Friday, November 02, 2007

ஒரு கருவின் கதறல்



பூமியில் இருக்கின்ற அம்மாவுக்கு,


சொர்க்கத்திலிருந்து
உன் குழந்தை எழுதும்
முதல் கடிதம் இது.

இல்லை இல்லை
உன்
கரு எழுதுகின்ற
கடிதம் இது.


உருத்தெரியாமல் போய்விட்ட எட்டு மாத கரு பேசுகிறேன்.

பூமியில் வாழ வருவதற்கு முன் தெருவில் தீக்கிரையாக்கப்பட்ட கருவின் முனகல் சப்தம் இது.


வேடிக்கையாக இருக்கிறது அம்மா..
கடிதங்கள் சுமக்கும்
கருக்களுக்கு மத்தியில்
ஒரு
கருவே இங்கு
கடிதம் எழுதுகிறது பாரேன்..?


உன்னுடைய வடிவில் இறைவனை சந்திக்க நினைத்தேன். இப்பொழுது இறைவனின் முகத்தில் உன்னை கண்டு கொண்டிருக்கின்றேன்.

ம்..ஆமாம்மா..நான் இப்போது இறைவனின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் என்னை உலகத்தில் எல்லோரைவிடவும் அதிகமாக விரும்புகின்றான்.

என்னம்மா நீ நக்கலாக சிரிப்பது போல தெரிகின்றது. "ம் என்னடா உலகத்தில் யார் யார் எப்படி எப்படி என்னை விரும்புவார்கள் என்று தெரிவதற்கு முன்னரே என்னை அழித்து விட்டார்களே..? எனக்கு எப்படி யார் அதிகமாய் விரும்புவார் என்று தெரியும் என்கிறாயே...? "

யார் எப்படியோ தெரியாதம்மா ஆனால் நீ என்னை அதிகமாய் விரும்பியிருக்கிறாய் என்று உன் வயிற்றிலிருக்கும்போது நீ தந்த ஸ்பரிசத்திலிருந்து மெல்ல மெல்ல உணர்ந்தேன்.

நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை. ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள்?


உன் வயிற்றினுள் இருக்கும் அந்த அறையில் நான் மெய் மறந்து இருந்தேன் தெரியுமா..?
அந்த பாதுகாப்பான இருட்டறை எவ்வளவு சுகமாய் இருந்தது?




எந்த குழாய் வழியாகவோ வருகின்ற உணவுகள்..

யாரோ எனக்கும் சேர்த்து மூச்சு விடுவது போன்ற உணர்வுகள்..

நீ அங்குமிங்கும் நடக்கும்போது மேகங்களுக்கு மத்தியில் நான் உலா வருவது போன்ற கனவுகள்..

திடீரென்று ஆசிர்வதித்து விட்டு மறைந்து போகும் கைகள்..எனக்கு முளைத்துள்ள குட்டி குட்டி விரல்கள்...

எல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மா..

அந்த இருட்டு உலகத்தில் எப்பொழுதும் யோசனையுடனும் தூக்கத்துடனும் என்னுடைய பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன..

அவ்வப்போது நீ சமைக்கும்போது வருகின்ற குக்கர் விசிலின் சத்தம் கேட்டு நானும் பதிலுக்கு விசில் கொடுக்க நீ பரவசப்பட்டு ஒரு தட்டு தட்டுவாயே..?

உன்னை நானும் என்னை நீயும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உனக்கும் எனக்கும் உள்ள அந்த நெருங்கிய உறவுக்கு என்ன பெயர் வைப்பது என்று இதுவரை என்னால் சொல்ல முடியவில்லையம்மா.


எப்போதும் வயிற்றில் காதுவைத்து என் சத்தங்கள் கேட்டு மகிழ்ந்து என்னைவிடவும் ஒரு குழந்தையாக மாறி கத்துவாரோ என் தந்தை..

அந்தச் சத்தங்கள் எல்லாம் தொப்புள் கொடி வழியாக என்னைத் தொட்டுக்கொண்டிருந்தன..எவ்வளவு சுகமாய் இருந்தது தெரியுமா..?

பின்னர் உன்னைச்சுற்றிய உறவினர்களின் கேலி கிண்டல்கள் எல்லாம் கேட்டு கேட்டு அவர்களின் குரல் எனக்குள் பதிந்து போயிற்று..

வெளியே வந்ததும் முதல் வேலையாக உன்னை கேலி செய்தவர்களின் முகத்திலெல்லாம் ஒண்ணுக்கு அடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன் தெரியுமா..?

2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 வது நாள் நாம் தங்கியிருந்த குஜராத் மாநிலம் நரோடா பாடியாவில் திடீரென்று எனக்குள் பூகம்பம் வந்தது போன்ற உணர்வு...என்ன நடந்ததென்று தெரியவில்லை என்னைத் தூக்கிக்கொண்டு நீ ஓடுகிறாய் என்று நினைக்கின்றேன்....

பல வித்தியாசமான குரல்கள் எல்லாம் என்னைச் சுற்றிக் கேட்கின்றது..

"கௌஸர் பானு..இங்க வந்திரு..சீக்கிரம் வா..அந்த அயோக்கியங்க வராங்கம்மா..."

என்று உன் பெயரைச் சொல்லி யாரோ பதறிப்போய் கத்துகிறார்கள். அதன்பிறகு உன்னைச்சுற்றி எத்தனையோ காலடித்தடங்கள் என் காதுகளுக்கு கேட்கிறது. ஏதோ சில கோஷங்கள் வேறு...

உறவினர்கள் கேலி பேசும்பொழுது உன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கும். அந்த அதிர்வினில் எனக்குள் வருகின்ற தொப்புள் கொடிகள் கூட மகிழ்ந்து இதமாய் விரியும்..

ஆனால் இன்று உன்னைச் சுற்றிய அந்தப் பேச்சுகளில் நீ மகிழ்வதாய் தெரியவில்லை. உன் இதயம் வழக்கத்தை விடவும் அதிகமாய் பயத்தில் துடிக்க தொப்புள் கொடிகளில் உஷ்ணக் காற்று அடிக்கிறதம்மா.. ..
எனக்கும் அந்தக் குரல்கள் இதுவரை பழக்கப்படவில்லை.. "என்னம்மா ஆயிற்று ? ..யாரவர்கள்..? "

திடீரென்று நீ கதறி அழ ஆரம்பிக்கின்றாய்.."வேண்டாம் ..வேண்டாம் விட்டுறுங்க .."என்று கெஞ்சுகிறாய்..

தந்தையின் குரல் வேறு பதட்டத்தோடும் உன்னைச் சுற்றி கதறியபடியும் கேட்கிறது..




ஒரு அரை மணி நேரமாவது நீடித்திருக்கும் அந்தக் குரல்களும் அப்பாவின் கதறல்களும் , அதன்பிறகுதானம்மா அந்த உச்சக்கட்ட பயங்கரம் நடந்தது.
ஒரு கூர்மையான சூலாயுதம் ஒன்று மெல்ல மெல்ல இருட்டறையைத் துளைத்துக் கொண்டு என்னை நோக்கி வருவதைக் கண்டேன்..
அந்த சூலாயுதம் துளைத்த ஓட்டை வழியாக பார்த்தால் சுற்றி எவரெவர்களோ ஆயுதங்களோடு நான் இருந்த இருட்டறையின் இருட்டை விடவும் மிகவும் இருட்டாய் உன்னைச் சுற்றிக் கொண்டு நிற்பதை..


நான் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டேன் அம்மா. ஆனால் என்னுடைய அலறல் உங்களுடைய காதுகளுக்கு கேட்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது.. ?

பயங்கர சப்தத்துடன் விழுகின்ற அருவியின் அருகே ஒரு கட்டெறும்பின் கதறல் யாருக்கு கேட்கும்.?

வெள்ள நீர் வீட்டுக்குள் நுழைந்து விடஇ குடிநீரைப் பற்றி யாரும் கவலைப்படுவதுண்டோ..?


நான் கதறுகிறேன்..என்னுடைய கதறலையும் மிஞ்சி நீ கதறுகிறாய் அம்மா.. பாரேன் கதறலில் கூட நம் குரல்கள் ஒரே சீரில் ஒலிக்கின்றது..
வெகு தூரத்தில் இருந்து சில பெண்களின் குரல்கள் வேறு பரிதாபமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தவளையின் முனகலாய்;.

என்னுடைய வலியைவிடவும் அந்தப்பெண்களின் அபாயக் கதறல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. யாரம்மா அந்தப் பரிதாபக் குரலுக்குச் சொந்தக்காரர்கள்.?

அந்த அபாயச் சப்தங்களுக்கிடையே என்னுடைய வலியின் கதறல்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை..

அந்த சூலாயுதம் முதலில் நம்மை இணைத்த தொப்புள் கொடிகளை அறுத்தெறிந்து பின் என்னுடைய பிஞ்சு வயிற்றில் வந்து நிற்கிறது அம்மா.. நான் மறுபடியும் கதறுகின்றேன்..

நம் கதறல்களின் சப்தத்தோடு சுற்றியுள்ளவர்களின் கோஷ சப்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றது.

சிரிப்புச் சப்தங்களும் கேட்கின்றது... அவர்கள் யாரம்மா..புதியாய் உலகத்தில் தோன்றிவிட்ட மிருக ஜாதிகளோ..?
அந்த சூலாயுதம் என் சதைகளில் குத்தி உருவப்படும்பொழுது எனக்குண்டான வலியை கேட்கும் சக்தியும் உனக்கு இல்லை..அந்த வலியில் கதறுகின்ற உனது வலியை உணரும் சக்தியும் எனக்கு இல்லாமல் போயிற்று..

"அம்மா அம்மா காப்பாற்றுங்கள் என்னை..ரொம்ப வலிக்கிறது அம்மா..தாங்க முடியவில்லை....
என்னை விட்டு விடச்சொல்லுங்களேன்.."

"இனிமேல் இந்த உலகத்தின் எவர் கருவுக்கும் அனுப்பிவிடாதே என்று இறைவனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.. அவர்களிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா
"

வலி பொறுக்க முடியாமல் நான் மீண்டும் மீண்டும் கத்துகிறேன்.. எனது வயிற்றின் வழியாக பாய்ந்த அந்த சூலாயுதம் எனது குட்டி கண்கள் , குட்டி மூக்கு, குட்டி உதடுகள் , பட்டு விரல்கள் எல்லாம் தாறுமாறாய் கிழித்துப் போகிறது.

பட்டுகளை அழித்து
புடவை!
ஏனிந்த
மொட்டுக்களை அழிக்கும் மடமை?


என்னுடைய கைகளை மட்டும் தனியே பிய்த்துப் போட்டது அந்த சூலாயுதம்.. என் கால் விரல்களின் சதைகள் அந்த சூலாயுதத்தின் முனைகளால் கவ்வப்பட்டு கண் பகுதியில் வந்து ஒட்டிக் கொண்டது.

அத்தோடு அவர்களின் வெறி தணியவில்லை..அந்த சூலாயுதத்தின் கூர்மையான பகுதியின் முனையில் குத்தி அம்மா உன் வயிற்றைக் கிழித்து என்னை வெளியில் தூக்குகிறார்கள். ஆ..அம்மாஆஆஆஆஆ.. அந்த வலியை சொன்னால் மொழிகள் கூட முனகும்......



எல்லோரும் தாயின் வழியாகத்தானே உலகத்தை பார்க்கிறார்கள். நான் மட்டும் சில பேய்களின் வழியாக உலகம் பார்க்கின்றேன். எனக்கு மட்டும் ஏனம்மா விதிவிலக்கு?


சூலாயுதத்தின் முனையிலிருந்து நான் கண்ணைத்திறந்து பார்க்கின்றேன்.... பதறிப்போய்விட்டேனம்மா...


இதயம் இறந்த சிலர்..
நினைவு மறக்கும் வரையிலும்
ஒருவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்!




டயரும் உயிரும்
சமத்துவமாய் எரிக்கப்படுகின்றது..




குடும்பம் குடும்பமாய்
உயிர்கள் கொளுத்தப்பட்டு
மனிதநேயம் மட்டும்
கடலில் கரைக்கப்படுகின்றது.


ஆங்காங்கே
வயது வித்தியாசமில்லாமல் ..
பெண்கள் மீது பலாத்காரங்கள்!

அட தூரத்தில் பாருங்களேன்...
தேசமாதாவையும் ஒருவன்
துரத்திக்கொண்டு ஓடுகின்றான்
கையில் சூலாயுதத்தோடு
!


அய்யோ.. கருவான எனக்கே கண் கலங்குகிறதே..? என்னம்மா இது..
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் யுத்தம் நடக்கிறதா என்ன..?

அதிர்ச்சியாக இருக்கிறது இந்தியாவில் கூட மனிதர்களைத் தின்னும் கூட்டங்களா..?

இதற்கிடையில் சூலாயுதத்தின் முனையில் என்னைத் தூக்கியவர்கள் யாருடைய பெயரையோ திரும்ப திரும்ப சொல்லி வெற்றி முழக்கமிட்டு எக்காளத்துடன் சிரிக்கிறார்கள்.

நீ சொல்லவேயில்லையம்மா..மனிதர்கள் இவ்வளவு பயங்கரமானவர்களா..?

அந்த வலியிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கின்றேன். கண்ணை மூடுவதற்கு முன் உன் முகம் பார்க்க முற்பட்டேன் ஆனால் முடியவில்லையம்மா..என்னை நெருப்பில் வீசி அழித்துவிட்டார்கள்..

அய்யோ என்னவெல்லாம் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..?



*கருவுக்குள் என்னை பாதுகாப்பாய் அடைகாத்த உன் மடியிலே விளையாடி மகிழவேண்டும்
*உன் கண்ணீரைக் என் கைகளால் துடைக்க வேண்டும்
*எப்போதும் உன்னை மகிழ்ச்சி படுத்தி வைக்க வேண்டும்
*குறும்புகள் ஏதும் செய்யாமல் உன் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும்


இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தேன்.. உன் மடியில் குழந்தையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையைத்தவிர எனக்கு வேறு எந்த ஆசையுமில்லையம்மா.. ஆனால் அந்தக் கரு பிரியர்கள் என் கனவுகளை எல்லாம் சூலாயுதத்தில் சுருட்டிக்கொண்டார்கள்.

இப்போது நான் முழுமையாக இறந்து விட்டேன்.. ஆனால் அந்த பயங்கரத்தை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.. உலகத்தின் எந்த மரணமும் இப்படி நிகழ்ந்திருக்க வில்லை..என் கருவை எடுத்த அந்த பயங்கரவாதிகளின் குழந்தைகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நிகழக் கூடாது அம்மா..
நான் இறந்து போன சில விநாடிகளில் யாரோ என்னை கைகளில் அமர்த்தி ஒரு அழகான இடத்திற்கு எடுத்துச் செல்வது போல உணருகின்றேன். நான் இன்னமும் அழுதுகொண்டிருக்கின்றேன்..ஆனால் உடலில் எந்த வலியும் இல்லை..



அந்த கைகள் என்னை இறைவனிடம் ஒப்படைக்கின்றது. இறைவன் என்னை ஆசிர்வதிக்கின்றான்.
அவன் என் மீது அன்பு காட்டுகின்றான். என்னை அன்பாக தடவிக் கொடுக்கின்றான். அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னைக் கருவறையில் தடவிக் கொடுத்து விட்டு மறைந்த கைகளுக்கும் சொந்தக்காரன் இவன் தானோ என்று.

அவனிடம் கேட்டேன். "என்னைக் கொன்றவர்கள் யார். எதற்காக என்னைக் கொன்றார்கள் ". ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் "மதவெறி" என்று.

எனக்கு விளங்கவில்லை .."மதவெறி என்றால் என்ன..?"

"உன்னையும் உன்னைக் கொன்றவனையும் படைத்தது நான்தான்.
என் மீது பக்தி இருப்பதாய் நடித்துக்கொண்டு நான் படைத்த உன்னை கொன்று விட்டான். "


என்று கடவுள் சாந்தமாய் பதிலளித்தான்

அவர்களுக்கு என்னதான் தண்டனை..? நான் கோபத்தில் கேட்டேன்.. பிள்ளதாச்சுகள் கோவப்பட்டால் கரு கலங்கிவிடும். ஆனால் இங்கே ஒரு கருவே கோவப்படுவதால் கடவுள் கலங்கிவிட்டான்.

மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.. "இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது"
நம்பிக்கை இருக்கிறது அம்மா. அவர்கள் ஒருநாள் இறைவனிடம் திரும்பி வந்துதான் ஆகவேண்டும். கரு ஒன்று காத்திருக்கிறது அந்த கறுப்பு நாட்களுக்காய்.


அம்மா..நான் இங்கே இறைவனின் வீட்டில் தங்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கே என்னுடன் விளையாட நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களின் முகத்தில் மதவெறி இல்லை..கோபம் இல்லை..வன்முறை இல்லை..எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி மட்டுமே ஒட்டியிருக்கின்றது..

கடவுள் என் காதில் வந்து சொன்னான்.. இங்கே இருப்பவர்கள் யாருமே சுயநலம் இல்லாதவர்களாம்.

ஆகவே நான் இந்த சுயமில்லாத உலகத்தில் உனக்காக காத்திருக்கின்றேன் அம்மா.. உனக்காக மட்டுமல்ல - கருவை எடுத்து கபடி விளையாடிய அந்த மனிதப் போர்வையில் உலவுகின்ற மிருகங்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர்களை கண்டிப்பாய் கடவுளிடம் காட்டிக்கொடுப்பேன்..


உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை நடந்த கொடுமைக்கார்களுள் முதன்மையானவர்களாக - தண்டிக்க வேண்டிவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்களைத்தான் கடவுள் தயாரித்துக்கொண்டிருக்கின்றான். ஆம் இறைவனின் டாப்டென் தண்டனையில் அந்த குஜராத்தை சேரந்த வெறி பிடித்த பக்தர்கள் தான் முதலிடம்.

அம்மா..நம்முடைய கதறலை காது கொடுத்து கேட்காத அந்த சாத்தான்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் கடுமையான வேதனையின் வலியை அவர்கள் கண்டிப்பாய் உணரவேண்டும். இந்தக் கருவின் கதறலுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இறுதியாய் மனிதர்களுக்கு ஒரு சேதி :

மனிதர்களே!
சிசுக்களை மட்டுமல்ல
இனிமேல்...
கொசுக்களைக் கூட
கொல்லாதீர்கள்.

இனி
கோழி முட்டைக்
கருவைக் கூட
வெளியில் எடுத்துவிடாதீர்கள்..




அம்மா..உன்னோடு நான் உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கே வாழ ஆசைப்படுகின்றேன் ..காத்திருப்பேன் உனக்காக..

இப்படிக்கு

உன் அன்பான கரு


- ரசிகவ் ஞானியார்

29 comments:

ஜி said...

:(((((

romba sogamaa potchu Rasigav... oru nimisam kan kalangitten.. :(((

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஜி said...
:(((((

romba sogamaa potchu Rasigav... oru nimisam kan kalangitten.. :(((//




ம் உங்கள் மனதின் ஈரத்தைக் காட்டுகிறது நண்பா..

எந்தக் காரணங்களாலும் அந்தச் சம்பவத்தை சமாதானப்படுத்த முடியவில்லை.

நினைக்கும்பொழுதெல்லாம் மனசு வலிக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கின்றார்கள் என்று எண்ணும்பொழுது மனிதப்பிறவியாய் இருக்க அவமானமாகயிருக்கிறது. :((

ILA (a) இளா said...

நண்பா..

உன்னை விட நான் உன் கவிதைகள் ரசித்தவன் என்ற முறையில் உன்னிடமே கேட்டிருக்கிறேன்.. எங்கே சென்றான் கலங்க வைத்த ரசிகவ்? இன்று அதற்கோர் சவுக்கடி.. மீண்டும் வந்து இருக்கிறாய்.. சந்தோசப் படலாம் என நினைத்தால் மீண்டும் கலங்கடிக்கிறாயே.. ஒரு மொட்டுக்கு கையில் பேனா கொடுத்து மீண்டும் உயிர் குடுத்த உன் விரல் நுனி.. வாழட்டும் பல்லாண்டு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
நண்பா..

உன்னை விட நான் உன் கவிதைகள் ரசித்தவன் என்ற முறையில் உன்னிடமே கேட்டிருக்கிறேன்.. எங்கே சென்றான் கலங்க வைத்த ரசிகவ்? இன்று அதற்கோர் சவுக்கடி.. மீண்டும் வந்து இருக்கிறாய்.. சந்தோசப் படலாம் என நினைத்தால் மீண்டும் கலங்கடிக்கிறாயே.. ஒரு மொட்டுக்கு கையில் பேனா கொடுத்து மீண்டும் உயிர் குடுத்த உன் விரல் நுனி.. வாழட்டும் பல்லாண்டு//


நன்றி இளா...

ஆனால் இதுபோன்ற ஒரு கட்டுரையை எழுதியதற்குண்டான சம்பவங்கள் நடைபெற்றதை நினைக்கும்பொழுது வருத்தமாக இருக்கின்றது

தூக்குத் தண்டனை நிறைவேற்றிய பிறகு பேனா முனையை ஒடித்துவிடும் நீதிபதிகளைப்போல நானும் அந்தச்சம்பவம் போல் இனி ஒரு சம்பவத்தை நான் எழுதக்கூடாது என்று கைகளிடம் கெஞ்சுகின்றேன்

இல்யாஸ் said...

:((((, தாங்க முடியவில்லை, கண்கள் கலங்குகின்றன், இதயம் கணக்கிறது.. நடுவண் அரசாங்கம் மற்றும் நீதி மன்றங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன?

cheena (சீனா) said...

ரசிகவ்.... நெஞ்சு கனக்கிறது. மனம் அழுகிறது. இதயம் துடிப்பை நிறுத்தத் துடிக்கிறது.

கண்ணீரால் எழுதப் பட்ட கருவின் கதறல் - வலிமை நிறைந்த சொற்களால் எழுதப்பட்ட வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை.

ஒவ்வொரு வரிக்கும் - சொல்லுக்கும் பாராட்டி விமர்சனம் எழுத நினைத்தேன். முடியவில்லை. கண்கள் கலங்குகின்றன. கைகள் நடுங்குகின்றன.

//தூக்குத் தண்டனை நிறைவேற்றிய பிறகு பேனா முனையை ஒடித்துவிடும் நீதிபதிகளைப்போல நானும் அந்தச்சம்பவம் போல் இனி ஒரு சம்பவத்தை நான் எழுதக்கூடாது என்று கைகளிடம் கெஞ்சுகின்றேன்//

உடன்படுகிறேன். இனி இது மாதிரி எழுத உனக்கு ஒரு வாய்ப்பே கிடைக்கக் கூடாதென இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

கடவுளையே கலங்க வைத்த கோபம் கொண்ட கருவே !! அமைதி அமைதி - சாந்தப் படு. அன்பாய் இரு. எல்லாம் நலனாய் முடியும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இல்யாஸ் said...
:((((, தாங்க முடியவில்லை, கண்கள் கலங்குகின்றன், இதயம் கணக்கிறது.. நடுவண் அரசாங்கம் மற்றும் நீதி மன்றங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன?//


அவைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என சுதந்திரமாய் கேட்கும் உரிமையை இந்த ஜனநாயக நாடு நமக்கு தந்துவிடவில்லை.

நீதி கிடைக்குமா..? பார்ப்போம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
ரசிகவ்.... நெஞ்சு கனக்கிறது. மனம் அழுகிறது. இதயம் துடிப்பை நிறுத்தத் துடிக்கிறது.

கண்ணீரால் எழுதப் பட்ட கருவின் கதறல் - வலிமை நிறைந்த சொற்களால் எழுதப்பட்ட வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை. //

நன்றி சீனா..

உண்மையில் மனிதநேயம் உள்ளவர்களின் மனதில் இந்தச் சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது உங்களைப் போன்றோர்களிடமிருந்து தெரிந்து கொண்கின்றேன்.

அபூ ஸாலிஹா said...
This comment has been removed by a blog administrator.
MyFriend said...

நெஞ்சை கிழித்து விட்டது.... :-((((

மரைக்காயர் said...

//அவர்களுக்கு என்னதான் தண்டனை..? நான் கோபத்தில் கேட்டேன்.. பிள்ளதாச்சுகள் கோவப்பட்டால் கரு கலங்கிவிடும். ஆனால் இங்கே ஒரு கருவே கோவப்படுவதால் கடவுள் கலங்கிவிட்டான்.

மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.. "இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது"//

ஆம்.. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அபூ ஸாலிஹா has left a new comment on your post "ஒரு கருவின் கதறல்":

முழு உலகையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு இனசுத்திகரிப்பை அடுத்தடுத்து வரும் செய்திகளின் பரபரப்பில் வெகு சுலபமாய் மறந்து போயிருக்கும் மனங்களுக்கு ஒரு உலுக்கலாய் அமைந்துள்ளது இக்கவிதை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
நெஞ்சை கிழித்து விட்டது.... :-((((//


இதயம் சமாதானமாகட்டும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மரைக்காயர் said...
ஆம்.. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது!//

தவறு செய்தவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவர்கள் நிச்சயமாக

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அபூ ஸாலிஹா :
முழு உலகையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு இனசுத்திகரிப்பை அடுத்தடுத்து வரும் செய்திகளின் பரபரப்பில் வெகு சுலபமாய் மறந்து போயிருக்கும் மனங்களுக்கு ஒரு உலுக்கலாய் அமைந்துள்ளது இக்கவிதை!//

நன்றி அபுசாலிஹா...

Anonymous said...

anbu rasikav, naan thangaludaya kavithaikalin neenda naal rasikan. Thirunelveli SA college muthal indru dubai varai. pala kavithaikalukku vimarsanam elutha ninaithu piragu maranthu viduven. aanal intha kavithaiku kandippaga eluthavendum. Hindu mathathinar endru sollikonda sila manitha mirugankalal nadathappatta antha sambavam nichayam avarkaludaya palveru thalaimuraikalaium paathikum. naanum Hindu thaan. aanal Geethai sollikodutha vazhikalai kadaipidippavan. Intha Modi endra mirugathudan udanbaadu kondavan alla. Anaivarum udan piranthavargal , nammudaya thanthayai veveru vazhikalil veveru peyar kondu alaikirom endra nambikai udaiyavan. nesathudan Thiruppathi

Unknown said...

//அம்மா..உன்னோடு நான் உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கே வாழ ஆசைப்படுகின்றேன் ..காத்திருப்பேன் உனக்காக..//

அந்தக் கருவை காத்திருக்க வைக்காமல் அப்போதே தாயையும் கொன்று விட்டார்கள் கயவர்கள்.

இறுதித் தீர்ப்பு நாள்.......
அதற்கு முன்னமே இவ்வுலகிலேயே இறைவனது தண்டணை அக்கயவர்கள் வாழ்வில் தொடங்கி விடும்.

எழில்பாரதி said...

ரசிகவ் கரு கடிதம் கலங்க வைச்சுடுச்சு.......

Anonymous said...

VAIRAMUTHUVIN SAAYALIL IRUNTHALUM MUTHU MUTHANA KAVITHAIGAL...

PADIPPATHARKKU MIGA ARUMAIYAGA IRUKKIRATHU

NAAL MULUVATHUM KOODA PAARATTALAM INTHA KAVITHAIKKAGA...

ATHIGAPATCHAMAGA UNGALUKKU nilavumuthu ENDRU KOODA PATTAM KODUKKALAM...

SMART WAY OF EXPRESSING YOUR WISHES TO ATTAIN RELIGIOUS HORMONEY IN THE COUNTRY....

Essaar said...

VAIRAMUTHUVIN SAAYALIL IRUNTHALUM MUTHU MUTHANA KAVITHAIGAL...

PADIPPATHARKKU MIGA ARUMAIYAGA IRUKKIRATHU

NAAL MULUVATHUM KOODA PAARATTALAM INTHA KAVITHAIKKAGA...

ATHIGAPATCHAMAGA UNGALUKKU nilavumuthu ENDRU KOODA PATTAM KODUKKALAM...

SMART WAY OF EXPRESSING YOUR WISHES TO ATTAIN RELIGIOUS HORMONEY IN THE COUNTRY....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// SR said...
VAIRAMUTHUVIN SAAYALIL IRUNTHALUM MUTHU MUTHANA KAVITHAIGAL...//

விமர்சனத்திற்கு நன்றி...ஆனால் இது என் மனதில் இருந்து மட்டும் வந்த எண்ணம் அல்ல..அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுந்த எண்ணங்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எழில் said...
ரசிகவ் கரு கடிதம் கலங்க வைச்சுடுச்சு.......//

நன்றி எழில்..

இனி யாருக்கும் இந்த கலக்கங்கள் ஏற்படக்கூடாது நம்புவோம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சுல்தான் said...
இறுதித் தீர்ப்பு நாள்.......
அதற்கு முன்னமே இவ்வுலகிலேயே இறைவனது தண்டணை அக்கயவர்கள் வாழ்வில் தொடங்கி விடும்
//

சாபங்கள் வரங்களாகட்டும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
anbu rasikav, naan thangaludaya kavithaikalin neenda naal rasikan. Thirunelveli SA college muthal indru dubai varai. pala kavithaikalukku vimarsanam elutha ninaithu piragu maranthu viduven//

விமர்சனத்திற்கு நன்றி
தாங்களும் சதக் கல்லூரியா..?

mujirh said...

//அம்மா..உன்னோடு நான் உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கே வாழ ஆசைப்படுகின்றேன்.. காத்திருப்பேன் உனக்காக..//

முழு உலகையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு இனசுத்திகரிப்பை அடுத்தடுத்து வரும் செய்திகளின் பரபரப்பில் வெகு சுலபமாய் மறந்து போயிருக்கும் மனங்களுக்கு ஒரு உலுக்கலாய் அமைந்துள்ளது இக்கவிதை!

mujirh at gmail dot com (for friendship)

நித்யன் said...

ரசிகவ்...

மிகுந்த வலி ஏற்படுத்தும் வரிகள். அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கே அழைத்துச்சென்று அந்த வலிகளை உணரச்செய்தது. கருவின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பது மிகச்சிறப்பான உத்தி.

அஞ்சலி வாசிப்புக் கவிதையில் இருக்கும் நயத்தை அழுது கொண்டிருக்கும் கண்களை வைத்துக்கொண்டு சொல்வதெப்படி..?

உங்கள் பேனா வாழ்க...

உண்மைத்தமிழன் said...

விஷயத்தைச் சொல்லும் விதத்தில் நீங்கள் காட்டியுள்ளது புதுமை.
ஆனால் உருக வைக்கிறது ஞானியாரே..
இன்னொரு முறை இது போல் எழுதுகின்ற வாய்ப்பு உங்களுக்கும், அல்லது படிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்கும் கிடைக்காமல் இருக்க வேண்டும்..

Aruna said...

நிலவு நண்பனுக்கு,
எந்த வரிகளைத் தொடுத்து கண்கலங்கியது என்பது....எதை விடுவது??
கொஞ்ச நேரம் எதுவுமே செய்ய முடியாமல் திகைத்து நின்றதைச் சொல்லவா?
கண்கள் மீண்டும் மீண்டும் நனைந்து கொண்டே இருப்பதைச் சொல்லவா?இதை ஒரு முறை அந்தக் கொடூரர்களுக்குப் படித்துக் காட்டினால் என்ன என்று கூடத் தோன்றுகிறது?
இயலாமை கண்களுக்கு நீரைக் காட்டிவிட்டு எனக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்கிறது...
அன்புடன் அருணா

Anonymous said...

nanba...
kavithaiyaalae oru kaaviyathai padaithu viteerkal

vanthavudanae mubae padithuvittaen nenju adaithathu

but naeraminmai kaaranamaga pinvootam podavillai

Unnai santhithal naan vunnidam kedpathu.. engae vun idhayam...konjam thiranthu kaattu entuthaan
manitha naeyam...

தேன் கூடு