Wednesday, September 05, 2007

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்


[முன்பே எழுதிய எனது கவிதையினை மீள் பதிவாக ஆசிரியர் தினத்திற்காக வெளியிடுகின்றேன்... அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..]




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

*****
ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

*****
எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதிகா மிஸ்!


*****

கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

*****
"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

*****
கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

*****
நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

*****
தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கிநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

*****
"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்,
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!
*****
இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...

*****
-ரசிகவ் ஞானியார்-

Saturday, September 01, 2007

வாழ்க்கைப் பயணம்

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ யாராகிலும் இருக்கலாம்

உன் எண்ணங்கள் ...
உன் பழக்கங்கள் ...
உன் கலாச்சாரம் ...
வேறாயிருக்க கூடும் !

என் பயணம் முழுவதும் ...
நீ வேண்டும் !

உன் ஜாதி , மதம் , மொழி பற்றி
எனக்குக் கவலையில்லை

என் பயணம் ...
உன்னால் இனிமையாக வேண்டும்
அவ்வளவுதான்!

எனக்காக நீயும் ...
உனக்காக நானும் ...
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !

காத்திருந்து உணவுண்ணும்
கண்ணியம் !

நீ எனக்குமாய் ...
நான் உனக்குமாய் ...
தவணை முறை பாதுகாப்புகள் !

தங்குகின்ற இடம் ...
யாருக்கும் நிரந்தரமில்லை!
நட்பு நிரந்தரமாகட்டும் !

பேச்சு, சிரிப்பு, அன்பு
எல்லாம் ...
பொய்யின்றி கடைசிவரை !

என் பயணத்தின்
இறுதிவரையிலும் இப்படியே ...
இனிய துணையாக
அமைந்துவிட்டால் ...

அழகாகவே இருக்ககூடும்
இரயில்பயணமும், வாழ்க்கையும் !

- ரசிகவ் ஞானியார்

Thursday, August 30, 2007

வலைப்பதிவர்களுக்கு ஒரு போட்டி

Photo Sharing and Video Hosting at Photobucket

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதி உலகத்திற்கே விடுமுறை நாள். அன்று பூமியை மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கப் போகின்றது. இதுபோன்ற ஒரு விண்கல்லின் தாக்குதலினால்தான் உலகம் முன்பு டைனோசர் என்ற உயிரினங்களை இழந்தது. இப்பொழுது விழப்போகின்ற இந்தகல் பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப்போகின்றது என்ற நாசாவின் மிரட்டும் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கின்றது.

ந்த விண்கல்லானது பூமியை இதோ இப்படித்தான் வந்து தாக்கப்போகின்றதாம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

து போன்ற ஒரு புரளி முன்பு தோன்றியது. 2000 ம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று. அதற்கு முந்தைய நாள் ஒரு கிராமமே பிரியாணி போட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது என்று பத்திரிக்கை செய்தியில் படிக்க நேர்ந்தது. அடப்பாவிகளா சாகப்போறதுக்கு முந்தைய நாள் பிரியாணிதான் தங்களின் கடைசி லட்சியமா..?

னால் நமக்கு அப்படிப்பட்ட விண்கலத்தினால் பாதிப்பு இல்லை ..ஏன்னா கண்ணா இப்படிச் ஜுடு..


Photo Sharing and Video Hosting at Photobucket

து உண்மையா பொய்யா என்று ஆராய்வதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை. சும்மா ஒரு கற்பனைக்காக உண்மையிலையே 2019 ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உலகம் அழியத்தான் போகின்றது என்று எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும்.? உலகம் அழியப்போவதற்குள் இதையெல்லாம் செய்து விடுவேன் என்று மனதில் தேங்கிய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றுவீர்களா..? தாங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ? தங்களின் ஆசைகள் என்னென்ன என்பதை சுவாரசியமாக எழுதுங்களேன். யாருடையது ரசிக்கத்தக்கதாக இருக்கின்றதோ அவர்களுக்கு 500 ரூ மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்;.

போட்டியின் விதிகள் :

1. த்தனை வரிகளுக்குள் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம்
இல்லை. ஒரு வரியிலும் இருக்கலாம் ஒரு பத்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் இருந்தால் நல்லது.

2. போட்டியில் பங்கு பெறுபவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம் ஆனால்
பரிசு தமிழ்நாட்டிற்குள் இருக்கும் அவர்கள்; பரிந்துரைக்கும் ஒருவருக்கு
வழங்கப்படும்.

3. கடைசிதேதி மற்றும் நேரம் : 03-09-07 - இந்திய நேரம் : இரவு 12 மணி


ப்ப நீங்க ஆரம்பியுங்க...ம் ஸ்டார்ட் மியுஸிக்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, August 27, 2007

ஒரு கிலோ செய்தி எவ்வளவு ரூ?

ஒரு நாள் பத்திரிக்கை படிக்காவிட்டாலும் அன்றைய பொழுதே விடியாதது போல நினைக்கின்ற அளவுக்கு பத்திரிக்கை ஆர்வலர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால் பலருக்கு அலுவலகத்தில் வேலை ஓடாது.

எனக்கும் அப்படித்தான் ஒருநாள் பத்திரிக்கை படிக்கவில்லையென்றால் கூட ஏதோ உலகத்தொடர்பை துண்டித்துவிட்டு நாம் இருக்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படும்.நம்மில் நிறைய பேருக்கு அப்படியே.

ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் நியாயமான முறையில்தான் செய்திகளை வெளியிடுகின்றார்களா? ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. அப்படிப்பட்ட துறை கறை படிந்து இருக்கலாமா..? எத்துணை பொறுப்பாய் செய்திகளை வெளியிடுவேண்டும். அப்படித்தான் நடக்கின்றதா இப்பொழுது? சமூக அக்கறையோடுதான் பத்திரிக்கைத் துறை இருக்கின்றதா..?

எனக்குத் தெரிந்து பெருன்பான்மையான பத்திரிக்கைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனரே தவிர சமூகஅக்கறை என்பது துளி கூட இல்லை.

கல்லூரிக் காலத்தில் நான் பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்முகத்தேர்வு செல்ல நேரிட்டது. என்னிடம் கேட்கப்பட் கேள்வி ஒன்று

"சாலையில் ஒரு பெண் சென்றுகொண்டிருக்கின்றாள் அப்பொழுது பேருந்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் அந்தப் பெண் மீது எச்சில் துப்பி விடுகின்றார். அதனால் அந்தப்பெண் கோபமடைந்து பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றாள். இதனால் அந்தச் சாலையில் பரபரபரப்பு ஏற்பட்டது."


"இதுதான் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு எப்படி தலைப்பு கொடுப்பீர்கள் ?" என்றார்


"பெண்ணின் மீது எச்சில் துப்பிய வாலிபருடன் சண்டை – போக்குவரத்து பாதிப்பு என்று எழுதுவேன் சார்"


அந்த அதிகாரி சிரிக்க ஆரம்பித்து," அப்படி எழுதினால் சாதாரணமாகிவிடும். எப்படி எழுதவேண்டும் தெரியுமா?" என்று அவர் அந்த தலைப்பை கூறினார்.

"பட்டப்பகலில் பருவப்பெண் பாவாடையில் எச்சில் துப்பிய வாலிபர்"

மிகப் பிரபலமான பத்திரிக்கையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அவரே அப்படி கூறியது எனக்கு மிகவும் வேதனையாகிவிட்டது. தகவல்கள் சரியாக நியாயமாக மக்களிடம் சென்று சேரவேண்டும். இதுதான் பத்திரிக்கைகளின் பொறுப்பு. ஆனால் மக்களை கிளுகிளுப்புண்டாக்கி அதன் மூலம் சம்பாதிக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகள என்ன செய்வதாம்?

தகவல்கள் சரியாகத் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் வாங்கவேண்டும் என்பதற்காக தகவல்களை குழப்பி உண்மையை திரித்து கூறுகின்ற பத்திரிக்கைகள் ஏராளம்.

பத்திரிக்கைகள் சாதி மதம் சாராமல் அரசியலைச் சாராமல் இருக்கவேண்டும். இல்லையெனில்; தகவல்கள் முழுமையாகவும் உண்மையாகவும் மக்களைப் போய் சேராது.

தாங்கள் இருக்கின்ற இனத்தை – அல்லது அரசியல் கட்சியைப் பற்றி உயர்வாகவே எழுதுவார்களே தவிர அதிலுள்ள குறை எழுதுவதற்கு இன்னொரு பத்திரிக்கைதான் வரவேண்டும்.

அரசாங்கமும், பத்திரிக்கைகள் தொடங்குவதற்கு அல்லது இப்பொழுது வைத்திருப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.

எந்தச் செய்திகளையும் வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தவறான தகவல்களை வெளியிடுகின்றது என்றால் அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளருக்கு மற்றவர்களுக்கு பாடம் தருகின்ற அளவுக்கு தண்டனை தரப்படவேண்டும்.

சமீபத்தில் இங்குள்ள ஒரு கல்லூரியில் மாணவ மாணவிகளை அதிகமாக ஏற்றி சென்ற கல்லூரிப்பேருந்து ஒன்றுக்கொன்று மோதியதால் சில மாணவிகள் மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் செய்தி சில மாணவர்கள் மூலம் பத்திரிக்கைக்கு கிடைக்கின்றது. ஆனால் அந்தக் கல்லூரியின் உரிமையாளரோ தன்னுடைய கல்லூரியின் பெயர் பத்திரிக்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பணம் கொடுத்து காவலர்களின் மற்றும் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டுவிடுகின்றார். அந்தச் செய்தி எந்தப்பத்திரிக்கைகளிலுமே வரவில்லை.


பின் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தருவதாக கூறிய பணம் முழுமையாக தரப்படவில்லை என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தபொழுதுதான் பொதுமக்களுக்கு செய்தி தெரியவருகின்றது. இனிமேலும் செய்தி வெளியிடாவிட்டால் பத்திரிக்கை பெயர் கெட்டுவிடும் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்தது.

செய்திகளே விலைக்கு வாங்கப்படும்பொழுது எப்படி அவர்கள் பத்திரிக்கைகளை நாம் வாங்குவது. ? எப்படி அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளை நம்பி படிப்பதாம்? இது போன்ற காசுக்கு மாரடிக்கும் கூட்டங்களை எல்லாம் அடையாளம் கண்டு அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால் செய்திகளும் விளம்பரகள் போல ஆகிவிடும்.

சில மாலைப் பத்திரிக்கைகள் மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. கிளுகிளுப்புக்காகவே வார்த்தைகள் மோசமாக பயன்படுத்தப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் இதுபோன்ற ஒரு பத்திரிக்கைக்கு மஞ்சள் பத்திரிக்கை என்றே பெயர் வைத்திருக்கின்றார்.

பெரும்பாலும் அந்தப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு, பாலியல் சம்பந்தமான செய்திகளையே தலைப்பில் போட்டு விளம்பரப்படுத்தி பத்திரிக்கைளை விற்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் செய்திகளை படிக்கும்பொழுது மிகவும் மனவேதனை படும் அளவிற்கு அவர்களின் விவரிப்புகளும் கற்பனைகளும் ஊறிப்போய்கிடக்கும்.

ஒருவேளை சூடான செய்திகள் என்று அவர்கள் சொல்வது இதற்காகத்தானோ?

அதுவும் பாலியல், கற்பழிப்பு சம்பந்தமான செய்திகளை வெளியிடும்பொழுது பெண்களின் முகத்தை அப்பட்டமாக வெளியிடுவது அந்தப் பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற செயல். அந்த நேரத்தில் அந்தப் பத்திரிக்கைக்கு செய்திகள் கிடைத்தால் போதும். ஆனால் அந்தப் பெண்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தார்களா? தங்கள் குடும்பப் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது இதுபோன்று வெளியிடுவதற்கு அவர்களுக்கு தைரியம் வருமா?

காந்தியடிகள் சொன்னது போல, பிறருடைய துன்பத்தை அவர்களுடைய மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய ஆழமும் வேதனையும் தெரியும் என்பதுபோல பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.


பத்திரிக்கைகளின் இதுபோன்ற கிளுகிளுப்பான தலைப்புகளைப் பார்த்து அந்தப் பத்திரிக்கைகளை வாங்குகின்ற மக்கள் இருக்கின்ற வரை பத்திரிக்கைகளும் தங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.


பெங்களுரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பிரபல மாலை நாளிதழ் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது எப்படி தெரியுமா..?


பெங்களுர் குண்டு வெடிப்பு விஷேஷ படங்கள்

பார்த்துவிட்டு அதிர்ந்தேன். குண்டுவெடித்ததில் அப்படியென்ன விஷேஷத்தை கண்டுவிட்டார்களோ இவர்கள்..? இதுபோன்ற சோகமான நிகழ்வுகள்தான் விஷேஷம் என்ற அர்த்தத்தில் தமிழில் வருகின்றதா..?

சக மனிதர்கள் மரணங்கள் - அழுகுரல்கள் - ஓலங்கள் - கண்ணீர்கள் இவர்களுக்கு எப்படி விஷேஷமாக தெரிகின்றது? மனசாட்சியே இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி தலைப்பிட முடிகின்றது? இந்த தலைப்பினை படிக்கின்ற பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

குண்டுவெடிப்பு சோகப்படங்கள் - துயரக் காட்சிகள் என்று எழுதப்பட்டிருந்தால் இவர்கள் சமூக அக்கறை உள்ள பத்திரிக்கைகள் என்று சொல்லலாம்.

ஆனால் சமூக அக்கறையாவது, விளக்கெண்ணையாவது என்று அலட்சியம் செய்துவிட்டு பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு திரிகின்ற இதுபோன்றவர்கள் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவர்கள்.

அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இதுபோன்ற சமூக அக்கறையற்ற பத்த்திரிக்கைளின் போக்கை கண்டிக்க வேண்டும். உடனே எழுத்துச் சுதந்திரம் - பத்திரிக்கை சுதந்திரம் என்று கொடிபிடிக்கின்ற அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை –- இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான அவர்களின்; சேவை சார்ந்த முக்கிய பணிகளை – பத்திரிக்கைத் துறையின் தர்மத்தை எடுத்துரைப்பது மிக அவசியமான ஒன்றாகும்.


- ரசிகவ் ஞானியார்

Thursday, August 23, 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா..

Photo Sharing and Video Hosting at Photobucket


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா..? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு.

சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் . அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.

ம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன..? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள். அந்த அளவுக்கு அலட்டல்ங்க.

துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள். இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.

துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அட அந்த திருவனந்தபுரம் செல்லும் சாலை மிக மோசமான சாலை. அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி..அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.

துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த சொர்ணத்தை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா..?

ஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்.

னால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன திருநெல்வேலி பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு..விமான நிலையம்பா..

வர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........

கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..

செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும். அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.

வர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும். அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல..வேடிக்கைதான்..

வரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு..? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம். "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?

ரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா..? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்.

ல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை . பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க..அதை எடுத்து கொடுத்திருவாங்க..

ந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்..

"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."

(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)

னது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான். "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.

னா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை..முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள். அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்..

ப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க..அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..

செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு.. அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..

துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது.

"இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்..அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்.. அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."

"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"

"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."

"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."

"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..

"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்

"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..

"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."

( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)

"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…

1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…

நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."

( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :) )

ப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும். அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது..

நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க..என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?

ப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள். வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.

நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, August 22, 2007

சென்னை: ரஜினிகாந்த சாதாரணமா நடந்து போனார்..


Photo Sharing and Video Hosting at Photobucket

சென்னையைப் பற்றி தனது ஞாபகங்களை எழுதிய அகிலனின் பதிவுகள் எனக்குள்ளும் சென்னை ஞாபகங்களை தூண்டிவிட்டது. சென்னை என்ற வார்த்தைக்கு எப்பொழுதுமே ஒரு பிரமாண்டம் இருக்கத்தான் செய்கின்றது.

லைநகரம் என்பதால் மட்டுமல்ல நடிகர்களின் கோட்டை என்பதால் சென்னைக்கு எப்பொழுதுமே மவுசுதான். இளவயதில் சென்னை என்றாலே அது பணக்காரர்களுக்கு மட்டும்தானோ என்று எண்ணத்தோன்றியது.

சென்னையிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்துசெல்லும் எனது சொந்தங்களை விண்ணிலிருந்து வருபவர்களைப் போல வியந்து பார்த்திருக்கின்றேன். சென்னைப் பலகாரம் - சென்னை சாக்லேட் என்று ஒவ்வொரு முறையும் அவர்கள் கொண்டு வருவதால் சென்னையைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக முதன்முதலில் சென்னையை எட்டிப்பார்த்தேன். மெரினா பீச் - கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் என்று செம குஷியாக சுத்தினேன்.

ப்பல்கள் வழிதவறிச் செல்லாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் நான் வழிதவறிச் சென்றுவிட்டேன். சில அடி தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்தால் என்னை கைபிடித்து அழைத்து வந்த அம்மாவையோ உறவினர்களையோ அந்தக் கூட்டத்தில் என்னால் காண முடியவில்லை.

ழுகை வேறு முட்டிக்கொண்டு வருகின்றது. பின் அங்கேயே சில நிமிடங்கள் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நான் காணாமல் போனதோ பின் மீண்டும் இணைந்ததோ அவர்களுக்கு எதுவும் தெரியாது..


ங்களது நண்பன் ஒருவன் சிறுவயதிலையே வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உறவினர்களுடன் வியாபாரத்தை கவனித்து வந்தான். அவன் ஒவ்வொரு முறை சென்னையில் இருந்து வரும்பொழுதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம்தான்.

"நான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ ரஜினிகாந்த் சாதாரணமா நடந்து போவார்..நாங்க கண்டுக்கவே மாட்டோம்.."

"விஜயகாந்த் பக்கத்துல நின்று புகைப்படம் எடுத்திருக்கேன் தெரியுமா.."

"தினமும் எங்க கடைக்கு முன்னாலதான் சினிமா சூட்டிங் நடக்கும்..எங்களுக்கு அது பழகிப்போச்சு யாருமே பார்க்க மாட்டோம்.."

"ஒருநாள் எங்க கடைக்கு நடிகர் செந்தாமரை வந்தார் தெரியுமா..?"

என்று அவன் கதையளந்து கொண்டே செல்வான். அது உண்மையோ பொய்யோ சோதித்து பார்க்கின்ற வயது இல்லை. அப்படியே நம்பிவிடுவோம்.

நாங்கள் நடிகர்களை என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டோமா? சினிமா சூட்டிங் எப்படி நடக்கிறது என்று காண்போமா? என்ற ஆவலில் இருக்கின்றோம் ஆனால் இவன் என்னடா வென்றால் இவற்றைச் சுற்றியே வாழ்ந்து வருகின்றான். நடிகர்களை பார்த்தும் இவ்வளவு அலட்சியமாய் இருக்கின்றான் என்று அவன் மீது பொறாமைப் படுவோம். இதற்காகவேனும் சென்னையில் பிறந்தோமா என்று தோன்றும்.

அது மட்டுமல்ல,

"மெட்ராஸ்ல பேருந்தில் பெண்கள் பக்கத்துல உட்கார்ந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க தெரியுமா? "

என்று சென்னைப் பெண்களின் நாகரீகம் பற்றி அதிகமாய் பேசுவான். அதில் மயங்கி சென்னைக்கு செல்லத் துடித்தவர்கள் பலபேர்

"நான் பைக்கை எடுத்தேன்னா சும்மா 100ல தான் பறப்பேன். அப்படியே ரவுண்டு அடிச்சிதான் பைக்கை எடுப்பேன். பைக் சும்மா ப்ளைட் மாதிரி பறக்கும் தெரியுமா?" என்று தன்னைப் பற்றியும் அடிக்கடி அவன் பாடிய சுயபுராணம் ஒருநாள் உடைந்தது.

ங்கள் நண்பன் ஒருவனின் பைக்கை ஒருநாள் கொடுத்து அவன் சொன்ன ஹீரோத்தனத்தை செய்யச்சொன்னோம். அவன் முதலில் தயங்கினான். பின் தன் ஹீரோயிஸம் கெட்டுவிடக்கூடாதே என்று பைக்கை எடுத்தான். அவ்வளவுதான் எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. ஆமாங்க பைக்கை ஓட்டவே தெரியலை..தடுமாறி தடுமாறி சென்றான்.

ப்புறம் வந்து, "இந்த மண்சாலைக்கெல்லாம் இந்த பைக் சரிப்படாது" என்று மழுப்ப ஆரம்பித்தான். இப்படி சென்னை சென்று விட்டு வருபவர்களின் ஹீரோயிஸமும் சென்னையைப் பற்றிய ஆவலை அதிகப்படுத்தியது.

பின் படிப்பு சம்பந்தமாக வேலை சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. ஒவ்வொரு சம்பவங்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு பதிவு போதாது. கன்னித்தீவு கதை போல நீண்டு கொண்டே இருக்கும்.

னால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.

ரு பக்கம் பார்த்தால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டமான வளர்ச்சி. மறுபக்கம் பார்த்தால் 3 வேளை உணவு முறையை 1 வேளையாக மாற்றிக்கொண்டு திரிகின்றவர்கள்.

கைநிறைய பணம் இருந்தும் செலவழிக்கத் தெரியாத / வீண் விரயம் செய்கின்ற இளைஞர்கள் இருக்கின்ற இதே சென்னையில்தான் இன்னமும் காலையில் நாஷ்டாவுக்கு வழியில்லாவிட்டாலும், மடிப்பு கலையாத ஆடையில் பசியோடு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, August 11, 2007

பிணத்தோடு விளையாடி.. பிணத்தோடு உறவாடி..



செத்த பிணத்தைச் சுற்றி
அழுதபடி
சாகப்போகின்ற பிணங்கள்


- யாரோ


இக்கவிதையின் அர்த்தங்களை அவ்வளவு எளிதாய் நாம் அலட்சியம் செய்ய முடியாது. மரணம் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வரும்பொழுதுதான் நாம் உணர ஆரம்பிக்கின்றோம் நமக்கும் ஒருநாள் வந்திடுமோ என்று?

தினம் தினம் செத்த பிணத்தை சுற்றி நிற்கின்ற சாகப்போகின்ற பிணங்களைப் பார்த்து அதிர்ச்சியில் வந்திருக்கின்றேன்..

ம்....மருத்துவக்கல்லூரியில் பிணங்களோடு தங்கள் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் பிணவறைப்பகுதி ஊழியர்களையும் மருத்துவர்களை பற்றியும்தான் குறிப்பிடுகின்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்ற மாதம் (15-07-07) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிணவறைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் கணிப்பொறியை சரிசெய்வதற்காக நண்பருடன் சென்றிருந்தேன். அரசாங்க மருத்துவமனை என்றாலே உள்ளே செல்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும். அதுவும் பிணவறைப்பகுதி என்றால் கேட்கவா வேண்டும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

எத்தனையோ அழுகுரல்களையும், சோக ஓலங்களையும் கேட்டு சலித்துப்போன அந்தக் கட்டிடம் அமைதியாக காட்சியளித்தது. இரயில் மோதி விபத்துக்குள்ளான உடல்கள் - பேருந்தில் நசுங்கிய மனிதர்கள் - தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று எத்தனையோ பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பிணவறையை மெல்ல எட்டிப்பார்த்தபடி பயத்தோடும் திகிலோடும் கடந்தேன். உடல் லேசாய் சிலிர்த்துக் கொண்டது.
பிணங்கள் ஏதேனும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று லேசாய் எட்டிப்பார்த்தேன் நல்லவேளை எதுவுமில்லை.. இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிணத்திற்கும் விடுமுறையோ?

அந்தக் கட்டிடத்தின் முன்னால் வந்து நிற்கும்பொழுதே பைக் - கைகள் - இதயம் என்று அனைத்துமே நடுங்க ஆரம்பிக்கின்றது. உள்ளே செல்வதற்கு 1 சதவிகிதம் கூட தைரியமில்லாமல் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கிதான் சென்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தச் சாலை வழியாகத்தான் கிண்டலடித்தபடி செல்லுவோம். ஆனால் இந்த பிணவறைப்பகுதியை கடக்கும்பொழுது மட்டும் அனைவருமே தன்னிச்சையாக மௌனமாகிவிடுவோம். எப்பொழுதும் வாயிலில் யாராவது ஒருவரோ அல்லது ஒரு சிறு கூட்டமோ தங்கள் உறவினர்களை, பிரியமானவர்களை இழந்து சோகத்துடன் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பரிட்சை நேரத்தில் இந்த இடம் வழியாக கடந்து சென்றபொழுது ஒரு பெண்மணியின் பயங்கற கதறல் ஆர்ப்பாட்டம். யாரையோ இழந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கண்டு மனசு உறைந்து விட்டது. பரிட்சை அறையிலும் அந்தக் காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்க எதையும் எழுத பிடிக்காமல் ஆசிரியரிடம் நிலைமையைச் சொல்லி அப்படியே பேபப்ரை மடித்து கொடுத்தேன். அந்த ஆசிரியரோ, பரிட்சை எழுதாததற்கு நான் கூறிய வித்தியாசமான காரணத்தை ஆச்சர்யமாய் பார்த்தபடி சரி அதுக்கென்ன அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார். என் நிலைமைய புரிந்து கொண்ட அந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

அதன்பிறகு அந்த வழியாக செல்வதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வேன். எதற்காக அந்தச் சம்பவத்தை சொல்கிறேனென்றால் சாதாரணமாக கடந்து சென்றதற்கே மனதில் இத்தனை ரணங்கள் என்றால் அங்கேயே பிணவறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்படி இருக்கும்?. எனக்கு சென்றுவிட்டு வந்த நிமிடத்திலிருந்து பித்து பிடித்தது போல இருக்கின்றது. எதையும் சாப்பிடத் தோன்றவில்லை

Photo Sharing and Video Hosting at Photobucket

மூளை ,எலும்பு, கை, கால், தலை என்ற வார்த்தைகளை நாம் கசாப்புக் கடைகளில்தான் உபயோகிப்போம் ஆனால் தினம் தினம் இந்த வார்த்தைகளை மனித உறுப்புகளோடு ஒப்பிட்டு மனிதர்களிடமிருந்து பிரித்தெடுத்து ஒட்டி.. .....ச்சே கேட்கும்பொழுதே ஜீரணிக்க முடியவில்லை..

