Tuesday, September 05, 2006

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதாவது ஒரு படியாக அல்லது எல்லாப் படிகளிலும் ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர்.

கல்லூரிக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவர் பேராசிரியர் இராமய்யா. அவரைப்பற்றிய பதிவு இதோ..


என்னைக்கவர்ந்தவர்கள்

சென்ற வருடம் நான் எழுதிய ஆசிரியர் தினக் கவிதை ஒன்றையும் இங்கே மறுபதிவிடுகின்றேன்.

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதி மிஸ்!



கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கியநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!

இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...



நீங்களும் சட்டென்று கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யாராவது ஒருவரை நினைத்துக்கொள்ளுங்கள்.



- ரசிகவ் ஞானியார

Monday, September 04, 2006

இவர்கள் காதலித்தால் IV

அரசியல்வாதியின் காதல்கவிதை



என் தொகுதியைச் சார்ந்த
காதலியே!


என்னைக் காதலித்தால்

ஆயுள் முழுவதும்
அன்பை
இலவசமாக தருகின்றேன் ...

உனக்கு மட்டும்
எப்பொழுதும்
இதயத்தில் இட ஒதுக்கீடு ...


இது
தேர்தல் வாக்குறுதி அல்ல
ஒரு
தேவதைக்கான வாக்குறுதி !

நீ
பாட்டணியில் அரியர்ஸ் வைத்தாலும்
பரவாயில்லையடி !
நம்
கூட்டணியை மட்டும்
கலைத்துவிடாதே !

தோளோடு தோளிடித்து பழகிவிட்டு
வைகோவைப்போல..
விட்டுப்போய்விடாதே!

எதிர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை

தயவுசெய்து
சட்டசபையில் வந்து
எனக்கு முன்னால் அமருவாயா.. ?

நான் என்
காதலைச் சொல்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Friday, September 01, 2006

இவர்கள் காதலித்தால் III

இவர்கள் காதலித்தால் I

இவர்கள் காதலித்தால் II



கிரிக்கெட் வீரனின் காதல் கவிதை




நீ பார்வையாளராக
வந்தாலே போதுமடி எனக்கு
பார்வையே தேவையில்லை

உன்
காதலன் என்ற
கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு
டார்லிங்கே நான்
டக்அவுட் ஆகிவிடுகின்றேன்

நன்றாக
கிரிக்கெட் விளையாடத் தெரிந்தாலும்
உன்
கண்கள் வீசும்
பந்து வீச்சில் மட்டும்
நான்
அவுட் ஆகிவிடுகின்றேனடி

உனது
ஒவ்வொரு சிரிப்புக்கும்
சதம் அடிப்பேன்..

நீ
பிரிந்துவிட்டால் என்னால்
4 கூட அடிக்கமுடியாது.

நம் காதலுக்கு
தடைபோடுவது உன்
தந்தையாக இருந்தாலும்
சிக்ஸர் அடித்துவிடுவேன்.


நம்
விழியிரண்டும்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது ,
நோபால் சொல்லி
நோகடித்த
உன் தந்தையென்ன
அம்பெயரா?

பெண்ணே
கிரிக்கெட் வீரனை
கிறுக்குபிடிக்க வைத்துவிடாதே!
மைதானத்தில் ஓடியவனை
மயானத்தில் படுக்க வைத்துவிடாதே!


என்னைக்
கழட்டிவிட்டுவிடாதே கண்ணே நான்
கங்குலி அல்ல..

ஒண்டே மேட்ச்சில்
தோற்றாலும் பரவாயில்லை
பெண்ணே கிடைக்குமா?
காதல் என்னும்
வேர்ல்டு கப்..



- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 29, 2006

இவர்கள் காதலித்தால் II

காவலரின் காதல் கவிதை



மாமூல் தராமலையே என்
மனசுக்குள் வந்தவளே!

எந்த
இன்ஸ்பெக்டரிடம் சொல்வேனடி நீ
இதயத்தை திருடியதை?

நான் உனைக்கண்டு
இளித்ததை
ஈவ்டீசிங் என்கிறாயே?

உன் கண்களில்
இதயம் அலைக்கழிக்கப்படுவதை
ஆடம்டீசிங் என்று
அறிவிக்கட்டுமா?


கைதியின் காதல் கவிதை



மத்திய அரசே! என்
மனசை நோகடித்த அவளுக்கும்
மரண தண்டனை கொடு

- ரசிகவ் ஞானியார்

Friday, August 25, 2006

இவர்கள் காதலித்தால்...

நான் ஏற்கனவே ஒவ்வொருவரின் கல்லறைகளிலும் ஒரு வாசம் எழுதினால் என்ன எழுதியிருப்பார்கள் என்று எழுதியிருந்தேன். அதுபோல ஒவ்வொருவரும் காதலித்தால் அவர்களின் துறைக்கு தகுந்தவாறு எவ்வாறு காதல் கவிதைகள் எழுதுவார்கள் என்ற ஒரு கற்பனை. முதன் முதலாக ஒரு மெடிக்கல் ரெப் பற்றிய காதல் கவிதை.

மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை





எக்ஸ்ப்ரஸில் சென்றுவிட்ட
பருந்தே!
எக்ஸ்ப்யரி[Expiry] டேட்
முடிந்து போன மருந்தே!

கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..


அடுத்து விவசாயியின் காதல் கவிதை. அவ்வப்போது நேரம் கிடைக்கும்பொழுது "இவர்கள் காதலித்தால்..." தொடர்ந்து கொண்டிருக்கும்.


விவசாயியின் காதல் கவிதை




என்னைப்
பேசவிடாமல் செய்த
அவள் கண்கள் ஒரு
பூச்சி கொல்லி மருந்து!
இல்லை இல்லை
பேச்சி கொல்லி மருந்து!

காத்திருடி!
அறுவடைக்காசிலே
அமெரிக்கா போவோம்..
இல்லை..இல்லை
உல்லாசமாய் போவோம்
உழவர்சந்தைக்கு!

பயிர் வாழ
நீர் தேவை - என்
உயிர் வாழ
நீ தேவை


உன்னுடைய
தற்காலிகப்பிரிவில்...
என் வயல்வெளிகள்
போக்ரானாய் மாறும்

ஆனால்
நிரந்தரமாய் பிரிந்துவிட்டால் என்
டெய்லி வாழ்க்கை
டெமக்ரானோடுதான்!

அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..


- ரசிகவ் ஞானியார்

Saturday, August 19, 2006

சிக்னலில் பெண் தேவதைகள்


திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வாகனங்கள் நின்றாலும் அங்கு ஒரு பெண் போலிஸார்களை பணியில் பார்க்கலாம்.. எல்லா வாகனங்களும் இவர்களின் கை அசைவுக்கு கட்டுப்படுகின்றன.


இன்று காலை 9மணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை இரயில்வேகேட் அருகே பெண் போக்குவரத்து போலிஸார்கள் இரண்டு பேர் ரெட் சிக்னல் கொடுக்க , நான் சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன் . அப்பொழுது பெண் போலிஸார்களை அலட்சியப்படுத்தி ஒரு நபர் கடந்து செல்ல அந்த பெண் போலிஸார்கள்: :ஹலோ சார் சார்;: என்று கத்த அந்த நபர் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து சென்றார்.

நான் உடனே "ஹலோ வண்டி நம்பரை நோட் பண்ணுங்க.. "

"பார்த்துகிட்ட நிற்காதீங்க நம்பரை நோட் பண்ணுங்கம்மா" என்று அவர்களிடம் கூற

அந்த பெண் போலிஸில் ஒரு பெண், " ஹலோ எங்களுக்கு தெரியும்..நீங்க சொல்ல வேண்டாம்.. நாங்க நோட் பண்ணிக்கறோம்.. "என்க

அட நல்லதுக்கு சொன்னா புரிஞ்சுக்கமாட்டேங்கிறாங்களே என்று மனம் வருந்தியபடி அவர்களை நோக்கி திரும்பி ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு நான் வண்டியை சீறிக்கொண்டு வந்துவிட்டேன்.

அந்த பெண் போலிஸார்களின் இடத்தில் ஒரு ஆண் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

"டேய் டேய் நில்லுடா..சொல்லுறேன் போய்கிட்டே இருக்க..வண்டிய ஒதுக்குடா..வண்டிய ஒதுக்குடா" என்று தனக்குரிய வழக்கமான தினச்சம்பளத்தை வாங்கியிருப்பார்.

இப்பொழுது இந்தப்பணியில் அதிகமான பெண்போலிஸார்களை நியமனம் செய்திருக்கின்றார்கள். திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வந்து நின்றாலும் இந்தப் பெண் போலிஸார்கள்தான் பணியில் இருக்கின்றார்கள்.

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்



சிக்னலில் நிற்பதற்கு
சிகப்பு விளக்கு தேவையில்லையடி
உன்
விழியின் வெளிச்சம் போதும்

ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்




இப்பொழுது திருநெல்வேலியின் ஒவ்வொரு சிக்னலிலும்; வாகனங்கள் அதிக நேரம் நின்று செல்வதாக தகவல். ஓருவேளை இவர்களை ரசித்து மெய்மறந்து நின்று விடுகின்றார்களோ? சரி அத விடுங்க..

இந்தப்பணியில் பெண்களை நியமிப்பதில் சாதகங்கள் மற்றும் பாதகங்களும் இருக்கின்றன


பெண் போலிஸார்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுகின்றார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவ்வாறு இருக்க இயலாது. (சில சமயம் ஆண் போலிஸார்களின் அறிவுரைகளின் பேரில் இவர்களும் கண்ணியம் தவறி நடக்க ஆரம்பிக்கின்றார்கள்)

லாரியை மடக்கி லஞ்சம் வாங்குதல் - அப்பாவி பைக்வாதிகளிடம் தினக்கூலி பெறுதல் -தேவையில்லாமல் வண்டியை ஒதுக்குதல் - போன்றவை தவிர்க்கப்படுகிறது

ஆனால் அவர்களின் கண்ணியமான கட்டளைகளையே தங்களுக்கு சாதகமான எடுத்துக்கொண்டு பெண் போலிஸார்கள்தானே என்று அலட்சியமாய் பொதுமக்கள் எல்லை மீறுகின்றார்கள்

அது மட்டுமல்ல இரவில் இவர்களால் வெகு நேரம் நின்று கொண்டிருக்க முடியாது. அது இவர்களின் கற்புக்கும் கடமைக்கும் ஆபத்து

பெண் போலிஸாருடன் கள்ளக்காதல் - பெண் போலிஸாருடன் தகாத முறையில் நடந்த தலைமைக் காவலர் கைது. என்றெல்லாம் செய்திகள் பத்திரிக்கையில் வரும்பொழுதுதான் அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கவலையாக இருக்கின்றது.




- ரசிகவ் ஞானியார்



Friday, August 18, 2006

என் இனிய கல்லூரி நண்பர்களே

கல்லூரியைப்பற்றி எழுதி நாளாகி விட்டதால் இன்று ஞாபகத்தை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டுபோகின்றேன்

எல்லா கல்லூரிகளிலும் கலை விழாக்களுக்கென்றே ஒரு கோஷ்டிகள் இருக்கும்.
அவர்களில் நடனம் ஆடுபவர்கள் - மிமிக்ரி செய்பவர்கள் - நாடகம் இயற்றி நடிக்க வைக்கும் மினி இயக்குனர்கள் - பாடல் பாடுபவர்கள் - பேச்சாளர்கள் -கவிதை எழுதுபவர்கள் என்று தனிப்பட்ட குழு இருக்கும்

எங்கள் கல்லூரியிலும் அப்படிப்பட்ட குழு இருந்தது. எனக்கு கவிதை மேடைகளில் அல்லது இலக்கிய சம்பந்தமான சபைகளில் மட்டும்தான் கவிதை பாடுவேன்.

கவிதை - பேச்சுகள் எல்லாம் எனக்கு போரடித்துப்போக நான் நாடகங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பக்கத்து கல்லூரிகளில் நடைக்கும் கலைவிழாக்களில் பங்கு பெறுவோம். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் ஜாலியாக இருக்கும். ஏனென்றால் கல்லூரிக்கும் போகத் தேவையில்லை வருகைப்பதிவும் கிடைத்துவிடும்.

மெடிக்கல் கல்லூரியில் ஒரு அனைத்துக் கல்லூரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்றிருந்தோம்.

அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காக வருவார்கள்.

ஹாய் எப்படி இருக்கீங்க..

இன்னிக்கு என்ன புராகிராம் பண்றீங்க நீங்க..

உங்க பர்ண்ட் போன விழாவுக்கு வந்தாங்களே அவங்க வரலையா

ஐஸ்வர்யா ராய் வரைலயா..

ஹலோ என்ன கிண்டலா? இருங்க.. அவகிட்ட சொல்லி கொடுக்கிறேன்..

அவளுக்கு ப்ராக்டிகல் இருக்கு வரமுடியலையாம்..

இன்னிக்கு என்ன பாட்டு பாடுறீங்க நீங்க..

கிழக்குச்சீமையில படத்துல ஒயிலா பாடும் பாட்டு - பாடப்போறேன்..

என்று எங்கு பார்த்தாலும் வழியல்கள் - கொஞ்சல்கள் - ஜொள்ளுகள் கலந்து புகை மூட்டமாகவே இருக்கும். புகை மூட்டத்தில் எதிரில் வருகின்ற நண்பர்கள் கூட அடையாளம் தெரியாது. கடந்து சென்ற பிறகு திட்டிக்கொண்டு போவார்கள்

டேய் பிரபா..அவனைப்பாரேன் கடலை போட்டுகிட்டு இருந்தா கண்தெரியாதுன்னு நினைக்கிறேன்..கண்டுக்காம இருக்குறான் டா..

இருடா நமக்கு ஒரு நேரம் வராமையா போகும்..

பொருமிக்கொண்டே சென்றனர். நண்பர்களுக்குள் சிறு சிறு பகைமைகளும் வளர்க்கும் இந்தக் கடலை சாகுபடிகள்.

வௌ;வேறு கல்லூரிகளில் இருந்து வருகின்ற தேவதைகளை பின்தொடர்ந்தபடி சகாக்களின் கூட்டங்கள்.

நாய் துரத்தி வருவதைப்போல காதர் ஓடி வந்தான்

ஞானி ஞானி..உனக்கு மேட்டரு தெரியுமா..பிஏ தங்கத்துரை இருக்கான்ல ..அவன் அந்த ராணி அண்ணா காலேஜ் பொண்ணு இருக்குதுல..கவிதை நல்லா எழுதுமேடா..அந்த வெள்ளைக்காரி.. அவகிட்ட குட்மார்னிங்னு சொல்லியிருக்கான்..அவ மதிக்காம போய்ட்டா..இவன் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே..

என்று அவன் அவமானப்பட்டதை சிரித்தபடி கூறினான்..

நானும் அவனுடன் சேர்ந்து சிரிக்க அதோ தங்கத்துரை போரில் கவசக்குண்டலம் பிடுங்கப்பட்டு நிராயுதபாணியாகி திரும்ப அனுப்பப்பட்ட மன்னனைப்போல வெறியோடு வந்து கொண்டிருந்தான்..

காதர்.. சிரிக்காதடா.. அவன் வர்றான்..

நாங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள அதனையும் மீறி வந்த புன்னகை நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம் என்பதை காட்டிக்கொடுத்தன.

நாயே..எல்லார்கிட்டேயும் பரப்பிட்டியா விசயத்தை..என்று காதரிடம் கேட்டான்

அவனோ இல்லைடா நான் சும்மா இவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்..

எனக்கும் தெரியும்ல உன்னய பத்தி..என்று அவனைத் திட்டிவிட்டு சொல்லுகின்றான்
அவளுக்கு இன்னிக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்..அதான் மூடு மாதிரியா போறாடா.. வேற ஒண்ணும் இல்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சென்றான்.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிட்டுப்பா என்று புலம்பும் ஜனகராஜ் போல அவன் மனசு புலம்பிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்..

என்ன தலைப்பு கவிதைப் போட்டிக்கு இதோ ஒரு எஸ்டிசி தேவதை வந்து என்னிடம் கேட்க

நானோ காதரிடம் டேய் என்ன தலைப்புடா..உனக்குத் தெரியுமா..

ஏதோ அக்கினின்னு ன்னு ஆரம்பிக்குடா..- காதர்

அக்கினியில் வெந்த அன்னங்கள் ன்னு நினைக்கிறேன்..ஏன் உங்களுக்கும் அதே தலைப்பா.. -

ம் உங்களுக்கும் அதே தலைப்பா..என்று நான்; கேட்க

அப்படித்தான் நினைக்கிறேன்..நீங்க எப்படி எழுதப்போறீங்க..

நான் பெண்களின் துயரங்கள் பற்றி எழுதலாமென இருக்கின்றேன்...

நீங்க..

அங்கு ஒரு கடலை சாகுபடி விதைக்கப்படுவதை உணர்ந்த காதரின் வயிற்றிலிருந்து வந்த எரிச்சல் என் கையை கிள்ளியது. எங்கள் நிகழச்சிக்கான ஒத்திகைக்காக நேரம் ஆகியதால் விடைபெற்று கிளம்பி விட்டோம்

நாங்கள் விளம்பரக் கிண்டல் என்ற ஒரு நிகழ்ச்சி செய்வதாக இருந்ததால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டோம்.

எங்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பமானது.. முதல் விளம்பரம் ஹமாம் சோப்புக்கான விளம்பரம்.. அந்த விளம்பரத்தைக் கிண்டலடித்தோம்

ஹமாம் சோப்பு விளம்பரம் ஒன்றை கவனித்திருப்பீர்கள்.

ஒரு ஆமை மெல்ல மெல்ல நகரும். அப்பொழுது ஒரு சிறுவன் அம்மாவிடம் அம்மா அம்மா கல் நகருது என்க அம்மாவோ அது கல்லு இல்லைப்பா அது இயற்கையோட படைப்பு..என்று விளக்குவார்கள். அப்படின்னா இயற்கை நமக்கு என்ன பண்ணிருக்கு என்று சிறுவன் கேட்க..அம்மாவோ இதோ ஹமாம் சோப்பு என்று சோப்பைக் காட்டுவார்கள்..பின் நேர்மைன்னா என்னம்மா என சிறுவன் கேட்க நேர்மைன்னா ஹமாம்..

அந்த விளம்பரத்தை கிண்டலடித்தோம். காதர் மைக்கைப்பிடித்தான் ..
"என் இனிய கல்லூரி நண்பர்களே" என ஆரம்பித்தான்.

ஓ ஓ ஓ பெரிய பாரதிராஜாஜாஜாஜா என்று கத்தினார்கள்.

எங்களுக்கும் அவன்தான் எப்போதும் பிண்ணணிககுரல் கொடுப்பான். நாங்கள் வாய் மட்டும்தான் அசைப்போம்..

சுடலை துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தான்..

அம்மா அம்மா அங்க பாரு கல்லு நகருது என்று ராஜாவைக் கை காட்டினான்.

அப்பொழுது ராஜா முதுகைக் குனிந்து முழங்காலை தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து சென்றான்

அப்பொழுது சேலை அணிந்து கொண்டு அம்மா வேடத்தில் ஜோதி நின்று கொண்டிருந்தான்.

அது கல்லு இல்லைடா..உங்கப்பன்டா..சட்டையைக் கழட்டிப்போட்டு படுத்துக் கிடக்காருடா..

நேர்மைன்னா என்னம்மா?

அது உங்கப்பா பரம்பரையிலே இல்லைடா..

ஹமாம் சோப்பு.. என்று பிண்ணனியில் பலமாய் ஒலிக்கும்

பின் அஜால் குஜால் அல்வா..


ஒவ்வொரு ஆசிரியர்களும் நாங்கள் தயாரித்த அஜால் குஜால் அல்வாவை சோதனையிட வருகிறார்கள் என்ற காதர் சத்தம் போட்டு கூற

நான் மற்றும் ராஜா மற்றும் சுடலை ஆகியோர் ஆசிரியர்கள் போல் வேடமணிந்து அல்வாவை எடுத்து சாப்பிடுவது போல நடிக்கின்றோம்..

இப்பொழுது அல்வா எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமா..?

அல்வாவைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க..எப்படியிருக்கு அல்வா.. என்று ஒவ்வொருவரிடமும் காதர் கேட்க நாங்கள் வாயைத்திறந்து சொல்ல முடியதது போலவும் வாய் திறக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப்போலவும் நடிக்க ஆரம்பித்தோம்.

உடனே காதர் ஆம் இதன் பெருமையை வாய் திறந்து சொல்ல முடியாது
பிகர்களுக்கு முன்னால் எக்ஸாம் மார்க்கை சொல்லுகின்ற ஆசிரியர்களை பழிவாங்க சரியாண தருணம் ..வாங்கிக்கோங்க மாணவர்களே அஜால் குஜால் அல்வா..என்று சொல்ல சரியான கைதட்டல்

கைதட்டல் சப்தத்திற்கிடையே

டேய் ஞானி அங்க பாருடா.அந்த ரைட் சைடுல..இங்கேடா.. மூணாவது வரிசை டா..
- காதர் பக்கத்தில் வந்து கிசுகிசுத்தான்

ம் ராணி அண்ணா காலேஜ் பொண்ணு..அதுக்கு என்ன இப்போ
- நான்

இல்லைடா.. எழுந்து நின்னு கைதட்டுது பாரு..
- காதர் சரியாக கவனித்துச் சொல்கின்றான்

அட நாயே இதெல்லாம் சரியா கவனிச்சு சொல்லு.. மைக்கை பிடிடா.. மைக்கை பிடிடா..

விளம்பரம் தொடர்கின்றது

காதலர்கள் பீச்சில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருப்பது போல் ராஜாவும் சுடலையும் அமர- இந்த முறை ராஜாவுக்கு பெண் வேடம் ( கேட்டு வாங்கிக் கொண்டான் ) நான் அவர்கள் அருகே சென்று என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்று கேட்க நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலையே லவ் பண்றோம் என்று ராஜா குழைந்து பெண் போல சொல்ல

அப்படியா இந்தாங்க அஜால் குஜால் அல்வா சாப்பிடுங்க என்று நான் பெண் வேடத்தில் இருக்கும் ராஜாவிடம் கொடுக்க அவன் சாப்பிட்டு விட்டு என்னுடன் வந்து விடுகின்றான்.

ஆம் அஜால் குஜால் அல்வா காதலர்களையும் மாற்றிவிடும் உடனே வாங்கிக்கோங்க.. - காதர் பிண்ணனியில் எடுத்துவிட நான் வாய் அசைக்க..

கடைசி இருக்கையில் இருந்து விசில் பறக்கிறது .

அடுத்து பராசக்தி வசனம் போல நடித்துக் காட்டினோம். அந்தப்பதிவைக் கூட ஏற்கனவே பதிந்திருக்கின்றேன்.. எங்களுக்கு அடுத்தடுத்து ஜான்ஸ் மற்றும் பராசக்தி - எஸ்டிசி போன்று கல்லூரிகளிலிருந்தும் பல நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆயத்தமாயினர்
நானும் இடையில் கவிதைப்போட்டிக்குச் சென்று அக்கினியில் வெந்த அன்னங்கள் என்ற கவிதையை எழுதிவிட்டு வந்தேன்.

அந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்

நாங்கள் காதர் சுடலை ராஜா மற்றும் எங்கள் கல்லூரி நண்பர்களோடு பார்வையாளர்கள் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம்.

ஆங்காங்கே கடலைகள் விசில் சப்தங்கள் என்று தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ராணி அண்ணா கல்லூரிப் பெண் ஒருத்தி ஏதோ ஒரு பாட்டு என்ற பாடலைப் பாட ஆரம்பிக்க தங்கத்துரை - நான் - ராஜா - சுடலை நான்கு பேரும் எழுந்து அமைதியாக முன்னால் சென்று தோப்புக்கரணம் போட எல்லாரும் ஓ வென கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் தமிழ் ஆசிரியர் தனியாக எங்களை அழைத்து கண்டிக்க ஆரம்பித்து விட்டார்

அந்தப்பொண்ணு பாடும்போது நீங்க போய் தோப்புக்கரணம் போட்டீங்களா..

இல்லை சார் சம்மா கேலிக்குத்தான்..

நம்ம காலேஜ் பற்றி தப்பா நினைக்க மாட்டாங்க.. ஏன் பேரைக்கெடுக்குறீங்க..ஜாலி பண்ண வேண்டியதுதான்..ஆனா மத்தவங்க மனச நோகடிக்க கூடாது..

சாரி சார்..

நான் ஒரு ப்ரண்டாத்தான் சொல்றேன்..புரிஞ்ச்சுக்கோங்க.. ன்னு சொல்லிவிட்டு போய்விட்டார்.

அறிவுரை வாங்கிவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன்..இங்க பாருங்கப்பா ராஜா பெஞ்சு மேல் ஏறி நின்று ஆடிக் கொண்டிருக்கின்றான்.. அட கிளம்பிட்டாங்களா மறுபடியும்..


இந்தப் பருவத்தில் என்ன சொன்னாலும் விளையாட்டாகத்தான் தோன்றும். மாணவப்பருவத்தில் கேட்ட அறிவுரைகளை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்லுகின்ற நிலைகள் வரும்பொழுதுதான் அந்த அறிவுரைகள் புரிய ஆரம்பிக்கும்.




-ரசிகவ் ஞானியார்

Saturday, August 12, 2006

சின்னச் சின்னச் சுவாரசியங்கள் - II

மனைவியுடன் கிண்டலாக விளையாடப்போய் உயிரை விட்ட ஒரு கணவனின் உண்மைக் கதை இது. 1985 ம் ஆண்டு மார்ச் 15 ம் நாள் யூகோஸ்லேவியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்பொழுது வழியில் ஒரு முகமூடி கடையைப் பார்த்தபொழுது அவனுக்குள் ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஆந்த முகமூடியை மாட்டிக்கொண்டு தனது மனைவியை பயமுறுத்திப் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டான்.

பயங்கரமான தோற்றமுடைய ஒரு முகமூடியை வாங்கிக்கொண்டு வீட்டை நெருங்கினாhன். அடிக்கடி வீட்டின் காலிங்பெல்லை அழுத்திவிட்டு வீட்டைச்சுற்றி அங்குமிங்கும் நடந்து கொண்டும் வீட்டைச் சுற்றி சுற்றியும் வந்தான்.

இதனைக்கண்ட அவனது மனைவி மிகவும் பயந்து விட்டாள் யாரோ ஒரு திருடன்தான் வீட்டை கொள்ளையடிக்க நோட்டமிடுகின்றான் என நினைத்துவிட்டாள். உடனே கைத்துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிக்காரனை நோக்கி சுட்டாள்.. குண்டு தலையில் பாய்ந்து அவன் அதே இடத்தில் இறந்து போனான். பின் அந்த முகமுடிக்காரன்தான் தன் கணவன் என்று அவளுக்கு தெரிந்து கதறி அழ ஆரம்பித்தாள். ஆனால் அழுது என்ன பயன்..? அவன் போய் சேர்ந்திட்டானே..?

இது யார்மீது தவறு விளையாட நினைத்த கணவன் மீதா இல்லை விளையாட்டு எனத் தெரியாமல் சுட்டுக்கொன்ற மனைவி மீதா..? அதனால சொல்றேன்பா மனைவியை பயம் காட்டுறேன்னு சொல்லிகிட்டு கோமாளித்தனமா ஏதும் செய்திடாதீங்க..

___________________

செப்டம்பர் 11 - அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். ஆதேபோல 1911 ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நடைபெற்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?


அமெரிக்காவில் நியுயார்க் மாநகரில் உள்ள மான் ஹாட்டனி;ல் ஒரு பத்து மாடிக்கட்டிடம் ஒன்றில் 8 மற்றும் 9 வது மாடியில் சட்டைகள் தைக்கும் நிறுவனம் ஒன்று இருந்தது.

1911 ல் மார்ச் 11 ம் தேதி திடீரென்று அங்கு தீப்பற்றிக்கொண்டது. அங்கு 145 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வந்தனர் இதில் பெருன்பான்மையானோர் 13 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள். தீப்பிடித்ததும் அவர்களுக்கு என்ன செய்வதென்று எங்கு ஓடுவதென்று தெரியவில்லை.

சிலர் தீயிலிருந்து தப்பிக்க ஸன்னல் வழியாக 85 அடி உயரத்திலிருந்து குதிக்க ஆரம்பித்தனர். குதித்தவர்கள் அனைவருமே படுகாயமடைந்து இறந்து போயினர். பலர் புகை மூட்டத்தில் தட்டு தடுமாறி தீயில் அகப்பட்டுக் கொண்டு உடல் கருகி இறந்து போயினர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனையே தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களிடம் 10 வது மாடி வரை செல்ல ஏணிப்படிகளோ - நீர்ப்பீச்சுக்குழாயோ இல்லை. 18 நிமிடங்களில் 133 பேர் உயிரிழந்தனர். 12 பெண்கள் மட்டுமே உயிர்ப்பிழைத்தனர்.

___________________

இமெயில் இன்டர்நெட் வளர்ச்சிகளால் இப்பொழுதெல்லாம் கடிதப்போக்குவரத்துக்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன். வுருங்கால தலைமுறையினர்கள் தபால் என்றால் என்ன,? என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரங்கள் அது போய்ச்சேரும் வரை கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது சில எதிர்பாராத காரணங்களால் கடிதம் போய்ச்சேர தாமதமாகலாம்.

ஆனால் 219 ஆண்டுகள் கழித்து தாமதமாய் போய்ச்சேர்ந்த கடிதம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 1761 ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் 1980 ம் ஆண்டு போய்ச்சேர்ந்திருக்கின்றது. ஸ்வீடன் மன்னர் 12ம் சார்லஸின் படையைச் சார்ந்த ஒரு வீரர் டாமின். 1711 ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மெயர்ஸட்டா எனும் ஊரில் வசித்து வந்த தன் சகோதரி திருமதி நில்ஸ்டாட்டருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டாhர்.

அந்தக் கடிதம் டென்மார்க்கிலுள்ள கோபன்ஹேகன் வந்து சேர்ந்தது. அப்போது டென்மார்க்- ஸ்வீடன் போர் நடந்து கொண்டிருந்தமையால் அந்தக் கடிதத்தை அவர்கள் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

1980 ம் ஆண்டு பழைய பைல்களை நோண்டும்பொழுது இக்கடிதம் டென்மார்க் ஆவணக் காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடனே அக்கடிதம் உரிய முகவரிக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தபால்காரர் அந்தக்கடிதத்தை சேர்க்க அந்தப்பெண்ணின் வாரிசுகளைத் தேடி அலையோ அலையோ என அலைந்திருக்கின்றார். அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பின்னர் அந்நகர நிர்வாகியிடம் அக்கடிதத்தை அந்த தபால் காரர் கொண்டு சேர்த்து விட்டார்.

ஆனால் நமது ஊரில் எல்லாம் இப்பொழுது கடிதங்களை உரிய நேரத்தில் சேர்த்துவிடுகிறார்கள் என்று கேள்வி.(?) தபால்துறை ஊழியர்கள் அந்த அளவிற்கு பொறுப்பாக வேலைபார்க்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

___________________

Thursday, August 10, 2006

முதன் முதலாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில்

தமிழ்நாடு மருத்துவ சேவை சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மாண்புமிகு அமைச்சர் டி. பி. ஏம் மைதீன்கான் அவர்களை அழைத்திருந்தார்கள். என்னையும் வாழ்த்துரை வழங்குவதற்காக அழைத்திருந்தார்கள்.

வாழ்த்துரைக்காக அமைச்சரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவேண்டும் என்ற ஆவலோடு தகவல்களை சேகரித்து கிண்டலும் கேலியுமாக கவிதை நடையில் எழுதி வைத்திருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்திக்கின்ற மேடை இது.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் பற்றிய தகவல்களை அவரது உறவினரும் எனது கல்லூரி நண்பருமான சித்திக் என்பவரிடம் தொலைபேசி செய்து சேகரித்து வைத்திருந்தேன்.

அரசியல் வேஷ்டிகளில் மட்டுமே
கறை உடையவர்
கட்சியிலும் வாழ்க்கைளில்
என்றும்
கறை படியும் என்ற கவலை இனி இல்லை

---
இவர் அடிப்படையில்
வேளாண்மைக் குடும்பத்திலிருந்து
வந்திருப்பவர்

---

சூரியன்
இவரது
வாழ்க்கையையும் உயர்த்தியிருக்கின்றது
விவசாயத்தையும் உயர்த்தியிருக்கின்றது

---

இறுதியாய் ஒரு செய்தி
அதிர்ச்சி அடைய வேண்டாம்
இவருக்கும் ஒரு பொடா சட்டம் …காத்துக்கொண்டிருக்கின்றது
ஆம்
மேலப்பாளைய மக்களின்
இதயங்களில் மாட்டிக்கொண்டு
எப்பொழுதுமே வெளிவரவே முடியாத
அன்பெனும் பொடா சட்டத்தில்
சிறைபட்டுக் கொண்டிருப்பார்

---

என்று வழக்கமான வஞ்சப்புகழ்ச்சி அணியில் சுமார் 4 பக்கத்திற்கு நகைச்சுவையாகவும் மக்கள் ரசிக்கும்படியாகவும் எழுதிய வைத்து விட்டு பேசுவதற்கான தருணத்திற்காக காத்திருந்தேன்..

பயமாக இருந்தது. ஏனென்றால் நான் கல்லூரி மேடைகளில்தான் அனைவரையும் கவருவதற்காகவும் - வெட்டி ஹீரொத்தனத்திலும் கிண்டலாக பேசியிருக்கின்றேன். ஆனால் இது அரசியல் மேடை இங்கு எனது பேச்சுக்கள் எடுபடுமா என்று தெரியவில்லை.

விழா அன்று காலை 11 மணிக்கு சென்று வந்திருந்த சில பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு முதல் வரிசையில் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் உள்ள ஓர் வக்கீல் அவருக்கு சம்பந்தா சம்பந்தா இல்லாமல் ஏதேதோ கேட்டார். நானும் சில மேடைகளில் பார்த்திருக்கின்றேன். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக பக்கத்தில் இருப்பவர்களின் காதினில் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மேடைகளிலும் இந்தச் செயல் வழக்கமாக நடைபெறுவதுண்டு.

அதுபோல சில தொழிலதிபர்கள் - சில அரசியல்வாதிகள் -உள்ளுர் பிரபலங்கள் என்று அறிமுகங்கள் கிடைத்தன.

குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சர் வந்துவிட எல்லாருக்கும் அவர் வணக்கம் சொல்லி கைகுலுக்கி விட்டு ; என்னடா அரசியல் மேடையில் டிசர்ட்டும் ஜுன்ஸ் பேண்ட்டோடு ஒரு இளைஞன் என்று என்னை ஆச்சர்pயமாக பார்த்தாhர். பின்னர் என்னிடமும் கைகுலுக்கி விட்டு போது பக்கத்தில் இருப்பவரிடம் என்னைப்பற்றி கேட்க - அவரோ நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எனது பெயரை சுட்டிக்காட்டி இவர் பெயர் ரசிகவ் ஞானியார் என்று அறிமுகப்படுத்தினார்.

அமைச்சரின் பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். வழக்கமான அரசியல் முலாம் பூசுதல்கள் ஆரம்பித்தது. இங்கிருந்து வந்திருக்கும் இவர்களே - அங்கிருந்து வந்திருக்கும் அவர்களே என்று அனைவரும் இதே பல்லவியைப்பாட எனக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. அமைச்சருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவர் மேடையில் பேசுபவரைப் பார்த்து சரி சரி வரவேற்றது எல்லாம் போதும் விசயத்திற்கு வாங்கப்பா என்று கிண்டலோடு கூற கூட்டத்தில் சிறிய சிரிப்பலை. ஆனாலும் அந்த பேசிக்கொண்டிருந்து அந்த உள்ளுர் அரசியல்வாதி விடவில்லை. அமைச்சர் எரிச்சலாகி பின்னால் திரும்பி எங்களைப்பார்க்க நான் ஒரு புன்முறுவல் தந்தேன்.

பின் என்னிடம் ஏதோ கேட்க எனக்கு சரியாய் காதில் விழவில்லை. என்ன சார்..? என்ன சார்..? என்று எனது சீட்டில் இருந்தபடியே கேட்க - நான் இருந்த இடத்தில் இருந்தபடியே பதில்சொல்வதைக்கண்டு எரிச்சல் அடைந்த அமைச்சரின் பக்கத்தில் உள்ள ஒரு நபர் என்னைச் சைகையில் முன்னால் வரும்படி அன்பாய் எச்சரிக்க நான் முன்னால் சென்று அமைச்சர் அருகே குனிந்து என்ன சார் என்க..?

உங்களை புதுசாப் பார்க்குறேன் இங்க..? நோட்டீஸில் இளம்கவிஞர் ரசிகவ் ஞானியார்னு போட்டிருக்கே..? நீங்க கவிஞரா..?

ஆமா சார் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..என்று நக்கலாய் பதில் அளிக்க அவர் புன்முறுவல் செய்தார்.

சரி ஞானியார்தான் உன்னுடைய உண்மையான பெயரா..? என்ன அர்த்தம்?

ஞானின்னா எல்லாம் அறிந்தவன்னு அர்த்தம் சார் - ஆனா என்னுடைய பெயர் மட்டும்தான் ஞானி..என்று நான் கூற

மறுபடியும் ஒரு சிறிய புன்னகையை வீசினார். சரி நீ ஏதோ புத்தகம் வெளியிட்டிருக்கிறதா சொன்னாங்க அந்தப்புத்தகம் இப்ப இருக்கா..

அய்யோ நான் கொண்டு வரலைங்க..நான் உங்களுக்கு அப்புறமா தரேன்..

சரி கண்டிப்பா தரணும் என்று அவர் கூற நான் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்

அமைச்சரிடம் பேசிவிட்டு வந்ததால் ஏதோ தமிழ்நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டைபற்றி முழுமையாக நான் அமைச்சரிடம் விவாதித்ததைப்போன்ற எண்ணத்தில்
கூட்டத்தில் உள்ள எல்லாரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வில் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

இதற்கிடையில் எனக்கு வரவேண்டிய தேநீர் என்னுடைய இருக்கையைத்தாண்டி சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பேன் நான். அந்த அளவிற்கு தேநீர் பைத்தியம் நான். இப்படி இருக்கையில் என்னைக் கடந்து சென்றுவிட்டதே தேநீர் என்று கடுப்பில் இருந்தேன்.

மறுபடியும் கேட்பது நாகரீகமல்ல. அப்பொழுது திடீரென்று ஒரு பையன் வந்து என்னிடம் தேநீர் கோப்பையை நீட்ட - எனக்கு மகிழ்ச்சி கார்ப்பரேஷன் குழாய் காற்றைப்போல பீறிக்கொண்டு வந்தது.

ச்சே நம்ம ஊருப்பசங்க பாசக்காரனா இருக்காங்களாப்பா

அமைச்சர் மைதீன்கான் பேச ஆரம்பித்தார். ஆனைவரையும் வழக்கமான அரசியல் பாணியில் அவரும் வரவேற்று பேசும்பொழுது தம்பி ரசிகவ் ஞானியார் என்று கூற

அட அவர் வயசு என்ன?..என்னுடைய வயசு என்ன? தம்பின்னு சொல்லி அவருடைய வயசைக் குறைச்சிக்கிட்டாரே..

என்று எனக்குள் சின்ன பொறாமை.



மக்களுக்கு செய்த பணிகள் - குறை நிறைகள் - எதிர்காலத்திட்டங்கள் என்று நிறைய உபயோகமாகப் பேசினார்.

அப்பொழுது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து தம்பி பேசுவதற்குண்டான நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது. இன்னொரு அரசியல் பிரமுகர் ஒருவரும் பேசவேண்டியதிருக்கின்றது. நீங்களும் பேச வேண்டியதிருக்கிறது. ஆனால் நேரமில்லை. யாராவது ஒரு ஆள்தான் பேசமுடியும்.

அவரைப் பேச வைக்கலாமா..? மன்னிச்சுக்கோங்க..

சரி அந்த உள்ளுர் அரசியல் பிரமுகர் ஏதாவது முக்கியமாக பேசுவார் என்று நினைத்து சரிங்க பரவாயில்லை..அவர் பேசட்டும்.. என்று நான் பேச வைத்திருந்த காகிதத்தை மடித்து ஏமாற்றத்துடன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அடுத்து பேசுவதற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதியின் பேச்சை உற்று நோக்க ஆரம்பித்தேன்.


கடுமையான வேலைப்பணியிலும் வந்திருக்கும் அமைச்சர் மைதீன் கான் அவர்களே..

வக்கீல் திரு அபுபக்கர அவர்களே

நெல்லை பில்டர் அசோசியேசன் தலைவர் அமானுல்லா அவர்களே...

...
...

தம்பி; ரசிகவ் ஞானியார் அவர்களே ( நோட்டிஸில் உள்ளதை அப்படியே வாசித்தார் )

அனைவரையும் வரவேற்கின்றேன் என்று தனது நீண்ட கருத்துள்ள உரையை முடித்துவிட்டு அமர்ந்தார். ச்சே இப்படி இவர் பேசுவார்னு தெரிஞ்சா நாம பேசியிருக்கலாமே என்று நான் பட்ட வயிற்றெரிச்சலில் மைக்கில் புகை வந்ததை நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்தான் கவனித்தோம்.


பின் விழாவிற்கு வந்தவர்களை கவுரவிக்கும் வண்ணம் போர்வை போடும் படலம் ஆரம்பித்தது.

இந்த பொன்னாடையை இவர் அவருக்குப் போடுவார்
அவர் இவருக்குப் போடுவார்
என்று சொல்லிக்கொண்டே மருத்துவச்சேவை சங்க உறுப்பினர் திரு..... அவர்கள் ரசிகவ் ஞானியார்க்கு போடுவார் என்று கூற ஆச்சர்யப்பட்டேன். அட நம்மையும் மதிச்சு போடுறாங்களேப்பா என்று எனக்குள் ஒரு கர்வம்.

இந்த பொன்னாடைன்னு சொல்லும்பொழுதுதான் ஞாபகம் வருது. காலேஜ்ல ஒருமுறை அப்படித்தான் மாணவர்ப்பேரவை செயலராக இருக்கும்பொழுது பொன்னாடையை எனக்கு போர்த்தினார்கள். நான் உடனே

பொன்னாடை என்று சொல்லிவிட்டு தள்ளுபடித்துண்டை போர்த்தியதற்கு நன்றி..நன்றி..நன்றி..என்று நான் மைக்கில் சொல்ல மாணவர்கள் உற்சாகத்தில் கைதட்ட பிரின்ஸ்பால் ஒரு முறை முறைச்சாரே பார்ப்போம்..அப்புறம் தனியா கூப்பிட்டு ரெய்டு விட்டதெல்லாம சொல்லமுடியாத கதைங்கோ..

சரி அத விடுங்க..இங்க இந்த விழாவுல அதே பொன்னாடைன்னு சொன்னதால எனக்கு அந்த காலேஜ் ஞாபகம் வந்திடுச்சு..


விழா முடிந்து அனைவரும் கிளம்புகின்ற சமயத்தில் அமைச்சரிடம் அனைவரும் கைகுலுக்கி விடைபெற நானும் அமைச்சரிடம் கைகுலுக்கி விடைபெறும் தருவாயில் அவரிடம் ஹேப்பி பர்த்டே சார் என்க..அவரோ ஆச்சர்யப்பட்டு எனக்கா பிறந்த நாளா என்க..

ஆமா சார் 19.07.1947 உங்க பிறந்த நாள்..இன்னும் 3 நாள் இருக்கு சார் என்க

எப்படித் தெரிஞ்சுது உங்களுக்கு என ஆச்சர்யமாய் கேட்க

இண்டர்நெட்ல இருந்து தகவல் சேகரித்து எடுத்தேன் சார்..பார்லிமெண்ட் புரொபைல்ல இப்படித்தான் இருக்கு..என்று நான் சீரியஸாய் கூற

ச்சோ அது சும்மா கொடுத்ததுப்பா என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

அட நடிகைகள் தான் வயச மறைப்பாங்கன்னு பார்த்தா..அரசியல்வாதிகளும் அப்படித்தானா..என்ற ஆச்சர்யத்தோடு நானும் விடைபெற்று கிளம்பிவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க மற்ற பந்தா காட்டுகின்ற அமைச்சர்களுக்கு மத்தியில் இவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டது என்னை மட்டுமல்ல அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இவர் தனது பேச்சில் கூட குறிப்பிட்டார்

கடுமையான பணிகளுக்கு மத்தியில் நான் வந்திருப்பதாக யாரோ கூறினார்கள்..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க..சும்மா தான் இருந்தேன்..எந்த கடுமையான பணியும் இல்லை..யாருக்காக வரப்போகிறேன்.? மக்களுக்காகத்தானே..? நீங்க கொடுக்கிற கார் - நீங்க கொடுக்கிற பெட்ரோல் - நீங்க கொடுக்கிற பாதுகாப்பு-- நீங்க ஆணையிட்டா வந்து நிற்கப்போகிறேன்...

என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் எந்த அமைச்சருக்கு வரும் சொல்லுங்க..


தொகுதியில் எந்தப்பிரச்சனை என்றாலும் தயக்கம் காட்டாமல் என்னை அணுகலாம் என்று வாக்களித்தார்.

அனைவரிடமுமு; பொறுமையாய் மனுக்களை வாங்கி எளிமையாக பழகிச்சென்ற அமைச்சர் மைதீன் கான் அவர்கள் எனக்கு மிகவும் வித்தியாசமான அமைச்சராகவே தெரிந்தார்.

அது மட்டுமல்ல திடீரென்று உள்ளுர் மருத்துவமனைக்கு சென்று விசிட் அடித்து அன்று சரியான காரணமில்லாமல் பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டுவிட்டு சென்றிருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த அளவிற்கு தொகுதி மக்கள் மீது அக்கறை செலுத்தியிருக்கின்றார் என்று.

இவரைப்பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் இருந்தால்; தொகுதிகள் மட்டுமல்ல தமிழ்நாடே முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..



- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 08, 2006

சின்னச்சின்னச் சுவாரசியங்கள் - I

குற்றால சீசன் களைக்கட்டி வருகின்றது. மக்கள் கோடையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக குற்றால அருவிக்கு வந்து தங்களை நனைத்துக்கொள்கின்றனர். குற்றால அருவியானது ஏழைகளின் நயாகராவாகத் திகழ்கின்றது.

நான் சென்ற வருடத்தில் மட்டும் மூன்று முறை சென்று விட்டேன். எப்பொழுதும் ரசிக்க வைக்கும் யானை - கடல் - ரயில்களின் வரிசையில் இந்த அருவியையும் சேர்த்துக்கொள்ளலாம்..

இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாய் குளித்துக்கொண்டிருக்கும் குற்றால அருவியில் பிரிட்டிஷ் காலத்தில் நம் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விசயம் யாருக்கேனும் தெரியுமா?

ஆங்கிலேயர்களைத் தவிர யாரும் அங்கே குளிக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் அங்கு ஆணையிட்டனர். அதனால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர். நம்முடைய நாட்டில் உள்ள அருவியில் குளிப்பதற்கு மண்ணின் மைந்தர்களான நமக்கே தடையா..? இது என்ன கொடுமை என்று சுற்று வட்டார மக்கள் கொதித்துப்போய் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆந்த நீதிமன்றமோ ஆங்கிலேயர்க்ள குளிக்கும்பொழுது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அருவிக்கு அருகே உள்ள ஆலயத்தில் வேண்டுமானால் ஆங்கிலேயர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வழிபாடுகள் செய்து கொள்ளலாம் என்று ஆணையிட்டது.

இந்தப்பதிலில் திருப்தியடையாத தென்காசி மற்றும் திருநெல்வேலி மக்கள் 1915 ம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர்.. அங்குள்ள ஸர் அனல்ட் என்ற நீதிபதி அருவி என்பது பொதுவானது.

ஆகவே ஆங்கிலேயர்கள் அங்கு இரண்டு மணி நேரமே நீராடலாம் அது மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் திருவிழாக்காலங்களில் அங்கு குளிக்க கூடாது என்று தீர்ப்பளித்ததோடு இல்லாமல் ஹரிஜனமக்கள் தவிர யார் வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று ஆணையிட்டது.

பின்னர் 1938 ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த காலத்தில் ஹரிஜனங்களும் இங்கே குளிக்கலாம் என்று தடையை நீக்கினார்.

நாம் உல்லாசமாய் குளித்து வருகின்ற இந்த அருவிக்குப்பின்னால் எத்தனை ரணங்கள் இருக்கிறது பார்த்தீர்களா?. ஆகவே இனிமேல் குற்றாலத்திற்கு சென்றால் உடலில் நீரை நனைத்துவிட்டு மனசில் ராஜாஜியையும் நினைத்துப் பாருங்களேன்

- ரசிகவ் ஞானியார்

குங்குமத்தில் எனது படைப்பு

இந்த வார குங்குமம் ( 13.08.06) பக்கம் 88 ல் என்னுடைய படைப்பு ஒன்று வந்திருக்கின்றது. நவரச சிறப்பிதழுக்காக நண்பர் பாலபாரதியும், விக்கி என்ற ப்ரியனும் குங்குமத்தில் உள்ள நண்பர் கேட்டதற்கிணங்க என்னிடம் ஏதாவது ஒரு நவரசத்தைப்பற்றி எழுதச்சொல்ல, நான் "காதலை பற்றி எழுதலாமா?" என்று அவரிடம் கேட்க

"யாரைக்கேட்டாலும் இதத்தான் சொல்றாங்க..வேற ஏதாவது தலைப்பை எடுங்கப்பா" என்று கூற

"தெரிஞ்சதைத்தானே எடுக்க முடியும்..சரி சோகம் பற்றி எழுதவா" என்க

"ம் எழுதுங்க எனக்கு நாளைக்கே வேணும்" என்று கண்டிப்பாய் கூறினார்.

குங்குமம் இதழில் நமது படைப்புகள் வருகிறது என்பது சாதாரண விசயமா..? எப்படியாவது எழுதிக் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆவலில் இன்றுவரை என்னைச்சுற்றி நடந்த சின்னச் சின்னச் சோகம் பற்றி எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

நான் துபாயில் இருக்கும்பொழுது என்னுடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவர், தனது தாயாரின் மரணத்திற்கு கூட செல்லமுடியாமல் தவித்ததைப்பற்றி எழுதினேன்.

சரி எதற்கும் மகிழ்ச்சியைப்பற்றியும் எழுதலாம் என்று தீர்மானித்து கல்லூரி நாட்களில் நடைபெற்ற ஏற்கனவே வலைப்பூவில் எழுதிய சில சுவாரசியமான கல்லூரிக் கிண்டல்களைப்பற்றி எழுதினேன்.

3 படைப்புகள் தயார் செய்து நண்பர் விக்கியின் மூலமாக பாலபாரதிக்கு அனுப்பி குங்குமம் நாளிதழுக்கு அனுப்பச்செய்தேன். அவர்கள் சோகத்தை விட்டுவிட்டு கல்லூரி நாட்களில் நடைபெற்ற கிண்டலான சம்பவத்தை தேர்ந்தெடுள்ளார்கள்.

எனது படைப்புகள் மட்டுமல்ல அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களின் ( ரசிகவ் - விழியன்- ஜெஸிலா - ஜொள்ளுப்பாண்டி - நிலா )படைப்புகள் பெருன்பான்மையாக இடம் பெற்றுள்ளன.

தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்த நண்பர், குங்குமம்பொறுப்பாசிரியர் கௌதம் மற்றும் நண்பர் பாலபாரதி மற்றும் விக்கி அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுபோன்று வலைப்பதிவாளர்களுக்கு குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் தருகின்ற ஆதரவுகளால் அவர்கள் மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமையும்.

இப்பொழுது வலைப்பதிவர்கள் மீதும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களின் பார்வை விழுந்துவிட்டது என்பதே வலைப்பதிவர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.

இப்பொழுது பத்திரிக்கைகளே வலைப்பதிவினரின் பதிவுகளை தேர்ந்தெடுத்து தங்களுடைய பத்திரிக்கையில் பிரசுரிக்கும் அளவிற்கு வலைப்பதிவினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.



-ரசிகவ் ஞானியார்

Monday, July 24, 2006

எனக்காக ஒரு கடிதம்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. ஆகவே நிலவு நண்பனைக் காணவில்லை என்ற அறிவிப்புகள் வருவதற்கு முன் வந்து ஆஜராகி விடவேண்டும் என்ற அவசரத்தில் வந்திருக்கின்றேன், "எனக்கு ஒரு கவிதை எழுதி தாடா" என்று கேட்டகல்லூரி தோழிக்கு ( ? ) எழுதிய ஒரு பழைய கடிதத்தோடு. இனிமேல் பல சுவாரசியமான பதிவுகளோடு தொடர்ந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு...



உனக்கே உனக்காக ...
ஒரு கவிதை!

உன்னைப்பற்றியா...? - இல்லை
உனக்காகவா?

உன்னைப்பற்றி
எழுதவேண்டுமானால்...
மன்னித்துக்கொள்ளடி!
எனக்கு
கவிதையைப்பற்றி
கவிதை எழுதத்தெரியாது... (! ...ஐஸ் )

உன்னைப்பற்றிய கவிதைகளில் -
சில உளறல்கள்...
சில நிஜங்களின் தடுமாற்றங்கள்;...
சில தயக்கம்...
வெளிவந்துவிடுமோ என்ற
அச்சத்தில்...
மொத்தத்தை சொல்லாமல்
மிச்சத்தை உளருகிறேன்
பெண்ணே!

உன் தலைக்கனம் பற்றி
கல்லூரியில் சிலர் கனைக்க
நானோ
ஆண்கள் செய்தால் கிண்டல்
பெண்கள் செய்தால் தலைக்கனமா?
என
பெண்ணுரிமை பேசிய - என்னை
சந்தேகமாய் பார்த்த
என் வகுப்பறை தோழிகள்...

எத்தனை பேருக்கு
வாய்த்துவிடப்போகிறது...?
தன்
கல்லூரி நண்பர்களோடு
கடைசிவரை பயணித்திட...
நண்பனாகவோ
அலுவலகத் துணையாகவோ..
பக்கத்துவீட்டுக்காரனாகவோ..
வாழ்க்கைத்துணையாகவோ (?)..

எனக்கும் வாய்க்கும்
என நம்பிக்கையிருக்கிறது..
நீ கடைசிவரை
ஒரு தோழியாக!
என் வாழ்க்கையில் கடைசிவரை

ஆரஞ்சு மிட்டாய்க்காக
ஆகஸ்டு 15 -ஐ எதிர்நோக்கும்
பள்ளிச்சிறுவனைப்போல...

ரமலான் முதல் நோன்பில்
நோன்பு திறக்கும் நேரம் காத்திருக்கும்
ஓரு முகம்மதியனைப்போல¸

சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள் ,
காத்திருப்புகள்,
எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு

ஆனால்
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்..
கட்டபொம்மன் பேருந்து வரை!

உன்
துப்பட்டா பற்றி
தூர்தர்ஷனில் சொன்னார்களாமே?
அப்படியா ... ?

முதன்முதலில்
உன்னைப்பற்றிய
எதிர்பார்ப்புகளை கொடுத்ததே
உன் துப்பட்டாதான் தெரியுமா ?

துப்பட்டாவின் பின்புறம்
நீ இடுகின்ற முடிச்சில்
மாட்டிக்கொணட...
மாணவர்களில் நானும் ஒருவன்!

ஒற்றை இருமலை
இரட்டையாய் ( ? ) எதிரொலிக்கும்...
நம் கல்லூரி வராண்டா

மீசையில்லாத முகத்தோடு
உன் முன்
அசடு வழிந்தபடி நின்ற
மாடிப்படி ஏரியா,

கடந்து செல்லும்பொழுதெல்லாம்
உளவு பார்க்கத் தூண்டிய
கம்ப்யூட்டர் லேப்,

உன்
நோட்டுப்புத்தகத்திலிருந்து
காகிதம் வலிக்காமல்
கிழித்தெடுத்த
கண்ணதாசன் கவிதை...,

கொடுத்து அனுப்புவதில் நேசமல்ல - என்று
நான் திருப்பி அனுப்பிய
வாழ்த்து அட்டையை
நேரில் கொடுத்து
நேசமுணர்த்திய நாட்கள்,

இப்படி உன்னை ஞாபகப்படுத்துகின்ற....

துப்பட்டா..
கல்லூரி வராண்டா..
மாடிப்படி ஏரியா..
கம்ப்யுட்டர் லேப்..
கிழித்த கவிதை..
வாழ்த்து அட்டை..

என
உயிறற்றவைகளை கூட...
மறக்கமுடியவில்லை!

உன் முகம் மறந்திடுவேனென்று...
புகைப்படம் அனுப்பி
புண்படுத்திவிட்டாயடி!

ஆகவே
திருப்பித்தர மாட்டேன்
உன் புகைப்படத்தையும்
அந்த நினைவுகளையும்!

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்...
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !

- ரசிகவ் ஞானியார்

Friday, June 30, 2006

மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்

Photobucket - Video and Image Hosting

தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..? ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள்.

மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப்பற்றி மட்டும்தான் எழுதப்போகின்றேன்.

சரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே..அப்புறம் கருத்துச்சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.

அப்படியென்ன துரோகம் என்கிறீர்களா..? வேற என்ன விபச்சாரம்தாங்க..
தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள்.


நான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:

துபாய்

பகலில்
கட்டிடக்கலை அழகு
இரவில்
கட்டிடக் கீழே அழுக்கு



பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்

எனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்தொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த பவர்ணன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர்சுற்றிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முத்தேர்வே நடத்தியிருக்கின்றேன்.

எப்படி ஆரம்பிச்சது இது..?

ஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்.. பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது.

(அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்;)

சரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..?

இல்லை..அந்தப்பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு..இங்க தனியாத்தான் இருக்கா..


சரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா?

சில சமயம் சொல்லுவா..ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன்

உங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..?

ம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்..

( என்னடா இழவாப் போச்சு..தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா..அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)

ஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க..அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..?

ஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா..என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..
( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது )
அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.

எப்படி சமாளிக்கிறீங்க..வீட்டுக்கு பணம் அனுப்பணும்..இங்க வாடகை - அவளுக்கு செலவு..?

ஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா..இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன்

( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..)

சரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..?அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..?

என்ன செய்ய இப்ப விட்டுட்டேன்..இப்ப அதெல்லாம் இல்ல..என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்

அதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த பவர்ணத்தை..

ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..?

ஊரில் இவருடைய மனைவியைப்பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண்போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?


எனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த
ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச்சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும்பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும்பொழுது நம்ப முடியவில்லை.

அவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்துபோய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினாhன்.

ஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா..அப்போ ஒரு போன் வந்திச்சு..நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில்ஒரு பொண்ணு பேசுறா..நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்..அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்..

அதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப்பற்றி விசாரிக்கும்பொழுது பல தகவல்கள் கிடைத்தது

அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று.

பின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுவிட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அந்தப்பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப்போனார்.

கடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார்.


அவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்..? கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக்கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்?


ஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

அவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார் என தெரிந்து கொண்டேன்.

அவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..?

ஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார்
இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார்.

அந்தப்பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது.

இவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக - இறைபக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் - விலைஉயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்.

ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..?

விடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை.

கணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியுமா அவளுக்கு..?

ஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள்.

இவர்களைப்பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்..? அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா..? அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள்? வாழ்நாள் முழுவதையும் விலைமாதுக்களுடனையே கழித்துவிடவேண்டியதுதானே..?

சமீபத்தில் நான் கண்ட ஒரு அருமையான திரைப்படம் மெர்க்குரிப்பூக்கள். அதில் காமெடி நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கும். டெலிபோன் பூத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து இறுதியில் அந்தப்பெண் பாதி உடலுக்கு மேல் இயங்காத ஊனமுற்றவள் எனத்தெரிந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளுவார். படத்தின் க்ளைமாக்ஸே அந்தக் காட்சிதான். சினிமாவுக்குத்தான் அந்தக்காட்சி சரிவரும் என்றாலும் மிகவும் மனதை உருக்கிய காட்சி. மனைவியை உணர்சிகளை புரிந்து கொள்ளாமல் உடல் உறவுக்கு மட்டும் மனைவியை தேவையாக்கிக் கொள்ளும் கணவன்மார்களுக்கு அந்தக்காட்சி ஒரு சாட்டையடி.

இதில் பெரிய ஆச்சர்யம் என்றால் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் சில வருடங்களாய் பிரிந்து இருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

உடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்துகொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.

சென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச்சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சகா என்ற இளைஞன் ஒரு ரஷ்யப்பெண்ணிடம் விலைபேசிக்கொண்டிருந்தான்.

மாடுகள் விலைபேசுதலில்
கைகள் மூடப்படுகிறது
இந்த
மனித விலைபேசுதலில்
கற்புகள் மூடப்படுகிறதா..?


அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலைபேசிவிட்டானா தெரியவில்லை?

நான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான் .

நானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்றுபார்த்து கவனித்துவிட்டு பின் விலைபேசிக்கொண்டிருந்த அந்த ரஷ்யப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கின்றான்

உடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப்படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.

இதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு.


எவளோ ஒருத்தி விதவையாகட்டும்
பரவாயில்லை
மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு
மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன?


- ரசிகவ் ஞானியார்

Thursday, June 29, 2006

பழைய மனசு

Photobucket - Video and Image Hosting

( 2000 ம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் எனது நண்பனுக்காக எழுதிய கவிதை ஒன்று. )


அன்று
எதேச்சையாய் சந்தித்தோமே..
எக்மோர் நிலையத்தில்?
ஞாபகமிருக்கிறதா
பழைய காதலியே!

என்னுடைய குடும்பம்
என் தங்கை திருமணம்
கல்லூரி வாழ்க்கை
கிண்டல்கள்
நண்பர்கள் நிலை
சுற்றுலா சென்ற ஞாபகம்
ஸ்டிரைக்கில் ஏற்பட்ட கலாட்டா
இருக்கையை உடைத்து அபராதம் கட்டியது
திட்டிய தமிழ் வாத்தியார்
எல்லாம் விசாரித்துவிட்டு
என்னை விசாரிக்காமல் சென்றவளே
அந்த மௌனம்
சேது பட இறுதிக்காட்சியை விடவும்
கொடுமையாய் இருந்ததடி

எங்கே விசாரித்தால் - உனக்கு
அழுகை வந்துவிடுமென்றா
அமைதியாக இருந்தாய்?
நல்லவேளை விசாரிக்கவில்லை
நானும் அந்த நிலைதான்!

நான் மிகவும்
மெலிந்திருப்பதாய் கூறினாயடி..?
உன் உள்மனசை
உசுப்பிக் கேட்டுப்பார்..
நான் மெலிந்த காரணத்தை!
சத்தியமாய் உனக்குத்
தெரியாதா..?

உன் திருமணத்திற்கு
அழைப்பிதழ் அனுப்பிவிட்டு
நான்
வராமல் போனதற்காக
வாழ்த்து அனுப்பினாயே?
ஞாபகமிருக்கிறதா..?

அதோ!
தேநீர் சாப்பிட்டுவிட்டு வந்த
உன் கணவனை
எனக்கு அறிமுகப்படுத்தினாய்!
ஆனால்
என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீ
எனக்கு
அறிமுகமில்லாமலையே போய்விட்டாயடி!

நான் பைக்மோதி
நீ பட்ட காயம்
இன்னமும் ஆறவேயில்லையோ?
என்
இதயம் போலவே!

கல்லூரி நாட்களில்
என்னைப்போலவே

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

அதோ தூரத்தில்
ரெயில் வரும் சப்தம்
காற்றுக்குத் தெரியாமல் என்
காதில் விழுகின்றது!
கணவனுக்குத் தெரியாமல் உன்
கண்கள் அழுகின்றது!

இதோ! இதோ
இரயில் நின்றுவிட்டது..

என் இதயமோ
ஓட ஆரம்பிக்கின்றது!

இங்கே பார்
உனது குழந்தைகூட எனக்கு
டாட்டா காட்டுகிறது
உன்னைப்போலவே..

நீயோ கிளம்பிவிட்டாய்
இப்பொழுதும் நான்
காத்துக்கொண்டிருக்கின்றேன்..

புரியவில்லையா
புகைவண்டிக்காகத்தான்..

உன்னுடைய பயணம்
எந்த நிறுத்தத்திலாவது
நின்றுவிடும்
ஆனால் நானோ
திசையே தெரியாமல்
பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

நீ கடந்து போன ரெயில்
கண்ணை விட்டு மறையும் வரையிலும்
என் இதயம்
மூன்றாம் பிறை கமல்போல
மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருக்கின்றது

பழைய காதலியே! மீண்டுமா
பாதியில் விட்டுப்போகின்றாய்
பரவாயில்லையடி!

ஏற்கனவே கிடைத்த
அனுபவத்தால்
இந்த இரண்டாம்பிரிவில்
இதயம் திடப்பட்டுக்கொண்டது.


எந்தப் பத்திரிக்கையின்
மூலையிலாவது..
பிரசுரமாகியிருக்கும்
எனது கவிதையைக்கண்டு
அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற
அசட்டு நம்பிக்கையில்தான்
இந்தக்கவிதையையும்
எழுதியிருக்கின்றேன்!

இனியொரு ஜென்மமிருந்தால்
நாம் படித்த ...
அதே கல்லூரியில்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ளாமலையே
பிரிந்துவிடுவோம்.


மீண்டும்
எந்தச் சந்திப்பில்
சந்திப்போமோ என்ற
சங்கடத்தோடு பிரிகின்றேன்.
போய்வாடி! டாட்டா..

- ரசிகவ் ஞானியார்

துபாய் சிட்டி ரவுண்ட்

Photobucket - Video and Image Hosting

அதிசய பேருந்து

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து இது. சாலையில் வந்து கொண்டே இருப்பீர்கள் திடீரென்று எட்டிப்பார்த்தால் அந்தப் பேருந்து கடலில் செல்லும். என்னடா பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சாலையில் இருந்து கடலுக்குள் செல்லுகின்றது இந்தப்பேருந்து. 44 இருக்கைகள் அடங்கிய இந்தப் பேருந்து 2002 ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து அமெரிக்காவின் கைவண்ணம்.

முழுவதுமாய் குளிரூட்டப்பட்ட பெரிய டிவி மற்றும் குளியல் அறை கொண்ட பேருந்து இது. பயண நேரங்களில் தேவைக்கேற்ப உணவும் குளிர்பானமும் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் கீழும் லைப் ஜாக்கெட் வைக்கப்பட்டுள்ளது.

பயணமானது பர்ஜுமான் என்ற பெரிய அங்காடிப்பகுதியிலிருந்து ஷேக் செய்யது சாலை அல் வாசல் பாலம் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் - அல் பூம் உணவகம் வழியாக கடலில் சென்று விழுகின்றது. கிரீக் பார்க் - துபாய் நீதிமன்றம் - அல் மக்தூம் பாலம் - ஷேக் மரியம் அரண்மனை வழியாக கடலில் பயணம் செய்து மீண்டும் பர்ஜுமான் அங்காடியை அடைகின்றது

சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் துபாயைச் சுற்றுகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாக காலை 11 மணியளவிலும் மாலை 4 மணி அளவிலும் இந்த பேருந்து செயல்படுகின்றது.
பேருந்து கிளம்புவதற்கு 20 நிமிசம் முன்பாகவே அந்த அங்காடிப் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

3 முதல் 12 வயது உள்ள சிறியவர்களுக்கு 115 திர்ஹம்
பெரியவர்களுக்கு 75 திர்ஹமும் வசூலிக்கின்றார்கள்
.

கட்டணம் வித்தியாசமமே தவிர பெரியவர்களுக்கும் குழந்தை தனத்தைக் கொடுத்து குதூகலமூட்டும் இந்தப்பயணம்.


Photobucket - Video and Image Hosting

பாலைவனப் பயணம்

சாலையிலும் கடலிலும் பணம் செய்வதை விடவும் ஆள் அரவமே இல்லா பாலைவனத்திற்குள் பயணம் செய்வது என்பது மிகவும் மெய் மறக்க வைக்கின்ற செயலாகும்.
தினமும் மாலை 3.30 அல்லது 4.30 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற பயணம் சுமார் 5 அல்லது 6 மணிநேரப்பயணமாக பாலைவனத்திற்குள் சுற்றுகின்றது.

கார் பாலையின் மேடு பள்ளங்களில் பாய்கின்றபொழுது கலைத்து வீசப்படுகின்ற மணலும் தூசி மண்டலங்களும் கார் கவிழ்ந்து விட்டதோ என்று நம்மை அலற வைக்கின்ற தருணங்களும் மிகவும் திரில்லாக இருக்கும்.

இந்த பயணத்தில் ஒட்டகச் சவாரி - உணவக வசதி - பெயிண்டிங் ( கைகளில் கால்களில் பெயிண்ட்டிங் செயது கொள்ளலாம் ) - சீஷா என்று அழைக்கப்படுகின்ற அரபிக்கள் குடிக்கின்ற சிகரெட் போன்று ஆனால் போதையில்லாத உடலுக்கு கேடு தராத வாட்டர் பைப் - பெல்லி நடனம் ( மின்விளக்கில் ஆடுகின்ற நிலவுகள் ) ஆகியவை உள்ளடக்கம்

பயணத்தின் போது சூரிய அஸ்தமனத்தைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். அத்தனை அழகு காட்சி. தண்ணீருக்குள் இருந்து சூரியன் வருவதைக் கன்னியாகுமரியில் கண்டிருப்பீர்கள். ஆனால் பூமியில் முளைக்கின்ற சூரியனைக் கண்டிருக்கின்றீர்களா..?
பயணத்தின் உச்சக்கட்டமே இதுதான்.

175 திர்ஹம் டாலர் பெரியவர்களுக்கு
110 திர்ஹம் சிறியவர்களுக்கு

Photobucket - Video and Image Hosting

ஆடம்பர கார் பயணம் (Luxuries Limo)

இந்த காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு துபாயை சுற்றிப்பார்க்க கிளம்பலாம்.
மிகவும் ஆடம்பரமான மற்றும் நீளமான காரில் ராஜாக்களைப் போல நாம் வலம் வரலாம்.
காரினுள் உணவக வசதி உண்டு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதுபோன்ற காரில் பயணம் செய்த அனுபவம் வேண்டும்.

Photobucket - Video and Image Hosting

இரட்டை அடுக்கு பேருந்து

திறந்த மேல் அடுக்கினைக் கொண்ட இந்த இரட்டை அடுக்கு பேருந்தில் உல்லாசமாக சுற்றி வரலாம். லண்டனுக்கு அடுத்து இந்த பேருந்து கம்பெனி துபாயில்தான் அதன் சர்வீஸை ஆரம்பித்துள்ளது.


பேருந்தின் மேல் அடுக்கில் 41 இருக்கைகளும் கீழ் அடுக்கில் 27 பேர் அமரும்படிhயக இருக்கைகள் உள்ளன. இந்த பயணமானது 1 .30 மணி நேரம் பயணிக்கின்றது. ஆனால் இந்த நேரம் வாகன போக்குவரத்து நெருக்கடியைப் பொறுத்தது.

இந்தப் பயணத்தில் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் துபாய் கடற்கரைப்பகுதி பிரிட்டிஷ் தூதரகம் துபாய் மியுசியம் - பர்துபாய் பழைய மார்க்கெட் வீதி - ஜுமைரா பீச் பகுதி - ஷேக் செய்யது அல் மக்தூம் வீடு மற்றும் கலாச்சாரக் கட்டிடங்கள் - தங்க மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளை கடந்து துபாய் இரட்டைக் கோபுரத்தில் வந்து முடிகின்றது.

காலை 10 மணியிலிருந்து ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பேருந்து வாபி சிட்டியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இரவு 10 மணி வரை இந்த பேருந்து சர்வீஸ் உண்டு.

இதன் விலையானது
பெரியவர்களுக்கு 50 திர்ஹமாகவும்
சிறுவர்களுக்கு 30 திர்ஹம் ஆகவும்
இரண்டு பெரியவர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட உள்ள ஒரு குடும்பத்திற்கு 130 திர்ஹமும் மற்றும்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இலவசமாகவும் நிர்ணயித்துள்ளது

ஆனால் சீசன் காலங்களில் இதன் விலை வித்தியாசப்படுவதுண்டு. இந்தப் பேருந்தை தனியாக நாம் மட்டும் வாடகைக்கு அமர்த்தி நமது குடும்பங்கள் - நண்பர்கள் - உறவினர்கள் என்று உல்லாசாய் சுற்றலாம்.

Photobucket - Video and Image Hosting

ஹத்தா சபாரி

ஹத்தா என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பகுதியானது மலைப்பாங்கான பகுதியாகும்.

சமீபத்தில் எங்களுடன் வந்த எனது நண்பர் ஒருவர் பயணத்தின் போது பயத்தில் கண்களை திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டார். அந்த அளவிற்கு மிக ஆழமான பள்ளங்கள் - மேடுகள் என்று பயணம் மிகவும் திரில்லாக இருக்கும். இங்கே மில்லியன் ஆண்டு பழங்கால வித்தியாசமான நிறங்களில் மலைகள் மற்றும் மண்களின் நிறங்கள்..
வாடி என்று அழைக்கப்படுகின்ற நீர் வீழ்ச்சி -இயற்கை நீச்சல் குளங்கள் மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் 16 வது நூற்றாண்டு கோட்டை மற்றும் விவசாய விளை நிலங்கள் என்று பயணம் கொஞ்சம் வித்தியாசமான சூழலைத் தருகின்றது.
Photobucket - Video and Image Hosting

அல் அய்ன் சுற்றுலா

அல்அய்ன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நகரமானது அமீரக கூட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய நாடாகும். மிகவும் பசுமை நிறைந்தது. இங்குள்ள நிலங்களில் இருந்துதான் அதிகமான காய்கறிகளும் பேரீத்தம் பழங்களும் உற்பத்தியாகின்றன.

இங்கு ஹில் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற பசுமை நிறைந்த தோட்டங்கள் வழியாக செல்லுகின்ற பயணம் அமீரகத்தின் மிகப்பெரிய ஒட்டக சந்தையில் முடிகின்றது.
இந்தச்சுற்றுலாவில் அல் அய்ன் மியுசியம் - உயரமான மலைப்பகுதி - கண்கவரும் நிலப்பகுதிகள் என்று பயணம் தொடர்கின்றது.

Photobucket - Video and Image Hosting


படகு உணவுப் பயணம்

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நிலாச்சோறு உண்டிருப்பீர்கள். ஆனால் நிலாவுடன் பயணதித்துக்கொண்டே நிலா வெளிச்சத்தில் உணவு உட்கொள்வதற்கான அருமையான தருணம். பிறந்த நாள் விழா - திருமண விழா என்று நண்பர்களுக்கு உறவினர்களுக்கு விருந்து கொடுக்கலாம். படகில் இருந்த படியே சுற்றியுள்ள கலாச்சாரக் கட்டிடங்களையும் மன்னரின் பிறந்து வளர்ந்த இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணப்படலாம்.

இரவு நேரங்களில் கடல்வெளியினில் உணவு உட்கொண்டு கொண்டே பயணப்படுவது என்பது மனசை மிகவும் மகிச்சியூட்டும் செயலாகும்.




- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 28, 2006

ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு

வலைப்பதிவு ஆரம்பித்த சென்ற வருடத்திலிருந்து நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன் இந்த நட்சத்திரப்பட்டாளங்களை. ஆனால் நான் எப்பொழுதுதான் நட்சத்திரமாவதாம். ?

தமிழ் மணத்தில் அடிக்கடி எப்படி நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற விதிமுறைகளை கவனித்துக்கொண்டு அதன்படிதான் எழுதுகின்றேன். ஆனாலும்
எனக்குப் பிறகு வந்தவர்கள் எல்லாம் நட்சத்திரமாவதைக்கண்டு பொறாமை கொண்டேன்.

இப்பொழுது என்னையும் தேர்ந்து எடுத்துவிட்டார்கள் என்பதில் மிக்கமகிழ்ச்சி. ஆம் ஒரு நிலவு நட்சத்திரமாகின்றது.

என்ன எழுதலாம் என்று தீர்மானிக்கவில்லை. ஆனால் உபயோகமாக எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது.

இந்த நிலவை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கும் எனக்கு தொடர்ந்து விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் விமர்சனம் எழுத முடியாவிட்டாலும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய திருமணத்திற்கும் நட்சத்திரமானதிற்கும் தொலைபேசியிலும் - வலைப்பதிவில் விமர்சனங்கள் தந்தும் வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, June 26, 2006

நிலவுக்கு திருமணம்

அன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு




புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நிலவுநண்பன் தன்னுடைய திருமண தகவலை தெரிவிக்காமல் இருந்தால் அது துரோகமல்லவா..?


நிலவு துபாயிலிருந்து 21ம் தேதி புறப்பட்டு 22ம் தேதி இந்தியா வந்தடைந்தது.
பயணக்காரன் பைத்தியக்காரன் என்று எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லுவதுண்டு. அதுபோல பயண தேதி முடிவானதிலிருந்து எதுவுமே ஓடவில்லை.

ஷாப்பிங் - லக்கேஜ் - விடைபெறுதல் என்ற பரபரப்பான சூழ்நிலையினில் வலைப்பதிவில் தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஆகவேதான் நண்பர் முத்துக்குமரன் அவர்கள் என்னுடைய சார்பில் அவரது வலைப்பதிவில் தெரியப்படுத்தினார். அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னடா நிலவு நண்பன் சொல்லாமல் சென்றுவிட்டாரே என்று நண்பர்கள் மத்தியில் உள்ள சலசலப்பை நீக்குவதற்காகத்தான் கடுமையான வேலைப்பளுவிலும் வலை நண்பர்களைத் தேடி ஓடோடி வந்திருக்கின்றேன்.

பேச்சிலராக சுற்றிக்கொண்டிருந்த நிலவு நண்பன் வருகின்ற ஜுலைமாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பேச்சு இலராக மாறப்போகின்றான். அதாங்க திருமணம் நடக்கப்போகுதுப்பா..

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அன்னை திருமண மண்டபத்தில் வைத்து எனக்கும் என்னுடைய கல்லூரி தோழி ஜஹான் என்ற பெண்ணிற்கும் திருமணம் இறைவனின் கண்காணிப்பில் நடக்கவிருக்கின்றது.
Photobucket - Video and Image Hosting

நிலவை ரசித்தவன்
நிலவில் வசிக்கப்போகின்றான்

இடங்களின் தூரங்கள்
அதிகமாய் இருந்தாலும்
இதயங்களின் தூரத்தைக்
குறைத்துக் கொண்டு வாருங்கள்.

வெறுப்புகள் - பொறாமைகள் - வஞ்சகங்களை
திருமண மண்டபத்தின்
வாசலில்
செருப்புகளோடு கழட்டிப்போடுங்கள்.

நட்புகள் - பாசங்கள் - அன்புகள் உடன்
மணமேடையில்
எங்கள் மீது
பொறுப்போடு பூக்கள் போடுங்கள்.

மின்னஞ்சலோ
குறுந்தகவலோ
கடிதங்களோ
தந்தியோ
எந்த ஊடகம் வழியேனும்
பூக்கள் வீச அனுமதியுண்டு

மறந்து போச்சு
வேலை அதிகம்
நேரம் இல்லை
முக்கிய திருமணம் என்ற
எந்த அலட்சியம் வழியேனும்
பொய்கள் வீச அனுமதியில்லை.

வாழ்த்துக்கள் வரட்டும் விரைந்து - ஆனால்
நேரில் வந்தால்தான் விருந்து

---


இதோ
தத்தி நடந்த பறவைகளுக்கு
சிறகுகள் முளைக்கின்றது.

குழந்தையை விரல்பிடித்து
வழிநடத்தும் தாய்போல
எங்களை
இதயம் பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்

விண்நோக்கி
பறப்பதற்காய் புறப்படுகின்றோம்

கழுகுகள்
கண்விட்டுத் தப்பிக்கவும்
குருவிகளோடு
கொஞ்சி விளையாடவும்
கற்றுத்தாருங்கள்

கைகள் இணைந்து
கனவுகள் மெய்யாகட்டும்
அன்புகள் கலந்த
ஆசிர்வாதங்களே மொய்யாகட்டும்

இந்த அழைப்பிதழில் எங்கேனும்
வார்த்தைகளில்
பிழையிருந்தால் விட்டு விடுங்கள்.

நாங்கள் வாழும்காலம் முழுவதும்
வாழ்க்கையில்
பிழையிருக்காதென வாழ்த்துக் கொடுங்கள்.

நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் காத்திருக்கின்றாளே என்ற ஒரு எதிர்பார்ப்புகளில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். கமுவில் இருந்ததைப்போல கபியில் இருக்க முடியாதே. என்ன செய்ய..? சுதந்திரம் பறிபோவது போல இருக்கிறதே என்ற பயம் கலந்த மன ஓட்டத்தில் நாட்களை எண்ணுகின்றேன்.

முன்பெல்லாம் வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டே தூங்கிவிடுவேன். மின்சார செலவை பொருட்படுத்தாமல் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு வேடிக்கைப் பார்ப்பேன். ஆனால் இப்போது ஒவ்வொரு விளக்காக தேடி எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க முற்படுகின்றேன். அட நமக்கும் பொறுப்பு வந்துடுச்சுங்க..

எங்கெங்கோ இருந்துகொண்டு முகம் தெரியாமல் நம்முடைய எல்லா உணர்வுகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே என்னுடைய திருமணத்திற்கு தங்களின் வருகை - வாழ்த்து - ஆசிர்வாதங்கள் எல்லாம் மிக அவசியம்.
நாம் வலைகளில் மட்டுமே பழக்கப்பட்டிருந்தாலும் நம்முடைய நட்புகள் விலை கொடுத்து வாங்க முடியாதது.

வாழ்த்து தெரிவிக்க அல்லது நேரில் வர விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். (00919843547888)

திருமணத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு முன்னரே தகவல் தெரிவித்தால் நல்லது என்று எண்ணுகின்றேன்.


என்னை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இது எனக்கு தமிழ்மணம் தந்த கல்யாணப்பரிசாக ஏற்றுக்கொள்கின்றேன். இதனைப்பற்றிய பதிவினை அடுத்த பதிவாக தருகின்றேன்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Sunday, June 18, 2006

அப்பாவுக்காய் ஒரு கடிதம்

அப்பாக்களின் தினத்தை முன்னிட்டு ஏற்கனவே வெளியிட்ட அப்பாவுக்காய் ஒரு கடிதம் என்ற கவிதையை மீள்பதிவாக வெளியிடுகின்றேன்.

அப்பாக்களை ஞாபகப்படுத்த ஒரே ஒரு தினம் மட்டுமாவது கண்டிப்பாய் தேவைப்படுகின்றது. இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ..


அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...
இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -
என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ
தியேட்டர் சுவரை மீறி
செலவழித்தேன் அப்பா!

நான்
கேட்கத் தயங்குவேனெனத் தெரிந்து
எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால்
நான்
அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!

நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...

உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது...

நீ மிதித்த சுவடுகள்
சைக்கிள் பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான்
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து
பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ...
வேலைதேடிய எனக்கு
நீ பணம் அனுப்பினாயே ?

இப்படி
இதய தேசத்தில்
உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!

உன் பாக்கெட்டில்
பணம் திருடியது
நான்தான் என தெரிந்தும் ...
இதுவரை
எனைக் காட்டிக்கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய்
நீ செய்த பாசாங்கு!

இதுபோல
கடிதம் சுமக்காத
பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........
என்னுள்ளும் .........

நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!



-ரசிகவ் ஞானியார்

Thursday, June 15, 2006

ச்சும்மா தமாசு

என்னடா நாலு சங்கிலி பதிவு - ஆறு பதிவுன்னு போய்கிட்டு இருக்கு நாம சும்மா இருக்கலாமா . அதான் எடுத்து வுட்டுறுக்கேன் ஒரு 5 பதிவு. நீங்களும் எடுத்து விடுங்களேன்.

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி -
கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

3.கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட
மறக்கமுடியாத சண்டைகள்?

4.எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

5.இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

*************************

1.நீங்கள் சின்ன வயதில் விளையாடிய மறக்க முடியாத விளையாட்டு
எது?

கோலி - சீட்டு - பம்பரம் - நாய் வளர்த்தல் - தெல்கா - கிரிக்கெட் என்று பலவிதமான சீசன் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.

கோலி

கோலிக்குண்டுகள் போட்டியில் இரண்டு கோடுகள் கிழித்து ஒரு கோட்டிலிருந்து இன்னொரு கோட்டின் எல்லைக்கு அப்பால் கோலிக்குண்டுகளை வீசி தூரம் அதிகமாய் இருக்கின்ற கோலியினை இன்னொரு கோலியினால் அடித்து வெற்றிபெறுவோம் .

கோலிக்குண்டுகள் போட்டியில் வெற்றிபெற்றாலும் கோட்டையை வெற்றி பெற்றதுமாதிரியான கர்வத்தில் கோலிக்குண்டுகளின் ஓசையில் சல் சல் என நடந்து வருகின்ற பெருமையே தனிதான்பா..

சீட்டு -

அப்பொழுதே பனாமா - பில்டர் - சிஸர் என்று சிகரெட் அட்டைகளை பொறுக்கி ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு கொடுத்து அவற்றை அழகாய் மடித்து அடுக்கி வைத்து தூரத்தில் இருந்து ஒரு முண்டு என அழைக்கப்படுகின்ற கல்லினால் ஆன துண்டை எடுத்து அவற்றை நோக்கி வீசுவோம். சரியாக அடித்து சிதறுகின்ற சீட்டுகளை பொறுக்கி கொள்வோம்.

சிலநேரம் அந்த முண்டு நடந்து செல்பவர்களின் கால்களில் பட்டு தெருவில் உள்ளவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவார்கள்.

பம்பரம்

பம்பர விளையாட்டில் மிகவும் ஜாலியாகவும் இருக்கும். சண்டைகள் ஆரம்பிக்கும் விளையாட்டும் இதுதான். தோற்றவனின் பம்பரத்தை பறித்து அதனை தரையில் போட்டு எங்களுடைய பம்பரங்களின் முனைகளால் அந்தப் பம்பரத்தில் ஓட்டைகள் இட்டு சேதப்படுத்துவது.

இந்த முறையை ஆக்கர் என்று அழைப்போம். ஆக்கருக்கு மாட்டிய பம்பரத்தின் சொந்தக்காரன் நமக்கு பிடிக்காதவனாக இருந்தால் ஒழிந்தான் அவன்

பம்பரத்தை சின்னாபின்னமாக்கிவிடுவோம். அவன் பம்பரத்தை மட்டும் லேசா ஓட்டை போட்ட..என்னுடைய பம்பரத்தை ஏன்டா அதிகமாக ஓட்டை போடுறீங்க..ன்னு சண்டை ஆரம்பிச்சு கட்டிப்புரண்டு சண்டை நடக்கும். இதில் என்ன வேடிக்கை என்றால் சண்டையை தடுப்பதை விடவும் வேடிக்கை பார்க்க இன்னமும் ஜாலியாக இருக்கும்.


2.நீங்கள் கல்லூரி நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் கேலி - கிண்டல்- சோகம் என தங்களை மனதைக் கவர்ந்த நிகழ்ச்சிகள்?

அதை ஏன் கேட்குறீங்க..பி எஸ் சி படிக்கும்பொழுது ஊட்டி கொடைக்கானல் ஒகேனக்கல் ன்னு திட்டம் போட்டு கிளம்பியாச்சு. போகிற வழியில் கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு இடத்துல போய்கிட்டு இருக்கும்பெழுது நண்பர்களில் சிலர் சுற்றுலாவின் ப்ளானை கொஞ்சம் மாற்ற

அதில் கருத்து வேறுபாடு வர ஒருத்தனை இன்னொருவன் அடித்துவிட இது பெரும் பிரச்சனையாகி நாங்கள் சென்று கொண்டிருந்த வேனை பாதியில் நிறுத்தி சண்டை நடந்தது.

நாங்கள் நடுநிலைவாதிகளாக மாறி சண்டையை தடுக்க அதனையும் மீறி ஒருவனை ஒருவன் துரத்திக்கொண்டு சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்களில் சிலர் மட்டுமே மிச்சம். எங்களுக்கு சிரிப்பதா அழவதா எனத் தெரியவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒவ்வொருத்தனாக தேடிப்பிடித்து அழைத்து வந்து வேனில் ஏற்றி பயணத்தை தொடர்ந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அதனை மறக்க முடியாது.

பின் எம் சி ஏ நண்பர்களோடு கன்னியாகுமரிக்கு சென்றபொழுது கோயிலின் அருகே நான் ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையை நான் பற்றிக்கொண்டு இன்னொரு முனையை எனக்கு முன்னால் சென்ற அந்த ரகி என்ற மாணவியிடம் கொடுத்து பிடிக்கச்சொல்ல அந்தப்பெண்ணும் அந்தக்குச்சியைப் பிடித்து என்னை வழிநடத்தி செல்ல

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
அன்புடன் ஆதரிக்கும்
தெய்வமும் நீயே
என்று ஒரு பாடல். சின்ன வயசு கமல்ஹாசன் நடித்த படம் .

அந்தப்பாட்டை படித்துக்கொண்டே கண்தெரியாதவன் மாதிரி செல்ல சரியான ஜாலியாக இருந்தது. கடந்து செல்பவர்கள் எல்லாம் இது உண்மையா பொய்யா எனத் தெரியாதவாறு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டு சென்றார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு துண்டையும் விரித்துவிடலாம் என்று நண்பர்கள் திட்டம் போட

எங்களுடன் வந்த ஆசிரியர் சாதிக் என்பவர்..ஞானி காலேஜ் மானத்தை வாங்காதடா..பேசாம வா என்று கண்டித்ததால் அந்த திட்டத்தை விட்டுவிட்டோம்.

மறக்க முடியாத சுற்றுலா நிகழ்வுகள் அவைகள்.

3. கல்லூரி அல்லது பள்ளி நாட்களில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மறக்கமுடியாத சண்டைகள்?

இதற்கென்று தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.

ஒன்றா இரண்டா ஏகப்பட்ட சண்டைகள். ஆனால் பின்னர் சமாதானமாகி விடுவோம்.


நான் யாரிடமும் சண்டை போடமாட்டேன். ஆனால் என்னால் மனவருத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கின்றேன்.

நெருங்கிய நண்பர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அந்த இருவரும் அவர்களுக்குள் பேசாவிட்டாலும் நான் மட்டும் இருவரிடமும் பேசிக்கொள்வேன்.

அது இப்பொழுது வரை தொடர்கின்றது.

4. எதையாவது தொலைத்துவிட்டு பதறிய நாட்கள்?

மொபைல் போன்

இங்கே ஒரு பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற இடத்தில் மொபைலைத்தொலைத்து விட்டு கிட்டத்தட்ட அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டேன். மொபைல் போனால் போகின்றது.

ஆனால் அவற்றில் பதிந்து வைத்துள்ள எண்கள் - அடிக்கடி வருகின்ற மிஸ்கால்கள் இவைகளக்காத்தான் அதிகம் கவலைப்பட்டேன். பின் நான் பள்ளிவாசல் வாயிலில் அமர்ந்து நண்பர் ஒருவரின் மொபைலிலிருந்து என்னுடைய மொபைலுக்கு மிஸ்கால் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து உள்ளிருந்து ஒருநபர் வந்து இது உங்க மொபைலா என்று தந்த பொழுதுதான் நிம்மதியே வந்தது.


அடிக்கடி தொலைப்பது பேனாவை. ஆனால் பதற மாட்டேன். பேனாவைத் தொலைப்பது என்பது எனக்கு சுவாசிப்பது - சாப்பிடுவது போல சாதாரண நிகழ்வுகள்.

எந்தப் பேனாவும்
சாகும்வரை என்
சட்டைப்பையில் இருக்க
சம்மதித்ததே இல்லை


இன்னொருமுறை ஒரு பொருளை தொலைத்தேன். ஆனால் தொலைத்துவிட்டு பதறவில்லை. சந்தோஷப்பட்டேன். தொலைத்தது இதயம்.


5. இதுவரை வாழ்க்கையில் யார்மீது அதிக கோபப்பட்டிருக்கின்றீர்கள்?

என் மீது

இதனை சங்கிலிப்பதிவா இல்லை உங்கள் சங்கை நெறிக்கும் பதிவான்னு சொல்லமாட்டேன். இதனை வாசிக்கிறவங்க வலைப்பதிலு வச்சிறுந்தீங்கன்னா நீங்களும் இந்த 5 கேள்விக்கு பதிலை சுவாரசியமாக எழுதுங்க. நான் வந்து ரசிக்கின்றேன்.

Wednesday, June 14, 2006

ஒரு சிறிய காதல் சோக கதை

( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். )

தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.

"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்

ஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.

அவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.

காதலன் கேட்டான். "இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று

"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள்.

அந்த காதலனும் கண்ணீரோடு ,

"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.




அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, June 12, 2006

என் இனிய தபால்காரிக்கு .....

உன்
கடமையுணர்வுக்கு ஒரு
எல்லையில்லையா?
நீ
தபால்துறையில்
வேலை பார்க்கலாம்...
அதற்காக
தபால்துறைப் போராட்டம் என்றால்
காதல் கடிதத்தையுமா ...
வாங்க மறுப்பது?

Photobucket - Video and Image Hosting
---
உன் நினைவுகளை எனக்கு..
தந்தி அனுப்பினாய்!
ஆனால்
காதலை மட்டும்தானடி
கடிதத்தில் அனுப்பிவிட்டாய்!
பாரேன்
எவ்வளவு
தாமதமாய் கிடைத்திருக்கின்றது?

---

கடிதத்துடன்
பணம் அனுப்பினால்...
நாங்கள் பொறுப்பல்ல!
- தபால்துறை
ஆனால்
இதயம் அனுப்பினால்...
நீதான்டி பொறுப்பு!
-காதல் துறை

---
உன் நினைவுகளை எல்லாம்
அழகாய் மடித்து...
காதல் உறையில்
வைத்துள்ளேன்!
சீக்கிரமாய் ஒட்டு
உன்
இதய அஞ்சல்தலையை!

சொர்க்கத்திற்கு அனுப்புவோம்.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, June 07, 2006

கோலம்

Photobucket - Video and Image Hosting


நீ
வாசற்படி அருகே போட்ட
கலையாத கோலத்தில்
என் இதயப்படி ...
ஏனிப்படி கலைந்தது?

---
நீ
வரைந்த கோலத்தின் ......
நேர்கோடுகளில் ஏற்பட்ட
சின்ன சின்ன வளைவுகள்தான்
நான் உன்னை
கடந்து சென்ற
எண்ணிக்கையை ......
தீர்மானிக்கின்றதோ?

---

உன் விருப்பத்திற்கேற்ப
நாய் வாங்கி தந்த ...
தந்தையின் பெருமைசொல்லி
மகிழ்ந்தாய்!

உன் கோல அழகை ரசிக்கும் சாக்கில்
உன்னை ரசிப்பவர்களை
குரைப்புகள் மூலம் கணக்கிட உன்
தந்தை செய்த
தந்திரமடி அது!




- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 06, 2006

எனக்கு என்ன ஆச்சு..?


Photobucket - Video and Image Hosting


இதனை எழுதலாமா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை..? எழுதுவதற்குண்டான விசயங்கள் இதில் இருக்கிறதா என்பதைப் பற்றியும் கவலையில்லை.

ஆனாலும் மனதில் குழப்பமாக இருக்கின்றது. இங்கே சுற்றியிருக்கும் நண்பர்கள் யாரிடமும் கூறினால் அவர்கள் உடனே சிரிக்க ஆரம்பிக்கின்றார்கள். அதனால் யாரிடமாவது இதனைச் சொல்லியே தீர வேண்டும் என்று தோன்றிதால் நெருங்கிய நண்பர்களான உங்களுடன் பகிர்கின்றேன்.

இன்று 6-6-6 என்ற தேதியாக இருப்பதனால் என் மனஓட்டத்தை இன்று எழுதுவதற்கு சரியாண தருணமாக இருக்க கூடும் என்று எழுதுகின்றேன்.

நீங்கள் எப்பொழுதாவது நேரம் பார்க்கும்பொழுது 11:11 , 10:10 , 2 :22 என்று யதேச்சையாக பார்க்க நேரிட்டால் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் .
உடனே பக்கத்தில் உள்ள நண்பர்களிடத் காட்ட முயல்வோம்.

"ஏய் இங்கே பாரு டைம் 4:44 ன்னு காட்டுது.."என்று

எனக்கும் அதே சந்தோசம்தான். பார்க்கும்பொழுதெல்லாம் 11 :11 , 10:10 , 3 :33 என்று வருகின்றது. ஆச்சர்யமாக இருந்தது. "என்னடா பார்க்கும்பொழுதெல்லாம் இப்படி ஒரே எண்ணாக தோன்றுகின்றது" என்று.

ஆனால் கடந்த 3 வாரங்களாக இது அடிக்கடி நிகழகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 5 முறையாவது இவ்வாறு பார்க்க நேரிடுகின்றது. எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கமில்லை. வேலை நேரத்தில் எப்பொழுதாவது மொபைலில்தான் டைம் பார்ப்பேன். அப்படி பார்க்கும்பொழுதெல்லாம் அதுபோன்ற ஒத்த எண்களாகவே வருகின்றது.

இது 1 நாள் அல்லது 2நாள் என்று இருந்தால் கூட யதேச்சையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் கடந்த 3 வாரங்களாக இப்படி வருவதால் மனதில் இந்தச் சஞ்சலம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இப்படித்தான் இந்தியாவுக்கு போன் செய்து விட்டு எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யம் 04:44 நிமிஷங்கள் பேசியிருந்தேன்.

பின் அடுத்த அரைமணிநேரத்தில் மறுபடியும் போன்செய்து விட்டு நேர அளவு பார்த்தால் 06:06. எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகி விட்டது. டைம்தான் இப்படி என்றால் பேசிய நேரங்கள் கூட இப்படியா..?

பின் மொபைலைச் சார்ஜரில் வைத்து விட்டு எடுப்பதற்காக முயன்றபொழுது 11:11

ஷாப்பிங் செல்லும்பொழுது திடீரென ஞாபகம் வந்தவனாய் நேரம் பார்ப்பதற்காக மொபைலை எடுத்தபொழுது 08:08..

நண்பர்களுடன் தேநீர் அருந்திகொண்டு பேசிக்கொண்டிருக்கும்பொழுது "டேய் டைம் என்னடா ..நேரமாச்சு போவோமா" என்று கேட்கும் சமயம் டைம் பார்க்கும்பொழுது 12:12

அலுவலகம் விட்டு அறைக்குத்திரும்பும்பொழுது 06:06 என்று இந்த நிகழ்வுகள் என்னைத் பின் தொடர்ந்து வருகின்றது.

இன்று கூட இதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்பொழுது ஆபிஸ்பாயிடம் தேநீர் கொண்டு வரச்சொல்ல,
அவனும் "என்ன சாப்பாடு நேரமாச்சு இப்ப தேநீர் சாப்பிடுறீங்க? " என்று கேட்க,

நானும் "என்ன சாப்பாடு நேரமாச்சா?" என்று நேரம் பார்க்க 11:11 என்று காட்டுகிறது. இன்னமும் குழப்பம் அதிகரிக்கின்றது.

ஏன் 11:12 , 3:15 என்று காட்டக் கூடாது. இதனை தற்செயல் என்று என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கெட்ட நேரம் நல்ல நேரம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. காலங்கள் இறைவன் சம்பந்தப்பட்டவை. ஆகவே அவற்றில் குறை கூறுதல் இயலாது.

இது எதனால் இப்படி ஏற்படுகின்றது என யாரிடமாவது விளக்கம் கேட்க அவர்கள் ஏதாவது அவர்கள் இஷ்டத்திற்கு கூறிவிட்டால் பின் அதற்கும் சஞ்சலமடைந்து கொண்டு இருக்க நேரிடும். ஆகவே யாரிடமும் விளக்கம் கேட்கவில்லை..

நேற்று கூட என் நண்பன் ஹைதர் அறைக்கு சென்று அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது 10:10 மணி காட்டவே.."அட இங்க பாரு " என்று அவனிடம் சொல்ல ,

"என்ன ஞானி.. நேரமாச்சா" - ஹைதர்

அவனிடம் வேறு வழியின்றி உண்மையைச் சொல்லவேண்டியதாயக் போயிற்று..

அவர் "இது ரொம்பச் சாதாரணம்டா நீ டைம் பார்க்காம இருந்து பாரு..அது மாதிரி தெரியாது..
இதுக்கு போய் யாரும் வருத்தப்படுவாங்களா..? " என்று ஆறுதல் படுத்தினான்.


ஆனால் திரும்ப திரும்ப இப்படி நடந்து கொண்டே இருக்கின்றது. அவன் கூறியபடி நான் நேரமே பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து பின்பு அலட்சியமாக எப்பொழுதேனும் பார்க்கும்பொழுது கூட அது மாதிரி நிகழ்கின்றது.

இன்றைக்கு மட்டும் இரண்டு முறைப் பார்த்துவிட்டேன்.

முதல் முறை பார்க்கும்பொழுது 09:09

அதன்பிறகு 11 : 11

மனக்குழப்பத்தில் தொடர்கின்ற இந்த நிகழ்வுகள் எனக்கு சஞ்சலத்தை தந்தாலும் இது தற்செயல்தான் ..தற்செயல்தான்..தற்செயல்தான்..என்று எனக்குள்ளேயே ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கின்றேன்..



- ரசிகவ் ஞானியார்

Sunday, June 04, 2006

ஒரு அழகிய பெண்ணின் புகைப்படம்

( எனக்குத் தெரியும் இப்படி ஒரு தலைப்பு கொடுத்தாத்தான் வருவீங்கன்னு )

இதோ ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளேன் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

Photobucket - Video and Image Hosting

யாருன்னு தெரியுதா..?

இவர் மும்பையைச் சார்ந்தவர். இவருக்கு விளையாட்டில் ஆர்வம்.

யாரு இவருங்கோ?

கொஞ்சம் கீழே வாங்க..
......
......
.....
......
......
......
........
........
.........

...............
கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இன்னும் கொஞ்சம் கீழே வாங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.


சரி இப்போ இந்த கீழுள்ள லிங்கை அழுத்துங்க.. யாருன்னு கண்டுபிடிச்சிடலாம். ஆச்சர்யத்தில கீழே விழுந்தீங்கன்னா நான் பொறுப்பு அல்ல என்பதை முன்னரே சொல்லிட்டேன். எதற்கும் பக்கத்துல மருத்துவமனை இருந்தால் நல்லது



http://geocities.com/seen143/index.html






- ரசிகவ் ஞானியார்

Saturday, June 03, 2006

பயம்..பயமறிய ஆவல்

நேற்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது பேய் பற்றிய ஒரு விவாதம் ஓடிற்று. ஆளாளுக்கு தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

பேயைப்பற்றி திடீரென விவாதம் எப்படி ஆரம்பித்தது என்று நினைத்துப்பார்த்தேன்..? ஷாபிதான் முதன்முதலில் ஆரம்பித்தான். "அண்ணே ..அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் பேய் இருக்கா..?" என்று ரசூலிடம் கேட்க கட்டிலில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன்.என்னடா இரவு நேரத்துல் பேயை பற்றி ஆரம்பிக்கிறான் என்று.

சரி என்னதான் பேசுகிறார்கள் என்று கவனிப்போம் என்று ஒரு பயமான ஆர்வத்துடன் காதைத் தீட்டினேன்.

பேயா அது இருக்கா இல்லையான்னு தெரியலைப்பா...? நானும் ரொம்ப கேள்விப்பட்டிருக்கின்றேன்.. சரி நீ எதனால் இப்படி கேட்ட..?

"ஒரு நாள் நானும் என்னுடைய தந்தையும் தூங்கிக்கொண்டிருக்கின்றோம். என்னுடைய பெரியப்பாவிற்கு பக்கத்து வீடு. அவரும் அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார்."

நடுநிசி நேரம்..என்று அவன் இழுக்கும்பொழுதே நான் பேப்பரையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன் எழதுவதற்கு. உடனே ரசூல் கவனித்து விட்டார்..

"செத்தாண்டா!..ஞானியார் பேப்பரை கையில் எடுத்துட்டான்..நாளைக்கு அவன் வலைப்பதிவுல ஏதோ கூத்து நடக்கப்போகுது.. "என்று சொல்ல

நானோ நான் எழுதவதைக் கவனித்தால் ஒருவேளை மிகைப்படுத்தி சொல்லக்கூடும் அல்லது சொல்வதை குறைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து "ச்சே ச்சே நான் ஊருக்கு லட்டர் எழுதுறேன் பா..நாளைக்கு ஒருத்தன் ஊருக்குப் போறான்..." என்று சமாளித்து யோசித்து யோசித்து எழுதுவது போல நடித்துக்கொண்டே அவர்கள் பேசுவதையும் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்..

ஷாபி தொடர்ந்தான்

.."நடுநிசி நேரம் ஒரு குரல் கனிவா! கனிவா..என்று அழைக்கிறது. எனக்கு அந்தக்குரல் கேட்க நான் திடுக்கிட்டு விழித்தேன்..

அதே நேரம் என்னுடைய தந்தையும் விழிக்கின்றார்.. எனது பக்கத்துவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த எனது பெரியப்பாவும் விழித்து வீட்டிற்கு வெளியே வருகின்றார்..

நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் விழித்தது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது எனக்கு..
எங்கப்பா பேரு ஹனியா..அவரை எல்லாரும் கனிவா.. கனிவான்னு தான் கூப்பிடுவாங்க..

எங்கப்பா சொன்னாரு.. அவரோட அப்பா அழைத்தது போல இருந்துச்சுன்னு.. எங்கப்பாவோட அப்பா இறந்து ரொம்ப நாளாச்சு .."


நான் கேட்டேன் "சரி அது உங்கப்பாவோட அப்பா குரல்தான் உனக்கு எப்படி தெரியும்..?"


"எனக்கு அது தெரியாதுண்ணே.. அவர் சின்ன வயசுலேயே இறந்துட்டாரு..ஆனா எனக்கும் அந்தச்சப்தம் கேட்டுச்சு.. எங்கப்பாதான் சொன்னாரு அது அவங்க அப்பாவோட குரல்னு.."


"சும்மா அது வெறும் பிரம்மையா இருக்கும்பா.." நான் பயம் கலந்த சமாதானத்தில் கூறினேன்.

"அட! நான் பொய் சொல்லைனே.. பிரம்மைனா எங்க 3 பேருக்கும் ஒரே நேரத்துல அந்தச் சப்தம் கேட்கணுமா..எனக்கும் எங்கப்பாவுக்கும் கேட்டிருந்தா பரவாயில்லை..

எங்க பக்கத்து வீட்டுல இருக்குற எங்க பெரியப்பாவுக்கும் அது கேட்டு அவர் வெளியே வந்தாருன்னா..அதை எப்படிண்ணே பிரம்மைன்னு சொல்ல முடியும்.."


"அதுமட்டுமல்ல எங்க வீட்டை நோக்கி ஒரு நாய் வேற குரைச்சிக்கிட்டு இருந்துச்சு...

அந்த நடுநிசி நேரத்து எங்க வீட்டு முன்னால ஒரு நாய் குரைச்சது..நாங்க 3 பேரும் ஒரே நேரத்துல சப்தம் கேட்டு விழிச்சுது எல்லாம் சேர்ந்து என்னை ரொம்பவம் பயமுறுத்திச்சுனன்னே.. என்று சொல்ல"


எனக்கு மட்டுமல்ல நிஜாம் மற்றும் ரசூலும் ஆர்வமாய் ( பயமாய் ) கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

"அப்படியாடா..அது நிஜமா..?"

"ம் சத்தியமா சொல்றேண்ணே.. "என்று சொல்லிவிட நம்ம ரசூலும் ஆரம்பித்தார்.
"எனக்கும் இதே மாதிரி அனுபவம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு தெரியுமா.?"

"ஒருநாள் இரவு நம்ம தெருவுக்கு பின்னால ஒரு தெரு இருக்குதல டா.."

"அதான் அந்த அய்யர்மனைக்கு பக்கத்து தெரு..அங்க ஒரு வீட்டுல ஒரு கிழவி மட்டும் உக்காந்திருந்தா..நானும் என்னடா இந்த நேரத்துல இங்க வந்து ஒரு கிழவி உக்காந்திருக்கான்னு ஆச்சர்யம்..நண்பர்களோட போனதால தைரியமா போய்க் கேட்டேன்.. "

"என்ன பாட்டி இங்க உக்காந்திருக்கீங்க.. எங்க போவணும்..?"

"இல்லைப்பா கண்ணு சரியா தெரியல..நான் அய்யர்மனைக்குப்போவணும்.."

"சரி நான் அந்த ரோடு முனை வரைக்கும் வந்து விடவா.. "ன்னு கேட்க அந்தப்பாட்டி என் கையைப்பிடித்து நடக்க ஆரம்பித்தாள்..

உடன் வந்த நண்பர்களோ எரிச்சலோடு பார்க்க.. திடீரென்று அந்தப்பாட்டியின் அழுத்தம் அதிகமாகியது.. நான் அழைத்துச் செல்ல வேண்டியவள் என்னை அழைத்துச் செல்லுமளவிற்கு வேகமாய் நடக்க ஆரம்பிக்க..என் நண்பனோ கவனித்து

"பாட்டி கையை விடுங்க..கையை விடுங்கன்னு சொல்றேன்ல" என்று அவளிடம் சொல்ல..

அந்தப்பாட்டியோ என்னிடம் "வாப்பா..வா..அந்த அய்யர்மனைக்கு வந்து விட்டுட்டு போ" என்று சொல்ல..

என் நண்பன் கத்திவிட்டான்.."பாட்டி விடுறீங்களா? இல்லையா.."என்க அந்தப்பாட்டியும் கையை விட்டுவிட்டு என் நண்பனை முறைத்துப் பார்த்துவிட்டு வேகவேகமாய் சென்று கொண்டிருக்கின்றாள்..

அந்தப்பாட்டியின் அழுத்தம் வேறு கையில் வலியை ஏற்படுத்த நான் அதிர்ச்சியோடு கவனித்தேன்.

"அந்தப்பாட்டி பேய்தான்னு சொல்லமுடியாது..ஏதாவது கடுப்பிலே அப்படி நடந்திருக்கலாம்" நான் நம்பாதவனாய் அவனிடம் கூறினேன்..

அப்பொழுது நிஜாமும் தொடர்ந்தான்..எங்க எதிர்வீட்டு ஒருபையன் விபத்துல இறந்து போய்ட்டான்..

"ரசூல் உங்களுக்கு தெரியுமா..? பேப்பர்ல கூட வந்திச்சே..ஒரு பீடி கம்பெனி பையன் அடிபட்டு இறந்துட்டான்னு.."

"ஆமா ஆமா..ஞாபகம் இருக்கு.. - " ரசூல் தலையாட்ட

நிஜாம் தொடர்ந்தான். "அவன் விபத்துல இறந்த 2 நாள் கழிச்சி ஒரு நாள் வீட்டுல நான் எங்கப்பா - அம்மா - தங்கச்சி எல்லாரும் உறங்கி கொண்டிருந்தோம்.."

"திடீர்னு ஒரு சத்தம்..என்னன்னு முழிச்சுப் பார்த்தா தூரத்துல இருந்து ஒரு பெரிய உருவம்..எங்க வீட்டை நோக்கி வர்றது மாதிரி தெரிஞ்சது..கண்டிப்பா ஒரு உருவம்தான்டா..நான் எங்கம்மா என்னோட தங்கச்சி 3 பரும் பார்த்தோம்.. எங்கப்பா ஓதிட்டு படுத்ததனால் அவருக்கு முழிப்பு வரல.."

"கிட்ட நெருங்கி நெருங்கி வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு.. எனக்கு பயம் அதிகரிச்சு ஓன்னு அலறிட்டேன்.."

எங்கம்மா உடனே என்கிட்ட "நிஜாம் ஓதிட்டு படுடான்னு சொல்லி அப்புறம் ஓதிட்டு படுத்தோம்.. இது நிஜமா நடந்தது டா..அல்லாவுக்கு பயந்து சொல்றேன்டா.. "

என்னால அந்த சம்பவத்தை இன்னமும் மறக்க முடியாது..

அப்புறம் இன்னொரு சம்பவம்..

"ஒருநாள் என்னாச்சு தெரியுமா.. "

"அந்த வாய்க்காபாலம் பக்கத்துல வச்சி நாங்க பேசிக்கிட்டு இருந்தபொழுது..அங்க ஒரு சோப் கம்பெனி இருக்குல.அதுல நைட் டூட்டி பார்க்குற என்னோட ப்ரண்டு ஒருத்தன் அந்த நைட்ல ஒரு பெண் நெற்றியில பட்டையோட..தலையை விரிச்சிப்போட்டுட்டு அந்த தெருவை நோக்கி போய்கிட்டு இருந்திருக்கா.. "

"என்னடா இந்த நேரத்துல ஒரு பொண்ணு இந்தப்பக்கம் போகிறான்னு அவன் சைக்கிளை எடுத்துட்டு பின்னால போயிருக்கான்..அந்த சந்து வரைக்கும் போயிருக்கான்..அவள ஆளைக் காணலையாம்..பதறிப்போய் சொன்னான் எங்ககிட்ட.. "

"பேய் இருக்கா இல்லையான்னு தெரியல..ஆனா இத மாதிரி சம்பவங்களை பார்க்கும்பொழுது என்னன்னு நம்ப முடியலைடா.. "

உடனே ஷாபி , "இது மாதிரி என்னோட ப்ரண்டு ஒருத்தனுக்கும் நடந்திருக்கு.. அவனுக்கு கால் ஊனம்..3 சக்கர வண்டி வச்சிருப்பான்..நாங்க ஒருநாள் ஸ்கூல் பக்கம் பேசிக்கொண்டிந்தபொழுது படு வேகமா வந்திட்டு இருந்தான் .. என்ன ஆச்சர்யம்னா அவன் சட்டை போடலை.. "

என்னடா சட்டையில்லாம வந்திட்டிருக்கான்னு பிடிச்சு விசாரிச்சப்போ அழுதுகிட்டே சொல்றான்..

ஆத்துப்பக்கம் ஒரு பொண்ணு தலையை விரிச்சிப் போட்டுட்டுகடந்து போகும் போது இவனைப் பார்த்து வெறிச்சி பார்த்துட்டு கடந்து போயிருக்கா..இவனும் பின்னாலயே போயிருக்கான்..இவனுக்கு ஏன் போறேன்னு உணர்வே இல்லையாம்...?

அவ நேரா போய்..ஒரு ஆலமரம் இருக்குதுல அதுபக்கம் போயி யாருக்கும் குளிக்காத பகுதியில ஆத்துல இறங்கியிருக்கா..

நம்மாளும் ஆசையில சட்டையை கழட்டிட்டு வண்டியை விட்டு இறங்கி தவழ்ந்து தவழ்ந்து போயிருக்கான்.. ஆத்துக்கிட்ட போகும்போதுதான் அவனுக்கு உணர்வு வருது..நாம ஏன் இப்படிப் போறோமுன்னு பார்த்திருக்கான்..அங்க ஆத்துக்கு அந்தப்பக்கம் தீ எரிஞ்சிகிட்டு இருக்கு.. இவன் பயந்து போய் வண்டியை எடுத்துட்டு வந்துட்டான்..


நானும் என்னுடைய சின்ன வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கூறினேன்.

"என்னோட ப்ரண்டு ஒருத்தன்டா.

நிஜாம் உனக்குத் தெரியும்ல.. முஜாகிதீனோட அண்ணன் ரஹ்மான்..இப்ப வக்கீலா இருக்கான்ல.. "

"ம். ஆமா.. "

"அவன் தூங்கிக்கிட்டு இருந்திருக்கின்றான் அப்போ காலைத்தொழுகை அதிகாலை சுமார் 4.30 மணி இருக்கும். "

அப்போ அவன வந்து அலி வந்து எழுப்பி , "டேய் எழுந்திரு தொழுகைக்கு நேரமாச்சுடான்னு சொல்ல.." அவன் அரைகுறைத்தூக்கத்தோடு வந்து தொழுகைக்கு போயிருக்கின்றான்.. அவன் வீட்டுத் திண்ணையை ஒட்டிதான் பள்ளிவாசல் இருக்கு..

அவன் நேராக போய் தொழுதிட்டு வந்து படுத்திட்டான்.. காலையில அலி கிட்ட கேட்டிருக்கான்.."என்னடா நீ வந்து எழுப்பினே..அப்புறம் தொழுகையில உன்னைய ஆளைக்காணோம்...எங்கேடா போன..?"

அலி ஆச்சர்யமாய் கேட்டான்.."நானா காலையிலேயா..நான் இன்னிக்கை தொழ வர முடியலைடா..தூங்கிட்டேன்..நீ என்ன உளர்ற என்று..?"

இவனோ அடித்து கூறுகின்றான்.."இல்லைடா நீதான்டா வந்து எழுப்பினே.. "

"இவன் மறுக்க ஆரம்பித்துவிட்டான்.. இந்த நிகழ்ச்சி அந்த நேரத்துல ரொம்ப ஆச்சர்யமாகவும் ..பரபரப்பா இருந்துச்சு எங்க நண்பர்கள் வட்டத்துல.. "

"பேய்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைதான்..ஆனா அந்தச் சம்பவம் எங்களை அந்த நேரத்துல ரொம்பவும் பயப்படுத்திச்சு..அதான் சொன்னேன்.. "

ரசூல் கூறினார்.. "எனக்கும் திடீர்னு தோணும்..யாரோ நெஞ்சுல உக்காந்து அழுத்துற மாதிரி..மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்..ஆனா என்னன்னு தெரியாது.."

"சிலர் இதமாதிரி சொல்லக் கேட்டுறுக்கேண்டா..ஆனா எந்த அளவு உண்மைன்னு தெரியாது.. ஆனா நம்ம கெட்ட ஜின்களிடமிருந்து ( சைத்தான் ) உங்களைப்பாதுகாத்துக் கொள்ளுங்கள் ன்னு குர்ஆன்ல சொல்லியிருக்குடா..

அதமாதிரி இருட்டுல ஒரு ஆளாக தனியா படுக்க கூடாதுன்னு சொல்வாங்க தெரியுமா..?" என்று நிஜாம் சொல்ல

"அப்படியா அப்படின்னா ரெண்டு பேரா சேர்ந்து படுத்தா தப்பு நடக்காதா.." என்று அந்த சீரியஸான விவாதத்திலும் கிண்டலடித்தான் ஷாபி..

"ஆமா பொண்ணுகளோட தனியா படுத்தா தப்பு நடக்கத்தான் செய்யும்..நான் அதைச் சொல்லலைடா..ஒரே வீட்டுல தனி ஆளா படுக்கறது பற்றி சொல்றேன்.. "என்று தொடர்ந்தான் நிஜாம்

"இருட்டின் தீமைகளிலிருந்து என்னை பாதுகாப்பாயாக" ன்னு குர்ஆன்ல ஒரு வசனம் வரும் தெரியுமா..? அப்படின்னா இருட்டுல நமக்கு ஒரு தீமை இருக்குன்னு தானே அர்த்தம்..


இப்படியாக பயத்துடன் கலந்த அந்தப்பேய்ப்பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.


விவாதத்திற்குப் பிறகு மனதில் மரணம் - பயம் - சுடுகாடு- தலைவிரிப்பெண் என்று மாறி மாறி வந்து கொண்டேயிருந்தது. நாளைக்கு வேலைக்கு போகவேண்டும் என்ற கவலையில் அதெல்லாம் மறந்து தூங்கிவிட்டேன்.


சைத்தான் - பேய் - ஜின் - தீய சக்திகள் என்று ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாய்ச் சொல்லுகின்றார்கள். ஆனால் ஏதோ ஒரு தீய சக்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. உங்களுக்கும் இதுபோல ஏதும் திகில் சம்பவம் ஏற்பட்டிருங்காங்க..?


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க



அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Thursday, June 01, 2006

இவனைக் கொன்றால்தான் என்ன?






அழகிய மனைவியை
அருகில் வைத்துக்கொண்டு
பேருந்தில் தூங்குபவன்.

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு