Saturday, December 23, 2006

தன்னம்பிக்கையின் மனித வடிவம்

3 மாதத்திற்கு முன் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அதில் நான் சந்தித்த ஒரு கண்தெரியாத நண்பரைப்பற்றிய ஒரு நினைவு.

ரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.

அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"

அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..

நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.

நீங்க கவிதை எழுதுவீங்களா.?

"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்

வரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அதில் ஒரு கவிதை இதோ:

காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய

இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது

கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்

இப்படிக்கு
சாம்பல் தூதன்


அவரிடம் மெல்லக் கேட்டேன்.

இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?

"விதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.

சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.

" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "

"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.

நீங்க எங்க படிக்கிறீங்க..?

ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"

ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?

"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."


அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.

விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.

உங்க வீட்டுல எத்தனை பேர்?

"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"

அவங்க என்ன பண்றாங்க?

"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"

பெற்றோர்?

"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"

ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?

"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)

நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?

"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "

என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.

"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.

"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."

"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"

என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?

"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."

"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."

"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.

அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.

அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.


பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.

எனக்கு நம்பிக்கை என்ற வார்த்தைகள் முழு உருவமாகி விழாவுக்கு வந்து விட்டு
சென்றதைப் போல ஒரு உணர்வு.


இதுதான் அவருயை தொலைபேசி எண்
"மு. ரமேஷ் - 9942191838 . "

யாரேனும் எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் உதவுங்களேன்.

அவருடைய கவிதைக்கு வாழ்த்தோ அல்லது தனியாக இரயிலில் புத்தகம் விற்று சம்பாதிக்கும் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியோ பேசுங்களேன். அவர் கொஞ்சம் உற்சாகமடையக்கூடும்.

- ரசிகவ் ஞானியார்

Wednesday, December 20, 2006

புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா


இடம் : தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம் - மௌண்ட் ரோடு -
சென்னை
நாள் : 10.09.2006 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 3.30 மணி


தமிழ்நாடு கலை இலக்கியப்பேரவை நடத்தும் "புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா "

என்ற அறிவிப்பை திணமணியில் கண்டதும் நண்பர் ஷாபியும் நானும் அந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டோம்.

சென்னையில் சுற்றிப்பார்க்க அல்லது பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்க நாங்கள் இந்த விழாவுக்கு செல்ல முடிவெடுத்தது சென்னை இரைச்சல்களிலிருந்து தப்பித்து இதயத்திற்கு அமைதி கொடுப்பதற்கும் முக்காடு போட்டு தன்னை மறைத்துக்கொண்டு பைக்கில் பறக்கின்ற பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன சில புனிதமான காதல் காட்சிகளை விட்டு தப்பிப்பதற்கும் மன அமைதிக்காகவும் மற்றும் அந்த விழாவுக்கு வரப்போகின்ற முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.

ரியாக 3.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தை அடைந்ததும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்த சில முதியவர்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்தார்கள். "என்னடா இலக்கிய விழாவுக்கு இளைஞர்களா? " என்ற ஆச்சர்யத்தில் பார்த்தார்களோ என்னவோ? அல்லது எங்களைப்போன்ற இளைஞர்களை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்


மெல்ல சென்று முன்னால் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது இளைஞர்களும் வயதானவர்களுக்கு சம எண்ணிக்கையில் வர ஆரம்பித்தார்கள்.

வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லியது போல பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் ஈக்களின் எண்ணிக்கையை விட ஆட்களின் எண்ணிக்கை குறைவு என்று. அதுபோல இருக்கைகளின் எண்ணிக்கையானது ஆட்களின் எண்ணிக்கைவிட அதிகமாக இருந்தது. வாழும்காலத்தில் எந்த இலக்கியவாதிகளும் சரியாக மதிக்கப்படவில்லை என்பார்கள் ஆனால் வாழ்ந்து முடிந்தாலும் மதிப்புகள் சரியாக கிடைக்கவில்லையோ?

சிறுகதைக்கு ஒரு வடிவம் கொடுத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா எவ்வளவு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.

தனை எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் "வாழ்க ஒழிக" என்ற கோஷமின்றி எந்தவித ஆரவாரமின்று முதுபெரும் எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள் என் இருக்கையை கடந்து சென்றார்கள்.

ப்பொழுது விழாவுக்கு வந்த கண்தெரியாத மாணவர் ஒருவரிடம் இருந்து விழா பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கு சில காகிதங்களை கடன் வாங்கினேன்.


முன் வரிசையில் அமர்ந்திருந்த வல்லிக்கண்ணன் அவர்களிடம் சென்று மரியாதை நிமித்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று அவர் அருகே சென்று ,

"ஐயா..ஞாபகம் இருக்கிறதா"

"தெரியலையே யாரு..நீங்க.."

"பானிபட் இதயங்கள் புத்தகம்" என்று ஆரம்பித்தவுடனையே கண்டுபிடித்துவிட்டார்..

"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா..? உங்க நண்பர் நல்லாயிருக்காரா? "என்று விசாரித்தார்.

நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விழாவுக்கு வருகிறவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன்.

யார் யாரையோ எங்கை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம்..

மக்குத் தெரிந்த அல்லது நம்மைத் தெரிந்த வலைப்பூ நண்பர்கள் எவரேனும் வந்திருக்க கூடுமோ? என்று திரும்பி திரும்பி பார்த்தேன்.

அதோ தூரத்தில் ஜோல்னாப்பையோடு ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரையோ ஏதோ பத்திரிக்கையில் பார்த்ததாக ஞாபகம்.

நீண்ட தாடியோடும் கையில் குறிப்பெடுக்க காகிதங்களும் பேனாவோடும் ஒரு வயதானவர் முன் இருக்கையில் வந்து அமர்கின்றார். பத்திரிக்கையாளரா அல்லது வலைப்பதிவாளரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னால் திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 40 சதவிகித இளைஞர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். தான் வாழும்காலத்தில் இல்லாத அல்லது தான் பிறக்கும் பொழுது இல்வுலகில் இல்லாத ஒரு இலக்கியவாதியின் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது அவரது எழுத்துக்கு கிடைத்த மரியாதை.

காதுக்கு இரைச்சலாக ஏதோ ஒரு பாட்டு ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நான் ஷாபியின் காதில் கிசுகிசுத்தேன்.. "பேசாமல் இதற்கு வாளமீனு பாட்டையாவது போட்டுவிடலாம் "என்று கூற பின்னால் இருந்த அந்தப்பெரியவர் நான் கிசுகிசுத்ததை காதில் வாங்கினாரோ என்னவோ சிரிக்க ஆரம்பித்தார்.

ப்பொழுது விழாவுக்கு வந்திருந்தவர்களை வாழ்த்திவிட்டு வந்திருந்த முக்கியமானவர்களை அழைத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்கள்.

அப்பொழுது

14.08.06 அன்று இலங்கையில் நடந்த தாக்குதலில் 61 மாணவிகள் இறந்ததற்காகவும்

கடந்த வாரம் இயற்கை எய்திய தமிழ்த்திரு டி எஸ் மணி அவர்களுக்காகவும் மற்றும்

20.06.06 அன்று இறந்து போன சுரதா அவர்களுக்காகவும் 5 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



ருத்தரங்க தலைமை உரையை முனைவர் ராஜபாண்டியன் அவர்கள் ஆரம்பித்தார். இவரைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,

தமிழ் ஆசிரியர்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
ஆனால் இவர் இலக்கியம் படைப்பார்
என்று புகழ்ந்து கூறினார்கள்

"3000 ஆண்டு பழமை வாய்ந்த காலாக கவிதை விளங்குகின்றது. மேல்நாட்டின் நூல்களின் வாயிலாக வந்த சிறுகதையை புதுமைப்பித்தன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் "

"வவெசு அய்யரின் "குளத்தங்கரை அரசமரம் " சிறுகதைக்கு ஒரு தடத்தைக் கொடுத்தது. "

"புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் அனைவருமே சிறுகதையில் தடம் பதித்தார்கள். "

"இனி அய்யா
நான் செத்தபிறகு
நிதி திரட்டாதீர்கள்
நினைவை செதுக்கி
கல்லில் வடித்து காக்காதீர்கள்

என்று புதுமைப்பித்தனே தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். பின் எதற்கு இந்த விழா.? இதனைப்பார்த்து மற்றவர்கள் சாதிக்க வேண்டும் என்பதும் வாழும் தலைமுறையினர்கள் புதுமைப்பித்தனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான். "

"வாழும்பொழுது பாராட்டமாட்டார்கள். இல்லாதபோதுதான் பாராட்டுவோம். புதுமைப்பித்தனின் நிழலில் ஒதுங்கி நாம் சாதிக்க வேண்டும். "

"42 ஆண்டு காலம் வாழ்ந்த படைப்பாளி 92 சிறுகதைகள் படைத்திருக்கின்றார். ( கட்டுரை - மொழிப்பெயர்ப்பு தவிர்த்து)

உப்பு புளி கணக்கைப்பார்த்தால்
எப்போ எழுதுவது சமுதாயத்திற்கு?
- பாரதி

இப்படி சமுதாயத்திற்காக கவலைப்பட்டவர்களுள் பாரதிக்கு அடுத்து புதுமைப்பித்தன்தான். "

""எங்க அப்பா எப்போதும் புகையிலை போடுவார்" என்று அவரது அவர் மகள் கூறினார். அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. பசியை மறப்பதற்காக புகையிலை போடும் பழக்கத்தை ஆரம்பித்தார். "

புதுமைப்பித்தனைப்பற்றி நிறைய தகவல்கள் அக்கூட்டத்தில் பரிமாறப்பட்டன . மேலும் கனாசு என்பவர் மிகவம் மேன்மைபடுத்தி கூறியதாவது

சிவனுக்கு நாயன்மார்கள் தமிழ் செய்தது போல
சிறுகதைக்கு புதுமைப்பித்தன் தமிழ் செய்தார்


தி.க.சி யை ஒருவர் கடுமையாக விமர்சித்தார். இவர் மட்டும் சிறுகதைக்கு ஒருவர் என்று எப்படி சொல்லலாம். பன்றி பல குட்டிகள் போடும் ஆனால் யானை ஒரு குட்டிதான் போடும் ஆகவே சிறுகதைக்கு புதுமைப்பித்தன் ஒருவர்தான் என்று மோசமான உதாரணம் ஒன்றை எடுத்து விட்டார்


திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா இந்துக்கல்லூரியில் புதுமைப்பித்தன் தனது பி.ஏ பட்டத்தை படித்தவர். இதே கல்லூரியில்தான் வ.உ.சி மற்றும் பாரதி அவர்களும் படித்தார்கள். இது அக்கல்லூரிக்கே உள்ள பெருமை. அந்த திருநெல்வேலியில் நானும் வசிக்கின்றேன் என்பது எனக்குப்பெருமை.


புதுமைப்பித்தன் கதையில் மட்டுமல்ல கவிதையிலும் பேச்சுத்தமிழையே கையாண்டார். அவர் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகும். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இலக்கிய ஆர்வத்திற்கு அவரது பெற்றோர்களும் ஆதரவு தரவில்லை.

"தமிழ்ச்சிறுகதையை உலகப்பார்வைக்கு கொண்டவந்த பெருமை புதுமைப்பித்தனைச் சாரும் "என்று புதுமைப்பித்தனை பாராட்டினார்.

பின் நெய்வேலி பாலு என்பவர் தனது தொடக்க உரையில் கூறியதாவது

சிறுகதை வடிவம் ஐரோப்பியாவில் இருந்து வந்தது. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்து பகுதிகள்தான் சிறுகதைக்கு தோற்றுவாயாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கின்றது.

முதலாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அச்சு இயந்திரம் இந்தியாவுக்கு வந்தபிறகு சிறுகதையின் வடிவம் மேலும் பலம் பெற ஆரம்பித்தது

இந்து முஸ்லிம் ஒற்றுமை, வெள்ளைனை விரட்டுதல், காந்தீயச் சிந்தனையை வலியுறுத்துதல்,
சம்பந்தமான சிறுகதைகள் வெளிவரஆரம்பித்தன.

மொழிப்பெயர்ப்பு கதைகளும் யதார்த்தமான மக்கள் வாழ்வியல் கதைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன் போன்றோர்களின் தனிமனித முக்கியத்துவம் பெற்ற கதைகள் வெளிவந்தன.

ஞ்சை மாவட்ட பண்ணை அடிமைகளின் துன்பத்தை மையமாக எழுதிய இந்திரா பார்;த்தசாரதியின் "குருதிப்புனல்" கதை மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் யதார்த்தம் - நம்பிக்கை - நம்பிக்கை மறுப்பு - அவநம்பிக்கை கதைகள் வந்துகொண்டிருந்தன.

ந்தக்களத்திலிருந்து அப்படியே மாறி தலித்தியம் - பெண்ணியம் - சுற்றுச்சூழல் - தமிழ் தேசியம் சம்பந்தமான கதைகள் வெளிவந்தன.

தற்பொழுதுள்ள நிலையில் நல்ல தமிழ் எங்கும் இல்லை. மின் ஊடகம் பத்திரிக்கைகளின்; ஆங்கில மோகத்தால் தமிழ் களை இழந்து வருகின்றது. நல்ல படைப்புகள் முற்போக்கு சிந்தனைகள் உள்ள கதைகள் வரவேண்டும்.

பின் புதுச்சேரி பஞ்சாங்கம் என்பவர் பேசும்பொழுது புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது,

டவுளை தெருவுக்கு அழைத்துவந்து கேள்விகேட்கின்றார் புதுமைப்பித்தன்.
"பெண்ணைத் தீக்குளிக்க வைத்த
அவர் கால்பட்டா
நான் பெண்ணாகவேண்டும்
நான் மீண்டும் கல்லாவேன்"
என்று இராமனைப்பார்த்து அகலிகை கேட்பதாக கதை இருக்கின்றது.

இது மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்;பட்டது. ஆனால் சர்ச்சைகளுக்குப் பயந்தால் பாரதியார் புதுமைப்பித்தன் தோன்றியிருக்கமுடியாது.

தாய்மொழியின் அவசியத்தைப்பற்றி பேசினார். நமது கண்களுக்கும் மூளைக்கும் இடையே மொழி வந்து நிற்கின்றது.

நாம் மொழியைக் கையாள்கின்றோம் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் மொழிதான் நம்மைக் கையாள்கின்றது.தாய்மொழிக்கல்வி இல்லாமல் தமிழன் முன்னேறவே முடியாது.