நீங்கள் எப்பொழுதேனும் கோழிக்கறி வாங்குவதற்கு கோழிக்கடைக்குச் சென்றிருக்கின்றீர்களா? சென்றால் கண்டிருக்க கூடும். கோழிகள் மொத்தமாக அடைபட்டிருக்கும்.
கடைக்காரன் ஏதாவது ஒரு கோழியை எடுக்க முற்படும்பொழுது எல்லாக் கோழிகளும் அப்படியே பதுங்கி பயந்து மூலையில் சென்று ஒட்டிக்கொள்ளும். அவற்றில் ஒன்றைப் பிடித்து மற்ற கோழிகளின் கண்முன்னாலையே அதனை அறுத்து பல பாகங்களாக பிரித்தெடுக்கும்பொழுது அந்தக் கோழிகளுக்கு எவ்வளவு மிரட்சி கண்களில் தெரியும் தெரியுமா..? நான் பலமுறை கவனித்திருக்கின்றேன். அறுக்கப்பட்ட கோழியின் வலியை விடவும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் மற்ற கோழிகளுக்குத்தான் வலிகள் அதிகம்

இதே நிலைமைதான் இந்தப் பிணவறையில் வேலைபார்ப்பவர்களுக்கும். தினம் தினம் ஏதாவது ஒரு பிணத்தைப் பிரித்தெடுத்து தைக்கும்பொழுது தான் வாழ்கின்ற நாட்களில் இவ்வளவு ஆட்டம் போடுகின்றோமே? நமக்குள் இருப்பதும் இதுபோன்ற வெற்று எலும்புகள் ,சதைகள் , இரத்தப் பிடிப்புகள்தானே என்று உணர்ந்துகொள்வார்கள்.

அங்குள்ள ஊழியர் ஒருவர் கூறினார்

"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.

"ச்சே என்ன வாழ்க்கைப்பா இது" என்று சலித்துக்கொண்டார். .

1 கிலோ சர்க்கரை, அரை கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் என்று பட்டியலிடுவது போல இங்கேயும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எப்படி தெரியுமா?

------------------------------------ஜனவரி-- பிப்ரவரி-- மார்ச்-- ஏப்ரல்

விபத்து ------------------------5------------ 1------------2----------- 3

தூக்கு -----------------------1------------- 3 - - -------NIL----------7

விஷம் ---------------------- 4

எரிந்தவர்கள் ------------------4--------------3 -

கொலை ---------------------------------------1---------- - 2


இப்படி பட்டியலிட்டிருக்கின்றார்கள். பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன். இதில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு நிஜ படத்தை தொங்கவிட்டிருக்கின்றார்கள். சென்ற வருடம் மட்டும் 800 க்கும் மேற்பட்ட பிணங்கள் வந்தது. இந்த வருடம் இப்பொழுதே அந்த எண்ணிக்கை வந்துவிட்டது என்று வளர்ச்சி விகிதத்தை பட்டியலிடுகின்றார்.

வருடங்கள் வாரியாக, மாதங்கள் வாரியாக எழுதப்பட்டிருந்தது செத்தவர்களின் எண்ணிக்கையையை.
சாதிக்கலவரம், மதக்கலவரம், காதல்தோல்வி, விபத்து, வரதட்சணை கொடுமை ,பழிக்குப் பழி என்று எத்தனையோ காரணங்கள் அங்கே. ஆனால் இறந்தவர்களின் மதங்கள், சாதிகள், எல்லாம் எழுதப்படவில்லை வெறுமனே பிணம் அவ்வளவுதான்..


சாலையில் எங்கேனும் விபத்தைக் காண நேர்ந்தாலே அது ஜீரணமாக 1 நாள் ஆகின்றது.

பிணத்தோடு விளையாடி
பிணத்தோடு உறவாடி
பிணத்தோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே


என்று பிணங்களோடு வாழ்நாளைக் கழிக்கின்ற அந்த ஊழியர்களை நினைத்து பரிதாபப்படத்தான் தோன்றுகின்றது. ஆனால் பிணத்தோடு பணிபுரிந்து சிலருக்கு இதயம் மரத்துப் போகின்றது. பிணம் வாங்க வருபவர்களிடம் அவர்களின் துக்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு பணத்தையே முதன்மையாக கருதும் சில ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் பார்ப்பது தொழில் அல்ல தியாகம் எனலாம்..

- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 07, 2007

படிக்காமல் விட்டுவிடாதீர்கள்

" என்னடா வாழ்க்கை இது" என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Friday, August 03, 2007

என்றும் துணையிருப்போம் ஆசிப்...

Photo Sharing and Video Hosting at Photobucket

"நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்கள்" என்ற செய்தி வலைப்பதிவர்கள் பலருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிப் மீரானுக்கு எங்களது ஆறுதல்கள் என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை. கனவுகளோடு விடுமுறைக்கு வந்துவிட்டு இனிமையான நினைவுகளோடு திரும்பிச் செல்ல நினைத்திருப்பார். ஆனால் இப்படி சோகமயமாகிவிட்டது.

ஆசிப்மீரானின் தந்தை திரு அப்துல் ஜப்பார் அவர்கள் தனது மறு-மகளைப் பற்றி எழுதியுள்ளது இன்னமும் மனதை சோகமயமாக்குகின்றது.

"இந்தப் பூப்பந்தில் வதியும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் அவளும் ஒருத்தி. ஆனால் நிச்சயம் லட்சத்தில் ஒரு பெண். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஓர் இனிய தேவதை. "

"எங்கள் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிச்சென்ற ஒரு பிரபல கவிஞர், " இறைவனுக்கு இணை வைப்பது பாவமில்லை எனில் இவளை நான் தெய்வம் என்பேன்" அன்று கவிதை நயத்தோடு சொல்லிச் சென்றார். "

"பெரியவர்களிடம் காட்டும் பண்பும் - பணிவும், கணவனிடம் காட்டும் அன்பும் - பரிவும், குழந்தைகளிடம் காட்டும் பாசமும் - நேசமும், குடும்பத்தினரிடம் காட்டும் கனிவும் - கருணையும், சமூகத்தில் நடந்து கொண்ட கண்ணியமும் - கௌரவமும் யாஸ்மினை ஒரு தனிப்பிறவி என்றே சொல்ல வைத்தன. "

"இரவு பதினொன்றரை மணிக்கு மனசாட்சியே இல்லாததா மருத்துவ உலகம் என்று எண்ணுமளவுக்கு அந்த இரக்கமற்ற இடிச் செய்தியை எங்கள் தலைகளில் இறக்குகிறார்கள் --- யாஸ்மின் இறந்து விட்டாள். "

அப்துல் ஜப்பாரின் இந்த எழுத்துக்கள் ஆசிப்பின் துணைவியாரைப் பற்றி அறியாதவர்களையும் கண்ணீர் விட வைத்துவிடுகின்றது.

இந்த இழப்பிற்கு எந்த நிகழ்வுகளாலும் ஈடு செய்யவே முடியாது எனினும், இந்த இழப்பின் சக்தியை தாங்கும் மனவலிமையை ஆசிப்பிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் இறைவன் வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்... இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சாந்தியும் சமாதானமும் தருவானாக...


- ரசிகவ் ஞானியார்

Sunday, July 22, 2007

நீங்க ஹாரிபாட்டர் வாங்கியாச்சா..?

Photo Sharing and Video Hosting at Photobucket

"இன்று ஒரே நாளில் பல லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்தன "

"கடைகளின் வாசலில் மக்களின் கூட்டம் "

"நெல்லையில் இன்று வந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீர்ந்து போயின.. "

வேற ஒண்ணுமில்லை ஹாரிபாட்டரைத்தான்ப்பா சொல்றேன். பிறமொழிப் புத்தகங்களை விரும்பி படிக்கின்ற அளவுக்கு தமிழ்க் கலாச்சாரம் இப்படி முன்னேறிவிட்டதா..?

"ஹாரிபாட்டர் நான் வாங்கிட்டேன்..? நீ வாங்கியாச்சா..? "என்று வாங்கிய குழந்தை வாங்காத குழந்தைகளிடம் மார்க்கெட்டிங் செய்கின்றது. அப்படி குழந்தைகளை கவரும் வண்ணம் தொடர்ந்து 7 வது பதிப்புகளாக வந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றது . பாராட்டக்கூடிய விசயம்தான். ஆனால் புத்தகம் புடிக்கிறதோ இல்லையோ? அதில் உள்ள கதை விளங்குகிறதோ இல்லையோ? ஆனால் வாங்குவது பணக்காரத்தனமாகிவிடுகின்றது.

ஹாரிபாட்டருக்கு உலகம் முழவதும் கிடைக்கின்ற வரவேற்பில் மயங்கியும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர் புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாத பணக்காரர்கள்.

புத்தகம் எல்லாம் விற்றுத்தீர்ந்த அந்தக்கடைக்குச் சென்று, "ஹலோ ஹாரிபாட்டர் புத்தகம் இருக்கிறதா?" என்று சும்மாக்காட்டியும் வெட்டிப் பந்தாவுக்கு கேட்டுவிட்டு வரலாமா என்று நினைக்கின்றேன்.

அதற்கு கிடைக்கின்ற இவ்வளவு வரவேற்பைப் பார்த்து எனக்கும் ஹாரிபாட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது.

மாயாஜாலங்கள் நிறைந்த கதை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்துவதற்கு அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? புத்தகம் படித்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்ப்பா..ப்ளீஸ்..


Photo Sharing and Video Hosting at Photobucket Photo Sharing and Video Hosting at Photobucket

பணக்காரத்துவத்திற்காக ஹாரிபாட்டர் வாங்கப்போகும் பொழுது சாலையில் இவர்களைக் கண்டால் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்துட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..

செவிக்குணவில்லாதபொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்



- ரசிகவ் ஞானியார்

ஹைக்கூ

வரதட்சணை

பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!


தமிழ்ப்பற்று


தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று

"அட
ஆங்கிலம் புரியலப்பா! "

ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்

சகுனம்

பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?




- ரசிகவ் ஞானியார்

Friday, July 06, 2007

இரசாயன இதயம்

Photo Sharing and Video Hosting at Photobucket



ன்பின் பீரங்கியே!
அழகின் ஆயுதமே!

நான் தெருமுனைக்குச் சென்றாலே...
தவித்துக் கொண்டிருப்பாய்!
இப்பொழுது
போர்முனைக்கு வந்திருக்கின்றேன்!
எப்படியிருக்கிறாயடி?

திரிகளின்
தாக்குதலுக்கு துடிக்கின்ற
துடிப்பை விடவும்
உன்
தபாலுக்குத்தான் ...
அதிகமாய் துடித்திருப்பேன்!

"உனக்கு தைரியமிருந்தால்
எனக்கு பூ வாங்கி வா
பயமாயிருந்தால்
போரிடப்போ"


என்று எழுதியிருக்கின்றாய்!

லவரங்கள் மண்ணில்
தோன்றிடுமோவெனப் பயந்து..
போரிடவே போய்விட்டேனடி!
இனி என் மண்ணில்
தைரியமாக இருக்கலாம் நீ!

ன் காயங்களுக்கு
தரப்படுகின்ற
மருந்து மட்டுமல்ல...
உன்
கடிதமும்
சாப்பாட்டுக்கு முன்
சாப்பாட்டுக்கு பின்
என்றாகிவிட்டது!

தீவிரவாதிகளை...
தோட்டாக்களால் விரட்டினேன்!
எனக்குள் காமம் வந்து...
தீவிரவாதியாகியானது!

ன்
விழித்தோட்டாவில்...
நான்
விழப்போவது எப்போது?

ன் நினைவுகள் ஒரு கோழை!
ஆம்
நான் உறங்கும்பொழுது...
ஓடி வந்து தாக்குகிறது!

னி
கடித முனைகளை
முத்தமிட்டு ஒட்டு!

டிதங்களுக்குள்
ஆக்சிஜன் நிரப்பி அனுப்பு!

ச்சுக் காற்றுகளுக்கு நடுவே...
உன்
நா காற்றில் நான் சுவாசிக்க!

வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?

கொஞ்சம் பொறு!
டுமீல்! டுமீல்!
ம்! சொல்!

வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?

- ரசிகவ் ஞானியார்

அம்மா என்றொரு அநாதை

Photo Sharing and Video Hosting at Photobucket


னுப்புனர்:

அம்மா என்றொரு அநாதை,
முதியோர் இல்லம்.

பெறுநர் :

நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்

பொருள் : பொருள் மட்டுமே பொருள்

ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்று
அன்னையர் தினமாம்!

னக்கு
அன்னையை விட்ட தினம்தான் ...
ஞாபகத்திலிருக்கும்!

நீ என்
விரல்பிடித்து நடந்தநாட்களை
கொஞ்சூண்டாவது உணர்கிறாயா?
என்னை விட்டுச்சென்ற
இந்த நாளில்...

நான் உணர்கின்றேனடா...

ன்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...
என்னை
இங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...

ள்ளி வாகனம்
கண்விட்டு மறையும் வரையிலும்,
உன்னை
வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!

ப்பொழுதோ உனது
புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கே
விட்டுச் சென்றது நியாயமா?

நீ கல்லூரி செல்லும்பொழுதும்
வாசல் வரை வந்து
ஊட்டிவிட்ட ...
விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!

ங்கே
வயிறாற கிடைத்தாலும்...
வரிசைச் சாப்பாடுதான்!

சௌக்கியமா மகனே..?

ருகிறவர்களெல்லாம் ...
பரிதாபப்படுகிறார்கள்!
பரிதாபப்படவேண்டிய நீயோ
வர மறுக்கிறாய்!

யிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?

னக்காய் எழுதி வைத்த
சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..
என் சாம்பல் கேட்கவேனும் வா!

ன் சாம்பல்
ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்ட
கண்ணீர்களின் கலவை
அவ்வளவுதான்..!

ரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்து
உன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!

ன் மகனுக்காவது
கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,

இப்படிக்கு,
அம்மா என்றொரு அநாதை


- ரசிகவ் ஞானியார்

Thursday, June 28, 2007

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

Photo Sharing and Video Hosting at Photobucket


தோ முட்செடிகளாக அடர்ந்திருக்கும் இந்த ஓடைப்பகுதியானது திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே அறிவியல் மையத்திற்கு எதிர்ப்புறமாக உள்ளது

ன்ன ஆயிற்று இந்த ஓடைக்கு என்கின்றீர்களா..?

நேற்று ஒரு ஏழைப் பெண்மணி தனது கைக்குழந்தையுடன் இந்த ஓடையில் நீர் குடிக்க இறங்கிய பொழுது இந்த ஓடையில் எந்த மரத்திலிருந்தோ ஒரு பலாப்பழம் விழுவதைக் கண்டு கையிலிருந்த குழந்தையை அப்படியே தண்ணீரில் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றுவிட்டாள்.

பாவம் குழந்தை தண்ணீரில் மூழ்கிப்போனது. குழந்தையைப் போட்டுவிட்டு பலாப்பழத்தை எடுக்கச் சென்றிருக்கிறாள் என்றால் எந்த அளவிற்கு பசியோடிருப்பாள் என்று நினைத்துப் பாருங்கள். குழந்தையை விடவும் அவளுக்கு பாலப்பழம்தான் அந்த நேரத்தில் முக்கியமாய் தெரிந்திருக்கிறது.

தனால்தான் இந்த ஓடைக்கு வித்தியாசமான பெயர். என்ன தெரியுமா?

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை

ன்னடா நேற்று நடந்திருக்கிறது எந்தப்பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி செய்திகளிலும் வரவில்லை என்கின்றீர்களா? நான் நேற்று என்று சொன்னது சுமார் 50 வருடங்களுக்கு முந்தைய நேற்றுங்க.. .. இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது கற்பனையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் வட்டார மக்களால் இந்தக் கதை பரவலாக பேசப்படுகின்றது

தான்ங்க ஒரு பழமொழி சொல்வாங்க பசி வந்தால் பத்தும் பறந்தும் போகும் என்று. ஊரில் நடக்கின்ற திருட்டு கொலை கொள்ளைக்கெல்லாம் முக்கிய காரணம் இந்தப் பசிதாங்க. இறைவன் மட்டும் பசிக்காத வயிறொன்றை படைத்துவிட்டால் இவ்வுலகம் அமைதியாய் இருக்குமோ..?

ந்த ஓடையைக் கடக்கும் பொழுதெல்லாம் எனக்கு பலாப்பழம் ஞாபகம் வருகின்றதோ இல்லையோ மூழ்கிப்போனதாகச் சொல்லப்படும் அந்தக் குழந்தைதான் ஞாபகத்தில் வரும்.

நீங்க திருநெல்வேலிப் பக்கம் வந்தீங்கன்னா இந்த ஓடையை கண்டிப்பா பார்த்துட்டுப் போங்க..? அந்தப் புள்ளை ஞாபகம் வருமோ இல்லையோ என் ஞாபகம் வரும்ல..


- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 26, 2007

எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ


உமாநாத் என்ற விழியன் இந்த எட்டு விளையாட்டில் இழுத்துவிட்டு விட்டார். என்னைப்பற்றி நானே கூறுவதற்கு 8 விசயங்கள் போதுமா.? இருப்பினும் எட்டுக்குள் சுருக்கி வரைகின்றேன்.

அது என்ன எட்டு ஒரு 3 அல்லது 4 ன்னு வச்சிருக்க கூடாதா..? போங்கப்பா


டீ


ருத்துவரிடம் சென்று மருந்து வாங்கினால் சாப்பாட்டுக்கு முன்பா? இல்லை சாப்பாட்டுக்குப் பின்பா? என்று கேட்பது வழக்கம். அது போல என்னிடம் யாராவது "டீ சாப்படுறீங்களா" எனக் கேட்டால் , "டீ க்கு முன்பா அல்லது டீக்குப் பின்பா" என்றுதான் கேட்பேன். அந்த அளவிற்கு டீ பைத்தியம் நான்.

டீ இல்லையென்றால் நான் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு என் அன்றாட வாழ்க்கை டீயோடு ஆரம்பித்து டீயோடுதான் முடியும்.

சாயா ,டீ, சுலைமானி, தேநீர், லிப்டன்; இப்படிபட்ட வார்த்தைகள் காதில தேனாய் வந்து பாயும் எனக்குள்..

யாருடன் எங்குவேண்டுமானாலும் எந்த நேரத்திலும் டீ குடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் விடமாட்டேன். நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் சமையலறையில் சென்று டீ ஊற்றி வைக்கும் பாத்திரம் காலியாகி இருக்கின்றதா? அல்லது கொஞ்சூண்டேனும் டீ இருக்கிறதா? எனப்பார்த்து கொஞ்சூண்டு இருந்தால் அதனை சூடுசெய்து கேட்டு அடம்பிடிப்பேன்.

"இந்த நேரத்தில் டீயா" என்ற வசனத்தை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கின்றார்கள். நேரம் காலம் எல்லாம் பார்க்கமாட்டேன் டீ குடிப்பதற்கு.

காலையில் டீ குடித்தபிறகு டீ குடிப்பேன். பிறகு டீ குடித்தபிறகும் டீ குடிப்பேன்.

சாலையில் நெருங்கிய நண்பனோ அல்லது நெருக்கமில்லாத நண்பனோ, யாராயினும் "வாடா டீ சாப்பிடலாம்" என்றுதான் வார்த்தைகளே ஆரம்பிக்கும்.

கல்லூரியில் படிக்கும்பொழுதும் அப்படித்தான். பீரியடுகளின் இடைவெளியில் டீ சாப்பிட்டு வருவோம். மாலையில் பேருந்துக்காக காத்திருக்கும்பொழுது ஒன்று. பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஒன்று. அப்புறம் வீட்டுக்குச் சென்று ஒன்று..

பரிட்சை நேரத்தில் என் அம்மா ஒரு ப்ளாஸ்க்கில் டீ போட்டுத் தருவார்கள். அதை முழுவதும் குடிக்கின்றனோ? இல்லையோ? அதனைப் பார்த்துக் கொண்டே படித்து விடுவேன். குருப் ஸ்டடி நேரத்தில் பொழுது இரவில் 1 மணிநேரத்திற்கு ஒரு தடவை பேருந்து நிலையம் வரை சென்று டீ குடித்துவிட்டு வருவோம்.

நான் துபாயில் இருக்கும்பொழுது இங்கிருப்பதை விடவும் அதிகமாக டீ குடிப்பேன் .

திறந்த வெளி ரெஸ்டாரெண்டில் நண்பர்கள் ஒவ்வொருவராக கூடுவோம் ஒவ்வொருவர் கூடும்பொழுதும் அனைவருக்கும் டீ.
இப்படித்தான் ஒரு தடவை 4 அல்லது 5 டீ குடித்திருப்போம் நீண்ட நேரம் இருந்துவிட்டோம். சர்வர் வந்து, " நேரமாச்சு அடுத்த கஸ்டமர் வரவேண்டாமா? எழுந்திருங்க.." என்று சொன்னபொழுது "சரி அப்படின்னா எல்லாருக்கும் இன்னொரு டீ கொண்டு வாங்க" என்று சொல்ல கடுப்பில் சென்றுவிட்டான்..

எதற்காக இப்படி மெனக்கெட்டு டீயைப்பற்றி திரும்ப திரும்ப சொல்கிறேன் என்றால். இதனை வாசிக்கும் நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரிட்டால் டீ வாங்கிக் கொடுத்துறுங்க..அல்லது என்னுடன் டீ சாப்பிட வாங்க..

அதிகமா டீ குடிக்காதீங்க உடப்புக்கு நல்லது இல்லை என்று நிறைய நல்ல உள்ளங்கள் என்னிடம் அறிவுரை சொல்லியிருக்கின்றார்க்ள. அவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு டீ வாங்கிக் கொடுப்பேன்.

ஒன்னு செய்யலாம் திருமண விழாவில் கூட விருந்துக்குப் பதிலாக டீ விருந்து வைத்தால் ஆரவாரமில்லாமல் ரொம்ப எளிமையாகப் போய்விடும். செலவும் மிச்சம்தானே..?
யாருடைய திருமணத்தில் அப்படி நடக்கப்போகிறதோ?

திருமணம்

திருமணம்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திற்கு வருகின்றது அடுத்த மாதம் சென்னையில் நண்பர் செய்யதலியின் திருமணம்.

நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. அந்த திருமணக் கொண்டாட்டங்களில் நடைபெறுகின்ற கேலி ,கிண்டலக்ள் எப்பொதும் எனக்குப் பிடித்தமானவ.

நண்பர்களின் திருமணங்களில் போட்டோ எடுக்கும்பொழுது "டேய் கடைசியா ஒருமுறை சிரிச்சிக்கடா" என்று சொல்லி அங்குள்ளவர்களை கலகலப்பாக்குவது போன்ற சின்ன சின்ன சேட்டைகள் செய்வேன். சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற எனது நண்பனின் திருமணத்தில் போட்டோ எடுக்கப்படும்பொழுது நான் என்னுடைய மொபைலில் பதிந்து வைத்திருந்த "மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி" ங்கிற பாட்டை படிக்க வைக்க நண்பனுக்கு சிரிக்கவா, அழவா எனத் தெரியவில்லை.. "டேய் ஆப் பண்ணுடா" என்று அவனுடைய கெஞ்சலான பார்வையில் பரிதாப்பட்டு அணைத்துவிட்டேன்

அதுபோல சென்ற மாதம் கேரளாவில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் போட்டோ எடுக்கும்பொழுது நண்பனின் இடுப்பில் கிள்ளி கிள்ளி விட நண்பன் சிரித்துக்கொண்டே இருந்தான். போட்டோ எடுப்பவர் எரிச்சலாகி கொஞ்சம் சிரிக்காம நில்லுங்க சார் என்க அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

நான் போட்டோ எடுக்கும்பொழுது அமைதியாய் நின்ற திருமணம் என் திருமணமாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் நான் திருமணப்பரிசாக புத்தகங்கள் தான் கொடுப்பேன். குழந்தைப் பராமரிப்பு - வாழ்க்கைத் தத்துவம் - மன அமைதிக்கான புத்தகங்கள் - பொது அறிலுச் சம்பந்தப்பட்டவைகள் - போன்ற மிகவம் தேவையான புத்தகங்களைத்தான் பரிசளிப்பேன்.

புத்தகம்

புத்தகம் சிலரது வாழ்க்கையில் திருப்பு முனையாக கூட அமைந்திருக்கின்றது. எனக்கும் அப்படித்தான் பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் கல்லூரி அருகே உள்ள நூலகம் உள்ள அந்தச் சாலையின் திருப்பம்தான் என்னை புத்தகம் படிப்பதற்குத் தூண்டியது.

தற்பொழுது நான் வெளியிட எண்ணிக்கொண்டிருக்கும் துபாய் விழிப்புணர்வு புத்தகம்.

"26 ,விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய்" என்ற தலைப்பில் துபாய் பற்றிய விழிப்புணர்வு புத்தகம் வெளியிடுகின்ற முயற்சி தாமதமாகிக்கொண்டே இருக்கின்றது.

அதற்கென்று நேரம் ஒதுக்குவதற்கு நேரமே கிடைக்கவில்லை. நான் வெளியிடுவதற்குள் வைத்திருக்கின்ற தகவல்கள் காலாவதியாகிவிடக்கூடாது என்பதால் சீக்கிரம் வெளியிட்டுவிடவேண்டும். புத்தகத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என சில நண்பர்கள் பரிந்துரைத்திருக்கின்றார்கள். தலைப்பையும் மாற்றும் எண்ணத்தில் இருக்கின்றேன்.

அட்டைப்பட உதவிக்கு நண்பர் செய்யதலியை நாடினேன் அவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுகின்றது. அதற்கு எப்படியும் நான் வரக்கூடும். அப்பொழுது அவனை "ஏண்டா லேட்டாக்குறேன்னு ஒரு பிடி பிடிச்சிறலாம்." ஆனா அவனோ "எனக்கு கல்யாணமாகிவிட்டது இனிமே டைம் இல்லைடா பிஸின்னு" சொல்லிருவான்னோன்னு பயமா இருக்கு..பார்ப்போம் ...ஆனா எப்படியும் இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடவேண்டும் என்ற உறுதியில் இருக்கின்றேன்

எத்தனை பிரதிகள் அச்சடிக்க யாரை வைத்து வெளியிட? ஏன்பது போன்ற தீர்மானங்கள் எல்லாம் எடுத்தாகிவிட்டது. புத்தகம்தான் இன்னமும் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை. தகவல்களை ஒன்றாக வரிசைப்படுத்தினால் உடனே வெளியிட்டு விடலாம்.வெளியிட்டு யாரை அழைக்கலாம் என்றும் அவரைப்பற்றிய கவிதையும் கூட தயாராகிவிட்டது.


கவிதை


விதை என் மூச்சோடு கலந்நது. இறக்கும் தருவாயில் கூட நான் கவிதை எழுதிக்கொண்டே இறக்க வெண்டும் என்று கிறுக்குத்தனமாகவெல்லாம் வசனம் பேச மாட்டேன்.

நான் கவிதைகளை அனுபவங்களிலிருந்து எழுதுகின்றேன். முதலில் எனக்குப் பிடித்தால்தான் கவிதையை மற்றவர்கள் பார்வைக்கு வெளியிடுவேன். எனக்குப் பிடிக்காத கவிதைகள் நிறைய எழுதி நோட்டுப்புத்தகத்திலையே தூங்குகின்றது.

எனக்கு கவிதை எழுதக் கற்றுக்கொடுத்தது சதக்கத்துல்லாஅப்பா கல்லூரியின் அனுபவங்கள்தான். என்னுடைய சீனியர் மாணவர் மதார் என்பவர்தான் என்னுடைய நோட்டுப்புத்தகத்தின் கடைசி பக்க கவிதையைக் கண்டு ரசித்து என்னை தமிழ் ஆசிரியர் பேராசியர் இராமையா அவர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்புறம் கல்லூரியில் நடக்கின்ற போட்டிகள் மாநில அளவிலான போட்டிகள் பல்கலைககழகத்தில் நடக்கும் போட்டிகள் என்று கவிதைகளோடு திரிய ஆரம்பித்தேன். வைரமுத்துவின் கவிதைகளை அதிகம் விரும்பி அதுபோலவே எழுத விரும்பினேன்.

காதல் கவிதைகள் எழுதிக் கேட்கின்ற நண்பர்களுக்கு கவிதை எழுதிக்கொடுத்து கொடுத்தே என் கைகளும் என் இதயமும் காயப்பட்டுப் போனது இல்லை இல்லை காதல்பட்டுப் போனது.

அவனவன் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கின்றான் ஆனால் நான் இன்னமும்

மாநில அளவில் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்று எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கையால் பரிசுப்பெற்றது,

என் கவிதையைக் கல்லூரி இதழில் கண்டு வைரமுத்துவினால் பாராட்டுப் பெற்றது,

நண்பனுடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டது போன்றவைகளைத்தான் நான் இன்னமும் சாதனையாகச் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்.

கல்லூரிக் காலங்களில் அனைத்து பத்திரிக்கைகளிலும் சம்பளம் வாங்காத நிருபராக வேலை பார்த்தேன் எனலாம். நிறைய நிறைய பேட்டிகள் எடுத்து அனுப்பிக்கொண்டே இருப்பேன்

அதன் பிறகு துபாய் சென்ற பிறகு பத்திரிக்கைகளோடு தொடர்பு அறுந்து போனது. இந்நிலையில்தான் அன்புடன் புகாரி மூலம் அன்புடன் என்ற இணையக் குழமம் அறிமுகம் கிடைத்தது. நிலாச்சாரல் இணையதளம்தான் என் கவிதைகளை தொடர்ந்து பிரசுரித்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது.

அதன் பிறகு நிலவு நண்பன் என்ற வலைப்பூ ஆரம்பித்த பிறகு அதில் எழுதவேண்டும் என்பதற்காகவே நிறைய நிறைய எழுதினேன்.

கவிதைக்கான பாராட்டுக்கள்தான் என்னை எழுத வைத்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று கூட நான் எனது ஊரில் வண்டியில் சென்று கொண்டிருந்தேன்.
அப்பொழுது பாரீன் ரிடர்ன் ஒருவர் "ரசிகவ் ரசிகவ்" என்று ஒருவர் அழைத்து "தூக்கம் விற்ற காசுகள் நீங்கதானே எழுதியது நல்லாயிருக்கு எனக்கு ஒரு பிரதி எடுத்து தருவீங்களா? வீட்டுல ஒட்டணும்" என்று சொன்னபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனா அந்தக் கவிதை ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிவிட்டாலும் நேற்றுதான் அவருக்கு கிடைத்தது போல.

கவிதைக்கு கீழே ரசிகவ்னு போட்டிருக்கே அது யாரு கொடுத்த பட்டம்னு அவரு கேட்டாரு


ரசிகவ்


தே கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டுவிட்டார்கள். நானும் பதில் சொல்லியே களைத்துவிட்டேன். என்னுடைய வலைப்பதிவில் கூட அதனைப்பற்றி எழுதியிருக்கின்றேன்.

நிறையபேர் கவிக்கோ அப்துல் ரகுமான் போல ரசிகவ் என்பதும் கவிதைத்துறைக்கு யாரோ கொடுத்த பட்டம் போல என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ஞானியார் என்ற பெயர் நிறைய பேர் வாய்க்குள் நுழையவே மாட்டேன்கிறது. என்னுடைய கல்லூரிச் சான்றிதழில் கூட ஒரு அறிவு ஜீவி என்னுடைய பெயரை மொழிபெயர்த்து ஞானய்யர் என்று எழுதிவிட்டார்கள்.

அடப்பாவி பிரியாணி சாப்புடறவனை இப்படி அய்யர் ஆக்கிட்டீங்களடா என்று அவர்களிடம் சண்டை போட்டு என்னுடைய பெயர் ஞானியார் என்று மாற்றி இன்னொரு சான்றிதழ் வாங்க படாத பாடுபட்டேன்.

எங்கே யாரிடம்எனது பெயரைச் சொன்னாலும் என்ன ஜானியா.? ஜானியாரா? என்று பலவிதமான குழப்பங்கள்.

இதனால்தான் வேறு ஏதாவது புனைப்பெயரில் எழுதலாமென முடிவெடுத்து என்னுடைய அம்மா பெயரான ரசினா என்பதில் இருந்து ரசி என்ற முதல் இரண்டு எழுத்துக்களையும் அப்பா பெயரான கவ்பத்துல்லா என்பதில் இருந்து முதல் இரண்டு எழுத்துக்களான கவ் என்பதையும் இணைத்து ரசிகவ் ஆனேன்.

முதலில் எல்லாரும் குழம்பிப் போனார்கள். ஆனால் நாளடவைவில் ஞானியார் என்பதை விடவும் ரசிகவ் என்ற பெயரில்தான் இணையத்திலும் சிலரின் இதயத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றேன்.


பானிபட் இதயங்கள்


தயம் என்ற சொல்லை கிட்டத்ட்ட எல்லா கவிஞர்களும் உச்சரித்திருக்கக் கூடும். அல்லது எல்லா காதலர்களும் உச்சரித்திருக்கக் கூடும். இரண்டும் ஒன்றுதான். ஆனா உண்மையில் அதிகமா உச்சரித்திருப்பது யாருன்னு தெரியுமா..? இதய சம்பந்தப்பட்ட மருத்துவர்தான்ஙக.. :)

Photo Sharing and Video Hosting at Photobucket

சரி பானிபட் இதயங்களுக்கு வருகின்றேன். புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆசை விளையாட்டுத்தனமாகத்தான் ஆரம்பித்தது. நானும் நண்பர் ராஜாவும் ஒருநாள் திடீரென்று "டேய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு புத்தகம் போட்டா என்ன?" என்று அவனுடைய ஹாஸ்டல் அறையில் வைத்து பேசினோம்.

புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்தப்பிறகு தலைப்பை நிர்ணயிக்க படாத பாடு பட்டோம்.

நிறைய பெயர் தேர்வு செய்து கொண்டு பேராசிரியர் மகாதேவனை அணுகி சார் புத்தகத்தின் தலைப்பை நீங்கதான் தேர்ந்தெடுக்கணும் என்று சொல்லி நிறைய பெயர் கூறினோம். அப்படி ஒவ்வொரு பெயராக சொல்லிக்கொண்டே வரும்பொழுதுதூன் நான் கூறிய பானிபட் இதயங்கள்னு வைப்போம்டா என்று கூறிய சாதாரணமான தலைப்பை "அட வித்தியாசமா இருக்கே" என்று ஆச்சர்யப்பட்டு அதனையே தேர்வு செய்தார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு ரோஜாப்பூ செடியில் இருந்து வெளியே வருகின்றது அதனை ஒரு வாள் வந்து வெட்டி அதிலிருந்து இரத்தம் வடிவது போல அட்டைப்படம். கண்களுக்கு குளிர்ச்சியான அட்டைப்படம். புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்க கலெக்டர் தனவேல் அவர்களை சந்தித்தோம்.

அவர் தலைப்பபையும் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் பார்த்துவிட்டு "இதுக்கு என்னப்பா அரத்தம்?" என்று கேட்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் ராஜாவைப் பார்த்து "நீயே சொல்லுடா" என்று தப்பித்து விட்டேன். அவனும் அதனை எதிர்பார்க்காமல் "இல்லைடா நீதான் தெளிவா சொல்லுவெ நீயே சொல்லுன்னு" என்னை மாட்டிவிட்டான். எங்களுக்கு என்ன சொல்வதென்னு தெரியவில்லை? ஆகவேதான் அப்படி முழித்தோம்.

"சார் ஒவ்வொருத்தர் இதயத்திலும் முளைக்கின்ற காதல்ன்ங்கிற ரோஜாவை சாதி மதம் பொருளாதாரம் போன்ற சமூகத்தின் யதார்த்த வாள்கள் வந்து வெட்டுவதால் காதல் காயப்படுகிறது என்று கூறினேன். ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் ஒரு பானிபட் யுத்தமே நடந்து கொண்டிருக்கின்றது அதனால்தான் அந்தப்பெயர்"என்க ரசித்துவிட்டு சொன்னார் "நான் கண்டிப்பா தலைமை தாங்குறேன்" என்று.. எப்படியோ எஸ்கேப் ஆயாச்சுப்பா..

புத்தக வெளியிடுவதற்காக 2 வருடம் கழித்து நான் படித்த அதே கல்லூரிக்கு சென்றது உற்சாகமாகவும் கல்லூரியின் முதல் புத்தகவெளியிட்டு விழா அதுதான் என்பதும் எங்களுக்கு பெருமையாக இருந்தது. விழாவில் நான் பழைய கல்லூரி ஞாபகங்களைப் பற்றியே கவிதை வாசித்தேன்.


நாங்கள்
கட் அடித்ததை
கண்டுகொள்ளாமல் விட்ட ஆசிரியருக்கும்
பிட் அடித்ததை
பார்த்து கண்டித்த ஆசிரியருக்கும்
நன்றி சொல்லியே ஆரம்பிக்கின்றேன்


என்று கவிதைவெளியிட்டு விழாவில் நான் வாசித்த பேச்சு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அதற்கு வாங்கி தைட்டல்கள் காதில் ஒலிக்க அப்படியே நான் கல்லுரி காலத்திற்குள் நுழைகின்றேன். ஆட்டோகிராப் எழுதிவிட்டு கலைந்து சென்றவர்கள் எல்லாம் ஞாபகம் வருகின்றார்கள்.

ஆட்டோகிராப்

ல்லா கல்லூரி மாணவர்களுக்குமே தாங்கள் படித்த காலம் பொக்கிஷமானது.எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அந்த நினைவகள் பசுமையாக இருக்கும்.
கல்லூரி இறுதிவிழாவில் அதிகமாக ஒலிக்கும் பாடல்

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடத் திரிந்த பறவைகளே


நிறைய பேர் காதலை இழந்திருப்பார்கள். ஆனால் நான் கல்லூரி ஆலமரத்தின் காற்றை இழந்திருக்கின்றேன். அந்த ஆலமரத்தின் விழுதுகளைப் போலவே அந்த ஞாபகங்கள் இதயத்தில் தொங்கிக் கொண்டே இருக்கின்றது.
Photo Sharing and Video Hosting at Photobucket

சமீபத்தில் "ஒரு கல்லுரியின் கதை" என்ற திரைப்படம் பார்க்க நேர்ந்தது. கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை திருமணம் என்று செட்டில் ஆனவர்கள் கோமா நிலையில் இருக்கும் நண்பன் ஒருவனைக் காப்பாற்ற அனைவரும் மறுபடியும் கல்லூரியில் வந்து படிப்பதுதான் கதை.

படம் ஓடுச்சோ இல்லையோ யாருக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ என்னை மிகவம் கவர்ந்தது. அது போல எனக்கும் மீண்டும் அதே மாணவர்களோடு கல்லூரியில் இருக்க ஆசை..ஆனால் காலத்திற்கு தெரியுமா என் கனவு..

ஆட்டோகிராப் எழுதினால் பிரிந்து விடுவோம் என்று சிலர் ஆட்டோகிராப் எழுதுவதில்லை. சிலர் கண்ணீரை மட்டுமே ஆட்டோகிராப்பாக தருவார்கள்.

நிறையபேர் எழுதுவார்கள் : "டேய் மச்சி மணஓலை அனுப்ப மறந்துவிடாதே" என்று ஆனா நான் நிறைய பேரை மறந்துட்டேன் பா..

நான் மிகவும் ரசித்த ஆட்டோகிராப் இது. கல்லூரி 3 வது மாடியில் இருந்து ஆட்டோகிராப் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்த தோழி திடீரென்று தன்னுடைய பேனாவை தவற விட்டுவிட்டாள். பின் என்னுடைய பேனாவை வாங்கி எழுதிவிட்டுச் சென்றாள். என்ன எழுதியிருந்தாள் தெரியுமா?

நழுவிப்போனது பேனா மட்டுமல்ல
நீ கூடத்தான்



பேனா


னக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களுள் ஒன்று பேனாவைத்த தொலைப்பது. பாதுகாக்க வேண்டும் இந்தப் பேனாவையாவது தொலைக்க கூடாது என்று கவனமாய் இருந்து இருந்தே தொலைத்துவிடுவேன். எப்படி தொலைகறது என்பதுதான் ஆச்சர்யமான விசயம். எவ்வளவு விருப்பமானவர்கள் தந்தாலும் சரி அந்தப் பேனாவை தொலைத்துவிடுவேன். அப்புறம் "ஒரு பேனாவை உருப்படியா வச்சிருக்கத் தெரியாதா?" என்று அவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வேன


அதனைப்பற்றி ஒரு கவிதை கூட எழுதியிருக்கின்றேன். அதில் ஒரு வரி இப்படி வரும்

சாகும்வரை எந்தப்போனாவும் என்
சட்டைப்பைக்குள் இருந்ததாய்
சரித்திரமே இல்லை



நான்யாரிடமிருந்தாவது பேனாக்கள் சுட்டாலும் சரி, அழகிய பேனாக்களை கடையிலிருந்து வாங்கினாலும் சரி என்னிடம் அவைகள் நிலைக்க மறுக்கின்றது.
சில நேரம் யாரிடமாவது பந்தயம் கட்டிக்கொண்டு பேனாவை பாதுகாக்க நினைப்பேன். பந்தயத்திற்காக பேனா கொஞ்சம் அதிக நாட்கள் என்னுடைய பக்கொட்டில் நிலைத்திருக்கும் அப்புறம் எப்படியாவது தொலைந்துவிடும்..

ஆகவே என்னைச் சந்திப்பவர்களின் என்னிடம் பேனா இல்லையென்றால் உங்க பேனாவை கொடுத்துட்டுப் போங்க

நான் அழைக்க விரும்புபவர்கள் :

ஆசிப் மீரான்
ஜெஸிலா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும். அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
- ரசிகவ் ஞானியார்

Tuesday, June 19, 2007

நான் டாக்டராவேன் அண்ணே

Photo Sharing and Video Hosting at Photobucket

பாருங்கள் இந்தப் பையனை..அப்பாவியாய் தோற்றமளிக்கின்றான் அல்லவா?

நேற்று மாலை நானும், எனது நண்பரும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ரெஸ்டாரெண்டின் வெளியே அமர்ந்து தேநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது இந்தச் சிறுவன் வந்து நின்றான்

அண்ணே அண்ணே ஒரே ஒரு பாக்கெட் வேர்க்கடலை பாக்கெட் வாங்கிக்கோங்கண்ணே..?

கைகளில் கூடையுடன் வேர்கடலை பாக்கெட்டுகளை கையில் வைத்து கெஞ்சினான்.

என்ன தம்பி நீ படிக்கிறியா? என்று கேட்டேன்

ஆமாண்ணே அண்ணே வாங்கிக்கோங்கண்ணே என்னிடம் விற்றுச் செல்வதிலையே குறியாக இருந்தான்.

சரிப்பா வாங்குறேன் பா.. பக்கத்தில் சில மருத்துவக் கல்லூரி மாணவர்களை பார்த்தபடியே என்னிடம் கேட்டான்

அண்ணே டாக்டர் படிக்கணும்னா எவ்வளவு செலவாகும்னே? அப்பாவியாய் கேட்டான்

நிறைய செலவாகும்பா..மாசம் 10000... ரூ வேணும்பா..

அட அவ்வளவுதானா நான் சம்பாதிச்சு படிக்கிறேன் என்று சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது. அவனது தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன்.

சரிப்பா நீ எங்கே படிக்கிறே..? உங்கப்பா என்ன பண்றாரு..?

எங்கப்பா மெட்ராஸில வேல பார்க்குறாரண்ணே.. பணமே அனுப்ப மாட்டாரு - வேதனையாய் சொன்னான்

நீ வேலை பார்க்குறியா படிக்கிறியா ? படிக்கலைன்னா உன்னை பக்கத்துல உள்ள பள்ளியில சேர்த்துவிடவா..?

இல்லைண்ணே நான் படிக்கிறேண்ணே..எங்கம்மாதான் படிக்க வைக்கிறாங்க..சாயங்காலம் வேர்க்கடலை விக்கிறேண்ணே..

இந்த சிறுவயதிலேயே வேலைக்கு வந்துவிட்டான்...பாவம்.. அவன் தொடர்ந்தான்.

அண்ணே! எனக்குத் தெரிஞ்சடாக்டர் ஒருத்தருக்கு கால் இல்லைண்ணே..இன்னொருத்தருக்கு உடம்பு சரியில்லை..ஏண்ணே டாக்டருக்கு கூட அப்படி ஆகுமா..? மறுபடியும் டாக்டர் பற்றிக் கேட்டான் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் புன்னகை ததும்பும் இதழ்களோடு சிறுவனின் உரையாடலை ரசித்தனர்..


டாக்டர் என்ன தெய்வமாடா..அவரும் மனுசன்தானே..அவருக்கும் சீழே விழுந்தா வலிக்கத்தானே செய்யும்

ம்..ஆமாண்ணே என்று தலையசைத்துக் கேட்டான்..

நானும் டாக்டருக்கு படிப்பேண்ணே.. நல்லா படிப்பேண்ணே என்று சொன்னான்.

அண்ணே! ஒரே ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே! மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்தான்..

நான் உடனே ஒரு பாக்கெட் வாங்கினேன். பக்கத்தில் உள்ள நண்பனிடம் கொடுத்து உன்னோட டியுசன் கிளாஸ்ல யாராவர் நல்லா படிச்சாங்கண்ணா அவங்களுக்கு இதை கொடுத்திருடா என்றேன்..

அந்தச் சிறுவன் உடனே என்னிடம் அண்ணே கடலையை யாருக்குண்ணே கொடுக்குறீங்க..

அவங்க க்ளாஸ்ல படிக்க வர்றவங்களுக்கு பா.. என்று பக்கத்தில் உள்ள நண்பனைக் காட்டினேன்..

அப்படின்னா அவங்க கடலை கொடுக்கட்டும்..உங்களோட கேர்ள் ப்ரண்டோட நீங்க கடலை போடுங்க..

என்று திடீரென்று கூறிவிட்டான்..

நான் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்தில் உள்ள அனைவரும் சிரித்துவிட்டனர்.

பக்கத்தில் வேறு யாரோ கடலை கேட்டார்கள் என்று கொடுக்கச் சென்றான்.

டேய் டாக்டருக்கு படிக்கப்போறேன்னு சொல்றே..இப்படியெல்லாமாடா பேசுறது..இங்கே வாடா என்று அவனை அழைத்தேன்..

அவன் வந்தான்..

உன்னைய போட்டோ எடுத்து இந்தப் பையன் அசிங்கமா பேசுறான்னு பேப்பர்ல போடுறேன் பாரு.. என்று கேமிரா மொபைலை எடுத்து புகைப்படம் எடுக்க முயல

ஆமாண்ணே! போடுங்கண்ணே எல்லாருக்கும் தெரியட்டும் என்று அவன் அழகாய் போஸ் கொடுக்க ஆரம்பித்தான்.

அவனுடைய புத்திசாலித்தனமாக பேச்சை ரசிக்க முடிந்தாலும் வயதுக்கு மீறிய இந்தப் பேச்சுக்கு காரணம் யார்? அவனுக்கு இதனைக் கற்றுக் கொடுத்தது யார்? சினிமாவா? சீரியலா?

யாராகவும் இருக்கட்டும் முதலில் அவனது குடும்பத்தையும் அவனையும் வழிநடத்த தவறி இந்த வயதிலையே அவன் வேலைக்கு வரக் காரணமான அவனது பொறுப்பற்ற தந்தைதான் இதற்கு முழுப்பொறுப்பு..

அண்ணே அண்ணே ப்ளீஸ்... ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே

அங்கே தூரத்தில் யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்கின்றான் பாருங்கள்.. எனக்கு அவங்க அப்பா மீது கோபம் கோபமாக வந்தது...


- ரசிகவ் ஞானியார்

Friday, June 15, 2007

தலைக்கவச போட்டி முடிவு

சென்ற தொடரில் தலைக்கவச போட்டியினை அறிமுகப்படுத்தியிருந்தேன். சிறந்த பதில்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கவிஞர் புகாரி அவர்களிடம் ஒப்படைத்து இருந்தேன். இதோ அவரது முடிவினை வெளியிடுகின்றேன்.

பயனற்ற தலைக்கவசமும் ஒரு சிறந்த யோசனையும்

ரசிகவ் ஞானியார் வித்தியாசமானவர்தான். இவர் கதாநாயகனா அல்லது கலக்கல் மன்னனா என்று தெளிவாகச் சொல்லுவது சிரமம்தான். இவரின் கலக்கல் சேட்டைகளிலெல்லாம் நிச்சயம் ஒரு கதாநாயகன் ஒளிந்திருப்பான். இவரின் சீர்திருத்தக் கவிதைகளிலும்கூட ஒரு கலக்கல் மன்னன் பதுங்கி இருப்பான். இப்படி வித்தியாசமான ரசிகவ் வித்தியாசமான போட்டி வைத்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எதை வேணும்னாலும் சொல்லுங்கப்பா, ஆனால் தெளிவாச் சொல்லுங்க. ஆமாவா? இல்லையா? இந்தப்பக்கமா தலையை ஆட்றீங்களா, இல்லே அந்தப் பக்கமா தலையை ஆட்றீங்களா, இதென்ன ஒண்ணுமே புரியாம ஒரு தலைச்சுற்றாடல்? தலைக்கவச விசயத்தில் இப்படித்தான் ஆட்டி வைத்திருக்கிறது அரசு.

ஆமாம், அரசுகூட நம்ம ரசிகவ் ஞானியார் போலத்தான். உயிர்ப் பாதுகாப்புப்
பணியிலும் ஒரு கலக்கல் நகைச்சுவை. ஆகவே ரசிகவை இது வெகுவாக
ஈர்த்திருக்கும்தான். உடனே போட்டி வைத்துவிட்டார். ஆனால் என்னிடம் வந்து இந்தப் போட்டிக்கு ஒரு முடிவு சொல்லுங்க என்று கேட்டுவிட்டாரே. எனக்கு இப்போது என்ன கவசம் தேவை?

அந்தக் கால மன்னர்களைப் பார்த்திருப்பீர்கள். தலையில் உறுதியான இரும்புக்கவசம் அணிந்து போர் புரிவார்கள். எதிரியின் கூர்மையான வாள்வீச்சுகள் அந்தக் கவசங்களால் தோற்றுப்போகும். இன்றைய போர் வீரர்களும் தலைக்கவசம் அணியாமல் போருக்குச் செல்வதில்லை. நிலக்கரிச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் பணிபுரிவோரைக் கண்டிருப்பீர்கள். அவர்களின் தலைக்கவசம், விபத்துக்களிலிருந்து அவர்களின் உயிர்களைக் காக்கின்றன. இப்படியாய் கட்டிடப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர், சில விளையாட்டு வீரர்கள், சில தொழிலாளர்கள் என்று பலருக்குமான தலைக்கவசத்தின் தேவையைச் சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை.

இதே போலத்தான் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோருக்கும் தலைக்கவசம் என்பது மிகவும் அவசிமான ஒன்று என்று அறிவியலாளர்களும் பாதுகாப்புத் துறையினரும் சொல்கிறார்கள்.

ஆனாலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிக்களுக்குக் கட்டாயம் தலைக்கவசம்
வேண்டுமா என்று விவாதம் பல காலம் முன்பே தொடங்கிவிட்டது. சர்தார்ஜிகள் ஏற்கனவே தலைக்கவசத்தோடு செல்வதால், எங்களுக்குத் தேவையில்லை என்று லண்டனிலேயே மறுத்துவிட்டார்கள். முதலில் வேண்டும் என்று சொன்ன தமிழக அரசு இப்போது ஏதோ ஆலோசிக்கின்ற ரீதியில் பேசினால், வாங்கிய தலைக்கவசங்களை
என்னதான் செய்வது? இதுதான் கேள்வி!

சுவையான பல பதில்கள் வந்து விழுந்திருக்கின்றன. எனக்குப் பிடித்தவற்றை
எடுத்து முதலில் அலசிப்பார்க்கிறேன். பிறகு எது சிறந்தது என்ற என்
தேர்வுக்குப் போகலாம்.

செல்வேந்திரன் என்பவர் பயன்படாத தலைக்கவசத்துக்கு இரண்டு பயன்பாடுகளைச் சொல்லி இருக்கிறார். ஒன்று வீட்டின் தேவைக்கான சிறந்தபயன்பாடு. இன்னொன்று, கலைநயத்தோடு அழகை ஆராதிக்கும் ஒரு பயன்பாடு. இரண்டுமே மிக நல்ல யோசனைகள்தான். "1. தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம். 2. செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்"

அக்கறையான யோசனைகள் தந்த செல்வேந்திரனைப் பாராட்டுகிறேன்.

மின்னுது மின்னல் என்பவரின் நகைச்சுவையை நான் ரசித்தேன். திருவோடாகப் பயன்படுத்தலாம். திருவோட்டின் தேவை நமக்கு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்துகிறார் போலும். இதே திருவோடு பயன்பாட்டை "ஜி" என்பவரும் சொல்லி இருக்கிறார். இந்த அங்கத நயத்தை ரசித்து இந்த இருவரையும் பாராட்டுகிறேன்.

ஜெஸிலாவின் யோசனைகளுள் சில அசத்துகின்றன. "குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைக்குத் தூளியாக்கலாம்" என்ற கவிநயம் அப்படியே கற்பனையில் விரிந்து எண்ணத்தில் ஊஞ்சலாடுகிறது. "வழுக்க தலையில் கொசு கடிக்காம இருக்க கவசமா மாட்டிக்கிட்டு தூங்கலாம்". ரொம்ப அவசியங்க! ஆனால் நம்மூர் கொசுக்கள் எந்தக் கவசத்தையும் தாண்டி "சுறுக்"குன்னு ஊசி போட்டுடுமே! நல்ல நகைநயம்.
கவிநயம், நகைநயம் இரண்டையும் தந்த ஜெஸிலாவைப் பாராட்டுகிறேன்.

சிவா ஞானம்ஜி எழுதி இருப்பது சிந்திக்கத் தூண்டுகிறது. "பத்திரமா
வச்சிருங்க, மெருகு கலையாமே! இன்னும் ஆறு மாசத்திலே இதைவிட ஷ்ட்ராங்கா கோர்ட் ஆர்டர் போடும்; அரசு ஆணையும் வரும். அப்போ அதிகவிலைக்கு வித்துடலாம். (ட்ராபிக் ராமசாமி விடமாட்டாரில்லே)".
அரசு, லூட்டி அடிக்கணும்னு முடிவு செய்துவிட்டது. இன்னும் ஆறுமாதத்தில் இன்னொரு சட்டம் வராமலா போயிடும். எனவே அறிந்து செயல்படுங்கப்பா என்ற உபதேசம் அருமை.
அதோடு இவரின் வணிகக் கண்ணோட்டத்தைக் கண்டு இவரைத் தொழிலதிபர் ஆவதற்கான
வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லிப் பாராட்டத் தோன்றுகிறது.

சௌமியா ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதி இருப்பதை வாசிக்க என்
கண்களுக்குக் கவசம் தேவைப்பட்டது. இப்படியான மடல்களை
வாசிக்கும்போதெல்லாம் என் கண்கள் உடையும்தான். அன்பின் சௌமியா விரையில் யுனித்தமிழ் எழுதப் பழகுங்கள். ரசிகவ் உங்களுக்கு உதவுவார்.

தமிழர்களின் சாதுர்யங்களுள் ஒன்று வரம் தந்தவன் தலையிலேயே கைவைப்பது. வைத்திருக்கிறார் இறை நேசன். ஆனாலும் ரசிகவ், ஞானியாராச்சே. அதிகமாகச் சிரித்து இதுதான் சிறந்த நகைச்சுவை என்று ஆக்கிவிடுவார். அதையும் போட்டியில் சேர்த்துக்கொள்வார். பாராட்டுகிறேன் ரசிகவை.

சரி இப்போ பரிசை யாருக்குக் கொடுக்கலாம் சொல்லுங்க! நான் ஒரு
முடிவெடுத்துட்டேங்க. பரிசை "அபி அப்பா" வுக்குக் கொடுத்துடலாம். "உங்க பதிவை ஆழ்ந்து படிக்கும் எனக்கு பரிசாக நீங்க வாங்கின அந்த ஹெல்மெட்டை தரலாம்" என்ற இவரின் பதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

ஏன்?

இவர் மட்டும்தாங்க தலைக்கவசம் வேண்டும்னு சொல்லி இருக்கிறார். ரசிகவின் பதிவை ஆழ்ந்து வாசித்தபின் தீர்மானமே செய்துவிட்டார். தலைக்கவசம் உயிர்காக்க மிகவும் அவசியம். எனவே என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் பயன்படுத்துகிறேன் என்று திடமாகச் சொல்லிவிட்டார். ரசிகவின் கலக்கலுக்குள் ஒரு கதாநாயகத்தனம் இருக்கும் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டவர் இவர்தான் என்பேன்.

தலைக்கவசம் எத்தனை உயிர்களை எப்படியெல்லாம் காத்திருக்கின்றன என்ற பழைய சம்பவங்களை எல்லாம் தேடிப்பிடித்து வாசித்துப் பாருங்கள்.
ஆச்சரியப்படுவீர்கள். தலைக்கவசம் அவசியம் வேண்டும் என்று தீர்மானத்தை
உடனே எடுப்பீர்கள். அவற்றைப்பட்டியலிட்டு இந்த உரையை நீட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. பின் அது பெரிய நகைச்சுவையாய் ஆகிவிடும் :) ஆனாலும் குறிப்பாக சுருக்கமாக ஒன்றிரண்டு.

கீழே விழுந்த ஒருவனின் தலைக்கவசத்தில் இரண்டு மூன்று வெடிப்புகள் ஆனால் ஒரு காயமும் படாமல் தலைக்கவசம் அணிந்தவன் தப்பித்திருக்கிறான் என்ற ஒரு செய்தி வாசித்தேன். தலைக்கவசம் இல்லாமல் சென்றதால் தலையில் அடிபட்டு மூளை குழம்பிப்போய் பைத்தியமான கதை உண்டு. அப்படியே அந்தத் தளத்திலேயே மாண்டுபோன நிகழ்வுகளும் உண்டு.

ரசிகவ் தன் கட்டுரையில் ஓரிடத்தில் சொல்கிறார் "தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்" இதில் உள்ள உட்கருத்து எத்தனை ஆழமானது. இந்த நகைச்சுவைக்குள் உள்ள அக்கறை எத்தனை உயர்வானது?

"ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள், அட, விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய்த் தெரியலை" இப்படி ரசிகவ் எழுதி இருப்பதைத்தான் அபி அப்பா ஆழ்ந்து வாசித்ததாகச் சொல்கிறார் என்று கொள்கிறேன்.

"அணியாதவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அரசு சொன்னது
கோமாளித்தனம் அல்ல. மக்கள் மீதுள்ள கருணை. காவல்துறையிலுள்ள
சில்லறைத்தனமான சிலரின் அடாவடிகள் குவிந்துவிடக்கூடாது என்ற மக்கள் நலன்.

அரசின் எண்ணம் மிகவும் தெளிவு. பயன்படுத்திப் பழகாத தமிழக மக்களைப்
பயன்படுத்தச் செய்வோம். ஆனால் அதை ஒரு அடக்குமுறையாகச் செய்யாமல் படிப்படியாய் ஒரு கல்வியாய்ச் செய்வோம் என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.

சிறப்பான பதில் தந்த "அபி அப்பா" அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்புடன் புகாரி

--------------------------------------------------


- ரசிகவ் ஞானியார்

Sunday, June 03, 2007

ஒரு வித்தியாசமான போட்டி

நம்ம வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி

தலைக்கவசம் வாங்கணும்னு சொன்னாங்க..அவசரம் அவசரமா எல்லாரும் வாங்கிட்டாங்க...இப்ப தலைக்கவசம் மாட்டாதவர்களை வற்புறுத்தவேண்டாம்னு ஒரு குழப்பமான அறிக்கையை கொடுத்து தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லியிருக்காங்க..

சரி இப்ப வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி :

இப்ப வாங்கிய தலைக்கவசத்தை, நாம் உபயோகிக்கும்படி எப்படி மாற்றிக்கொள்ளலாம்?

வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு அளிக்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் சார்பாக புத்தகம் வாங்குபவர்கள் தமிழ்நாட்டிற்குள் இருக்க வேண்டும்.

நகைச்சுவையாக எழுதுங்கள் இறுதி நாள் : 10-06-2007

- ரசிகவ் ஞானியார்

தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்

கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டமஅமுலுக்கு வந்துவிட்டது.நானும் இந்தச் சட்டம் எப்படியாவது தள்ளுபடியாகிவிடும் என்றுதான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.

ஹெல்மெட் வாங்கியபிறகு இந்தச் சட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டால் அப்புறம் வாங்கி வீணாகிவிடுமே என்று நினைத்தேன். ஆனால் வாங்க வைத்துவிட்டார்கள். நான் மட்டுமல்ல நிறையபேர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்று ரோட்டோர பிளாட்பாரங்களில ஹெல்மெட் வாங்க மொய்த்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

இனிமேல் அனைவருமே மொட்டையாகச் சுற்றப்போகின்றோம். யார் என்ன ஹேர்ஸ்டைல் வைத்திருந்தாலும் சரி மொட்டைதான். இனிமேல் முடி காற்றில் பறக்க ஸ்டைல் காட்ட முடியாதே என்றுதான் பல இளைஞர்கள் கவலைப்படுகின்றார்கள். பெண்களும் அப்படித்தான் கூந்தலுக்கு 1 மணிநேரம் செலவழித்து செய்கின்ற மேக்கப் எல்லாம் பேக்கப் ஆகிவிடும் என்று கவலைப்படுகின்றார்கள்.

முடிபறக்க பைக்கில் பந்தாவாக செல்ல வேண்டுமானால் ஹெல்மெட்டுக்கு மேலே நாம் விரும்பும் விக் வைத்துக் கொள்ளலாம்.

கொள்ளைக்காரர்கள் மற்றும் ஆட்களைத் தாக்கிவிட்டு ஓடுபவர்களுக்கெல்லாம் ஒரே குஷிதான். பின்னே..? இனிமேல் எல்லாரும் ஒரே மாதிரி மொட்டைத்தலையுடன் சுற்றும்பொழுது இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கின்றதே?

இனிமேல் எதிரில் வருபவர்கள் யாருன்னு கண்டுபிடிப்பது சிரமம்தான். வேணுமுன்னா ஒண்ணு பண்ணலாங்க..

ஒவ்வொரை ஊரையும் கடக்கும்பொழுது செல்பொனில் நெட்வொர்க் உள்ள அந்தந்த ஊரின் பெயர் வருமே அதுபோல ஹெல்மெட்டிலும சென்ஸார் பொருத்திவிடவேண்டும். நமக்குத் தெரிந்தவர்கள் எதிரில் வரும்பொழுது நமது ஹெல்மெட்டில் விளக்கு எரியவேண்டும் அல்லது இந்த ஆள் வருகிறார் ( Display Screen) என்று காண்பிக்க வேண்டும். உடனே நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த ஐடியாவை பயன்படுத்தி யாரும் புதிய ஹெல்மெட் கண்டுபிடிச்சாங்கன்னா எனக்கு ராயல்டி வாங்கித் தாங்கப்பா.

Photo Sharing and Video Hosting at Photobucket
நான் இரண்டு நாட்கள் முன்புதான் ஹெல்மேட் வாங்கினேன். கறுப்பு நிற ஹெல்மெட்டில் நீல நிறத்தில் நெருப்பு எரிவதைப்போன்ற படம் இருக்கும். ஆனால் ஹெல்மெட்டைப் பாதுகாக்க பூட்டும் வாங்கணும். பின்னே எங்கே போனாலும் கையில் தூக்கி வைத்துக்கொண்டு போக முடியாது. இப்பொழதே சில இடங்களில் ஹெல்மெட்டை பூட்டியோ பூட்டாமலோ வைத்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று பார்க்கிங் பகுதிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஒரே வடிவத்தில் நிறைய ஹெல்மெட்டுக்கள் வலம் வருவதால் ஒவ்வொருவரும் அவர்களது ஹெல்மெட்டில் தங்களது பெயரை எழுதி வைத்துக்கொள்ளுங்களேன்.


முதல் நாளான நேற்று (01-06-07) ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லும்பொழுது எதிரில் வருகின்றவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்கின்றார்களா என்றே கவனிக்கத் தோன்றுகின்றது. எதிரில் வருகின்றவர்களும் அவ்வாறே கவனிக்கின்றார்கள்.

ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் வந்து எதிரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களை கண்டு கேலியாக சிரித்துக்கொண்டு செல்கின்றான்.

சிலர் 3 பேராக குடும்பத்தோடு பைக்கில் வந்தாலும் 3 பேரும் ஹெல்மெட் அணிந்து சட்டத்தை ஒழுங்காக பின்பற்றுகின்றார்கள்.


நிறைய காதலர்கள் இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பாங்க. இனிமேல் யாருக்கும் தெரியாமல் முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு காதலனின் பின்னால் அமரவேண்டியது இருக்காது ஒரு ஹெல்மெட் அணிந்தால் போதும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.

எப்பவாச்சும் விபத்து ஏற்பட்டது என்றால் தலையில் அடிபடாமல் தப்பிப்பதற்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு இட்டதெல்லாம் சரிதான். நடந்து செல்கின்ற எத்தனையோ பேர் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்ற செய்தி தினமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம். அப்படியென்றால் பாதசாரிகளுக்கும் ஹெல்மெட் அணியவேண்டும் என்று கட்டாயச் சட்டமிட்டால் நிறைய உயிரிழப்புக்களைத் தவிர்ககலாமே?

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்படியென்றால் சைக்கிளில் செல்பவர்களும் அணியவேண்டுமா?


மொட்டைத்தலை அல்லது முழுவதும் வழுக்கையாக உள்ளவர்கள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்க விரும்பினால் கறுப்பு கலரில் வண்ணம் அடித்து நெற்றியில் நீட்டிக்கொண்டிருக்கும்படி தொப்பியணிந்தால் போதும் போலிஸார்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிடலாம்.

தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்
ஹெல்மெட் அணிவதால் வெயிலிலிருந்தும் கடன்காரர்களிடமிருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

இனிமேல் பைக்கில் செல்லும்பொழுது செல்போனில் பேசுபவர்களை காண முடியாது. இதனால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

யாரும் லிப்ட் கேட்க மாட்டார்கள். ( லிப்ட் கேட்பவர்கள் கைகளில் ஹெல்மெட் வைத்திருக்கவேண்டுமல்லவா?)


தயவுசெய்து செருப்புக் காலுடன் உள்ளே வரவேண்டாம் என்பது போல
தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்.
ஹெல்மெட்டை வாசலில் கழற்றி விடவும்.
ஹெல்மெட் திருடர்கள் ஜாக்கிரதை
போன்ற பலகைகளை எங்கெங்கும் காணலாம்.


ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள்
அட விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய் தெரியலை

இன்று (03.06.07) பத்திரிக்கையில் ஹெல்மெட் அணியாதவர்களை இடையூறு செய்யவேண்டாம் என்று கருணாநிதி அறிவித்திருப்பதை இனிமேல் ஹெல்மெட் அணியவேண்டாம் என்று மக்கள் எடுத்துக்கொண்டார்கள். குழப்பமான அறிவிப்பு இது. தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

நான் இன்று ஹெல்மெட்டோடு வருவதை பார்த்து ஹெல்மெட் அணியாதவர்கள் இளக்காரத்துடன் பார்த்துச் செல்கின்றார்கள். "பார்த்தியா நீ பயந்து போய் சட்டத்திற்கு கட்டுப்படுகிறாய் நான் சட்டத்திற்கு கட்டுப்படவில்லை" என்கிற ரீதியில் அவர்களின் பார்வை இருக்கின்றது.

"என்னப்பா ஹெல்மெட் அணியவேண்டாம்னு சட்டம் வந்திட்டுதே நீ ஏன் இன்னமும் ஹெல்மெட்டுமன் அலைகின்றாய்?" என்று என்னிடம் எதிர்ப்படும் பெரிசுகள் எல்லாம் கேட்கின்றார்கள்.

என்னவோ போங்க இனிமேல் அனைவரும் தலைக்கணத்தோடு அலையவேண்டியதுதான்.


தலைக்கவசம் உங்கள் உயிர் காக்கும்
எங்கள் வயிறு காக்கும்

இப்படிக்கு

தலைக்கவசம் விற்பனையாளர்கள் சங்கம்

- ரசிகவ் ஞானியார்

Friday, April 27, 2007

அப்பா என் குழந்தை

( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக "ஒரு கவிதை எழுதி தரமுடியுமா?" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக )

Photo Sharing and Video Hosting at Photobucket

கந்தசார்..

கந்தன் அய்யா..

கந்தகுமார்..

ஒவ்வொரு இடத்திலும்
உனக்கு பெயர்கள் வித்தியாசப்பட்டாலும்

எனக்கு பிடித்த பெயர்
அப்பா மட்டும்தான்!


அப்பா…
அப்பா…
அப்பா…
இப்படி
காற்றில்தான் சப்தமிடமுடிகிறதே - தவிர
கண்ணெதிரே நீ இல்லையேயப்பா?

என்னுடைய
உச்சரிப்பு அகராதியிலிருந்து
உதிர்ந்துவிட்டது
அப்பா என்ற சொல்!


நீ
இருக்கிறாயா இல்லையா?
இல்லையா இருக்கிறாயா?
அடிக்கடி
கிள்ளிபார்த்துதான் உணர்ந்துகொள்கிறேன்
நீ இல்லையென்பதை!


நான் செய்கின்ற
ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
நீ வந்து போகின்றாய்

நீ இருந்து
நிகழக்கூடிய நிகழ்வுகள் எல்லாம்
நீ இல்லாமலும்
நிகழ்கின்றது எனினும்
நீ இருப்பது போல இல்லையப்பா!

நீ தொட்டுப்படித்தப் புத்தகம்..
எட்டிப்பிடித்த குழந்தைகள்..
கத்தி நடத்திய பாடங்கள்..
தட்டிக்கொடுத்த முதுகுகள்..
பொட்டிக்கடை சிகரெட்கள்..
பூட்டிவைத்த சீக்ரெட்கள்..

எல்லாம் அப்படி அப்படியே கிடக்க..
உன் பயணம் தீர்மானிக்கப்பட்டது!

வணக்கம் சொல்வதற்கு
வாத்தியார் இல்லாமல்..
காற்றில்
கையசைத்துக்கொண்டிருக்கின்றது
நம் தெருக்குழந்தைகள்!

நீ எதிரில் வந்தால்
புன்சிரிப்போடு கடந்த மனிதர்கள்..
யதேச்சையாய்
நம் வீட்டைக் கடக்கும்பொழுது
புன்முறுவல் செய்கின்றார்கள்!

நீ இருப்பதாய் நினைத்து..
உன் பெயரை அழைத்தபடியே
பள்ளிக்கூடத்திற்கு வருகிறவர்களுக்கு..
எப்படி புரியவைப்பது?
உன் இல்லாமையை!

நீ அமர்ந்த இருக்கை..
நடந்து வந்த பாதை..
நீ ஓட்டிய வாகனம்..
இவைகள்
நீ பூமியில் உலவியதை..
எனக்குள்
மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது!

மரணம் இயற்கைதான் எனினும்
நீ மரணிப்பாய் என்று
நான் எதிர்பார்க்கவேயில்லை அப்பா
உனக்கு மட்டும்
விதிவிலக்காகியிருக்க கூடாதா?

எல்லாருக்கும்
நீ
பாடம் எடுத்தாய்
உன் மரணத்தில்
எங்களுக்கு ஓர் பாடம் ...

ஆம்!
உன் மரணத்தில்…
தொப்பி – விபூதி – சிலுவைகள் எல்லாம்
சுற்றி நின்று அழுத கண்ணீரிலே…
இந்திய வேற்றுமையே
இருண்டு போனதப்பா!

நம்பிக்கையிருக்கிறது
தண்ணீரில் கலந்த உன் அஸ்தி..
எந்த விளைநிலத்தில்
நீந்திக்கொண்டிருக்கின்றதோ?
அங்கே அமோக விளைச்சல்!

ஒவ்வொன்றாய் நினைத்துப்பார்க்கின்றேன்..

நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

நினைத்துப்பார்க்கின்ற எல்லாமே
துக்கத்தை தருவதால்…
உன் நினைவுகளுக்குப் பிறகு
எனக்கு
தூக்கத்தை தரட்டும் இறைவன்!


நீ
இறந்துவிட்டதாக
இவ்வுலகமே பிதற்றினாலும்..
எனக்கு மட்டும்
நீ
வாழ்ந்து கொண்டிருக்கின்றாயப்பா!



கறுப்புக் கண்ணாடிக்கு
பின்புறம் அமர்ந்து பார்ப்பவர்கள் போல
எனக்குத் தெரியாமலையே
எங்கிருந்தோ என்னை
நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்!


உன்
இருக்கையை கடக்கும்பொழுதெல்லாம்
என் இரு கைகளிலும்..
வித்தியாசமான ஸ்பரிசம்
நீ தொடுகிறாயோ அப்பா?

முயற்சிகள் சிலநேரம்
முடக்கிவைக்கப்படும்பொழுது
தன்னம்பிக்கையாய் இதயத்தில்…
துளிர்த்து வருகிறாய் நீ!

கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
உணரமுடிகின்ற காற்றைப்போல
நீ வந்துகொண்டே இரு!

தென்றல் வீசி
வீட்டுக் கதவு லேசாய் அசைந்தால்கூட
நீ வாசல் வந்துவிட்டதாய் உணர்கிறேன்!


நீ இருந்தால்..
இப்படி இருந்திருக்குமோ?
அப்படி இருந்திருக்குமோ?
என்று நினைத்து நினைத்தே
உன் நினைவுகள்
என்னுடன் இருக்கின்றன!

உன்
குழந்தையாகிய என்னிடம் நீ
கோவப்பட்டதில்லை!
ஆனால்
உன் குழந்தைச் சேட்டைகளைக் கண்டு
நான் கோவப்பட்டிருக்கின்றேன்!

நான் வீட்டுக்கு வர
தாமதமாகும்
தற்காலிக பிரிவிக்கே…
தவித்துக்கொண்டிருப்பாயே அப்பா?
இந்த
நிரந்தரப் பிரிவின் நிஜத்தை ..
இன்னமும் நம்பவில்லை நான்!

உன்னைப்பிரிந்து..
இத்தனை நாட்கள் ஆகிவிட்டதே
என்னை தேடவில்லையா உனக்கு?

நடக்கப்போவதில்லை என்றாலும்..
நப்பாசையில் கேட்கின்றேன்!

எல்லாமே கனவாகிவிட..
நாளைய அதிகாலையில்
”கண்ணா எழுந்திரு”
”கண்ணா எழுந்திரு” என்று
என்னை எழுப்பிவிட வருவாயா?

நீ குழந்தைகளுக்கு…
பாடம் சொல்லிக்கொடுக்கும் சப்தம்
என்
காதுகளில் வந்து கேட்காதா?


மறுநாள் காலை
நான் வேலைக்குப் போகும்பொழுது
உன் அறையில்...
நீ ஏதாவது
எழுதிக்கொண்டிருக்கமாட்டாயா?

மறுபடியும் இறைவன்
காலத்தை சுழற்றி
நீ இறந்த நாளின்
முந்தின நாளிலிருந்து..
எல்லாவற்றையும் அழித்திடமாட்டானா?

நடக்கப்போவதில்லை என்றாலும்
நப்பாசையில் கேட்கின்றேன்


அப்பா!
நீ இல்லாத பொழுதுகள்
மின்சாரம் இல்லாத வீடாய்..
மனிதர்களே இல்லாத காடாய்..
அறுக்கும் முன் கத்தும் ஆடாய்..
காட்சியளிக்கின்றது!

ஒருவனுக்கு
யாருமே இல்லையென்றால்..
அநாதை என்போம!;
ஆனால்
எங்கள் எல்லோருக்கும்
நீ ஒருவன் இல்லையெனினும்..
நாங்கள் அநாதைதான்!


நீ இப்பொழுது
இறந்திருக்க கூடாதோ என்று தோன்றுகிறது!
காலம்சென்று நீ இறந்தாலும்
அப்போதும்
இப்படித்தான் நினைத்திருப்பேன்!

இன்னமும் நான் நம்பிக்கொண்டிருக்கின்றேன்
நீ இறக்கவில்லை
எங்கோ ஓர் இடத்தில்
நீண்ட தூக்கம்…
தூங்கிகொண்டிருக்கின்றாய்
மறுபடியும் நீ விழித்துப்பார்க்கும்பொழுது
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்..


உன் குழந்தையாய் நானானதுபோல்
என் குழந்தையாய் நீயாவாயா?


நீ
உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு