Wednesday, April 27, 2005

அம்மாவுக்கு ஒரு கடிதம்


கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
நினைத்துக்கொண்டிருப்பவளே !
கருவறை முதலாய்
என்னை காதலிப்பவளே அம்மா !

நான் கருப்பையில்
விக்கியபோதே
நீ தண்ணீர் குடித்தாய் !
என்மீது
ஈக்கள் மொய்த்தால்கூட
நீ கண்ணீர் வடித்தாய் !

என் கைகளில் குத்திய
ஊசியின் வலியை
மூளை உணர்த்தும் !
என் வயிற்றில் வருகின்ற
பசியின் நிலையை
நீயே உணர்வாய் தாயே !
என் இரண்டாம் மூளையே !

நான் பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !

என்னை
தடவிக்கொடுக்கின்ற
எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !

உன் விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம் பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !

உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்

தயவுசெய்து
நீ அனுப்புகின்ற கடிதத்தில்
ஒரே ஒரு சோற்றுபருக்கையாவது ஒட்டு !

நானும் ஒரு
அன்னப்பறவைதானம்மா
ஆம்
நீ அனுப்புகின்ற
இனிப்பு பொட்டலங்களிலிருந்து - உன்
இதயத்தை பிரித்தெடுக்கிறேன் !

உன் கருப்பை மூலம் எனக்கு
இரப்பை கொடுத்தவளே !
உன் மீது வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன்
எனக்கு இறப்பை கொடுக்கட்டும் !

ஆம் நான் இறைவனிடம்
பிரார்த்திப்பதும் அதுதான்.

நான் கேட்டு
நீ மறுத்த நாட்களை
நான் சந்தித்ததேயில்லை...

அதுபோல
நீ கேட்டு
நான் மறுக்கும் நாளொன்றில்
என் பெயர் பிணம் !

- ரசிகவ் ஞானியார்

5 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சனத்திற்கு நன்றி
எந்த மொழியில் விமர்சிக்கிறோம் என்பது முக்கியமல்ல இந்தியன்.

எப்படி விமர்சிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

விமர்சித்து ஊக்கமளிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு மொழிகள் தேவையில்லை. நன்றி இந்தியா..

கைப்புள்ள said...

ரசிகவ்! இது கவிதை அல்ல. ஒரு உணர்ச்சி குவியல். என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆதலால் சுருக்கமாக "அற்புதம்".

கலை said...

உண்மையான உணர்வுகள் உங்களது வரிகளில். வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கைப்புள்ள மற்றும் கலைக்கு என் நன்றிகள். இதில் நான் தங்களுடைய தாய்ப்பாசம் கண்டேன்

Thuvarakan said...

/என்னை
தடவிக்கொடுக்கின்ற
எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !/


/உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்/

/அதுபோல
நீ கேட்டு
நான் மறுக்கும் நாளொன்றில்
என் பெயர் பிணம் /

!ஒவ்வொருவரியும் மிகவும் அழமாக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது

தேன் கூடு