். அவள் பெற்றோர்கள் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள்.

    அவர்களின் காதல் எந்தப் பிரச்சனையுமின்றி திருமணத்தில் முடியவேண்டும்.

    நட்பை
    நசுக்கிவிட்டு
    காதல் வந்து
    கட்டில் போட்டுக்கொண்டது.

    தோழியை காதலியாக்கியதில் தவறில்லை ஆனால்
    காதலைத்தான் தோல்வியாக்கக்கூடாது


    கிசுகிசுப்பில் நொந்த நட்பு

    நீ என்னைக் காதலிக்கிறாயடா..? என்று எந்தப்பெண்ணாவது உங்களிடம் கேட்டால் எப்படியிருக்கும்?

    எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது அந்தப்பெண் என்னிடம் கேட்டபொழுது. கல்லூரியில் எல்லோரிடமும் பழகுவது பேலத்தான் நான் அந்தப்பெண்ணிடமும் பழகினேன்.


    அந்தப்பெண் மிகவும் அமைதியான பெண். யாரிடமும் தேவையிருந்தால் தவிர மற்ற விசயங்கள் பேச மாட்டாள். நான் அவளிடம் உரிமைகள் அதிகம் எடுத்து பழகியதால் என்னிடம் மற்றவர்களை விடவும் அதிகமாக பழகினாள். இது என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் வட்டத்திலும் அவளைச் சுற்றியுள்ள தோழிகள் வட்டத்திலும் கிசுகிசுப்பை உண்டாக்கியது.

    ஆனால் அந்த கிசுகிசுப்பை அந்தப்பெண்ணும் பொருட்படுத்தவில்லை. நானும் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜம்தான் என்று அலட்சியப்படுத்திவிட்டேன்.

    என்னுடைய நண்பர்களில் ஒருவன் அவளிடம் நான் அவளைக் காதலிப்பதாக நாசூக்காக கூற அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆகவேதான் என்னிடம் அந்த வார்த்தையைக் கேட்டாள்.

    என்ன ஞானி உண்மையைச் சொல்லு..நீ என்னைக் காதலிக்கிறாயா..? என்று கேட்டபொழுது நான் தடுமாறித்தான் போய்விட்டேன்.

    "ஏன் இப்படி கேட்கிற.?. "- நான்

    "இல்ல சில பேர் அப்படித்தான் பேசிக்கிறாங்க..அதான் கேட்டேன்.. "- அவள்

    "இந்த பாரு..உனக்கே தெரியும் நான் எல்லோர்கிட்டேயும் சகஜமாகத்தான் பேசுவேன்..உன்னை லவ் பண்ணுவதாக இருந்தால் நான் நேரடியா உன்கிட்டேயயே சொல்லியிருப்பேனே..நான் ஏன் மறைக்கணும்..எப்பவும் நீ எனக்கு நல்ல பர்ணட்பா..அவ்வளவுதான்.".என்று கூற

    "எனக்கும் தெரியும் ஞானி..அதனால்தான் நேரடியாக் கேட்டேன்..சாரி..நான் ஏதும் தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்கோ.."- அவள்

    "இல்ல..பரவாயில்லை..உனக்கே தெரியும் பசங்கள பத்தி..சும்மா கடலை போட்டுகிட்டு இருந்தாலே..லவ்வுன்னு சொல்லிருவாங்க... "- நான்

    எனக்கு என்ன சந்தேகம் என்றால் அவள் மனதில் ஒருவேளே காதல் இருந்திருக்குமோ என்று? துடிக்கின்ற காதல் தும்மலைப்போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்? என்ற பாடல்தான் ஞாபகம் வருகின்றது.


    நட்பு வந்ததும் காதல் வந்ததா
    காதல் வந்ததால் நட்பு நொந்ததா?



    குளத்தைக் கலக்கியவர்கள்


    இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக்குளமே காதலாகிப்போனதை சொல்லும் தருணம் இன்னும் வரவில்லை.

    என்
    கவிதை கண்டு
    காதலித்தவர்கள் மத்தியில்..
    நான்
    கவிதை எழுதி
    காதலித்தவள்
    நீ ஒருத்திதானடி!

    காதல்கள் குப்பை தொட்டியில் விழுந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால் குப்பைத்தொட்டியில் இருந்து ஆரம்பித்த காதலைக் கேள்விப்பட்டதுண்டா..? என்னுடைய காதலும் அப்படித்தான் ஆரம்பித்தது.

    இவ்வளவு நேரம் என் குளத்தில் காதல் எறிந்தவர்களின் காதல்களை நீங்கள் கவனித்திருப்பீர்களென்றால் பெரும்பாலான காதல்கள் தென்காசி - செங்கோட்டை போன்ற பகுதிகளைச்சுற்றியே அமைந்திருக்கின்றது.

    வருடா வருடம் குற்றால அருவியின் சீசனுக்கு தன் காதல் காயங்களின் கண்ணீரைக் கலந்த ஜகூபா தென்காசியைச் சேர்ந்தவன். அவன் மனைவியாகப்போகிறவளுக்கு செங்கோட்டை.

    சிவகாமியின் செல்வன் ஜெயச்சந்திரன் செங்கோட்டைக்காரன்

    சைக்கிளை துரத்தி இதயத்தை பஞ்சராக்கிய ஆங்கில இலக்கியம் படித்த குமாருக்கு செங்கோட்டை.

    காதலில் மட்டும் அரியர்ஸ் வைக்காத ரவுடி பசூலின் காதலி செங்கோட்டைக்காரி

    காதல் வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டு இயக்குநர் வாய்ப்புக்காக சென்னையில் சுற்றிக்கொண்டிருக்கும் ராஜா செங்கோட்டைக்காரன்

    சுபைரை ஒருதலையாய் காதலித்து இதயம் சமாதானமில்லாமல் திரிகின்ற சமானாவுக்கு பூர்வீகம் செங்கோட்டை.

    இப்படி செங்கோட்டையைச்சுற்றியே நிகழந்துள்ள என் வாழ்க்கையின் காதல் அனுபவங்களுக்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்? ஒருவேளை என்னுடைய வாழ்க்கைத்துணைக்கும் செங்கோட்டைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?

    இந்தக்குளத்தில் முகம் பதிக்க வரும் அந்த நிலவுக்காக காத்திருக்கின்றான் இந்த நிலவு நண்பன். கல்லெறிந்து காதல் கலங்குமா இல்லை காதல் எறிந்து கற்கள் ஒடியுமா என்பது காலத்தின் கைகளில்.

    இறைவன் நாடினால் ஒருநாள் மிஸ் கால், மிஸஸ் கால் ஆகும்போது திருமண அழைப்பிதழ் வரும் ஆசிர்வதிக்க காத்திருங்கள்.

    இந்தக்காதலர்தினத்தில்
    அதிகமாய் விற்கப்படப்போவது
    ரோஜாப்பூக்களா?
    விஷப்பாட்டில்களா?



    - ரசிகவ் ஞானியார்


30 comments:

Anonymous said...

மிகவும் நன்றாக இருந்தது ரசிகவ் , இவ்வளவு நீ.......ளமான பதிவு . காதலர் தின சிறப்பு திரைப்படங்கள் ????

"இந்தக்காதலர்தினத்தில்
அதிகமாய் விற்கப்படப்போவது
ரோஜாப்பூக்களா?
விஷப்பாட்டில்களா?"

ரோஜாப்பூக்களாகவே இருக்க ஆசீர்வதிப்போம் ( நம்மதான் settle ஆகல .. இருகிறவங்க சந்தோசமா இருக்கட்டும் .. )

இது என் முதல் முயற்சி .

I used this link for UTF conversion. Please tell me any other link for the same ...
http://www.iit.edu/~laksvij/language/tamil.html

நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க எண்ணுகிறேன் . அதற்கு உங்கள் Tips கொடுங்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மிகவும் நன்றாக இருந்தது ரசிகவ் , இவ்வளவு நீ.......ளமான பதிவு . காதலர் தின சிறப்பு திரைப்படங்கள் ????

ரோஜாப்பூக்களாகவே இருக்க ஆசீர்வதிப்போம் //



என்னுடைய வேண்டுதலும் அதுதான்..


//நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க எண்ணுகிறேன் . அதற்கு உங்கள் Tips கொடுங்கள் //
நன்றி தனசேகர் கண்டிப்பா உதவுகின்றேன்..எனக்கு தனிமடலில் கேள்வியை அனுப்புங்கள்

நவீன் ப்ரகாஷ் said...

ஞானி,

ஒரு கூடைநிறைய பூக்களைக் கொட்டினாற்போல் இருக்கிறது ! பூக்குளியலில் மூழ்கினேன்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஞானி,

ஒரு கூடைநிறைய பூக்களைக் கொட்டினாற்போல் இருக்கிறது ! பூக்குளியலில் மூழ்கினேன்!
//


நன்றி நண்பா..

நல்லவேளை மூச்சு முட்டாமல் இருந்ததே..

கீதா said...

நான் இந்த பதிவை இன்னும் படிக்கலை..

முதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க

எவ்வளவு நேரமாச்சு எழுத

பார்ததுமே கண்ணு நெறைஞ்சிடுச்சி.. ஒரே மலைப்பா இருக்கு..

meenamuthu said...

ஒரே மூச்சில் படிச்சேட்டேம்பா!
எத்தனை விதமான காதல்!

இத்தனையிலும் அந்த..
இரண்டுபேர் வீட்டிலும் கட்டப்பட்டது...
வருத்தமாக இருந்தது ஏன் இப்படி?

ம்ம்..விற்கப்பட்டது அனேகமாக ரோஜாபூக்களாகத்தான் இருக்கும்
இருக்கணும் :)

அன்பு
மீனா.

நிலவின் நண்பனே!என் வாசக(ர்)சாலையில்(அப்படி ஒண்ணு இருக்குங்கறதே மறந்து போச்சு!) என்றோ நீ(ங்கள்) எழுதிய பின்னூட்டத்திற்கு இப்பொழுதுதான் பதில் வைத்திருக்கிறேன்.

குழலி / Kuzhali said...

யெய்யா ராசா விலாவரியா விலாசத்தோட பெயரெல்லாம் கொடுத்திருக்கியே முதுகில யாரும் டின்னு கட்ட மாட்டாங்களா உங்களுக்கு, பாத்து பா ஒரு நேரம் போல இருக்க மாட்டாங்க பசங்க :-)))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஒரே மூச்சில் படிச்சேட்டேம்பா!
எத்தனை விதமான காதல்!

இத்தனையிலும் அந்த..
இரண்டுபேர் வீட்டிலும் கட்டப்பட்டது...
வருத்தமாக இருந்தது ஏன் இப்படி?//

ம்..இன்னமும் அதனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுவேன்..

யார் மீது தவறு என்று விவாதிட்டால் விவாதம் நீண்டு கொண்டே இருக்கும்..

விமர்சனத்திற்கு நன்றி மீனா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//முதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க

எவ்வளவு நேரமாச்சு எழுத//



எழுதி முடிக்க 1 வாரம் ஆச்சு..ஆனா மனசுல 27 வருட பாரம் வந்துடுச்சு..

G.Ragavan said...

சரி மக்கான்...இத்தன பேரு சொல்லீருக்க. எல்லாம் மாத்தப்பட்ட பேருகதான....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//யெய்யா ராசா விலாவரியா விலாசத்தோட பெயரெல்லாம் கொடுத்திருக்கியே முதுகில யாரும் டின்னு கட்ட மாட்டாங்களா உங்களுக்கு, பாத்து பா ஒரு நேரம் போல இருக்க மாட்டாங்க பசங்க :-))) //



அதுக்குத்தான் முன்னெச்சரிக்கையாக சில பெயர்களை மட்டும் மாற்றி விட்டேன்

நீங்களே டின்னு கட்ட வச்சுறுவீங்க போலிருக்கே

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சரி மக்கான்...இத்தன பேரு சொல்லீருக்க. எல்லாம் மாத்தப்பட்ட பேருகதான.... //



சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது


சில பெயர்கள் மாற்றப்படவில்லை..

Anonymous said...

very nice article which took me to my bygone days..vaazhthkkal rasikov

முபாரக் said...

ரசிகவ்,

காதல் வாரம் கொண்டாட வைத்துவிடுவீர்கள் போலுள்ளதே. ஆமா இதில் எது உங்க கதை? :)

சினேகபூர்வம், முபாரக்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அறிவு said...
very nice rasikav.

i have started a blog recently. pls give ur comments and help me in customising the blog. //


நன்றி அறிவு கண்டிப்பாக உதவுகிறேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//முபாரக் said...
ரசிகவ்,

காதல் வாரம் கொண்டாட வைத்துவிடுவீர்கள் போலுள்ளதே. ஆமா இதில் எது உங்க கதை? :)//



நன்றாக தேடிப்பாருங்கள் முபாரக். என் கதை சுபைராக இருக்கும் மன்னிக்கவும் சூப்பராக இருக்கும்

Dr.Srishiv said...

சுபைர் யார்னு எனக்கு தெரியும் ;)அந்த சிங்கை ஆளுகூட யாருன்னு எனக்கு தெரியுமே?? ;) ஆனா எனக்கும் இதற்கு முன்பதிவில் சொன்னவர் சொன்னதுபோல், அந்த இரண்டு வீட்டிலும் கட்டப்பட்டதுதான் மனதை மிகவும் தொட்டது ஞானி, ஒன்னு தெரியுமா? எவ்வளவு படிச்சவனா இருந்தாலும் சரி, பெரிய ஆளா இருந்தாலும் சரி, அந்த பாடை மேட்டர் மட்டும், ஒரு நொடியில் எடுக்கும் முடிவுதான் பா, மனசு அந்த நொடியைத்தாண்டிட்டா அதுக்கு அப்புறம் அதை நினைத்தாலே உங்கமேலயே உங்களுக்கு சிரிப்பா வரும், நானும் அந்த நொடிகளைக்கடந்து வந்தவன் என்ற முறையில் உரிமையில் சொல்லிக்கொள்கின்றேன்...காதல் செய்வதில் தவறில்லை, அது தோல்வியில் முடிந்தாலும்,தொடர்ந்து முயலுங்கள், எறும்பூர கல்லும் தேய்கையில் அவளின் /அவனின் மனம் மட்டும் கரையாதா என்ன? ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவருக்கு திருமணம் நிச்சயமானாலோ/இயற்கை எய்தினாலோ அதற்காக நம் வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பதில் அர்த்தமே இல்லை, அவர் நமக்கு இறைவனால் நிச்சயிக்கப்படவில்லை என்பதே உண்மை, இது என் அனுபவத்தில் கண்ட உண்மை...மறவாதீர்..:)
என்றும் பாசமுடன்,
ஸ்ரீஷிவ்...:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இது என் அனுபவத்தில் கண்ட உண்மை...மறவாதீர்..:)
என்றும் பாசமுடன்,
ஸ்ரீஷிவ்...:) //

ம் சரிதான் சிவா..அவரவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையை அவரவர்கள் வாழவேண்டும்

Anonymous said...

Nalla Thoguppu. Gnani sir, ungalukku romba porumai sir... kavithaigal arumai athai aangange muthu theliththathu pol koduththiruppathu, margazhi maadathtu kolangalin naduvil pannir pookkal vachchathu mathiri romba azhaga irukku. I felt a little bad for not getting a chance to check out this blog all these days

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Poorna said...
Nalla Thoguppu. Gnani sir, ungalukku romba porumai sir... kavithaigal arumai athai aangange muthu theliththathu pol koduththiruppathu,

margazhi maadathtu kolangalin naduvil pannir pookkal vachchathu mathiri romba azhaga irukku. I felt a little bad for not getting a chance to check out this blog all these days //




நன்றி பூர்ணா..பொறுமையாய் நான் எழுதியதை விடவும் பொறுமையாய் நீங்கள் படித்தது பெரிய விசயம்தான்.

சிங். செயகுமார். said...

ஒருவழியா இன்னிக்கிதான் படிச்சி முடிச்சேன்.. அல்லாரோட கதையும் சொல்லியாச்சு ,உங்க கதைக்கு என்னிக்கு டும் டும்!?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சிங். செயகுமார். said...
ஒருவழியா இன்னிக்கிதான் படிச்சி முடிச்சேன்.. அல்லாரோட கதையும் சொல்லியாச்சு ,உங்க கதைக்கு என்னிக்கு டும் டும்!? //


உங்ககிட்ட சொல்லாமையா இருக்கப் போறேன்..? பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி நண்பா

Anonymous said...

nice article which recollects my college and romantic love days happening around myself and my friend's life.

Thanks rasikav..keep it up...

- Kadhel Priyan

ஜோ/Joe said...

நிலவு,
அப்பாடா,ஒரே மூச்சுல படிச்சுட்டேன் ..அங்கங்கே இழையோடுகின்ற யதார்த்தமான நக்கல் உங்கள் தனிச்சிறப்பு..தொடர்ந்து கலக்குங்க!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//nice article which recollects my college and romantic love days happening around myself and my friend's life.

Thanks rasikav..keep it up...

- Kadhel Priyan //


இவ்வளவு நாள் கழித்து விமர்சனமா..நன்றி காதல் பிரியா...

Anonymous said...

What gnaniyar?
What about your love?
I know you were in love when you are in college.
When is your marriage?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
What gnaniyar?
What about your love?
I know you were in love when you are in college.
When is your marriage? //


அதெல்லாம் சரி நீ யாருன்னு சொன்னாத்தான் அதைப்பற்றி சொல்லுவேலன்

சேதுக்கரசி said...

ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பதிவை "முன்னுக்கு" வந்திருக்கே? எது எப்படியோ, ஒரு வருசத்துக்கு முந்தியே இதை வாசிச்சிருந்தாலும், இப்ப சுபைர் கதையை மட்டும்.. மன்னிக்கவும்... சூப்பர் கதையை மட்டும் மீண்டும் வாசிச்சேன் ;-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சேதுக்கரசி said...
ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பதிவை "முன்னுக்கு" வந்திருக்கே? எது எப்படியோ, ஒரு வருசத்துக்கு முந்தியே இதை வாசிச்சிருந்தாலும், இப்ப சுபைர் கதையை மட்டும்.. மன்னிக்கவும்... சூப்பர் கதையை மட்டும் மீண்டும் வாசிச்சேன் ;-) //



அதெல்லாம் இப்ப படிக்ககூடாதாக்கும்.. :)

யானை மாதிரி உங்களுக்கு ஞாபகசத்தி அதிகம்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ஜோ / Joe said...
நிலவு,
அப்பாடா,ஒரே மூச்சுல படிச்சுட்டேன் ..அங்கங்கே இழையோடுகின்ற யதார்த்தமான நக்கல் உங்கள் தனிச்சிறப்பு..தொடர்ந்து கலக்குங்க!//

நன்றி ஜோ..

தேன் கூடு