வெளிநாட்டிற்கு தனது அறிவை விற்றுவிட்டு வெறும் நுகர்வோராக நாம் மாறி வருகின்றோம் என்று பின் நவீனத்துவம் பேசுகின்றது.

சினிமாக்களில் கதாநாயகர்களை உச்சத்திற்கு சென்று காட்டுகின்றார்கள். ஏன் இந்த பெருங்கதையாக்கம்? மனிதர்களை மனிதர்களாக காட்டுங்களேன்.

சின்னவயதில் நிலாவெளிச்சத்தில் ஆற்றுப்படுகையில் விளையாடியது எல்லாம் கனவாகத்தான் இருக்கின்றது. இப்பொழுதுள்ள தலைமுறைகள் கேமிராவில் மட்டும்தான் நிலாவை பார்க்கின்றார்கள்.

என்று நிறைய பேசிவிட்டு "இன்னும் முடிக்கலையா?" என்று யாரோ கேட்பது புரிகின்றது." இதோ முடித்துக்கொள்கின்றேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் " என்று தனது உரையை ஆர்வத்தில் தொடர்ந்தார்.


பின் நவீனத்துவம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே பயன்படுகின்றது. பெண்ணிம் தலித்திய சிந்தனை மேலாதிக்கம் பெற்றிருக்கிறது என்றால் பின் நவீனத்துவ சிந்தனையால்தான்.

என்று பல கருத்துக்களை பேசிவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.


பின்பு காட்டேறி என்பவர் வந்து சிறுகதைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டும் என்று கூறி "நந்தனார் தெரு" என்ற சிறுகதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது

நகராட்சியில் கழிப்பறை வேண்டி மனுகொடுத்து மனுகொடுத்து ஓய்ந்து போய்விட்டனர். பின் நகராட்சி அலுவலகம் முன்பு மலம் கழித்து விட்டனர். ஒரு பலகையில்

"இந்த நிலை தொடரவேண்டுமா? இப்படிக்கு நந்தனார் தெரு மக்கள்" என்று எழுதியிருக்கின்றார்.

இப்படி சிறுகதையின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர விரும்புகின்றார்கள்.

பின்பு புதுமைப்பித்தன் நினைவுநாளில் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு வந்த சிறுகதைகள் குறித்து பீர் முகம்மது என்பவர் பேசினார்.

ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கின்றான் இதனைத் தடுக்க வேண்டும்.

திராவிட இலக்கியங்களை சாகடிப்பதே திராவிட இயக்கங்களின் சாதனை என்ற அதிரடியாக கூறினார்.

பின் வல்லிக்கண்ணன் அவர்கள் பேச வந்தார்.

புதுமைப்பித்தனின் 100 ஆண்டுவிழாவினை திருநெல்வேலியில் 5 அமைப்புகள் தனித்தனியே விழா எடுத்திருக்கின்றார்கள்.

மனிதன் மற்றும் அவனது வாழ்க்கை இதுவே சிறுகதையின் மூலம். இதனை மையமாக கொண்டுதான் எல்லா சிறுகதைகளும் அமைகின்றன. இந்தப்போட்டிக்கு வந்த சிறுகதைகளும் அப்படியே.

போட்டிக்கு வந்த சிறுகதையில் தமிழ் அடிப்படை தவறுகள் நிறைய உள்ளன.

புதுமைப்பித்தனின் நினைவு சிறுகதைப்போட்டிக்கு ஒருவர் புதுமைப்பித்தனின் கதையையே காப்பியடித்து எழுதி அனுப்பியிருக்கின்றார் என்று அவர் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பலை.

தனித்துவம் - சொல்லாற்றல் - வாழ்க்கையை பார்க்கும் சுயபார்வை - தனி நடை - தத்துவ நோக்கு மற்றும் ஆழ்ந்த அழகான கருத்துக்கள் படைப்பில் தெரியவேண்டும்

கதையின் மூலம் பிரச்சாரத்தை வெளிப்படுத்தலாம் ஆனால் பிரச்சாரம் செய்வதாய் தெரியக்கூடாது. கதையில் பிரச்சாரம் வெளியிட்ட கந்தர்வனின் கதைகளை முன்னோடிகளாச் சொல்லலாம்.

புதிதாக கதை எழுதுபவர்கள் முன்னோடிகளின் கதைகளை நன்கு படித்து எழுத ஆரம்பித்தது பின் அவர்களையும் மிஞ்சும் வண்ணம் எழுதவேண்டும்.

ண்மைகளை சரியாகவும் தைரியமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக படைப்புகள் இருக்க வேண்டும்

ஆழமாக படித்தால் என்றுமே கதைக்கு பஞ்சமே கிடையாது. என்று தனது உரையை முடித்தார்.

பின் நாடகம் நடத்தும் முன் அதன் கதையை காவல்துறையிடனிரிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குமறை சட்டம் தொடரும் நிலையை ரத்துசெய்யவேண்டும் என்றும்

தேவநேயப்பாவாணர் அரங்கை குளிர் சாதன அரங்காக மாற்றி இன்னும் பல அரங்குகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.

விழா முடிந்ததும் வல்லிக்கண்ணன் அவர்கள் அரங்கை விட்டு வெளியே வந்து ஆட்டோவுக்காக தனியாக காத்திருந்தது மனசை என்னவோ செய்தது.
இப்பொழுது புதுமைப்பித்தன் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர்கள் இறந்து
விட்டாலும் அவர்களுடைய எழுத்துக்கள்மூலம் இன்றைய தலைமுறையினர்கள் அவரைப்பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும்.


- ரசிகவ் ஞானியார்

Friday, December 15, 2006

நன்றிக்கடன்

Photobucket - Video and Image Hosting


அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!

தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!


மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !

நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !

சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!

ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !

இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!

இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?


- ரசிகவ் ஞானியார்

Thursday, December 14, 2006

பேச்சிலர்கள் பார்க்க வேண்டாம்..

காலையில் நேரத்துக்கு நாஷ்டா தயார் பண்ணவில்லையா..இதோ வாங்கிக்கோங்க...

பளார்..பளார்..பளார்...


Photobucket - Video and Image Hosting

எந்தப்பொண்ணுடனாவது பேசிக்கொண்டிருந்தீங்களா...இதோ வாங்கிப்போங்க...

டிஷ்யும்..டிஷ்யும்...டிஷ்யும்


Photobucket - Video and Image Hosting


பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போவில்லையா...இதோ வாங்கிக்கோங்க...

டமார்...டமார்...டமார்


Photobucket - Video and Image Hosting


ஆகவே பேச்சுலர்களே உஷாரா இருங்கப்பா...? அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..

Photobucket - Video and Image Hosting

- ரசிகவ் ஞானியார்

Monday, December 11, 2006

என்னாச்சு இந்தப்பொண்ணுக்கு?

Photobucket - Video and Image Hosting

இதோ இந்தப் படத்தில் தெரியும் பெண் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் அலங்கோலமாக சுற்றிக்கொண்டிருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு அநாதையாய் வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உடனிருந்த ஒரு பிச்சைக்காரர் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட, இந்தப்பெண் உடனே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுதி அந்தப்பிச்சைக்காரனிடம் கொடுத்து பக்கத்தில் உள்ள மருந்துகடையில் சென்று கொடுக்குமாறு சொல்ல, அந்த மருந்து கடைக்காரர் உட்பட அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.

அந்த பேப்பரில் ஒரு தரமான மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள் போலவே எழுதப்பட்டிருந்தது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இப்படி எழுதிக்கொடுத்தது அந்தக் கடைக்காரருக்கு சந்தேகம் வரவே , மெல்ல அந்தப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். அந்தப்பெண்ணும் அந்தக்கடைக்காரரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கண்டு அவர் மேலும் ஆச்சர்யமடைந்தார்.

அந்தப்பெண் தன் பெயர் புஷ்பலதா என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்ல தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தன்னுடைய குடும்பத்தினரின் தொலைபேசி எண்களையும் கொடுத்திருக்கின்றார். அதில் தொடர்பு கொண்டு பேசியபொழுது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை.

இந்தச்சம்பவம் உள்ளுர் பத்திரிக்கையில் வெளிவந்தவுடன் இந்தப்பெண்ணிற்கு உதவிசெய்ய பல தன்னார்வு தொண்ட நிறுவனங்களும் மற்றும் பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப்பெண் எவருடனும் செல்ல மறுத்துவிட்டார். அந்தப்பெண்ணின் அலங்கோலமான நிலையைக்கண்டு பரிதாப்பட்ட போலிஸார்கள் அவரை நெல்லை சமூக சேவை அமைப்பான சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

பின் நெல்லை மாவட்ட மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அன்புராஜன், அந்தப்பெண்ணை தனது மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினார். அதனைத்தொடர்ந்து அந்தப்பெண் முழுவதுமாக குணமடைந்தார்.

தற்பொழுது அந்தப்பெண் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பீஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல அங்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்.


நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புஷ்பலதா :

Photobucket - Video and Image Hosting

அவர் தனது வாழ்க்கையில் என்ன நடந்தது ஏன் அவருக்கு மனநிலை பாதிக்கப்ட்டது? யார் சென்னையில் இருந்து இங்கு அழைத்துவந்தார்? என்ற தகவல்களை கேட்டபொழுது,

"எனக்கு கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவங்கள் இப்பொழுது தெரிய வருகின்றது. அது ஒரு சோகமான நிகழ்வு. எனக்குத் தெரியாமலையே அச்சம்பவம் நடைபெற்றுவிட்டது . நான் இப்பொழுது முழுமையாக குணமடைந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் டூட்டி டாக்டராக பணிபுரிகின்றேன்."

"எனக்கு சமூகசேவையிலும் ஆர்வம் அதிகம். ஆகவே பக்கத்து கிராமங்களான நாலுமாவடி பாவூர்சத்திரம் - எட்டயபுரம் - கடையநல்லூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று இலவசமாக மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க விரும்புகின்றேன். "

"வீட்டிற்கு தொலைபேசி செய்தும் பேசிவிட்டேன். எனது அண்ணன் விசயம் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்துள்ளார். நான் எனது குடும்பத்தினரை காண விரும்புகின்றேன். ஆகவே அடுத்தவாரம் சென்னை செல்கின்றேன்.இது எனக்கு கிடைத்த மறுவாழ்வு..என்னால் மறக்கவே முடியாது"

என்று மிகத்தெளிவாக அவர் பேட்டியளித்தார்.

மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டு திடீரென்று டாக்டரான இந்தப்பெண்ணைப்பற்றித்தான் நெல்லை மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

நானும் இதுபோன்ற மனநிலை சரியில்லாதவர்களை இந்தப்பகுதியில் கண்டிருக்கின்றேன். அதிலும் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் வயதானவர்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.

நான் சென்றமாதம் கூட இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் மனநிலை சரியில்லாவர்களிடம் மெல்ல விசாரித்து, அவர்களின் நிலைக்கு காரணத்தை ஆராயலாமா? என்று ஹைகிரவுண்ட்டில் உள்ள ஒரு மனநிலை சரியில்லாதவரை எனது நண்பருடன் பின்தொடர்ந்தேன்.

அவருக்கு வயது சுமார் 25 முதல் 30 க்குள் இருக்கும். கைகளில் ஒரு அழுக்குப்பையோடு தாடியை தடவிக்கொண்டே சென்றார். அருகில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் விசாரித்தபொழுது "அந்தநபர் ஒருவார காலமாகத்தான் இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கின்றார்" என்று கூறினார்.

பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அந்த நபர் எங்களைப்பார்த்து திடீரென்று முனக ஆரம்பித்தார். பின் நாங்கள் பக்கத்தில் வருகிறோம் எனத்தெரிந்ததும் பயந்து போய் அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.

அவரைப் பின்தொடர்வதை யாராவது பார்த்து ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்களோ என நினைத்து பின் தொடர்வதை விட்டுவிட்டோம். பின் எங்கேயாவது நான் பைக்கில் செல்லும்பொழுது கண்ணில் தென்படுவார். இன்னமும் மனது உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த இளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் ஏன் மனநிலை சரியில்லாமல் போனது என்று.

இதுபோன்று மனநிலை சரியில்லாவர்களை விசாரித்து அவர்களைப் பற்றி எழுதி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்க்கலாமே என்று நான் எனக்குத் தெரிந்த பிரபல வாரப்பத்திரிக்கை நிருபர் ஒருவரிடமும் இதுபற்றிக் கூறினேன். அவரும் எழுதுவதாக வாக்களித்துள்ளார். இந்தப்புஷ்பலதா போன்று எத்தனை புஷ்பலதாக்கள் மனநிலைசரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றார்களோ..?

வாழுகின்ற காலத்தில் நல்லபடியாக வாழ்த்திருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு
சூழ்நிலை அவர்களை இப்படி மனநிலை சரியில்லாவர்களாக ஆக்கியிருக்கின்றது. அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆகவே அரசாங்கமும் இவர்கள் விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமா..?

- ரசிகவ் ஞானியார்

Saturday, November 25, 2006

நெல்லையை மிரட்டும் இரண்டு

நெல்லையில் சமீபகாலமாக இரண்டு விசயங்கள் மக்களை பயமுறுத்திக்கொண்டு வருகின்றது. ஒன்று தொடர் கொள்ளை மற்றொன்று தொடர் மழை இரண்டையுமே தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் என்பது புதிய செய்தி அல்ல. எந்த ஆற்றில் தண்ணீர் வற்றினாலும் தாமிரபரணியில் மற்றும் தண்ணீர் வற்றவே செய்யாது. அதனால்தான் வற்றாத ஜீவநதி என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கரையோர மக்கள் எச்சரிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை ஊரையே எச்சரிக்கவேண்டிய நிலை வந்திருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பல குளங்கள் ஒன்றாக உடைந்து நெல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களை அவதிக்கு உண்டாக்கி வருகின்றது. ஆற்றில் சென்று குளிப்பவர்கள் வீட்டின் வாசலில் குளிக்கின்றார்கள்.

Photobucket - Video and Image Hosting

நேற்று தாமிரபரணி பாலத்தை நண்பனோடு கடக்கும்பொழுதே பாலத்தின் உயரத்தை தொடவா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியபடியே தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்தது.

பாலத்தை கடக்கும்பொழுது கிழே நிற்பவர்கள் எறும்பு போல காட்சி அளிப்பார்கள். அந்தப்பாலத்தையே மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் வந்திருக்கிறது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு ஆழம் இருந்திருக்கும் என்று.


நண்பனோடு பாலத்தில் நின்றுகொண்டு வெள்ளத்தை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே காவலர்கள் வந்து எச்சரித்தனர். தம்பி நிற்காதீங்க..போங்க..போங்க... என்று.
என்னடா வெள்ளம் பார்க்க விடமாட்டேன்கிறாங்கன்று எரிச்சலடைந்தபடியே சென்றுவிட்டேன்.

ஆனால் சில மணி நேரத்திற்குப்பிறகு நாங்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பகுதிகளை மூழ்கடித்தபடி கரைபுரண்டு வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகேட்டு சென்று பார்த்தால் பாலத்தின் இந்தப்புறம் கொடிகள் கட்டப்பட்டு யாரையும் அனுமதிக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறையும் காவல்துறை அதிகாரிகளும் சுற்றிக்கொண்டிருந்தனர்.

நெல்லை குற்றாலம் சாலைகளில் கழுத்து அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. சுற்றியுள்ள டவுண் பேட்டை பகுதிகள் நெல்லையில் இருந்து துண்டிக்கப்படும் அளவிற்கு ஒவ்வொரு வீடுகளிலும் சாதி மதம் பார்க்காமல் வெள்ளம் புகுந்து கடல்களின் நடுவே தீவு போல அந்தப்பகுதிகள் காட்சி அளித்தது.



Photobucket - Video and Image Hosting

வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு வந்தனர். இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் அவ்வளவுதான் அந்தப்பகுதியே முற்றிலுமாக மூழ்கடித்துவிடும்.

இதுபோன்ற வெள்ளத்தை நான் 1992 ம் ஆண்டு தான் கண்டிருக்கின்றேன். எனது ஊரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தெருக்களில் தண்ணீர் ஓடியது. திருநெல்வேலி பேருந்து நிலையம் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அந்த வெள்ளத்திற்கு இது கொஞ்சம் பரவாயில்லை.

மழை வருவதற்கு முன்பே வடிகால்கள் வெட்டுதல் மற்றும் குளங்களை எல்லாம் சீரமைத்தல்; போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வெள்ள அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம். வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இதன்பிறகாவது அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் மழைக்காலம் வரும் முன்பே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு

A wise man in peace time prepares for a war
(இதை யாராவது சரியாக தமிழில் மொழிபெயர்ங்களேன் )

அடுத்து தொடர் கொள்ளை..

சமீப காலமாக தொடர் கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. நகரின் ஒதுக்குப்புறங்களில் மட்டும் நடந்திருந்தால் மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள் ஆனால் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கும் திருநெல்வேலியின் பேருந்து நிலையம் அருகே கூட கொள்ளைகள் நடந்திருப்பது மக்களை பீதியில் இருக்க வைத்திருக்கிறது

நெல்லையில் கட்டபொம்மன் நகர் சாந்தி நகர் ரஹ்மத் நகர் அன்பு நகர் - ஸ்டேட் பேங்க காலனி பேட்டை நெல்லை ஜங்ஷன் - பாளை பஸ் நிலையம் என்று கொள்ளைகள் தொடரந்த வண்ணம் இருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பெரும்பாலும் ஆள் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்ற வீடுகளில்தான் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெறுகின்றது. அதுவும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டு திரும்பும் 1 மணிநேர இடைவெளியில் கூட வீட்டைத்திறந்து கொள்ளையடித்து சென்று விடுகின்றது. ஒரே தெருவில் ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளில் கூட கொள்ளைகள் நடந்திருக்கின்றது.

பாளையங்கோட்டை அன்புநகர் அருகே ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீட்டின் பின்புறம் வழியாக கதவை கொள்ளையர்கள் நோண்டிக்கொண்டிருந்தபொழுது பின்புறம் உள்ள வீட்டில் உள்ள ஒரு பெண்மணி டாய்லெட் செல்ல, பின்புற கதவை திறந்தபொழுது இரண்டுபேர் கதவை திறக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டு, யாரு ..என்று கேட்க அவர்கள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.

அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபொழுது எனது கணவரே ஒரு போலிஸ்காரர்தான். மாறுவேடத்தில் நெல்லையில் உள்ள கொள்ளையனைப் பிடிக்க சுற்றிக்கொண்டிருக்கின்றார். எனது வீட்டின் பின்புறமே திருடன் வந்திருக்கின்றான் பாருங்களேன்..

பின்பு காவலர்களின் கெடுபிடி அதிகரித்ததைக் கண்டு நெல்லையின் இன்னொரு பகுதியான பேட்டைக்கு அந்தக் கொள்ளை கும்பல் இடம்பெயர்ந்திருக்கின்றது.

பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றபொழுது அந்த நேரத்தில் வந்து வீட்டின் முன்புற கதவை உடைத்திருக்கின்றனர் தாங்கள் உடைப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அங்கு காய்ந்து கொண்டிருந்த சீலையை திரைச்சீலை போல வீட்டின் கதவு முன்பு கட்டி கதவை உடைத்து கொள்ளையடித்திருக்கின்றனர்.

பாருங்களேன் அந்த நபர் இத்தனை மணிக்கு வங்கிக்கு செல்லுவார் என்று தெரிந்து வந்து கொள்ளையடித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

பின்பு பாளை மகாராஜா நகர் பகுதியில் விஞ்ஞானி ஒருவர் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று திரும்புவதற்குள் அவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள்.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்கம் என்ற போட்டோ ஸ்டுடியோவில் இரவு 12.30 மணிக்கு கொள்ளையடித்துள்ளனர். அதில் என்ன வேடிக்கை என்றால் 12 மணிக்குத்தான் கடை ஊழியர்கள் கடையை அடைத்த விட்டுச் சென்றிருக்கின்றனர்

போலிஸார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டுவிட்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அந்தக்கும்பலை பிடிக்கும் தீவிர முயற்சியில் நெல்லை கமிஷனர் உமா கணபதி சாஸ்திரி அவர்கள் புதிய புதிய திட்டங்களை வகுத்து கொள்ளையனை பிடிக்க முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்.

கொள்ளை நடக்கும் பகுதிகளில் வாகனசோதனை போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.மற்றும் தெருவுக்கு ஒரு போலிஸ் என்பது போல எங்கு பார்த்தாலும் போலிஸ்மயமாக காட்சி அளிக்கின்றது.

ஒன் டு ஒன் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பழைய குற்றவாளிகளை கணக்கில் எடுத்து அவர்கள் ஒரு போலிஸ் வீதம் அவர்களது நடமாட்டங்களை கண்காணிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

மேலும் கொள்ளையனைப்பற்றி மக்கள் கொடுத்த அடையாளங்களை கம்ப்யூட்டரில் வரைந்து அவற்றை பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அவன் சிவப்பாக உயரமாக இருக்கும் அந்த நபர் வடமாநிலங்களை சேர்ந்தவனாக இருக்குமோ என்று போலிஸார்களுக்கு துப்பு கிடைக்க நெல்லையில் சாலையோரமாய் கடை வியாபாரம் வைத்திருக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் துளைத்து துளைத்து விசாரிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

ஒரு வீடு பூட்டி கிடக்கிறது என்று எப்படி கொள்ளையர்களுக்கு தகவல் கிடைக்கின்றது. அவர்கள் தெருத்தெருவாக பகல் நேரங்களில் கண்காணிக்கின்றார்களா? அல்லது அவர்களுக்கு யாராவது தகவல் கொடுக்கின்றார்களா என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கே நெல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டதை உணர்ந்த கொள்ளையர்கள் மெதுவாக இடம் பெயர்ந்து தென்காசி மேலகரத்தில் ஒரு வீட்டில் கொள்ளை நடத்தியுள்ளனர். உடனே காவலர்கள் உஷாராகி தென்காசி டு நெல்லை பேருந்துகள் வாகனங்கள் என்று சோதனைகளில் இறங்கியுள்ளனர்.

இறுதியாக அவனைப்பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லுபவர்கள் அருகிலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால் ஆலயம் போகும்போது - ஷாப்பிங் போகும்போது - வங்கிக்கு போகும்போது என்று ஒவ்வொரு முறையும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துக்கொண்டா இருக்க முடியும்?

இப்பொழுது மழை வெள்ளத்தினால் அந்தக் கொள்ளைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. ஒருவேளை நிலைமையின் பதட்டத்தை குறைக்க கொள்ளையர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார்களோ என்னவோ..?

கொள்ளை நடக்கின்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தானியங்கி வீடியோ கேமிராக்களைப் பொருத்தி கண்காணிக்கலாம். ஆனால் இதள் மூலம் கொள்ளையர்கள் பிடிபடுவார்களோ இல்லையோ தவறு செய்யும் மற்றவர்களும் பிடிபட்டுப் போவார்கள்.

வெள்ளச் சேதமும் கள்ளச் சேதமும் இப்பொழுது குறைந்து கொண்டு வருகின்றது.

நடைபெற்ற தொடர்கொள்ளையினால் நெல்லை மக்கள் இன்னமும் பயத்தில் தான் இருக்கின்றார்கள். நிம்மதியாக வீட்டை பூட்டி விட்டு செல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கிவிட்டது. போக்குவரத்துகள் எல்லாம் சீராகிக்கொண்ட இருக்கின்றது. ஆனால் கடைசியாக கிடைத்த தகவல்படி நேற்று ( 24.11.06) பாளையங்கோட்டையில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற ஒருவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
தொடர்மழை - தொடர் கொள்ளை
ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான்

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்
பெரும்பாலும் இரவில்தான்

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்
விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து
சுருட்டுவான்

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும்
தகர்த்துவிட்டு நுழையும் மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான்



யாருக்கும் பயப்படாது - காவல்துறைக்கு பயப்படுவான்

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்!
தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம்

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

மக்களின் மனநிலை அறிக்கைதான் சொல்லும்

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்
வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம்.

வருவது தெரிந்தால் மாடிக்கு சென்று விடவேண்டும்
வருவது தெரிந்தால் வாசலுக்கு வந்துவிடவேண்டும்

வந்தால் இடம் சுத்தமாகிவிடும் -

வந்தால் பொருட்கள்
சுத்தமாகிவிடும்


பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்
பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் புகார்
கொடுக்கலாம்.



இந்த தொடர் கொள்ளையை தடுக்க எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று நண்பர்கள் தங்களுக்கு உண்டான யோசனையை தெரிவித்தால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.


- ரசிகவ் ஞானியார்

Friday, November 24, 2006

மனித(ம்) உறக்கம்

Photobucket - Video and Image Hosting

குளிரில் நடுங்கிய
பூனையின் முனகலாய்..

எவரோ வீசிச்சென்ற
ரொட்டித்துண்டுகளை தரையில் பரப்பி...
வாழ்க்கையையும் ,
ரொட்டித்துண்டுகளையும்,
தேடித் தேடிச் சாப்பிட்டு...

அழுக்குத்துணியில்
தன்னையும் ..
தன்மானத்தையும்...
போர்த்தியபடி கிடக்க,

உற்று நோக்கினேன்..
மனசின் ஓரத்தில்
மதப்பற்று!
மத அடையாளம் தெரியவில்லை!

இந்தியனாய் இருக்க கூடுமோ..?
தேசப்பற்று..
திமிறிக்கொண்டு வந்தது!

தமிழனாய் இருக்குமோ?
மொழிப்பற்றும் மீறி வந்தது!


வேலை தேடி வந்து..
வீதியில் நிற்பவனா?
விசா எடுத்தவன்..
விரட்டி விட்டிருப்பானோ..?


விசாரித்தால்
ஏழ்மை ஒட்டிக்கொள்ளுமென்ற அச்சத்தில்
மனிதம் தவறியபடி..
மனிதர்களின் அவசரங்கள்!

மனசாட்சியினை
பணங்களின் தேவைகள்..
பறித்துவிட்டனவே!

மனிதத்தை
மண்ணெண்ணையில் எரித்துவிட்டு..
சுயநலங்கள்
சாப்ட்வேரில் சமாதியாகின்றது!

பாவிகளா
எவனுமே விசாரிக்க மாட்டீர்களா..?
கதறுகிறது நெஞ்சம்..
"நான்" எங்கே போனேனோ..?


காட்டுமிராண்டிகள் எல்லாரும்..
கவனிக்காமல் செல்லுகின்றனர்!


இந்த
காட்டுமிராண்டியால் முடிந்தது
ஒரு கவிதை மட்டுமே..

நானும் மனிதனாவதெப்போது..?




- ரசிகவ் ஞானியார்

Thursday, November 23, 2006

உங்க மனசுல யாருங்கோ

Photobucket - Video and Image Hosting

விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.


அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது


இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை


இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு


அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..


காயிதே மில்லத்..?

ஆமாம்


அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்


அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்


கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்


தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் - தோசை - முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்


தயிர்சாதம்?


ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா - மல்லிகை - பிச்சுப்பூ?

ஆம்


ரோஜா..?

ஆம்


ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

"அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா.."
அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

Wednesday, November 01, 2006

விபத்தும் விபத்து சார்ந்த இடமும்

Photobucket - Video and Image Hosting

நேற்று நண்பனோடு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் நோக்கி விரைந்து பைக்கில் சென்று கொண்டிருந்தபொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எனது பைக் சேவியர் கல்லூரியைத் தாண்டி வேகமாய் சென்று கொண்டிருந்தது.தூரத்தில் வரும்பொழுதே கவனித்துவிட்டேன். அந்த சான்ரோ கார் திரும்புவதற்கு முயற்சித்து முயற்சித்து பின்வாங்கியது.
நானும் வாகனத்தில் நெருங்கி விட , அந்த நேரத்திலும் அந்தக் கார் திரும்ப முயற்சித்து பின்வாங்கிவிட, தைரியமாக விரட்டி சென்றேன்.

எதிர்பாராத விதமாக அந்தக்கார் இப்பொழுது சரியாக ரோட்டின் குறுக்கே வரை வந்து திரும்பிவிட , நானும் சட்டென்று ப்ரேக் பிடிக்கமுடியாததால், கார் முழுவதும் திரும்புவதற்குள் சென்றுவிடலாம் என்று எத்தனிக்க , காரும் நான் முந்துவதற்குள் திரும்பிவிடவேண்டும் என அவசரப்பட..

ப்ரேக் முழுவதுமாய் அழுத்தி நிறுத்துவதற்குள் ..ட..மார் என்ற சப்தத்துடன் நாங்கள் வாகனங்களால் முத்தமிட்டுக்கொண்டோம்.

காரின் ஹெட்லைட் மற்றும் முன்பகுதிகள் நொறுங்கி தெறிக்க, எனது பைக்கில் ஹெட்லைட்டும் உடைந்து சிதறி முன்பகுதிகளில் உள்ள சில துண்டுகள் சிதறி விழுந்தன.

மோதிய வேகத்தில் நான் பைக்கில் இருந்து காரின் முன்பகுதியில் விழுந்து உருண்டு கீழே விழுந்துவிட்டேன். நல்லவேளை காரை ஓட்டியவரும் உடனே ப்ரேக் போட்டுவிட கார் என்மீது ஏறாமல் தப்பித்தேன்.

நான் விழுந்த வேகத்தில் உருண்டு கிருஷ்ணா மருத்துவமனையின் ஓரத்தில் விழுந்துவிட பின்னால் வந்த நண்பன் சுதாரித்து குதித்து, ஓடி வந்து தரையில் கிடந்த என்னை எழுப்பிவிட, நல்லவேளை கைகளிலும் மணிக்கட்டிலிலும் அதிகமாக அல்லது குறைவாக என்று சொல்லமுடியாத அளவிற்கு அடிகள்.
கொஞ்சம் உள்ளங்கைகளில் சிராய்ப்புகள்.

நான் கீழே விழுந்த அதிர்ச்சியில் எதிரே வந்த ஜங்ஷன் பேருந்து திடீரென்று ப்ரேக் அழுத்தி நின்றது. நண்பர்களின் மற்றும் உறவினர்களின் மற்றும் சுற்றியிருப்பவர்களின் சுயநலம் இல்லாத ப்ராத்தனைகளும் அன்பும்தான் அந்த பேருந்து ட்ரைவரை ப்ரேக் போட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகவ்வின் வலைப்பதிவுகள் அநாதையாக போயிருக்கும்.

பக்கத்தில் பள்ளிக்கூடம் இருப்பதால் அங்குள்ள மாணவர்களின் மற்றும் சாலையோர பயணிகளின் கூட்டங்கள் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

போரில் குண்டு வீசப்பட்ட பகுதிகளைப் போல கண்ணாடிச்சிதறல்கள்.. உடைந்த காரின் முன்பாகம்..பைக்கின் ஹெட்லைட் துகள்கள்..செருப்பு..பேனா..பைக்கில் இருந்து விழுந்த வார இதழ்.. மூக்கு கண்ணாடி.. சில துண்டு துண்டு வொயர்கள்..என்று அந்தப்பகுதி மினி கலவரபூமியாக காட்சியளித்தது.

கீழே விழுந்தவனை வேடிக்கை பார்க்கும்பொழுது அவனுடைய கோபம் - படபடப்பு சுற்றியுள்ளவர்களுக்கு சில சமயம் நியாயமாகத்தெரியாது. ஆனால் இப்பொழுது நான் விழுந்ததும்தான் அந்த படபடப்பை கோபத்தை தெரிந்துகொண்டேன். கார் ஓட்டி வந்த பெரியவர் பந்தாவாக இறங்கி காரின் முன்பகுதியில் உள்ள சேதத்தை பார்த்தார். எனக்கு கோபம் அதிகமாகி வலித்த கைகளை நீட்ட முடியாமல் மடக்கி வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுனரிடம் சண்டைக்குச் சென்றேன்.

"அறிவிருக்கா சார்.. நான்தான் வர்றேன்னு தெரியுதுல..அங்கிருந்தே ஹாரன் அடிச்சிட்டே திரும்புறேன்ல.. பார்த்து திரும்பவேண்டியதுதானே..?"

"நான் சிக்னல் போட்டுட்டுதானே திரும்புனேன்..நீதான் கவனிக்கல.. " சொல்லிக்கொண்டே தனது காரின் முன்பகுதியையே நோட்டமிட்டார்..

"கைல அடிபட்டிருக்குன்னு சொல்றேன்..உங்களுக்கு கார்தான் முக்கியமா படுதோ?.. பார்த்து திரும்ப கூடாது.. ? "என்று நான் கோபப்பட


பக்கத்தில் உள்ள ஆட்டோக்காரர்கள் எல்லாம், எனக்கு ஆதரவாகவும் அந்த சான்ரோ கார் ஓட்டுநருக்கு எதிர்ப்பாகவும் பேச ஆரம்பிக்க,

எனக்கு அடிபட்டிருக்கிறது என்ற பயமும், ஆட்டோக்காரர்களின் ஆதரவும் கண்டு பயந்த அவர் நான் முந்துவதற்குள் தான் முந்திவிடவேண்டும் என்று "போலிஸை கூப்பிட்டுறுவேன்" என்று மிரட்ட,

உடனே நான் 100 க்கு எனது செல்போனிலிருந்து டயல் செய்ய, "உங்கள் தொலைபேசிக்கு இந்த வசதி இல்லை" என்று அழகான தேவதை வரமிட்டுக்கொண்டிருந்தாள்.

"இவ்வளவு வசதி கொடுக்குறாங்க இந்த வசதியை மட்டும் ஏன்பா கொடுக்கலை செல்போனுக்கு" என்று நொந்தபடி பக்கத்தில் உள்ள காயின் பாக்ஸில் சென்று 1 ரூ நாணயத்தை இட்டு 100 ஐ டயல் செய்தேன். வாழ்க்கையில் முதன்முதலாய் 100 க்கு போன் செய்கின்றேன். அதுவே கடைசிமுறையாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

ரிங்..ரிங்...ரிங்..ரிங்..

"ஹலோ அவசர உதவி.. யார் சார் பேசுறது..?"

அவர்கள் கூறிய தொனியைக் கேட்டவுடன் அவங்களுக்குத்தான் அவசர உதவி தேவையோ என்று நான் நினைத்துக்கொண்டேன்.

"சார் என்னோட பேரு ஞானியார்..இங்கே கிருஷ்ணா மருத்துவமனை அருகே ஒரு கார் என் பைக்ல மோதிடுச்சு சார்.."

"சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும்ங்கறீங்க.."

"என்னப்பா இப்படி பொறுப்பில்லாம சொல்றாங்க" என்ற எரிச்சலுடன், "இல்லை சார் எனக்கு கைல அடிபட்டிருக்கு..பைக்குக்கும் சேதம் அதனால் கம்ப்ளெண்ட் பண்ணப்போறேன்.. " என்று கூற

"உங்க வண்டி எண் சொல்லுங்க.. TN72 H 1717 - Splender"

"சரி அந்த வண்டி நம்பர் என்ன..?"

"TN 72 P 303 சாண்ரோ கார் சார்.."

பெயர் - முகவரி - இடம் என்று எல்லாம் கேட்டு விட்டு , "இன்னும் 5 நிமிசத்துல வண்டி வரும் சார் " என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள்.

அதற்குள் என்னுடன் வந்த நண்பன் ஷாஜஹான் தனது உறவினரான பக்கத்து போலிஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் ஒருவருக்கு போன் செய்து விவரம் கூற, அவர் உடனே வருவதாக வாக்களித்தார்.

அவசர உதவி வருவதற்காக காத்திருந்தோம். அவசர உதவி கொஞ்சம் தாமதமாகவே வந்தது. நண்பர் ஷாஜஹானிடம் காத்திருந்த நேரத்தில் துபாயில் உள்ள விபத்துக்களைப் பற்றி பகிர்ந்து கொண்டேன்

இதே துபாய்னா..மோதியவரும் மோதப்பட்டவரும் இறங்கியவுடன் கைகுலுக்கிவிட்டு போலிசுக்கு போன் செய்வார்கள்.

போன் செய்த 5 நிமிடத்திற்குள் போலிஸ் வந்து வண்டி எப்படி மோதியது? யார் மீது தவறு..? எந்த வாகனம் தவறுதலாய் வந்திருக்கும் என்று அலசி ஆராய்வார்கள். பின் தவறு செய்தவருக்கு சிகப்பு நிற ரிப்போர்ட்டும், தவறு செய்யாதவருக்கு பச்சை நிற ரிப்போர்ட்டும் கொடுத்து விடுவார்கள்.

அதனைக் கொண்டு சென்றால்தான் மெக்கானிக் ஷாப்பில் வண்டியை ரிப்பேர் செய்ய அனுமதியளிப்பார்கள். அதுபோல ஒரு வரைமுறைகள் இங்கும் இருந்தால் எப்படியிருக்கும் என்று நண்பனிடம் விவாதித்துக் கொண்டிருக்கும்பொழுதே மழையும், அவசர உதவி போலிசும் விரைந்து வந்தன.

நான் ஓடிச் சென்று அவர்களிடம் என்னைப்பற்றி கூறி என் முகவரி,எனது வாகன எண், விபத்து நடந்த முறை , மோதியவரின் வாகனம் மற்றும் எண் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மோதியவரை அழைத்து அவருடைய முகவரியை போலிஸ் கேட்க , அவரோ "வண்டியை எடுத்து ஓரத்துல விடுறேன் சார்..வண்டியை ஓரத்துல விடுறேன் சார்.".என்று அவரிடம் நச்சரிக்க, அந்தப் போலிஸ்காரர் எரிச்சலடைந்து "ஒண்ணும் வேண்டாம் தகவலைக் கொடுத்துட்டுப் போங்க " என்று கோபப்பட்டார்.

அந்தப் பெரியவரும் தகவலைக் கொடுத்துவிட்டு தனது வாகனத்தை ஓரத்தில் நிறுத்துவதற்காக செல்ல இந்தப்போலிஸ்காரர் என்னை அழைத்தார்.

"சார் இங்க வாங்க" என்று போலிஸ்காரர் என்னை அழைக்க , நான் உடனே காருக்குள் ஏற அவரோ, "அட இப்படி சுத்தி இந்த சைடு வாங்க சார்.. " என்க ,

நான் ஜீப்பை சுற்றி அவர் பக்கம் செல்ல அவர், "உங்களுக்கு கைல வலி அதிகமாக இருந்தா நீங்க உடனே போய் ஜி ஹெச்ல அட்மிட் ஆகியிருங்க" என்க நானோ

"பக்கத்துலதான் இந்த கிருஷ்ணா ஹாஸ்பிடல் இருக்கே..இங்கே ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கறேன் சார்.."

"அட நான் சொன்ன மாதிரி செய்யுங்க..ஜி ஹெச்சுக்குப் போனாதான் போலிஸ் கேஸாகும்..அங்க போங்க " என்று கூற

"சரி சார் இப்ப போகவா..?"

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எஸ் ஐ வந்திட்டு இருக்கார்..இதுக்குன்னு தனி எஸ் ஐ போட்டுறுக்காங்க.. அவர் வந்தவுன்ன போங்க" என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே

எனது நண்பன் ஷாஜஹானின் உறவினரான ஏட்டையா வந்து அந்த போலிஸ்காரர்களிடம் சகஜமாக பேச எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

நான் உடனே எனது நண்பன் காஜாவிற்கு போன் செய்து எங்களுக்கு தெரிந்த எங்களது கல்லூரி நண்பரான பிரதீஷ் என்ற லாயரை வரச்சொன்னேன்.

மழையும் , வலியும் அதிகரிக்க கைகளை சிரமப்பட்டு நீட்ட முயன்று மடக்கி வைத்துக்கொண்டேன். அதனைக்கண்ட நண்பனின் உறவினரான போலிஸ்காரர் என்னிடம், "வாங்க முதல்ல ஜி ஹெச்சுக்குப் போய் அட்மிட் ஆகி கேஸை பைல் பண்ணுவோம்" என்று கூறி என்னை அவரது பைக்கில் ஏற்றிக் கொண்டார்.

நேராக கவர்மெண்ட் ஹாஸ்பிடல், ஆக்சிடெண்ட் கேர் பகுதிக்குச் சென்று வரிசையில் அமரச்சொல்லிவிட்டு அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் "அர்ஜெண்ட்" என்று கண்ணசைக்க அவரும் "சரி சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னார்.

மருத்துவமனை என்றாலே எனக்கு அலர்ஜி அதுவும் அரசாங்க மருத்துவமனை என்றால் சொல்லவேண்டுமா..? அந்த வாசனையே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்தில் உள்ள ஊழியர் ,"என்னாச்சுப்பா..?" என்றார்

"சின்ன ஆக்சிடெண்ட்ங்க.."

"பைல் பண்ணினா போலிஸ் கேஸாயிடும்" என்று அவர் கூற

"அதுக்குத்தான் வந்தோம் "என்று கூறிவிட்டு என்னுடைய முறை வந்ததால் உள்ளே சென்றேன்.

மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர் & மாணவி ஒருவர் அமர்ந்திருக்க, அவர்கள் என்னிடம் எல்லாம் விசாரித்ததார்கள். பின் தோள்பட்டையில் ஊமைக்காயம் பட்டிருப்பதாகவும், கைளை ஸ்கேன் செய்யவேண்டும் என்றும் ரிப்போர்ட் எழுதிவிட்டு ஒரு குறிப்பிட்ட படுக்கையை எனக்காக தேர்வு செய்தார்கள்.

பின்னர் கைகளில் ஒரு ஊசி போட்டுவிட்டு அந்தப்படுக்கையில் மனமில்லாமல் சென்று அமர்ந்தேன்.

அந்த ஏட்டையாவிடம் , "அய்யோ இங்கேயா இருக்க"

"அப்பத்தான் கேஸ் பைல் பண்ணமுடியும்..நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கும்..கொஞ்ச நேரம்தான்பா..நான் போய் வண்டி என்ன ஆச்சு..அந்த எஸ் ஐ வந்தாரா இல்லையான்னு பார்த்துட்டு அங்குள்ள நிலைமையை பார்த்துட்டு வந்துர்றேன்.. "என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கு அங்குள்ள சூழல் ஒரு விதமான பயத்தை கொடுத்தது. தயக்கத்துடனையே சென்று எனக்குண்டான படுக்கையில் சென்று அமர்ந்தேன். எனக்கு நீண்ட நாட்களாகவே அரசாங்க மருத்துவமனையைப் பற்றி ஒரு லைவ் ஆர்ட்டிக்கிள் எழுத வேண்டும் என்று ஆசை..ஆனால் எப்படி சூழல் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பாருங்களேன்?

சில இரத்தக்காயங்கள் ஆங்காங்கே தெரிகின்ற ஒரு போர்வையை விரித்திருந்தார்கள். நான் பட்டும் படாமல் நுனியில் உட்கார்ந்திருந்தேன். சுற்றி நோட்டமிட ஆரம்பித்தேன்.

எனக்கு பக்கத்து படுக்கையில் ஒரு சிறுவனுக்கு கைகள் இரண்டிலும் பலத்த கட்டு போட்டிருக்க அவன் குப்புற படுத்துக் கிடந்தான். அய்யோ பாவம்..நிமிர்ந்து கூட படுக்க முடியவில்லை

இந்தப்பக்கத்தில் ஒருவன் உடலெல்லாம் வெட்டுக்காயத்தோடு முனகிக் கிடந்தான். சட்டைப்பையில் மற்றும் பேண்டில் எல்லாம் இரத்தம் உறைந்து போய் இருந்தது. அவனிடம் ஒரு லேடி டாக்டர் ( பயிற்சி மாணவி ) "என்னப்பா ஆச்சு..?"

அவன் அலட்சியமாக "ஒரு தகறாறு வெட்டிட்டாங்க.." என்று கூற

"எதுக்கு வெட்டினாங்க?" - டாக்டர்

அவன் சொல்லவில்லை மௌனம் சாதித்தான்.எனக்கு அந்தச் சூழல் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனுக்கு அந்த லேடி டாக்டர் மயக்க மருந்து கொடுத்து வெட்டுக்காயங்களுக்கு மருந்து அளித்துக்கொண்டிருந்தார் எந்தவித முக சுளிவுகளும் இல்லாமல். மருத்துவத்தொழிலின் புனிதம் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு படுக்கையில் உள்ளவனுக்கு முகத்தில் எல்லாம் வெட்டுக்காயங்கள். அவனை அவனது உறவினர் கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தன்னுடைய உதவியின்றி பாத்ரூம் கூட செல்லமுடியாத நிலைமை எந்த மனிதனுக்கும் வரவே கூடாது..

கவர்மெண்ட் ஆஸ்பிடலில் இருப்பது போல ஒரு கொடுமை எங்கும் கிடையாது. பேசாமல் யாருக்காவது தண்டனை கொடுக்க விரும்பினால் அவனை கவர்மெண்ட் ஆஸ்பிடலில் ஒரு வாரம் தங்க வைத்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு சூழல் என்னை மிகவும் பாதித்தது.

ஒரு நோயாளியின் காயங்கள் அவனுடைய நிலைமைகள் பக்கத்து படுக்கையில் உள்ள நோயாளியின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கேபின் கேபினாக படுக்கை அறையை அமைத்தால்தான் என்ன..? ஏழைகள் அல்லது இலவசமாய் செய்கின்ற எல்லாமுமே அப்படித்தான் இருக்கின்றன. இதற்கு ஒரு தீர்வே கிடையாதா..? என்று விடியுமோ..?

இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும்பொழுதே எனது நண்பன் மற்றும் ஏட்டையா ஆகியோர் வந்தனர். அங்குள்ள நர்சுகளிடம் என்னை வெளியே அழைத்துச் சென்று தேநீர் வாங்கித்தந்துவிட்டு வருவதாக சொல்லி அழைத்துச்சென்று மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்று விட்டார்.


"உன்னை அட்மிட் பண்ணியாச்சுன்னு சொன்னவுடனையே அந்த ஆள் சமாதானத்திற்கு வந்திட்டாரு..அந்த எஸ்ஐ யிடம் பேசினேன். அந்த ஆளுக்கு இன்சூரன்ஸ்க்காக ஒரு ரிப்போர்ட் கொடுத்துறலாம். நீங்க கேஸை வாபஸ் வாங்கிருங்கன்னு சொல்லிட்டாரு..ஏன்னா நமக்கும் இன்சுரன்ஸ் இல்லை.."

"அதையும் மீறி அவர் கேஸ் போடணும்னு சொன்னாருன்னா நம்ம மறுபடியும் படுக்கையில சேர்ந்துறலாம் "

என்று கூறிவிட்டு, அந்த எஸ் ஐ யை பார்ப்பதற்காக ஜங்ஷன் சென்றுகொண்டிருக்கும்பொழுது நண்பர் ஷாஜஹான் தான் மறுநாள் துபாய் செல்லவேண்டும் ஆகவே தானும் காவல் நிலையம் வந்தால் சிக்கல் என்று நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்

உடனே காஜா வந்து எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வர நான் அந்த ஏட்டையாவுடன் ஜங்ஷன் சென்றேன். அந்த எஸ் ஐ வெளியில் போய்விட மாலை வரச்சொன்னார்கள்.

3 மணியிலிருந்து 5.30 மணிவரை அங்கு காத்திருந்தும் எஸ் ஐ வராததால் அவருக்கு போன் செய்ய அவரோ வழக்கு போட விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்று விடுமாறு சொல்ல அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

மனு எழுதும்பொழுது எனக்கு பள்ளிக்கூட காலத்தில் லீவு லட்டர் எழுதியதுதான் ஞாபகம் வந்தது. அங்குள்ள ஒரு காவலர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன்.

மனுதாரரின் பெயர் : கே. ஞானியார் வயது : 28


--------------------------

திருநெல்வேலி.



பெறுநர் : உயர்திரு போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் - திருநெல்வேலி


ஐயா,


நான் இன்று காலை 12.45 மணியளவில் பாளையங்கோட்டை அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு ஹைகிரவுண்ட் சென்று கொண்டிருந்தபொழுது எனது வாகனமான TN72 H 1717 - Splender– மீது தனது காரை ( TN 72 P303 ) காரை சட்டென்று திருப்ப முயன்று என் மீது மோதிவிட்டார். என்னுடைய வாகனத்திற்கு சிறு சேதமும் எனக்கு கைகளில் ஊமைக்காயமும் உள்ளங்கையில் சிறு சிராய்ப்பும் ஏற்பட்டள்ளது. நாங்கள் எங்களுக்குள் சமாதானமாகி போய்விட்டபடியால் இது தொடர்பாக போலிஸ் தலையீடு தேவையில்லை என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

கே. ஞானியார்






என்னுடன் காவல் துறையைச் சார்ந்த தெரிந்தவர் ஒருவர் வரப்போய் அங்குள்ள நிலைமைகளை சீராக கொண்டு செல்ல முடிந்தது. இல்லையென்றால் பணம் விரயம் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கும்.


எனக்கு நேர இருந்த ஒரு பெரிய ஆபத்து நீங்கிவிட்டதோ என்ற ஒருவிதமான திருப்தியிலும் உள் அச்சத்திலும் மன கலக்கத்திலும் மற்றும் அம்மா ஒத்தடம் கொடுத்த கைகளோடும் நினைவுகளின் அசைவுகளோடும் தூங்கப்போகின்றேன்.


- ரசிகவ் ஞானியார்

Saturday, October 21, 2006

தீபா'வலி'




தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள்!

வெடித்துச்சிதறும்...
வெடிகள் எல்லாம் எனக்கு
வேறு எதையோ...
ஞாபகப்படுத்துகிறது!

ஆகவே
தீபாவளி கொண்டாட...
தைரியம் வரவில்லை !
அடுத்தவீட்டு
அடுப்பு நெருப்புகூட...
எனக்கு
ஆப்கானையும்...
அமெரிக்காவையும்...
நினைவுக்குகொண்டு வருகிறது!

பொம்மை ராக்கெட்டே
பயமுறுத்திச் செல்லும்போது,
எங்கையோ
உண்மை ராக்கெட்டுக்கள்...
உலாப்போகிறதாமே?

வாய்க்காலில்
'டைவ்' அடித்துக்குளித்த...
தைரியசாலிகளை பார்க்கும்போது,
எனக்கு
வர்த்தகமையத்தின்
மாடியிலிருந்து குதித்த
மனிதமுகங்களின் ஞாபகம்!

மாடியிலிருந்து குதித்தது
மனிதர்கள் மட்டுமல்ல...
மனிதநேயமும்தான்!

கார்ப்பரேஷன் குழிகள்
கண்ணில்பட்டால்கூட...
எனக்கு
பதுங்குகுழி மனிதர்களை நினைத்து...
பரிதாப்படவேண்டியிருக்கிறது!


"எவர்
பொட்டையும் பறித்துவிடுமோ...?"
நான்
பொட்டுவெடிகூட வெடிக்கமாட்டேன் !

ஆகவே
தீபாவளி கொண்டாட..
தைரியம் வரவில்லை!

சின்னவயசில்...
விமானம் பறப்பதை
விழிகள் கண்டால்,
சந்தோஷத்தில்...
சப்தமிட்டுக்கொண்டே ஓடுவோம்!

இப்பொழுது
விமானம் விழுவதை..
வீதிகளில்கண்டு,
கண்ணீரோடு...
கதறிக்கொண்டே ஓடுகிறார்கள்!

ஆகவே
இந்தத் தீபாவளியில்
பொம்மை ராக்கெட்டை கூட...
புறக்கணித்து விடுங்கள் !

இனிமேல்
கைதட்டல் ஒலிகள்கூட...
காதுகளில் விழக்கூடாது!
ஆம்
கைகள்கூட...
ஒன்றுடன்ஒன்று மோதக்கூடாது!


துப்பாக்கியிலியிருந்து புறப்படும்
தோட்டாக்கள் எல்லாம்...
தோட்டத்துப்பூக்களாகட்டும் !

இனிமேல்
துப்பாக்கி ரவைகளை...
உப்புமா கிண்ட மட்டும்
உபயோகப்படுத்துவோம்!

துப்பாக்கியிலிருந்து
புல்லட்டுக்கள் அல்ல...
புறாக்கள் பறக்கட்டும் !

இரண்டுநாட்டு எல்லைகளிலும்
வீரர்களின் கைகளில்...
துப்பாக்கிக்குப் பதிலாக
ரோஜாக்களை பரிசளிப்போம் !

இனிமேல்
உள்ளுர் தீபாவளியென்ன...
உலகத்தீபாவளியே
கொண்டாடுவோம்!

அதுவரை
தயவுசெய்து
தீபாவளிக்கு யாரும்...
வெடிகளை வெடிக்காதீர்கள் !


- ரசிகவ் ஞானியார்

Thursday, October 12, 2006

உங்க சின்னம்.. பட்டை நாமம்



உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் ஆட்டோ ஆட்களோடு வெகு வேகமாய் நடந்து கொண்டிருக்கின்றது.

உங்கள்.. வீட்டுப்.. பிள்ளை.. என்று ஆரம்பித்து .................

காலில் வணங்கி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ---------- சின்னத்தில் ஓட்டு போடுங்கள். என்று முடிக்கும் வரையிலும் எல்லாருமே குறிப்பிட்ட வசனங்களை பயன்படுத்துவதால் அதனைக் கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது

எங்கள் வார்டில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். பாவம் அவருடைய கணவரின் கட்டளையின் பெயரில் நிற்கின்றார்கள். அந்த பெண்மணிக்கு அரசியல் அணுகுமுறைகளும் பொது அறிவும் மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொண்டேன்.

திணறி திணறி எங்களுக்கு ஓட்டுப் போடுங்க..நாங்க..நாங்க சட்டசபையில் இந்த வார்டைப்பற்றி பேசுவேன் என்று கூற

எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர்களிடம் இல்லைம்மா நீங்க பேசவேண்டியது சட்டசபை இல்லை மாநகராட்சிக் கூட்டம்தான்..

ம்..ஆமா ஆமா மாநகராட்சி கூட்டத்துல நம்ம வார்டைப்பற்றி பேசுவேன். குறைகளைத் தீர்ப்பேன்..நம்ம பகுதிக்கு சீராக தண்ணீர் கொண்டு வருவேன்.. என்று கூற

நான் அவர்களிடம் இப்பத்தான் தண்ணி ஒழுங்கா வருதே..

இல்லை இல்லை..நான் ரோடு போட உதவி செய்வேன்..என்றார்கள்

ஏற்கனவே ரோடு போடுகின்ற வேலை நடந்துகிட்டுதானே இருக்கு என்க

அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..ஓட்டுப் போடுப்பா..நாங்க வந்தவுன்ன நம்ம பகுதிக்கு நல்ல வசதிகள் செய்து கொடுப்போம் என்று உடன் வந்த குட்டி குட்டி ஜால்ராக்களும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு சேகரித்தபடி சென்றனர்.

பாருங்கப்பா சட்டசபைக்கு போகணுமா இல்லை மாநகராட்சி கூட்டத்திற்கு போகணுமாங்கிறது கூட தெரியாம ஒரு வேட்பாளர்.

இதுல என்ன வேடிக்கைன்னா ஏதோ அவர்கள் முதலமைச்சர் ஆகப்போகிற மாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றர்கள்.


"மணல் கொள்ளையைத் தடுக்குவோம்"

"ஏழைகளுக்கு உதவி செய்வோம்."

"பெண்களுக்கு சுய உதவி குழு வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு நிதி வழங்குவோம்"

"எங்கள் குடும்பத்தையே சமுதாய சேவைக்காக அர்ப்பணிப்போம்"



ஆகவே எங்களுக்கு இந்தச் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதான ஒரு சின்ன கற்பனை :

"மணல் காண்டிராக்டர்களின் கமிஷன் எனக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எப்பொழுதுதான் நானும் எனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"சாதாரணமாய் வீதிகளில் திரிகின்ற நான் பத்திரிக்கைகள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் எப்படி இடம் பிடிப்பதாம்? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"வறுமையில் இருக்கும் உங்களது கஷ்டங்களை போக்குகின்றேனோ இல்லையோ எனது குடும்பத்தின் வறுமையை விலக்க விரும்புகின்றேன். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எனது வீட்டிற்கு முன்னால் ஒரு அடி பம்பு அமைக்க நீண்ட நாளாக ஆசை. ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"கட்டிய டெபாசிட் 2000 த்தை பன் மடங்காக உயர்த்த உங்கள் வீட்டுப்பிள்ளை பட்டை நாமம் சின்னத்தில் ஓட்டு கேட்டபடி வந்து கொண்டிருக்கின்றார்."


அவரைக் கடைசியாய் நீங்கள் பார்க்கின்ற நாள் தேர்தல் நாள்தான்

அவர் கையெடுத்து கெஞ்சுகின்ற இந்த அரிய காட்சி இனிமேல் நிச்சமாய் கிடைக்காது. அவருக்கு ஓட்டுப் போட்டு இளிச்சவாயன் என்று நீங்கள் முகத்தில் முத்திரை இட்டுக்கொள்ள அவருக்கு பட்டை நாமம் சின்னத்தில் முத்திரை இடுங்கள்.



- ரசிகவ் ஞானியார்


தீவிரவாதி எம்.பி.பி.எஸ்

நெல்லையில் கிளினிக் வைத்திருக்கும் பிரபல டாக்டர்கள் சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோர்கள் பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல்கள் தாங்க முடியாத தகவல்கள் சிக்கியுள்ளன.

Photobucket - Video and Image Hosting

டாக்டர் சிவராமகிருஷ்ணன் இருதயநோய் சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் பைபாஸ் அறுவைச்சிகிச்சையிலும் வல்லுனராக திகழ்ந்ததால் இவரைத்தேடி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பலர் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

"இருதய அறுவைச்சிகிச்சையா..அட நம்ம சிவராமன்கிட்ட போப்பா..நல்ல டாக்டர்."

என்று சொல்லுமளவிற்கு புகழ் வாய்ந்தவர் இந்த டாக்டர்.

இவரைப் பார்க்க வேண்டுமானால் முன் கூட்டியே அனுமதி வாங்கி டோக்கன் வாங்க வேண்டும் அந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த கஸ்மாலம் செய்த வேலை என்ன தெரியுமா..?

சொல்றேன் கேளுங்க.. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நம்பிராஜன் என்பவர் உடல்நலம் குறைவு காரணமாக இவரைத்தேடி திருநெல்வேலிக்கு வந்திருக்கிறார். இவர் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் தனது மனைவியையையும் துணைக்கு அழைத்து வந்திருக்கின்றார்.

Photobucket - Video and Image Hosting

இந்த சூழ்நிலையில்தான் டாக்டர் சிவராமகிருஷ்ணனின் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நம்பிராஜனின் மனைவி கிருஷ்ணவேணி மீது மோகம் கொண்டு அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றார்.

இதயத்தொடர்பு வைக்கச்சொன்னால்
ஏன்டா
கள்ளத்தொடர்பு வைத்தாய்?



ஒருநாள் நெஞ்சு வலி அதிகமாகி நம்பிராஜன் இறந்து போய்விடவே ( யாருக்குத் தெரியும் சிகிச்சை சரியாக கொடுக்காமல் அவனே கொன்றிருக்கக் கூடும் ) அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் டாக்டர் சிவராம கிருஷ்ணன். தினமும் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்று நம்பிராஜனின் மனைவிக்கு ஆறுதல் அளிப்பதுபோல சிகிச்சை அளிப்பதுபோல நடித்திருக்கின்றார்.


கணவன் இல்லாத அந்த மனைவியின் மீது பாசம் காட்டுவது போலவும் அவர்களின் குடும்பம் மீது பரிவு காட்டுவது போலவும் நடித்து கிருஷ்ணவேணியையும் அவளது மகள் 8 வயது வித்யாவையும் தூத்துக்குடியில் இருந்து இடம்மாற்றி நெல்லையில் டவுணில் தங்க வைத்துள்ளார். இவர்களுடைய தொடர்பும் சமூகத்திற்கு தெரியாமல் தொடர்ந்திருக்கின்றது.

அடேய் சிவராமகிருஷ்ணா..!
நோயைக் கொல்வாயென்று
நம்பி வந்தால்,

என் கணவன்
நம்பிராஜனையல்லவா
கொன்றுவிட்டாய்?

சிவன் இராமன் கிருஷ்ணன் என்று
இத்தனை கடவுள் பெயர்தாங்கிய
உன்னை
எந்தக் கடவுள் வந்து தண்டிப்பானோ?

மக்களுக்கு மட்டுமல்ல..
கடவுளுக்கே நீ எதிரியானாய்!

ஆம்..
சிவனுக்கு நீ அரக்கன்
இராமனுக்கு நீ இராவணன்
கிருஷ்ணனுக்கு நீ நரகாசுரன்



இந்நிலையில் கிருஷ்ணவேணியின் மகள் வித்யா தனது 13 வது வயதில் வயதுக்கு வந்துவிட அந்த டாக்டர் என்னும் அரக்கனின் காமப்பார்வை வித்யாவின் மீதும் விழுந்தது. தாயையும் மகளையும் சோர்த்து அந்த நாய் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான்.

Photobucket - Video and Image Hosting

இந்த நிலையில் டாக்டரின் மகன் ஹரிசங்கர் அந்த நாயும் ஒரு டாக்டர்தான். அந்த ஹரிசங்கருக்கு தந்தையின் கள்ள உறவு தெரிய வர அதனைத் தடுக்க முற்படாமல் அவனும் கிருஷ்ணவேணியின் மகள் வித்யாவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான் ( பின்னே சைத்தானுக்கு பிறந்தது எப்படி இருக்கும்? )



நீ பெற்ற
மருத்துவப் பட்டத்தை
கழிவறையின்
காகிதத்தோடு மாட்டிவிடு.

அது
அதற்குத்தான் லாயக்கு!

ஹரிசங்கரா
முகத்தில் கரி பூசிக்கொள்ளடா!


வித்யாவும் தனது நிலையை யாரிடமும் சொல்ல வெட்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்திருக்கின்றாள். சமுதாயத்தில் பணபலமும் ஆட்பலமும் புகழும் இருக்கின்ற இந்த டாக்டர்களைப்பற்றி சொன்னால் தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து நடுங்கி போயிருக்கின்றாள்.

இந்த விசயம் கிருஷ்ணவேணியின் மகன் ராஜாவுக்கு ( இவன் நம்பிராஜனின் முதல் மனைவிக்கு பிறந்தவன்) தெரிய வர அவன் அவமானம் தாங்கமுடியாமல் வித்யாவிடமும் கிருஷ்ணவேணியிடமும் அறிவுரை கூறி வாருங்கள் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று வற்புறுத்தி வர இந்த நிலையில் அவனும் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போய்விட்டான். அவனுக்கு வைத்தியம் பார்த்தது டாக்டர் சிவராமகிருஷ்ணன்தான்..என்ன சந்தேகப்படுகின்றீர்களா..? இருக்கலாம் ஒருவேளை அந்த டாக்டரே அந்த ராஜாவைக் கொன்றிருக்கலாம். யாருக்குத் தெரியும்.?

13 வயதிலிருந்து வித்யாவை இப்பொழுது 21 வயது வரையிலும் அந்த டாக்டர் சிவராமகிருஷ்னண் என்ற நாயும் அவனுக்குப்பிறந்த ஹரிசங்கர் என்ற நாயும் அனுபவித்து வந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் இன்னொரு பகீர் தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதாவது
இத்தனை ஆண்டுகளாக அவர்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற அழகான பெண் நோயாளிகளை மயக்க மருந்து ஊசி போட்டு பாலியல் கொடுமைகள் செய்திருப்பதாக புகார் வந்திருக்கின்றது. இவர்கள் மட்டுமல்ல இவர்களது நண்பர்களுக்கும் பெண்களை அனுபவிக்க ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் இந்த மாமாப் பயலுகள்.


இதயத்தை
சோதனையிடச் சொன்னால்
சோகம் இட்டுவிட்டாயடா..?

எனக்கு ஒரு சந்தேகம்
நீ இதயம் பொருத்துவதற்கு படித்தாயா
இல்லை
இதயம் பெயர்ப்பதற்கு படித்தாயா..?

ஒன்று தெரிந்து கொள்
நீ
மயக்க மருந்து கொடுத்தது
நோயாளிகளுக்கல்ல..

உன் மருத்துவத்தொழிலுக்கு!


அந்த நாய்கள்இப்பொழும் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டதாம். மும்பையில் யாரேனும் பார்த்தால் தயவுசெய்து நாய் பிடிக்கும் வாகனத்திற்கு தொலைபேசி செய்யுங்கள்.

அந்த மருத்துவமனைகளை இப்பொழுது சீல் வைத்து விட்டார்கள். அங்குள்ள நர்சுகள் எல்லாம் இப்பொழுது வேலை வேண்டாம் கற்பு போதும் என்று ஓட்டம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மருத்துவர்களை முழுவதுமாய் நம்பி தன்னுடைய உடலையே அவர்களிடம் பரிசோதிக்க ஒப்படைக்கின்றார்கள் மக்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற இந்த துரோகம் மனித கலாச்சாரத்திற்கே கேவலமான செயல்.

பிறந்த குழந்தையை பார்க்கின்ற பார்வையில் அந்த டாக்டர்களின் பார்வை மற்ற நோயாளிகளின் மீது வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களில் இந்த டாக்டர்களிடம் சென்று சிகிச்சை எடுத்த எல்லாரும் இப்பொழுது வெளியில் வருவதற்கே வெட்கப்படுகின்றார்கள். இந்த மருத்துவனிடம் தானும் சிகிச்சை எடுத்தோமே என்று அவமானப்பட்டு துடிக்கின்றார்கள்.

எவ்வளவு பிரபலமாய் இருந்த இந்த டாக்டர்களா இப்படிச் செய்தார்கள் என்று திருநெல்வேலி மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். திருநெல்வேலி முழவதும் இப்பொழுது இந்த நாய்கள் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்குள்ள மக்களால் இந்த விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கொதித்துப்போயிருக்கின்றனர் திருநெல்வேலி மக்கள்.

புனிதமான மருத்துவத்தொழிலைக் கேவலப்படுத்திய இந்த நாய்களை என்னங்க பண்ணலாம்.?

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மருத்துவத்தொழிலின் புனிதத்தை பற்றி விளக்கி வகுப்புகள் எடுக்கவேண்டும். சும்மா பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது..

ஆனால் இப்பொழுது மருத்துவத்தொழிலில் பணம் மட்டுமே முக்கிய பிரதானமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிலைகள் மாறவேண்டும். உயிர் காக்கின்ற செயல்களில் மருத்துவர்கள் ஈடுபடுவதால் அவர்களை மக்கள் மிகப்பெரிய கண்ணியத்திற்கு உயர்த்தியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற துரோகம் மன்னிக்க முடியாதது.

இந்த மருத்துவர்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி தந்துவிட்டார்கள்.

இனிமேல் எந்த நம்பிக்கையில் மருத்துவர்களை நாடிச் செல்வார்கள் மக்கள்.?

ஆகவே உடல் ரீதியான சோதனைகள் நடைபெறும்பொழுது அந்த பெண் நோயாளியுடன் இன்னொருவர் துணைக்குச் செல்ல வேண்டும்.

அல்லது

பெண் நோயாளிகள் ஆண் மருத்துவர்களிடம் செல்வதை முற்றிலுமாய் தவிர்ப்பதுதான் இதற்கு சிறந்த வழி.

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் மற்றும் நகரங்களில் உள்ளவர்கள் மருத்துவர்கள் மீது மடத்தனமாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். மருத்துவர்களும் சாதாரண உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட மனிதர்கள்தான் என்பதை உணராமல் அவர்களை கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கின்றார்கள்.


சட்டம் இந்த மருத்துவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். இதுபோன்று வருங்காலத்தில் யாரும் இப்படி செய்யக்கூடாது அந்த அளவிற்கு இவர்களது தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்

இவர்களை சாதாரணமாய் சிறையில் அடைத்துவிடக்கூடாது. பின் என்ன செய்யலாம்?

இதுவரை அந்த டாக்டர்கள் மருத்துத் தொழிலில் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களையும் முடக்க வேண்டும்

அந்த டாக்டர்களின் மருத்துவச் சான்றிதழை பல்கலைக்கழகங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் - மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பேருந்து மற்றும் இரயில்வே நிலையங்களில் அவர்களது புகைப்படங்களை பிரசுரித்து இந்த டாக்டர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு செய்யவேண்டும்.

அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கி அவர்கள் வேறு நாட்டிற்குச் சென்று தொழில் புரியாமல் செய்து தடுக்கவேண்டும்.

ஒவ்வொரு சீரியல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களது குற்றங்களைப் பற்றி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தச் சொத்தையும் விற்கவோ வாங்கவோ அனுமதியளிக்க கூடாது.

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இவர்களைப்பற்றிய ஒரு பாடத்தை வைத்து மற்ற மருத்துவ மாணவர்களின் மனதில் ஒரு பயத்தை தோற்றுவிக்கவேண்டும்.

இதுதான் அவர்களுக்கு சிறந்த தண்டனையாக இருக்க முடியும். ஒவ்வொரு நொடியும் அவர்கள் மனதுக்குள் புழுங்கி சாக வேண்டும்.

( தவறு அந்த மருத்துவன் மீது மட்டுமல்ல. கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள உறவு கொண்ட அந்த கிருஷ்ணவேணி என்ற விபச்சாரிக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்)

இதனை வாசிக்கின்ற மருத்துவர்களே மருத்துவக் கல்லூரி மாணவர்களே..
பணம் ஈட்டுதலையும் தாண்டி தங்களது தொழிலின் புனிதத்தை உணர்ந்து செயல்படுங்கள்.
மருத்துமனைகளில் வேலைபார்க்கும் செவிலியர்களை சிஸ்டர் என்று மக்களால் பிரியமாக அழைக்கின்றார்கள்
.

கடவுள் எல்லா இடங்களுக்கும் எல்லா நோய்களுக்கும் இறங்கி வந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க முடியாததால்தான் மருத்துவர்களின் மூலமாக தன் கடவுள்தன்மையை நிருபித்துக் கொண்டிருக்கின்றான் என்று மக்களால் நம்பப்படுகின்ற அளவிற்கு அவர்கள் தங்கள் மீது கண்ணியத்தை வைத்துள்ளார்கள். தயவுசெய்து அந்த கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்.

ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய குழந்தையாக நினைக்கவேண்டும் மருத்துவர்கள்.


கடவுள் வந்து
காலி செய்யட்டும் இந்த
பாலியல் மோசடி மருத்துவர்களை!


- ரசிகவ் ஞானியார்

Tuesday, October 10, 2006

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு



TAFAREG குழுமத்தில் இருக்கின்ற நண்பர் லக்கி ஷாஜகான் அவர்கள் எனக்கு அனுப்பிய என்னை மிகவும் பாதித்த இந்த நிகழ்ச்சியை விழிப்புணர்க்காக வலைப்பதிவர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...
-


நாலைந்து வாரத்திற்கு முந்தைய ஒரு வியாழக்கிழமை .. இரவு 12 மணிக்கு டீவியில் படம் பார்த்துக் கொண்டே தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் இருந்தபோது செல்பேசி அழைத்தது. இந்நேரத்துக்கு யாராக இருக்கும் என்று பார்த்தால் அழைப்பில் இருந்தது சித்தப்பா...

"யாரோ ஒரு தமிழகத்துப் பெண்மணி - சௌதிக்கு வேலைக்கு வந்தவர் என்ன பிரச்னைகளோ தெரியவில்லை , வேலை பார்க்கும் அரபி வீட்டிலிருந்து ஓடி வந்து பத்தாவில் அந்தப் பெண்மணியின் உறவினர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும், அந்த உறவினர் சித்தப்பாவை சந்தித்து, அந்தப் பெண்மணியை ஊருக்கு அனுப்பி வைக்க என்ன வழி என்று கேட்க, தூதரகத்தை அணுக ஆலோசனை கூறிவிட்டு உதவிக்கு என்னை கைக்காட்டியிருப்பதாகவும் நாளை அவர்களைப் போய் சந்திக்கும்படியும் சொல்ல" மறுநாளே நண்பர் ஒருவருடன் நான் அந்தப் பெண்மணியை அவர் உறவினர் வீட்டில் வைத்து சந்தித்தேன் .
* * *

பொதுவாகவே வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் மணிகள் வேலைக்கு வருவதில்லை.

விசா வழங்கப்படுவதில்லையா அல்லது நம் தாய்க்குலங்கள் விரும்புவதில்லையா என்று நெடுநாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . திருநெல்வேலியை சேர்ந்த ஃபாத்திமா பீவிக்கு( பெயர் மாற்றியிருக்கிறேன் ) கல்யாண வயதில் இரண்டு பெண்கள். எந்தவித அனுசரணையும் உறவுகளிடம் பெரிதான அளவில் உதவிகளும் கிடைக்கப் பெறாத ஒரு வறட்சியான தருணத்தில் சௌதியில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை - டிராவல்ஸில் விசா இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதீதமாய் தகுதிக்கு மீறிய கடன் சுமையோடு பணம் கட்டி சௌதி வந்து இறங்கி விட்டார் ஐம்பது வயதான ஃபாத்திமாபீவி.

இது போல் வீட்டு வேலை செய்ய வந்த பெண்களை சௌதி பாஷையில் "ஹத்தம்மா " என்று அழைக்கிறார்கள். வேலைக்கு வந்த சௌதி வீட்டில் அந்த சௌதியின் மகள் திருமணம் வரை ஃபாத்திமா பீவி வேலை பார்த்திருக்கிறார் .பின்பு அந்த சௌதி அவரை தன் சகோதரி வீட்டில் வேலை பார்க்க கொண்டு போய் விட அந்த புதிய வீட்டில் ஏற்கனவே இன்னும் நான்கு பணிப்பெண்கள் . கென்யா, ஃபிலிப்பைன் , இந்தோனேஷியா,இலங்கை என்ற நான்கும் நான்கு தேசம் .இதல்லாது நம் தமிழத்தை சேர்ந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் இளைஞரும் ஒருவர் .

பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வரும் மூத்த - சீனியர் கிரேடு - வேலைக்கார அம்மணி-இந்தோனேஷிய பெண்மணிக்கு ஃபாத்திமா பீவியை கண்டாலே ஆவதில்லை . நாயை வேலை சொன்னால் அது வேறெதையோ வேலை ஏவுமாம் என்று சொல்வது போல் அந்த சௌதி பெண்மணி சொல்லும் வேலைகளை ஃபாத்திமா பீவியிடம் செய்ய சொல்லிவிட்டு ஹாயாக இருந்திருக்கிறார் இந்தோனேஷியப் பெண்மணி .

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் என்ற விதிமுறையில் ஃபாத்திமாபீவிக்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .. ஆனால் இங்கு வந்த பிறகு அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சில போது நினைத்துக் கொண்டால் தருவது என்றெல்லாம் சம்பளம் அலைக்கழிக்கப்படிருக்கிறது .

சௌதி பெண்மணியும் - ஃபாத்திமா பீவியும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு தானே எஜமானி போல் அதிகாரம் செய்து வந்திருக்கிற இந்தோனேஷிய பெண்மணிக்கும் - நம்மூர் ட்ரைவருக்கும் ஏதோ Understand இருந்திருக்கிறது (கஷ்டம்டா சாமி.. ) . அதனால் அந்த ட்ரைவரும் ஃபாத்திமா பீவியை இந்தியர்தானே - தமிழ்நாடுதானே என்றெல்லாம் பார்க்காமல் ஃபாத்திமா பீவியை ஏமாற்றவும் ஆரம்பித்திருக்கிறார் .

அவரிடம் ஃபாத்திமா பீவி தான் வாங்கிய சம்பளத்தை கொடுத்து ஊருக்கு அனுப்ப சொல்ல முதல் தடவை மட்டும் அந்தப் பணம் வீட்டுக்குப் போயிருக்கிறது . அதற்குப் பின் அனுப்பியவை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நான் பணம் அனுப்பி வைத்தேன்.. கிடைக்காததுக்கு நான் என்ன பண்ண முடியும் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார் அந்த ட்ரைவர் .வெளி நாட்டில் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அந்த ட்ரைவர் நிரூபித்திருக்கிறான்.

ஒரு காலகட்டத்துக்கு அப்பால் ஃபாத்திமா பீவிக்கு தொந்தரவுகள் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது

சாப்பிடும் உணவில் குளோரக்ஸ் ஊற்றித் தந்து சாப்பிடச் சொல்லியது அதில் ஒரு உச்சபட்ச கொடுமை . இதற்கிடையே அந்த சௌதி பெண்மணியின் பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவது அந்த ட்ரைவரின் கடமைகளில் ஒன்று . அந்த குழந்தைகளிடம் இவன் ஏதோ பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கிறான். அதை குழந்தைகள் வந்து சொல்ல அவனை கண்காணிக்க அந்த சிறுமிகளுடன் ஃபாத்திமா பீவியையும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைக்க கடுப்பான ட்ரைவர் சிறுமிகளை விட்டு வரும்போது காரை கன்னாபின்னாவென்று ஓட்டி கண்டபடி பயம் காட்டி இனிமே நான் போகவில்லை என்று ஃபாத்திமா பீவி கதறிக் கொண்டு சௌதி பெண்மணியிடம் சொல்லுமளவிற்கு செய்திருக்கிறான் .

இதைப் புரிந்து கொள்ளாத சௌதி பெண்மணியும் நான் சொன்ன வேலையை செய்ய முடியாதா என்று அடித்து அவள் பங்குக்கும் காயப்படுத்தியிருக்கிறாள் . முன்னைவிட ஃபாத்திமா பீவி மீதான தாக்குதல்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன .
எதேச்சையாக ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்கு வந்த முன்னாள் சௌதியின் மகள்

- ஃபாத்திமா பீவியைப் பார்த்து அவர் நிலை கண்டு பரிதாபப்பட்டு மறுநாளே தந்தை வீட்டிலிருந்து ஃபாத்திமாபீவியின் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து தந்து அங்கிருந்து எப்படியாவது போய்விடுமாறு சொல்லி உதவி செய்து விட்டு போக அந்த வீட்டிலிருந்த மற்றொரு இலங்கை தேசத்து பணிப்பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற கையிலிருந்த காசு தந்து உதவி செய்ய ஃபாத்திமா பீவி டாக்ஸி ஏறி பத்தா வந்து விட்டார் .
* * *

முகத்தில் கிழிக்கப்பட்ட காயங்களுடனும்,தூக்கங்கள் பார்த்து வெகு நாளான, சோர்ந்து போயிருந்த ஃபாத்திமா பீவியைப் பார்க்க மனம் வேதனையில் கசிந்து போனது .. என் அம்மா வயது பெண்மணி.. சம்பாதிக்கும் பொருட்டு வந்து இப்போது ஊருக்கு போனால் போதும் என்றிருக்கிறார் . அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தேன். அப்போதுதான் இன்னொரு திகைப்பான தகவலும் தெரிந்தது.. அவர் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் இக்காமாவே அடித்து தரவில்லையாம் ..

எந்த ஏரியாவில் வேலை பார்த்தார் என்று எந்த விபரமும் சொல்லத் தெரியவில்லை .டாக்ஸியில் ஏறி இங்கு வந்து சேர டாக்ஸி ட்ரைவர் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டதாக சொன்னார். ஒரு மணி நேரம் பயணித்த தூரம் இருக்கலாம் என்றார்..இதை தவிர என்னால் வேறெந்த தகவலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை .
உடனே இது தொடர்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் மூத்த நண்பர் ஒருவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தேன்.

அவர் வழிகாட்டியதன் பேரில் காரியத்தில் இறங்க மளமளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது . இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இது போல் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் பேசினேன் . அவர் ஆலோசனையின் படி இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரச் சொல்ல அதே போல் நண்பர் ஒருவரின் காரில் அவரை அழைத்து செல்ல அங்கு காத்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஃபாத்திமா பீவியை ஒப்படைக்க அவர்கள் அவரை தம் வாகனத்தில் ஏற்றி இந்திய தூதரகம் கொண்டு சென்றார்கள் .

அங்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் சட்டப்படி வேகமாய் நடைபெறத் தொடங்கியது. இந்திய தூதரகத்தில் சரணடைந்த ஒரு மாதத்துக்குள் நிச்சயம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என ஒரு அதிகாரி உறுதியளித்தார் .பத்தா வந்து எந்த இடத்தில் ஃபாத்திமா பீவி அடைக்கலமானாரோ அந்த இரக்கமுள்ள மனிதர்களே அவருக்கு விமான பயண சீட்டும் எடுத்து தந்திருந்தார்கள் . அதை ஃபாத்திமா பீவி நன்றியுடன் நினைவு கூறும்போதுதான் இன்னொரு விவரமும் தெரிந்தது .. அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பம் அவருக்கு உறவினர்கள் இல்லையாம்..

பத்தாவில் வந்து இறங்கிய இடம் அந்தவீட்டுக்கு எதிரே என்பதால் விவரம் கேட்கப் போய் ஆறுதலாய் அரவணைக்கப்பட்டு - உபசரிக்கப்பட்டு - உதவி செய்யப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா பீவி. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

தற்போது இந்திய தூதரகத்தின் விசாரணையிலும் , ஊருக்கு அனுப்பபடும் முன்னேற்பாட்டிலும் இருக்கும் ஃபாத்திமா பீவி நலமுடன் அவர்கள் வசம் இருந்தாலும் , ஊருக்கு சென்ற பின்பு அவர் எதிர்கொள்ளவிருக்கும் கடன் போன்ற பிரச்னைகள் ஏராளம் . காசு வாங்கி ஆளை ஏற்றிவிட்டால் சரி என இருக்கும் ஏஜென்ஸிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . இனியாவது பொருளீட்ட அரபு தேசம் வரும் நம் தாய்நாட்டு சகோதரிகள் இது குறித்து சிந்திப்பார்களா ..?

பின்னுரையாய் சில சங்கடங்கள்

.
1. இகாமா அடிக்காமலேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாலும் ஊர் திரும்ப இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .எனவே ஃபாத்திமா பீவி சம்பிரதாய விசாரணை முடிந்து ஊர் திரும்ப ஒரு மாதமாகலாம் என தெரிகிறது. நாங்கள் ஃபாத்திமா பீவியை ஒப்படைத்த போது குறைந்த பட்சம் அவர் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை.ஒரு மாத காலம் எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை .

2. தமிழ் சினிமாவின் சாகஸ கிளைமாக்ஸ் போல் ஃபாத்திமா பீவியை அழைத்துக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் வரை நானும் நண்பரும் ஒரு பெரும் அவஸ்தைக்குள்ளானோம் . வழியில் எங்கேனும் காவல்துறை குறுக்கிட்டால் என்ன சொல்வது அல்லது நாங்கள் சொல்லும் காரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே காரணம் .. நிறைய பேர் இது போன்ற நிலைப்பாடு உள்ளவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தும் ஒதுங்கிப் போவது இதனால் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது .

3. நேபாளிப் பெண் கொலை வழக்கில் கொலையாவதற்கு முன் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக டாக்டர் ஒருவரும் ,அவர் மனைவியும் தற்போது சிறையில் இருப்பது அனேகமாய் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இதற்குப் பின் எப்படி எல்லோருக்கும் இது போன்று ஓடி வந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன் வர முடியும்..?

4.இந்திய தூதரகம் வசம் இருக்கும் ஃபாத்திமா பீவி தன் வீட்டுக்கு போன் செய்து வர இன்னும் ஒரு மாதமாகும் என சொல்ல அவர்களின் பிள்ளைகள் இங்கு அவர் தங்கியிருந்த வீட்டினர்க்கு போன் போட்டு சீக்கிரம் வர ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரிக்க அவர்கள் என்னை அழைத்து எப்போது போவார்கள் ..எப்போது போவார்கள் என கேட்க ஏண்டா இதில் இறங்கினோம் சாமி என்றாகி விட்டது.. வேலியில் போன ஓணானை........

5.ஃபாத்திமா பீவியை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் அன்று ஹுஸைன் மரைக்காயர் இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளாக மேலும் மூன்று பொது சேவைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க அங்குள்ள சில பணியாளர்கள் காசுக்காக வேலை செய்யும் ஏஜெண்டாக என்னை நினைத்து 'ட்ரீட்' செய்தது கொஞ்சம் மனதை வலிக்க செய்தது . பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் மனதை தேற்றிக் கொண்டு வேலை முடிந்தால் சரி என்று வந்து விட்டேன் .
* * *

அரபுதேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.. பிரச்னைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்திய தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமிருப்பதாகவும், நிறைய பிரச்னைகள் எந்த முடிவையும் நோக்கிப் போகாமல் இழுவையிலேயே இருப்பதாகவும் இந்திய தூதரகம் தொடர்புடைய நண்பர்கள் சிலர் சொல்ல வருத்தமாய் இருக்கிறது. எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.
ஃபாத்திமா பீவி நல்ல முறையில் விமானம் ஏறி தாயகம் இறங்கிவிட்டார் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் உடனடியாக நான் செய்தது- இந்த பதிவிடும் வேலைதான்....

சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள், ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .
* * * * * * *

Wednesday, September 27, 2006

சில நொடிகளில் உலகம் அழியப்போகிறதா..?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting




தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்..

பாரதியே நீதான கூறினாய்..

அப்படியென்றால்
இன்னும் சில நிமிடங்களில்
உலகம் அழியப்போகிறதா..?


- ரசிகவ் ஞானியார்

Saturday, September 23, 2006

இப்படி பண்ணிட்டியே ஜோ!



நண்பர் மூர்த்தி அவரகள் சூர்யாவுக்குத் தெரியாமல் ஜோதிகாவுக்கு ஒரு கவிதை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.


வெட்கத்தால் சிவந்து கிடந்தன
என் கண்ணப் பகுதிகள்
ஆசைகளால் நிரம்பிக் கிடந்தது
என் இதயம்...
அடிக்கடி தொட்டுப் பேசி
கட்டிப்பிடிக்க நினைத்தது
என் மனசு...
துள்ளும் என் இளமைக்கு
நேரம் காலம் தெரிவதில்லை..
இரவு வந்தால் போதும்
தறிகெட்டுப் பாயும்
எல்லாம் வயசுக் கோளாறு..
இத்தனை நாள் பரவாயில்லை
இனிமேல் தகாது
இன்னொருவன் மனைவியை
ஏறெடுத்துப் பார்த்தல் பாவமாம்!
வெட்கத்தை உடுத்திக்கொண்டு
நீயே என் கனவில்
வரலாமென்றாலும்
சூர்யாவுக்கு நீ செய்யும்
துரோகமல்லவா!
பூவும் மலருமாய்
கனியும் சுவையுமாய்
நீவிருவரும்
இணைந்து வாழ
முத்தமிழ் மன்றத்தின்
அன்பு வாழ்த்துக்கள்.


- மூர்த்தி

இதைப்பார்த்து சூர்யாவுக்கு தான் எழுதுவதுபோல ஒரு கவிதை எழுதிக் கேட்ட அன்புடன் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கவிதை.

சட்டென்று
செப்டம்பரில் கரைந்துபோன
என் கண்ணாளா..

நேருக்கு நேர் வந்து
எங்கள் இதயம் பதிந்தாய்!
பேரழகனாய்
பெண்கள் மனதில் விழுந்தாய்!
சில்லென்று ஒரு
சிலையின் நெஞ்சத்தில் ஏறினாய்!
ஆரெம்கேவி
சேலையின் வியாபாரம் இறக்கினாய்!


ரஜினி வாழ்த்துப்பெற்ற
கஜினியே!

செப்டம்பர் 11 ல்
பெண்கள் மனதை உடைத்தாய்!
நட்சத்திரத்தை கைபிடித்து
நிலவுக்கே வெட்கம் கொடுத்தாய்
உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)


உன்னை
வசீகரப்படுத்திக்கொள்ள
விருப்பம்தான்!
ஆயினும்
ஜோதிகாவை
கோபமூட்டவும் - எங்கள்
கணவர்களுக்கு
கிறுக்குப்பிடிக்க வைக்கவும்..
எங்களுக்கு சம்மதமில்லை

ஆகவே
மேக்கப்பை கலைத்துவிட்டு
ஜோவை மட்டும் காதலி!

- ரசிகவ் ஞானியார்

Friday, September 15, 2006

வலைப்பதிவாளனின் காதல் கவிதை

என் ப்ரியமே
ப்ளாக்ஸ்பாட்டே


உன்
மௌனப்பார்வைகள் எனக்கு
மறுமொழிகளைத் தருகின்றது
நீ பேசாமல் இருந்தால் கூட - எனக்கது
பழமொழியாய்த் தெரிகின்றது

நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே
என்னை
அனாதையாக்கி விடாதே!

சிலையே வலையே
மழலைத் தமிழாகி
மணமாகி
தமிழ்மணத்தில் என்றும் வருவதற்கு..

இதயத்தில்
காதல் வலை பதிந்து விடு!


இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!

- ரசிகவ் ஞானியார்

நம்புங்கப்பா இவரும் பிரதமர்தான்






இவர் ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்

இந்தப் படத்திற்கு வசனம் தேவையில்லை

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 14, 2006

குடிகாரனின் காதல் கவிதை


நெப்போலியனை விடவும் - போதையாய்
நெஞ்சைத் தொட்டவளே
என்
கவிதையே - கழுதையே!

முட்டாளைக் காதலித்த
முழுநிலவே..?

நீ என்னைக்
காதலிக்கவில்லை என்றாலும்
என்னைக்காதலி!

நான் உன்னைக்
காதலிக்காவிட்டாலும்
உன்னைக் காதலிப்பேன்..


போதை இறங்கும் முன்
ஒரு உண்மைச் சொல்லட்டுமா

நீ இல்லையென்றால்
வேறு யாரையும் காதலித்திருப்பேன்..




- ரசிகவ் ஞானியார்

Friday, September 08, 2006

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில்



உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாசியத்தேவைகளோடு இப்பொழுது அடம்பிடித்து இடம்பிடித்துக் கொண்டது செல்போன்.

தகவல் பரிமாற்றங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அவர்கள் சுவிட்ச் ஆப் செய்யாதவரை.

இப்பொழுது இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்

தொடர்பு வெளிக்கு அப்பால் இருப்பவர்
தொடர்பு எல்கைக்குள் இருப்பவர்


எனக்கு செல்போன் பரிச்சயமானது 1999 ம் ஆண்டு பிஎஸ்ஸி முடித்தவுடன் எர்செல் நிறுவனத்தில் பணிபுரியும்பொழுது எனக்கு செல்போன் தரப்பட்டது.

கைகளில் உலகமே வந்து விட்டதைப்போல குதித்தேன். ஆனால் நமக்கே தெரியாமல் நம்முடைய சுதந்திரத்தை பறிப்பதில் இந்த செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். பின்னர் எம்சிஏ கிடைத்தவுடன் அந்தப் பணியை விட்டவுடன் செல்போனோடு எனது தொடர்பு முடிந்துபோனது.

பின்னர் பணி நிமித்தமாக 2002 ம் ஆண்டு சூன் மாதம் துபாய் சென்றபொழுது எனது தங்கையின் கணவர் செல்போன் பரிசளித்தார். அது 3310 நோக்கியா மாடல்.

பின்னர் வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் எப் எம் வசதி உள்ள இன்னொரு நோக்கியா மொபைல் வாங்கினேன். பின்னர் 6600 வாங்கினேன். அதுவும் ப்ளுடூத்தின் வழியாக எந்தப் பொறாமைப்பிடித்தவனோ வைரஸ் பாய்ச்சிவிட அதனையும் மாற்றி தற்பொழுதுவரை 6310 என்ற மொபைல்தான் கைக்குள் அடக்கமாயிருக்கின்றது.


துபாயில் நல்ல வேலையில் இருக்கும் எனது நண்பன் ஒருவன் நீண்ட நாளாக செல்போன் வாங்காமல் இருந்து 6 மாதங்களுக்கு முன்புதான் செல்போன் வாங்கினான்.

அவனிடம்

"சாதாரண கூலித்தொழிலாளி கூட செல்போன் வைத்திருக்கின்றான். ஆனால் நீ இன்னும் வாங்கவில்லையே ஏன் ?" என்று கேட்டபொழுது,

அவன் கூறினான்.

"செல்போன் வைத்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நான் எங்கே இருந்தாலும் எனது முதலாளி அழைக்கக் கூடும்.
நாம் எப்போதும் யாருடைய கண்காணிப்பில் இருப்பது போல தோன்றுகிறது. நமது சுதந்திரம் பறிபோனது போல உணர்கின்றேன். நிம்மதியாய் இருக்கமுடியாது"

அதுவும் ஒருவகையில் உண்மைதான். கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் செல்போன் கழுத்தை மட்டுமல்ல நம்மையும் ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றது. இது சிலருக்கு வளர்ச்சியாகவும் சிலருக்கு தொந்தரவாகவும் தெரிகின்றது.

இப்பொழுது நீங்கள் வரும்பொழுது கூட சாலையில் கவனித்திருக்க கூடும். யாராவது ஒருவர் தலையை ஒருக்களித்தபடி செல்போனில் பேசியபடி பைக்கில் பயணம் செய்வதை.

அது பந்தான்னு சொல்றதா இல்லை அவசரம்னு சொல்றதா தெரியவில்லை.

இப்பொழுதெல்லாம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தால்
செல்லக்கிறுக்கனா அல்லது
செல் கிறுக்கனா?
என்பதைக் கண்டறிவது கஷ்டம்தான்.

அப்புறம் இந்த மிஸ்கால் சமாச்சாரம்.

"டேய் நான் அந்த இடத்திற்கு வந்தவுடன் மிஸ்கால் கொடுக்கிறேன். நீயும் வந்திடு "

"சரிடா அப்படின்னா நான் ஆபிஸை விட்டுக் கிளம்பும்பொழுது மிஸ்கால் கொடுக்கின்றேன் "

என்று காசை மிச்சப்படுத்த எங்கேயும் எப்போதும் மிஸ்கால் கொடுத்தே தகவல்கள் பரிமாறப்பட்டது.

சாப்பிடும் முன் - உறங்கும் முன் - கல்லூரிக்குள் நுழைவதற்குமுன் - கல்லூரியை விட்டு வெளியே வரும்பொழுது - வீடு வந்து சேரும்பொழுது என்றுடிபொழுது - அதிகமாய் காதலர்கள் மிஸ்காலை பரிமாறிக் கொள்கின்றார்கள்.

இப்படி மாத்திரை சாப்பிடுவது போல சாப்பிடும் முன் - சாப்பிட்ட பின் என்று நேரம் காலம் இல்லாமல் மிஸ் கால் கொடுக்கின்ற பெருமை காதலர்களைச் சாரும்.

காதலித்துப்பார்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்



புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கும் இதுபோன்ற மிஸ்கால் வர ஆரம்பிக்கும். அது உண்மையில் மிஸ்கால் அல்ல மிஸஸ்கால்.

துபாயில் எனது அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த பாகிஸ்தானிய நண்பன் சாஜித் என்பவன் எனக்கு அடிக்கடி மிஸ்கால் கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். நான் அவனை பலமுறை எச்சரித்திருக்கின்றேன். ஆனால் அவன் கேட்பதாய் தெரியவில்லை.

நாளடைவில் மிஸ்காலின் தொந்தரவுகள் அதிகமாகியது. நான் மேனேஜரோடு அவரது அறையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , சில சமயம் மீட்டிங் நேரத்தில் என்று அடிக்கடி மிஸ்கால் கொடுக்க ஆரம்பித்தான். நான் எரிச்சலுற்று அவனிடம் ,

"சாஜித் வேண்டாம் மிஸ்கால் கொடுக்காதே..மேனேஜர் எரிச்சல் அடைகிறார்..
அவர் அறைக்கு செல்லும் போது மட்டுமாவது மிஸ்கால் கொடுக்காம இரேண்டா " என்க

அவன் எனது பேச்சினை அலட்சியப்படுத்தினான்..

"அடிக்கடி மிஸ்கால் கொடுக்காதே அப்புறம் நீ வருத்தப்படுவே "என்று கடைசியாய் எச்சரித்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. நான் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் இருந்து விட்டான்

நான் ஒருநாள் மாலையில் Yahoo சாட்டிங்கில் சென்று அவனது செல்நம்பரை குறிப்பிட்டு "நான் 22 வயது அழகி..துபாயில் தனியாக இருக்கின்றேன்..எனக்கு யாராவது கம்பெனி கொடுங்கள்" என்று அடிக்கடி டைப் செய்து அனுப்பினேன்.

அன்று இரவிலிருந்து அவனுக்கு போன் வர ஆரம்பித்துவிட்டது. நான் தினமும் அவனுடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு , மறுபடியும் மறுபடியும் சாட்டிங்கில் எழுத ஆரம்பிக்க, அவனுக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் தொந்தரவு செய்து கால்கள் வர ஆரம்பித்துவிட்டன.

சில சமயம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது கூட அவனுக்கு போன் வர ஆரம்பிக்க, அவன் கடைசியாய் எரிச்சலுற்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

பின் அவனக்கு நிலைமை புரிந்து விட்டது .அதற்கு காரணம் நான்தான் என்று.

என்னிடம் வந்து கோபமுற்றான். என்னிடம் சரியாய் பேசவும் மாட்டான். பின்னர் அவனாகவே வந்து மன்னிப்பு கேட்டான்.

"நான் கிண்டலுக்தானடா மிஸ்கால் கொடுத்தேன் நீ ஏண்டா இப்பஎடி பண்ணின" என்று ஒரு நாள் என்னிடம் வந்து கேட்க,

" நானும் கிண்டலுக்குத்தான்டா பண்ணினேன்" என்று சமாதானமாகிப்போனோம்.

அந்தச் சம்பவத்திற்குப்பிறகு என்னுடைய தொலைபேசியில் மிஸ்கால் பகுதியில் அவனுடைய எண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை.

சில அறுவை ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க செல்போனில் ரிங்டோனை ஆன் செய்து போன் வருவது போல பாசாங்கு செய்து தப்பிவிடுவது என்னுடைய வழக்கம்.


இன்றைய கால ஓட்டத்தில் அவசர தகவல் பரிமாற்ற சாதனமாக செல்போன்கள் விளங்குகின்றது. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல செல் போன் இல்லாத மனிதனை காணுவது அரிதாக இருக்கின்றது.

அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்படுகின்ற ஒருவன் கூட ஒருநாளாவது செல்போன் வாங்க மாட்டோமா என்றுதான் லட்சியங்கள் வைத்திருக்கின்றான்.

பாரதி இருந்திருந்தால்,

தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடலை இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருப்பான்.

செல்போன்கள் உலகத்தை சுருக்குவது மட்டுமின்றி நமது சுதந்திரத்தையும் சுருக்குகின்றது என்பது உண்மைதான். இனி வரும் காலத்தில் மனிதனின் பெயர்களுக்குப் பதிலாக எண்களே பெயர்களாக மாறப்போகிறது நிச்சயம்.

"ஹலோ நீங்க 98420xxx423 "

"நேத்து 98421xxx109 ஐ பார்த்தேன்டா 98420xxx845 யோடு போய்கிட்டு இருக்கான். அவனை 98420xxx786 இடம் சொல்லிக்கொடுக்கப் போறேன் பாரேன்.. "

அப்படின்னு பேசுகின்ற காலம் வரத்தான் போகிறது பாருங்களேன்.




தூரத்தில்
கழுத்தில் பட்டையடிக்கப்பட்ட
நாய் ஒன்றினை
அழைத்து செல்கின்றான் ஒருவன்

ஏதோ உறுத்தவே ...
உற்று நோக்குகின்றேன்
கழுத்தில் செல்போன்.





-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு